வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி
இரண்டாம் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாம் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2011/07/22

தேடல் தொடரும் என்றான் எமன்


63
உயிர்ப்பயணம் ஆன்மா பிறப்பிறப்புப் பற்றிப்
பயிலப் பலவுண்டு இன்னும் - துயிலாமல்
தன்னறிவைத் தேடு தொடர்ந்தறியத் தக்கவருள்
உன்னில் உயர்ந்தோர் இலர்.

   ன்னறிவு பற்றிக் கனவு* காணாமல் தேடத் தொடங்கு. உயிரின் பயணம், ஆன்மா, பிறவிச்சுழல் பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளன; இவற்றை அறியும் தகுதி கொண்டவருள் நீயே மிகச் சிறந்தவன் (என்றான் எமன்).


*துயில் என்ற சொல்லுக்கு, கனவு என்றும் பொருளுண்டு

['..the first step in the acquisition of wisdom is silence, the second listening, the third memory, the fourth practice, the fifth teaching others..' - solomon ibn gabirol ]

   ற்சாகத்துடன் தன் அறைக்குச் சென்ற மாணவன், ஒரு கை ஓசையைப் பற்றிச் சிந்தித்தான். ஒரு கையினால் வீசி வீசிப் பார்த்தான். காற்றை வெட்டும் மெல்லிய ஒலியைக் கேட்டான். 'இது தான் ஒரு கை ஓசையோ?' என்று நினைத்தான். பிறகு, 'இவ்வளவு எளிதான கேள்வியைக் கேட்டு என்னை ஏளனம் செய்ய மாட்டாரே குரு? பிறர் சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுப்பவர் ஆயிற்றே அவர்? ஏதோ ஆழமான பொருள் கொண்ட கேள்வி கேட்டிருக்கிறார்' என்று அடங்கி, தன் சிந்தனையைத் தொடர்ந்தான்.

சில நாட்கள் பொறுத்து, தொலைவில் இனிமையான குரல் கேட்டது. குரலைத் தேடிச் சென்றான். ஒரு கெயிஷாப் பெண் இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தாள். 'கை என்பது உருவகம். இவள் குரலே ஒரு கை ஓசை' என்று புரிந்து கொண்ட மாணவன், குருவிடம் ஓடிச் சென்று "ஐயா, ஒரு கை ஓசையை அறிந்தேன். அது நாபியிலிருந்து எழும் மனங்கனிந்த இசை" என்றான்.

குரு அவனைப் பார்த்து அமைதியாகப் புன்னகைத்தார். புன்னகையின் பொருளைப் புரிந்து கொண்ட மாணவன் மீண்டும் தன் அறைக்குத் திரும்பினான். தேடலைத் தொடர்ந்தான்.

மேலும் சில நாட்கள் பொறுத்து, சிறகு முளைத்துப் பறக்க முயற்சித்தப் பறவைக் குஞ்சுகளின் முதல் விடுதலையின் வசீகர ஒலியைக் கேட்டான். குருவிடம் அந்த ஒலியுடன் சென்றபோது, அவர் புன்னகைத்தார். மாணவன் மீண்டும் அறைக்குத் திரும்பினான்.

காற்றின் ஒலி, ஆற்றின் வேகம், கடலலை, இரவின் வண்டுகள், குழந்தையின் அழுகை, நெற்பயிர் வளரும் ஒலி, பஞ்சின் வெடிப்பு, முட்டையின் உடைப்பு, புழு மண்ணில் உரசும் ஒலி, மழைச்சாரல், ஏப்பம்... என்று மாணவன் வகை வகையான ஒலிகளைத் தேடி ஆய்ந்தான். ஒவ்வொரு முறையும் குருவின் புன்னகையே பதிலாகக் கிடைத்தது.

இப்படியே சில வருடங்கள் ஓடின. உலகின் அத்தனை ஒலிகளையும் கேட்டுச் சலித்தான் மாணவன். குருவின் புன்னகைக்குப் பயந்து அவரிடம் போகாமலே தன் அறையில் தங்கிவிட்டான். சோர்ந்து அமர்ந்திருந்தவனைக் கண்ட ஒரு மூத்த மாணவர், "ஏன் இப்படி சோர்ந்து காணப்படுகிறாய்?" என்று வினவினார். தன் நிலையைச் சொல்லி அழுதான் மாணவன். மூத்த மாணவர் ஆதரவாய் அவனைத் தட்டிக் கொடுத்து, "சரியான பாதையில் தானே செல்கிறாய், அதற்குள் சோர்ந்து விட்டால் எப்படி? இன்னும் கேட்காத ஓசை ஏதாவது இருக்கும். தொடர்ந்து தேடு" என்று சொல்லிப் போனார்.

திடுக்கிட்டான் மாணவன். இன்னும் கேட்காத ஓசை! குருவின் கேள்வி இப்போது தான் புரிந்தது அவனுக்கு. 'ஓசையை அறிந்து வா என்றல்லவா சொன்னார் குரு? கேட்கும் ஓசைகளையே இதுவரைத் தேடினேனே!' என்று வெட்கப்பட்டான். கேட்கும் ஓசைக்கும் அறியும் ஓசைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டான்.

தன் அறையில் அமர்ந்து செவிகளை அடக்கப் பழகினான். அறியும் ஓசை.. அறியும் ஓசை.. என்று அவன் மனம் தேடத் தொடங்கியது.

வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு அறையையும் மேற்பார்வையிடும் குரு, அவனுடைய அறைக்கு வந்தார். ஒரே இடத்தில் அமர்ந்திருந்த மாணவனை சில நாட்கள் தொடர்ந்துக் கவனித்தார். அவருக்கு அந்த மாணவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக... காற்றைப் போல் மலரைப் போல் அலையைப் போல் வாளைப் போல் மலையைப் போல் உணவைப் போல் மீனைப் போல் வண்டைப் போல் செடியைப் போல்... தோன்றினான்.

குரு வெளியே சென்றார். தோட்டத்தில் பூத்துக் கிடந்த அழகிய வெள்ளைச் செரிப் பூக்களைப் பார்த்தார். உதிர்ந்து கிடந்த முற்றிய பூ ஒன்றை எடுத்தார். மலர்ந்தும் மலராத பாதி மலர் ஒன்றை மரத்திலிருந்துப் பறித்தார். இரண்டையும் எடுத்து வந்து மாணவன் முன் வைத்தார். தன் மேலங்கியைக் கழற்றி அவன் மேல் போர்த்திவிட்டு அகன்றார்.

   ந்தக் கதையை உலகின் பிரபல காவிகள் அங்கிகள் தாடிகள் ஞானிகள் என்று பலரும் தத்தம் வேதாந்த தத்துவ விசாரங்களிலும் பிரசாரங்களிலும் ஏதோ ஒரு வகையில் இணைத்துப் பேசுகிறார்கள். அத்தனை பிரபலம். நானும் கொஞ்சம் என் பாணியில் சொல்லியிருக்கிறேன்.

   தடுக்கி விழுந்தால் முகத்தில் இடிக்கும் சென் கதைகளில், இந்தக் கதை மட்டும் என் மனதில் தங்கி நகம் வளர்த்து வருடக்கணக்கில் பிராண்டுகிறது. மாணவன் அறிந்ததையும் குருவின் செய்கையையும் புரிந்து கொண்டவர்கள், சாலமன் கேபிராலின் மேற்கோளை மீண்டும் படித்தால் இன்னும் பிரமித்துப் போவார்கள்.

    :தியானிகளுக்கும் தீவிரத் தியானிகளுக்கும் என்ன வேறுபாடு?
    :தியானிகள் சுலபமாகப் பர்சைத் தொலைக்கிறார்கள். தீவிரத் தியானிகளிடம்.

    தியானம் - தீவிரத் தியானம் இரண்டுக்குமிடையான ஆக்கபூர்வ வேறுபாட்டை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. முன்சொன்ன அறிவியக்க மாநாட்டில் ஒரு ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி எங்களுக்குத் தியான வழிகளை விளக்கிக் கொண்டிருந்தார். அரசன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார். நான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

    ...தியான நிலை என்பது கண்களை மூடி, மனதில் எண்ணங்களைக் கட்டுவது. ஒரு சில நிமிடங்களே தியான நிலையில் இருக்க முடியும். அரைமணி அல்லது ஒருமணிக்கு மேல் தியான நிலையைத் தொடர்வது இயலாத செயல் என்றே சொல்ல வேண்டும். தீவிரத் தியானத்தை நாட்கணக்கில் செய்யமுடியும். காரணம், தீவிரத் தியானம் கண்களையும் மனதையும் பற்றியதல்ல. தீவிரத் தியானம் செய்ய நினைப்பவர்களிடம் கண்களை மூடுங்கள் என்று யாரும் சொல்வதில்லை. தீவிரத் தியானத்தின் போக்கு எண்ணங்களைக் கட்டுவதல்ல. தீவிரத் தியானத்தின் போக்கு மூச்சைக் கட்டுவதாகும். மூச்சினை உணர்வதாகும். எண்ணங்களைக் மூச்சோடு கலப்பதாகும். மூச்சின் போக்கோடு சுய இயக்கத்தை இணைப்பதாகும். தீவிரத் தியானிகள் மூச்சில் கவனம் செலுத்துகிறார்கள். தீவிரத் தியானம் செய்ய விரும்புவோர், முதலில் தன்னுடைய மூச்சைக் கவனிக்கத் தொடங்க வேண்டும். மூச்சின் போக்கைக் கவனிக்கத் தொடங்கிய சற்று நேரத்தில் சுற்றுப்புறம் அமைதியாவதை உணர முடியும். உண்மை அதுவல்ல. மூச்சைக் கவனிக்கும் செவிகளும் அறிவும், புற ஓசைகளைப் புறக்கணிக்கப் பழகுகின்றன. சுற்றுப்புறம் அமைதியாவது போல் உணரமுடிகிறது. அமைதி, உண்மையில் உள்ளே ஏற்படத் தொடங்குகிறது. அக அமைதி புற ஓசைகளை விட வலியது. விரைவில் எந்தவித புறத்தாக்கமும் இல்லாமல், மூச்சின் ஓசை, தீவிரத் தியானிகளை உள்நோக்கி அழைத்துச் செல்கின்றது. உடலும் உணர்வும் ஒன்றான நிலை. மனமும் அறிவும் ஒன்றான நிலை. மனம், தாயைத் தொடரும் சேயைப் போல் மூச்சின் ஒலியைத் தொடரும் அந்நிலையில், பேதங்களும் இருமைகளும் அறிய முடியாத நிலையில், கருப்பையின் சிசு போல, தொடக்கத்துக்கே அழைத்துச் செல்லப்படுகிறது. தீவிரத் தியானம் செய்வோர், உடலுக்கு அப்பாற்பட்ட ஒன்றுடன் தொடர்பு கொள்ள முடியும். உடலுக்கு அப்பாற்பட்டது, எந்தவித உலக நியதிகளுக்கும் உட்பட்டு இயங்குவதில்லை. இன்னொரு பரிமாணத்துடன் கலந்த அந்நிலை, உணர்வு வேகம் காலம் எல்லாமே கடந்த நிலை எனலாம்.

    அதற்குள் சாப்பாட்டு மணி அடித்து விட்டதால் நான் எழுந்தேன். அரசனும் பிறரும் அந்தப் பெண்மணியுடன் தீவிர தியானப் பயிற்சிக்குத் தயாரானார்கள். "தீவிரத் தியானத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்றைக்கு வேண்டாம் என்று பார்க்கிறேன்" என்றபடி கழன்று கொண்டேன். பசியின் ஒலி என்னைத் துரத்தியது.

    வேடிக்கை முலாம் பூசினாலும், நான் சொல்ல விரும்புவது இதுதான்: தன்னறிவு பெறுவது இருக்கட்டும், அதற்கு முன், தன்னறிவு பெறுவதற்கான தகுதிகள் நமக்கு உண்டா இல்லையா என்பதை அறிவதற்காகவேனும் தீவிரத் தியானம் பழகலாம். பயணம் செய்தால்தானே பாதை எங்கே போகிறது என்று அறிய முடியும்? 'இப்போது முடியாது' என்றக் காரணமற்றக் காரணத்தினால் பாதையில் அடியெடுக்கவே தயங்குகிறோம். இலக்கைச் சேருமா என்ற ஐயத்தில் பயணமே தொடங்காதிருந்தால், பயண அனுபவம் கிடைப்பதில்லை; பாதையே மறைந்துவிடும் அபாயமும் உண்டு.

['..தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்; தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்; உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி..' - கண்ணதாசன் ]

    "நசிகேதா, தன்னறிவைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டாய். இனித் தன்னறிவைத் தேடும் முயற்சியில் இறங்கு. தன்னறிவு பற்றியக் கனவில் உழலாமல், நேடிப் பெறுவதில் முனைப்பாயிரு" என்றான் எமன்.

   நசிகேதன் பணிந்து, "ஐயா, தன்னறிவு பற்றி எனக்கு நீங்கள் விளக்கியதற்கு மிகவும் நன்றி. ஓம் எனும் ஒலியை எனக்கு அறிமுகம் செய்தமைக்கும் நன்றி. இனித் தன்னறிவை எப்படித் தேடுவது என்ற ஐயம் எனக்குச் சிறிதும் இல்லை. தன்னறிவு தேடும் முயற்சியில் இந்தக்கணமே இறங்கினேன். ஆன்மா பற்றிய மெய்யறிவை எனக்குத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்" என்றான்.

   எமன் கருணையுடன், "என்னிடம் நீ வரமாகக் கேட்ட அறிவில் இன்னும் வழங்க வேண்டியது நிறைய உள்ளது. தன்னறிவுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பை விவரமாகச் சொல்கிறேன். உயிர்ப்பயணம் பற்றிச் சொல்கிறேன். பிறவிச்சுழல் பற்றிச் சொல்கிறேன். இச்சுழலிலிருந்து விடுபட்டு, பிறப்பிறப்பற்ற நிலையை ஆன்மா அடையுமா என்பதையும் விளக்குகிறேன்.

   தீக்குணம் ஒழித்தப் பற்றற்றவரே தன்னறிவைப் பெறக்கூடியவர்கள். அன்னாருள் புலனடக்கி முனைப்புடன் உள்ளுக்குள் உறையும் தன்னறிவைக் காலத்தால் கண்டறிவோர் மட்டுமே, மேன்மையான மெய்யறிவை முழுதும் அறிந்துணரும் தகுதியைப் பெறுகிறார்கள். மெய்யறிவுப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கு நீ தகுதியானவன். இத்தகைய மேன்மையை அடைய, உன்னைப் போல் தகுதி வாய்ந்தவர் வேறு எவரும் இல்லை.

   பேரறிவின் வாயில் உனக்காகத் திறந்திருக்கிறது. தன்னறிவே அதன் முதற்படி. தொடர்ந்து பயணம் செய்ய நான் வழிகாட்டுகிறேன்" என்றான் எமன்.


இரண்டாம் பகுதி முற்றும்


2011/07/20

உட்பயிர் வளர்க்கும் உரமென்றான் எமன்


62
விழைந்த விதைநிலம் நீர்தந்தேன் நீயே
உழைத்துப் பயிர்காண வேண்டும் - தழைத்திட
ஓருரம் ஓமெனும் ஓரொலி என்றறிந்துச்
சீருறு என்றான் சமன்.

   நீ விரும்பிய விதையும் நிலமும் பாசன நீரும் கொடுத்தேன்; இனி உழைத்துப் பயிர் வளர்ப்பது உன் கடமை. ஓம் எனும் ஒரு ஒலி, களையின்றிப் பயிர் செழிக்கத் தேவையான ஒரு உரமாகும்; இதையறிந்துப் பயிர் செய்துச் சிறப்படைவாய் என்றான் எமன் (நசிகேதனிடம்).


சமன்: காலன், எமன்

['..on this journey you are making, there'll be answers you will seek; and it's you who'll climb the mountain, it's you who will reach the peak..' - phil collins ]

    transcendental meditation முகாம் அனுபவத்தை இங்கே முடிக்கிறேன்.

   என்னை அடையாளம் கண்டதோடு நிற்காமல், "மூன்று மாதங்களுக்கு முன் இன்ன தேதியில் வந்தீர்களே? நினைவிருக்கிறது" என்றார். அன்றையத் தேதியும் கிழமையுமே எனக்கு நினைவில்லை; இவர் மூன்று மாதங்களுக்கு முன்னால் நான் வந்த தேதியை நினைவில் வைத்திருக்கிறாரே என்று தோன்றியது. அவர் எந்தத் தேதியைச் சொல்லியிருந்தாலும் வியந்திருப்பேன் என்று நினைத்தபோது, அவருடைய அடுத்தக் கேள்வி அதிர்ச்சியைக் கொடுத்தது. "எதற்காக தியானப் பயிற்சி செய்ய வந்தீர்கள் என்று கேட்டேனே, பதில் தெரிந்ததா? அடுத்த வாரமே வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்" என்றார். மனிதர் உண்மையிலேயே என்னை நினைவில் வைத்திருக்கிறாரே? வழிப்போக்கர்களைக் கூட எப்படி இவரால் நினைவுகூர முடிகிறது? என் கேள்விகளைப் புரிந்து கொண்டாரா தெரியவில்லை, "எல்லாரையும் நினைவில் வைக்க முடியாது; நீங்கள் முன்பு வந்த போதும் இதேபோல் பொருந்தாத கலர் டி-ஷர்டைப் பின்புறமாக மாற்றி அணிந்து வந்திருந்தீர்கள். கவனமோ கவலையோ அற்று இயல்பாக இருக்கிறாரே என்று உங்களைப் பற்றி அன்றைக்கும் எண்ணி சந்தோஷப்பட்டேன். அதான்" என்றார், இடக்கரடக்கல் பட்டதாரி.

   "என்னால் எதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. தியானப் பயிற்சி பலன் தரும் என்று எல்லோரும் சொன்னார்கள். அதான் வந்தேன்" என்றேன்.

   "எல்லோரும் சொன்னார்கள் என்பதற்கும் நீங்கள் நம்புகிறீர்கள் என்பதற்கும் வேறுபாடு உண்டே? உங்கள் நம்பிக்கை தான் உங்கள் செயலின் அஸ்திவாரம்" என்றார் தற்காலப் ப்லேடோ போல்.

   "நானும் நம்புகிறேன்" என்றேன் சுரத்தில்லாமல். என் சந்தேகம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். "பரவாயில்லை. நம்பிக்கை என்பது தளிர் போன்றது. அதை வளர்க்கவும் அழிக்கவும் முடியும். ஆக்கத்தின் தீவிரம், இலக்கின் தீர்க்கம், தன்முனைப்பு... இவை இருந்தால் நம்பிக்கை செழித்து வளரும். வாருங்கள்" என்றார்.

   பதினைந்து நிமிடங்களுக்கு வகுப்பெடுத்தார். புறவிசைகள் நம்மைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொள்வது பற்றிய வரைபடத்தைக் காட்டி, "எல்லாமே அலைகள்" என்றார். "அலையானது எப்படி இடைவிடாது பாய்ந்து ஓசை எழுப்புகிறதோ அதேபோல் புலன்களின் ஒலிவீச்சும் இடைவிடாது நம்மைப் பாதிக்கிறது. இந்த ஒலிகளை அடக்கினால் நம்மால், நாம் விரும்பியபடி, கவனம் செலுத்த முடியும்" என்றார். சிறிய கோடு - பெரிய கோடு உதாரணத்தைச் சொல்லி, "ஒரு ஒலியை அடக்க, இன்னொரு பேரொலி வேண்டும்; தியானம் என்பதும் உள்ளுக்குள் ஒரு பேரொலியைத் தொடர்வதே" என்றார். "ஒரு ஒலியைப் பற்றிக்கொண்டு, பிற ஒலிகளைக் கைவிட்டு, கவனத்தைக் கூராக்கும் வித்தையாகும் தியானம்" என்றார்.

   வகுப்பறையை விட்டு வெளியே வந்து இயற்கைச்சூழலில் அமர்ந்தோம். எனக்குப் பிடித்த ஒரு ஒலி ஏதாவது இருந்தால் அதை மனதில் நிறுத்தச் சொன்னார். "அப்படி எதுவும் ஒலியில்லையே?" என்றேன். ஏற்கனவே அடிக்கடி தலைவலி வருகிறது, இதில் பேரொலி ஒன்றை மனதில் வைக்கச் சொல்கிறாரே?

    மறுபடியும் மனதைப் படித்தார். "பேரொலி என்றால் அது பெரும் ஓசையை ஏற்படுத்த வேண்டியதில்லை. சில இடிகளுக்கு ஓசையே கிடையாது. தீயின் ஓசை தாழ்மையானது, ஆனால் அது பேரொலியாகும் தெரியுமோ?" என்றார். 'என்ன சொல்கிறார் இவர்?' என்று நான் குழம்பினேன். "ஒலியை அடக்கும் பேரொலியை நாம் எல்லோருமே நம்மையறியாமல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம், உணரத்தான் மறந்து போகிறோம்" என்றார். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியேற்றச் சொன்னார். பலமுறை செய்தேன். "இன்னும் மெதுவாக, இன்னும் மெதுவாக" என்று மனிதர் படாதபாடு படுத்தினார். மெள்ள என் மூச்சின் ஒலிவடிவம் புலப்படத் தொடங்கியது. 'ம்' என்ற ஒலியை என்னால் அடையாளம் காண முடிந்தது. அதைத் தொடர்கையில் திடீரென்று அறையை ஆக்கிரமிக்கும் பெரும் ஓசையாக மாறியதை உணர முடிந்தது.

   "ஓம் எனும் ஒலியே நம் மூச்சின் ஒலி. அதை மனதில் ஒரு பற்றுக்கோடாக நிறுத்தித் தொடர்வது தியானத்தின் முதல்படி" என்றார்.

   நெளிந்தேன். "எனக்கு மத நம்பிக்கை கிடையாது" என்றேன்.

   "உண்டா என்று நான் கேட்கவில்லையே?" என்றார்.

    "ஓம் என்பது மதம் தொடர்பானது தானே?"

    "ஓம் என்பது மனம் தொடர்பானது" என்றார். ஓசையின்றிச் சிரித்தார். "ஓம் என்பது உள்ளத்தைக் கட்ட ஒரு ஒலி, ஒவ்வொருவருக்கும் ஒருவித ஓம்" என்றார். விழித்த என்னை ஏளனம் செய்யாமல், "ஓம் வேண்டாமென்றால் உங்களுக்குப் பிடித்தமான ஒலிக்குறியைத் தொடருங்கள். வேறு ஒலிக்குறியை, உங்களுக்கு மட்டுமே புரியும் உங்கள் உள்தேடலின் அடையாளமான ஒலிக்குறியாகத் தருகிறேன்" என்றார். சட்டென்று ஒரு ஒலிக்குறியை எடுத்துக் கொடுத்து, "இதை மனதில் நிறுத்தி இன்றிலிருந்து தினம் பத்து நிமிடங்கள், மூச்சை மிக மெதுவாக இழுத்து வெளிவிட்டுப் பயிற்சி செய்யுங்கள். அடுத்த சில வாரங்களுக்கு இந்த மூச்சுப்பயிற்சி பழகியதும், உள்மனதை எப்படி ஆக்கிரமிப்பது என்று சொல்லித் தருகிறேன்" என்றார்.

   அன்றையப் பத்து நிமிடங்களோடு என் பயிற்சி நின்றுபோனது. 'நாளைக்கு இருபது நிமிடங்களாகச் சேர்த்துச் செய்வோம்' என்று எனக்கு நானே போலிச் சமாதானம் செய்து கொண்டதன் காரணம், சோம்பல் என்று நினைத்தேன். 'இலக்கு தெரிந்தும் அதை அடையும் தீவிரம் இல்லாததே' காரணம் என்பது புரிந்தபோது நாளாகிவிட்டது. புற ஒலிகளின் கவர்ச்சியில் அகவொலி அடங்கி ஒடுங்கி அடையாளமே இழந்துவிட்டது. பின்னாளில் தியான சக்தி, எண்ண அலைகள், telepathy, human kinetics என்று பிரமிக்க வைக்கும் சங்கதிகளைப் படித்தபோது எதையோ இழந்தது போல் உணர்ந்தேன். இத்தகைய உள்தேடல்களைத் தொடங்க நாம் காவிகளாக வேண்டியதில்லை என்று இப்போது புரிகிறது. தாடி வளர்க்க வேண்டியதில்லை, பட்டினி கிடக்க வேண்டியதில்லை, பலவகைப் பாமரக் கண்மூடித்தனங்கள் தேவையில்லை என்பது இப்போது புரிகிறது. இத்தகையத் தேடல்கள் சராசரி மனிதரைச் சுலபமாக மேம்படுத்த வல்லவை என்று இப்போது புரிகிறது. 'உள்ளிருக்கும் சக்தி' என்பதன் பொருள் இப்போது புரிகிறது.

['..நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு, அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று' - கண்ணதாசன் ]

    "நசிகேதா, நீ விரும்பியவாறு தன்னறிவு என்றால் என்னவென்று உனக்கு எடுத்துரைத்தேன். அதன் இருப்பிடம் உள்மனதின் குகையென்பதைச் சொன்னேன். நற்குணங்கள் ஆறும் வளர்த்துத் தீக்குணங்கள் ஆறும் தவிர்த்தால், தன்னறிவைத் தேடமுடியும் என்றேன். மூச்சடக்கி உள்ளிருக்கும் தீவளர்த்து அதனொளியில் உள்மனத்தின் இருளகற்றித் தன்னறிவைத் தேடிப் பெறலாம் என்றேன். மேலும், தன்னறிவின் ஒடுங்கும் தன்மையையும், காலத்தோடு தேடிப் பெறவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் சொன்னேன்.

   இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டபின், தன்னறிவைத் தேடிப்பெறுவது உன் பொறுப்பாகும். நீ மேற்கொள்ள வேண்டிய பணியாகும். எப்படித் தேடுவது, தொடர்வது எப்படி, திசைமாறாமல் இருப்பது எப்படி என்பதையெல்லாம் நீயே தீர்மானிக்க வேண்டும். தன்னறிவு உனக்குத் தேவையென்றால் நீ தான் தேடிப் பெற வேண்டும்.

   விளைநிலமும், விதையும், பாசன வசதியும் பெற்றாலும் உழுதால் தான் பயிர் வளரும். உழுவது உன் பொறுப்பு. பயிர் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். உழைப்பின் தீவிரம் உன் விருப்பம். உன் பொறுப்பு. உன் உழைப்பின் தீவிரத்தை நீ தான் தீர்மானிக்க வேண்டும். நீ விரும்பியபடி விளை நிலத்தைக் கொடுத்தேன். விதையைக் கொடுத்தேன். நாற்று நட்டு உழுது பயிர் வளர்க்கும் முறையைச் சொன்னேன். பாசன வசதியைக் கொடுத்தேன். பயிர் வளர்க்க முனைந்தவர்கள் படும் இன்னல்களைப் பற்றிச் சொன்னேன். குறிக்கோளோடு தளராமல் பயிர் வளர்த்தவர்கள் பெற்ற பேரின்பங்களை விளக்கினேன். பயிர் வளர்க்கும் கனவில், எண்ணத்திலேயே நின்று, செயலாக்கத் தவறியவர்களின் இழப்பைப் பற்றிச் சொன்னேன். உழாத நிலத்துக்கும் விதைக்காத பயிருக்கும் உண்டாகும் இயற்கையான அழிவைப் பற்றியும் சொன்னேன். உழுது பயிர் வளர்க்கும் அறிவு இப்பொழுது உன்னிடம் முழுமையாக இருக்கிறது. இனி எப்படி உழைக்கவேண்டும் என்பதை நீயே தான் தீர்மானிக்க வேண்டும். விழலறுத்து பயிர் செழிக்கப் பலவகை உரங்களை இடலாம். உன்னுடைய பயிர் செழித்து வளர என்ன உரமிட வேண்டும் என்பதைச் சொல்கிறேன். அதைக் கேட்டு, உன் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, உன் உழைப்புக்கும் குறிக்கோளுக்கும் ஏற்ற ஒரு உரமிட்டு பயிர் வளர்த்து செழிக்கச் செய்.

    புலன்கள் நம்மைக் கட்டுகின்றன. புலன்களே இடையூறு எனும் களையாகி, தன்னறிவு எனும் பயிர் செழித்து வளராமல் தடுக்கின்றன. மாறாக, புலன்களை நாம் கட்டவேண்டுமெனில், அவற்றின் ஆக்கிரமிப்பில் இருந்து முதலில் விடுபட வேண்டும். உள்மனதின் தீ வளர்த்து புலனடக்க வேண்டும். தீவிர யோகத்தினால் மட்டுமே உள்ளுக்குள் உறையும் தீயை வளர்க்க முடியும். உள்மனதின் தீ வளர வளர, அதன் வெம்மையில் புலன்களின் ஆதிக்கம் அடங்கி ஒடுங்கும். அதன் ஒளியில் தன்னறிவின் தடம் விளங்கும். இடையூறு செய்யும் புலன்களின் நாராசத்தை அடக்குவது, ஓம் எனும் ஒரு அகவொலியாகும். இதையறிந்த நீ, இனித் தன்னறிவைத் தேடிப் பெறு. தன்னறிவு எனும் உள்மனப் பயிரைக் களையறுத்து செழித்து வளரச்செய்" என்றான் எமன்.

2011/07/15

தன்னையறியும் வழி கேட்டான் நசிகேதன்


61
வித்தும் விளைவும் விடுத்தவத் தத்துவத்தை
மெத்த விளக்கினீர் வந்தனம் - அத்தரினித்
தன்னறிவு தேடும் வழியும் தரவேண்டும்
என்றான் எமனிடம் ஏறு.

   "காரண காரிய விளைவுச் சுழலைக் கடந்த நுட்பமான ஆன்மாவைப் பற்றி மிக நேர்த்தியாக விளக்கியதற்கு நன்றி. இனித் தன்னறிவைத் தேடும் வழிமுறைகளை விளக்கவேண்டும் குருவே" என்று எமனிடம் கேட்டான் எருது போன்ற நசிகேதன்.


வித்து: விதை (வித்தும் விளைவும் காரண-காரியத்துக்கு ஆகி வந்தவை)
அத்தர்: ஆசிரியர், குரு
ஏறு: எருது (இங்கே நசிகேதனைக் குறிக்கிறது)


['.. human being has so many skins inside, covering the depths of the heart.. thirty or forty skins, thick and hard as an ox's or bear's, cover the soul..' - meister eckhart ]

    ழையத் திரைப்படக் காட்சியொன்று, நினைவிலிருந்து:

மந்திரவாதி வில்லன், நாட்டின் இளவரசியை ஒரு கிளியாக மாற்றி எங்கேயோ மறைத்து விடுகிறான். அரசன் மிகவும் துடித்துப் போய், இளவரசியை மீட்டு வருவோருக்கு அரசாங்கத்தில் பங்கும் இளவரசியோடு திருமணமும் செய்து வைப்பதாக அறிவிக்கிறான். ஆளாளுக்கு இளவரசியைத் தேட, இளவரசியைத் திருட்டுத்தனமாகக் காதலிக்கும் கதாநாயகனான சேனாதிபதி மகனும், துணைக்கு அவருடைய நண்பனும், தேடலில் இறங்குகிறார்கள். கதாநாயகன் ஒரு நல்ல மந்திரவாதியிடம் சென்று பணிவோடு உதவி கேட்கிறான்.

மந்திரவாதி ஒரு கை நிறைய சாம்பிராணியை தீயிலிட்டு அந்தப் புகையை உற்று நோக்கி, "வில்லன் மந்திரவாதி இளவரசியைக் கிளியாக மாற்றி ஒரு மரத்தின் மேலே கூட்டில் அடைத்து வைத்திருக்கிறான்" என்கிறார்.

நண்பன் உடனே கதாநாயகனைப் பிடித்து இழுத்து, "வா போவலாம். இருக்குற எல்லா மரத்துலயும் ஏறிப்பாத்துருவோம்"

"பொறுங்கள். அந்த மரம் இந்த ஊரில் இல்லை" என்கிறார் மந்திரவாதி.

"பக்கத்து ஊர்லயா? சரி, அங்கயும் பாத்துருவோம்" என்று புறப்படத் துடிக்கிறான் நண்பன்.

"பக்கத்து ஊரிலும் இல்லை, அருகில் எந்தக் காட்டிலும் இல்லை"

"அப்ப எங்க தான் இருக்குது இந்த மரம், சொல்லுங்க... சாம்பிராணி பத்தலியா பாருங்க, இந்தாங்க, இன்னும் நல்லா ஊதிக் கண்டுபிடிங்க" என்கிறான் நண்பன். "ஆமாம் ஐயா, சொல்லுங்க" என்று கெஞ்சுகிறான் கதாநாயகன்.

"எங்கேயோ தொலைவில் ஒரு உயரமான மலையின் உயரமான மரத்தின் உயரமான கிளையில், ஒரு கூட்டில் ஒளித்து வைத்திருக்கிறான்"

"ஏணி எடுத்துட்டு போவலாங்றீங்களா? எங்கேயோ தொலைவில்..னா எங்கே? எப்படிப் போறது அங்கே?" என்ற நண்பனை அடக்கி நெளிகிறான் கதாநாயகன்.

"இங்கிருந்து ஏழு ஊர்களை எப்படியாவது கடந்தால், ஏழு காடுகள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால், ஏழு நாடுகள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால் ஏழு கடல்கள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால், ஏழு பாலைவனங்கள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால், ஏழு மலைகள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால், இரண்டு தலை யட்சிணிகள் ஏழு பேர் தோன்றுவார்கள். எப்படியாவது அவர்களை வீழ்த்தினால், உயரமான மலைக்கு வழி சொல்வார்கள். எப்படியாவது மலையை அடைந்தால், அங்கே கண்ணுக்குத் தெரியாத ஏழு கொடிய விஷப்பாம்புகள் உயரமான மரத்தைக் காத்து நிற்கும். எப்படியாவது பாம்புகளைக் கண்டு கொன்றால், மரத்தில் ஏறலாம். அங்கே ஒரே வடிவில் ஏழு கூண்டுகள் இருக்கும். வெற்றுக் கூண்டைத் திறந்தால் அத்தனை கூண்டுகளும் வெடித்து விடும். எப்படியாவது இளவரசி இருக்கும் கூண்டைத் தெரிந்து கொண்டு..." என்கிறார் மந்திரவாதி.

கதாநாயகனுக்கு இருப்பு கொள்ளவில்லை. வீராவேசத்துடன், "வா, போகலாம்" என்கிறான். நண்பன் தடுத்து, மந்திரவாதியை மேலும் கீழும் பார்க்கிறான். பிறகு அமைதியாக, "யோவ்! நீயெல்லாம் என்னய்யா மந்திரவாதி? இளவரசியை மீட்டு வர வழி கேட்டா, வழியா சொல்றே? இதை எப்படியாவது கடந்தால் அது வரும், அதை எப்படியாவது கடந்தால் இன்னொண்ணு வரும், அந்த இன்னொண்ணை எப்படியாவது கடந்தால்... என்னய்யா இது, விளையாட்டா போச்சா? ஆமா... எப்படியாவது கடந்தால், எப்படியாவது கடந்தால்னு சொல்றியே தவிர, எப்படிக் கடக்குறதுனு சொல்ல மாட்றியே?" என்கிறான். பிறகு கதாநாயகனிடம், "இவனை நம்பி வந்தா இருக்குற சிக்குல பேனை சேத்துருவான் போலிருக்கே?" என்றபடித் தலையைச் சொறிகிறான்.

   காட்சியின் நகைச்சுவையைப் பலமுறை ரசிக்க முடிந்தாலும், வழிகாட்டிய மந்திரவாதியின் செயலில் புதைந்திருக்கும் ஒரு strategic insight புரிகிறதோ? மாயாஜாலத் திரைப்படக் காட்சியில் insight எங்கிருந்து வந்தது என்கிறீர்களா? பசியில் வாடுகிறவனுக்கு மீன் இருக்கும் ஏரியைக் காட்டுவதா, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதா, மீனைப் பிடித்துக் கொடுப்பதா, பிடித்த மீனைக் கொடுப்பதா, மீனைச் சமைத்துக் கொடுப்பதா அல்லது சமைத்த மீனைக் கொடுப்பதா? இந்தக் கேள்விக்கான பதிலே காட்சியின் insight.

   செயலின் போக்கை எடுத்துக்காட்டுவது, செயல்முறையை விளக்குவதை விட மேல். இப்படிச் செய்ய வேண்டும் என்ற குறிப்பிட்ட முறையைச் சொன்னால் அது நிறைவேறாமல் போகும் அபாயம் உண்டு; செயல்படுத்துவோரின் திறமை வளராமல் போகும் அபாயம் உண்டு; செயல்படுத்துவோரின் தவறுகளினால் முறையே தவறு என்ற எண்ணம் நிலையாகும் அபாயம் உண்டு. தேர்ந்த ஆசிரியர், மாணவருக்கு வழிகாட்டியாக இருப்பாரே தவிர வழித்துணையாக மாறுவதில்லை. பெற வேண்டியச் சிறப்பை உணர்ந்து, தானே சிறக்க முனையும் வேறு மாணவரைத் தேடிப் போய்விடுவார்.

   நம்மில் சிலருக்கு வழிகாட்டி போதாது; வழித்துணை போதாது; வழியாகவே மாறினாலும் போதாது; தோளில் சுமந்து இலக்கில் சேர்த்தால் மட்டுமே பயணிப்பார்கள். "கண்ணுக்கு எதிரே நிற்கிறது, கண் திறந்து பார்" என்றால், "கொஞ்சம் கண்ணைத் திறந்து விடேன்" என்பார்கள். இவர்களை அடையாளம் கண்டு விலகுவது ஆரோக்கியமானது.

['..இருளில் விழிக்கின்றார், எதிரே இருப்பது புரிகின்றதா? இசையை ரசிக்கின்றார், இசையின் உருவம் வருகின்றதா?' - கண்ணதாசன் ]

    சிகேதன் எமனிடம், "ஐயா! காரணம்-காரியம், செயல்-விளைவு போன்ற நிலைத்தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட, அழிவற்ற, எளிதில் அறியமுடியாத ஆனால் முயன்றால் அறியக்கூடிய, ஆன்மாவைப் பற்றியும் அதை அறிய வகை செய்யும் தன்னறிவு பற்றியும் விளக்கமாகச் சொன்னீர்கள். மிகவும் நன்றி. இனி நான் பெற விரும்புவது ஒன்று உண்டு" என்றான்.

    எமன் கேள்விக்குறியுடன் நசிகேதனைப் பார்த்தான்.

    "குருவே! தன்னறிவு என்றால் என்ன என்பதையும், தன்னறிவின் குணம் தன்மை சிறப்புக்களையும், இருப்பிடத்தையும் அறிந்து கொண்டேன். இனி, இருப்பிடம் தேடித் தன்னறிவை அடைவது எப்படி என்பதையும் விவரமாகச் சொல்லுங்களேன்?" என்றான் நசிகேதன்.

2011/07/12

தன்னறிவு பெற்றவருக்கு அழிவில்லை


60
நாடி அடங்குமுன் நுட்பத்தை உள்ளகப்
பாடியிற் கண்டுப் பெறவேண்டும் - நேடியவர்
தீயிற் கலந்ததும் தீயாம்போல் தன்னறிவால்
வீயிற் புலம்பெறு வார்.

   யிர்மூச்சு இருக்கையிலே, மகத்தான ஆன்மாவை உள்மனதுள் தேடி அறிய வேண்டும். குறிக்கோளோடுத் தன்னறிவைத் தேடியறிந்தவர்கள், தீயிலிட்டவைத் தீயாகிக் கலப்பது போல், ஆன்மாவுடன் கலந்துத் தாமும் பிறப்பிறப்பற்ற மேன்மை அடைகிறார்கள் (என்றான் எமன்).


 நாடி: உயிர்துடிப்பு, (முதுமை அல்லது சோர்வின் காரணமாக விருப்பம் அடங்குமுன் என்றும் பொருள் கொள்ளலாம்)
 பாடி: இடம் (உள்ளகப் பாடி: ஆழ்மனமென்னும் இடம்)
 நேடியவர்: நோக்கத்தோடு தேடியவர்
 வீயில்: பிறப்பு இறப்பு அற்ற | (வீ+இல்) | வீ என்ற சொல்லுக்கு, தொடக்கம், முடிவு, பிறப்பு, இறப்பு என்று பொருளுண்டு. வீ என்ற ஓரெழுத்து ஒருமைச் சொல்லில் இருமைகள் அடங்கியிருப்பது உன்னச்சுவை
 புலம்: மேன்மை


['..it is a puzzling thing.. the truth knocks on the door and you say, "go away, I'm looking for the truth," and so it goes away.. puzzling..' - robert pirsig (zen and the art of moma)]

    'நேரத்தோடு செய்வதற்கும்' 'முறையாகச் செய்வதற்கும்' வேறுபாடு உண்டா?

   எடுத்த காரியத்தைக் குறித்த நேரத்தில் முடிப்பது 'நேரத்தோடு' செய்வதாகும். செய்ய வேண்டிய விதத்தில் செவ்வனே செய்வது, 'முறையாக'ச் செய்வதாகும். இரண்டும் சொல்-பொருள் என்ற பார்வையில் வேறானாலும், செயல்-பொருள் என்ற அளவில் ஒன்றே.

   காலம் கடந்த வேகமும் ஞானமும் வீண். காலத்தில் நடந்த கண்மூடித்தனமோ, தீராப் பெரும் துயரம் தருகிறது. ஒன்று நன்றெனில் அன்றே முடிக்க வேண்டும். நேரத்தோடு செய்யவேண்டியதை முறையாகச் செய்ய வேண்டும் என்பதும், முறையானதை நேரத்தோடு செய்யவேண்டும் என்பதுமே இங்கே செய்தி.

   முறையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக நேரத்தை வீணாக்குவதோ, நேரத்தோடு செய்ய வேண்டும் என்பதற்காக முறையற்று நடப்பதோ, குறுக்கு வழிகளில் செல்வதோ, அறிவின்மையாகும். அதைவிட மூடத்தனம் ஒன்றுண்டு: 'காலமோ நேரமோ கனிந்து வரவில்லை, இருக்கும் நேரத்தில் இயலாது' என்று சாக்கு சொல்லிச் செயலில் இறங்காமல் சோம்பி ஓய்வது. உளவியல் இதை நோய் என்கிறது. இத்தகைய நிலையைக் கண்டறிந்து அதற்கேற்றத் தீர்வுகளை வழங்கும் முறைகளை, சமீப உளவியல் மற்றும் மேலாண்மை ஆய்வுகள் சொல்கின்றன. இன்றைய 'அதிவேக' வாழ்க்கை முறையில் இத்தகைய 'ஒத்திப்போடும்' நோய் இருப்பதே முரணாகத் தோன்றினாலும், நம்மில் பெரும்பான்மை இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக உளவியல் சொல்கிறது. தனிமனிதரின் நோயினால் ஒரு தலைமுறையே dysfunctionalஆக இயங்கும் சாத்தியம் அபாயகரமானது. தனிமனிதரோ, குழுவோ, நிர்வாகமோ யாராயினும் - 'காலம் கனியட்டும் என்று செயலிழக்கும்' நோயில் வாடுவோர் - உளவியல் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது.

   'வாழ்வில் எது முக்கியம்?' என்பதை அறிந்து கொள்வது, இளமையில் பெற வேண்டிய பக்குவங்களில் ஒன்றாகும். அந்தப் பக்குவம் இருந்தால், நேரத்தோடு செய்ய வேண்டியதை முறையாகவும், முறையாகச் செய்யவேண்டியதை நேரத்தோடும், செய்யமுடியும் என்று தோன்றுகிறது.

['..கொக்கைப் பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை..' - கண்ணதாசன்]

    மன் தொடர்ந்தான். "நசிகேதா, ஆன்மாவையும் தன்னறிவையும் பற்றிச் சொல்லியிருக்கிறேன். தன்னறிவைத் தேடிப் பெறுவதென்பது அவரவர் சேர வேண்டிய இலக்கு. தானே வகுத்துப் போக வேண்டிய பாதை. மனிதருக்கு உயிர்த்துடிப்பு இயங்கும்வரை தன்னறிவைத் தேடிப்பெற வாய்ப்பும் நேரமும் உண்டு. உயிர்த்துடிப்பு அடங்குமுன்னே தன்னறிவைத் தேடிப் பெறவேண்டும்.

    மனிதரின் வாழ்வில் எத்தனையோ உலகாயதப் பாதைகள் உள்ளன; சேரும் இடமற்றப் பாதைகள் இவை. மனதைத் துருவாக்கும் சாதனைகள் மற்றும் சோதனைகளுக்கான தூண்டில்கள் இவை. இயல்பாகவே குறிக்கோளோடும் தன்னுணர்வோடும் இயங்கும் மனிதரும், இவை இடையூறென அறியாமல் தங்கள் இலக்கிலிருந்து விலகிச் சுழன்றுப் பின்னர் வாடுகிறார்கள். குறிக்கோள் அறியாத மானிடரோ, வீண் கனவுகளிலும் கண்மூடி மாயையிலும் சிக்கித் துன்புறுகிறார்கள். விதி, தலையெழுத்து, கொடுப்பினை, பாவம் எனப் பலவகைக் கேலிக்குரியக் காரணங்களால் தங்கள் துன்பங்களை நியமப்படுத்துகிறார்கள். வாழ்வில் 'குறிக்கோள்' என்றால் என்னவென்றே அறியாத இவர்களால், தன்னறிவைத் தேடுவது இயலாத செயல். எத்தனை காலம் வாழ்ந்தாலும், நாடியது அடங்கினாலும் இவர்கள் நாடியது அடையார்.

    'பிறப்பிறப்பற்ற நிலை உண்டா?' என்றும் 'ஆன்மாவைத் தேடிப் பெறத்தான் வேண்டுமா?' என்றும் முன்பு கேட்டாய். உன் கேள்விகளுக்குப் பதிலாக, ஆன்மாவைத் தேடியறிந்தவரின் நிலையைப் பற்றிச் சொல்கிறேன், கேள்.

    உன் தந்தை புரிந்த வேள்வியைப் பார்த்தாய் அல்லவா? வேள்வித்தீயில் அவரிட்டவை அனைத்தும் தீயில் கலந்து தாமும் பற்றி எரிந்தன அல்லவா? தீயானது பற்றியதை ஏற்கும் தன்மையது. ஆன்மாவும் தீயைப் போன்றது. தீயின் ஒளியைப் போன்றது. தன்னறிவைத் தேடிப் பெற்றவர்கள், ஆன்மா எனும் தீயுடன் கலக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆன்மாவைப் போல் நிலையாக ஒளி வீசுகிறார்கள். பிறப்பிறப்பற்ற நிலையைக் கடக்கிறார்கள்" என்றான்.

    தன்னறிவு பற்றியும் ஆன்மா பற்றியும் விளக்கியதற்கு எமனுக்கு நன்றி சொன்ன நசிகேதன், தன் மனதில் தோன்றியக் கேள்வியை முன்வைத்தான்.

2011/07/08

தன்னறிவு பெற்றவரால் மானிடம் சிறக்கும்


59
தாவிக்கும் தாடிக்கும் காவிக்கும் பாவிக்கும்
தீவிர யோகிக்கும் திண்டாட்டம் - ஆவிகையாய்த்
தன்னறிவைத் துய்ப்பவர் கோடியொன்றில் கோடிகுறை
மன்னுயிர்க்கு மன்னாரால் மாண்பு.

   பேதைகளும் நிலையற்றோரும் மட்டுமல்ல, துறவிகளும், மதகுல குருக்களும், முனிவர்களும் கூடத் தன்னறிவு பெறத் திண்டாடுகிறார்கள். கோடியில் ஒருவரே ஆன்மாவைப் பற்றுக்கோடாய் எண்ணி, தன்னறிவைப் பெறுவார். அவரால் மனிதத்துக்கு மட்டுமல்ல, ஆன்மாவுக்கும் சிறப்பு (என்றான் எமன்).


தாவி: நிலையில்லாதவர், புலனைக் கட்டாதவர்
தாடி: சன்னியாசி, பிரசாரகர், குரு, சித்தர் (முகமுடி வழிக்காதவர்; புறக்கோலத்தைப் பொருட்படுத்தாதவர்)
காவி: துறவி, குரு (காவியுடை அணிந்தவர்)
யோகி: மனதைக் கட்ட மூச்சடக்கிப் பயற்சி செய்வோர், இலக்கைத் தேடுவோர்
ஆவிகை: பற்றுக்கோடு
துய்ப்பவர்: அனுபவித்து உணர்வோர்
மன்னுயிர்: பிறவி, ஆன்மா


['..fifteen billion human beings, where's our destiny?' - cliff richard ]

    ன்மா உண்டா? அதை அறிவு நிலையில் விளக்க முடியுமா? ஆன்மாவின் அமனித சக்தியை மனிதக் கட்டுக்குள் கொண்டு வந்து பயன்படுத்த முடியுமா? இதைப் பற்றி உலகத் தத்துவப் பல்கலைக் கழங்களிலும் ஸ்கேன்டிநேவியா நாடுகளின் சில தனியார் நிறுவனங்களிலும் தீவிர ஆராய்ச்சி செய்கிறார்கள். அறிவுஜீவிகளான பெருஞ்செல்வந்தர்கள் சிலரின் ஆதரவில் பல நிழலான ஆய்வுகளும் நடைபெறுகின்றன. உலகப்போர் நாட்களில் ஜெர்மனி இந்த வகை ஆய்வில் நிறைய நேரமும் பணமும் செலவழித்ததாகச் சொல்வார்கள். இன்றைய 'psychological warfare'ன் பின்னணியில் ஆன்மா ஆராய்ச்சியின் ரேகை ஓடுகிறது.

    electrical energy ஆன்மாவுக்கு நெருக்கமாகச் சொல்லப்பட்டு வருகிறது. நம் உடலின் electromagnetic radiationஐ வைத்து சில வியத்தகு, குறுகிய வரைபாட்டு வித்தைகள் செய்கிறார்கள். எண்ண அலைகளைப் பொறி வைத்துப் பிடித்து, காலப்பெட்டகத்துள் அடக்கி, மெய்சிலிர்க்க வைக்கும் பரிசோதனைகள் செய்கிறார்கள். எண்ண அலைகளும், ஒளியொலியலைகள் போல் கால காலமாகப் பயணித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். வலிப்பு நோயாளியின் துடிப்பில் பிறவி எண்ணங்களைப் படித்ததாகச் சொல்கிறார்கள். ஜூலியஸ் சீசர் விட்ட மூச்சின் அணுக்கள், 'வெளியே காத்தாடப் போய்' வரும்பொழுது நம் சாதா நுரையீரல்களில் புகலாம் என்கிறார்கள். தொழில் நுட்பம் வளரும் பின்னொரு நாளில் புத்தன் யேசு காந்தியின் சிந்தனைகளை அடையாளம் காணலாம் என்கிறார்கள். மனித சக்தி பிரமிக்க வைக்கிறது!

    இன்னொரு சமயம் இந்தப் பரிசோதனைகளைப் பற்றி நானறிந்ததை விரிவாக எழுதுகிறேன். இதையறிய முற்பட்டதில், ஒரு கதை எழுதும் அளவுக்கு சுவையான விவரங்கள் கிடைத்தன (நண்பர் பத்மநாபன் விருப்பத்துக்காக, மூன்றாம் சுழியில் எழுதியது. பாவம், நண்பர் :).

    ஆன்மா உண்டோ இல்லையோ, ஆன்மாவை அறிய வகை செய்யும் தன்னறிவு பெற்றவர்கள் உண்டு என்று நம்புகிறேன். தன்னறிவை எல்லாரும் பெற முடியாது என்றும் நிச்சயமாக நம்புகிறேன். தன்னறிவு கண்டவர்கள் நம்மைப் போல் வெளித் தோற்றம் கொண்டாலும், சிந்தையிலும் செயலிலும் வித்தியாசனமானவர்கள். நம்மைப் போல் பிறந்து வளர்ந்தவர்கள் தான், எனினும் எங்கேயோ ஒரு தீப்பொறி பற்றியிருக்கிறது. அக்கினிக் குஞ்சொன்று கண்டிருக்கிறார்கள். அது தெரிந்துத் தீ வளர்த்திருக்கிறார்கள். சொல்லடிக்கும் கல்லடிக்கும் அஞ்சாமல், ஒரு இலக்கை நோக்கி, தளராமல், தன்முனைப்போடு, விழுந்தாலும் எழுந்து, தீவிர உறுதியோடுச் செயல்பட்டிருக்கிறார்கள். வாழ்வில் சிறு மாற்றங்களைச் செய்யவே சோர்ந்து போகும் நமக்கு, இவர்களின் மன உறுதி அச்சுறுத்துவதாக இருக்கிறது. கோவில் கட்டிக் கடவுள் என்று கும்பிட்டு ஒதுங்கத் தோன்றுகிறது.

    தன்னறிவு பெற்றவர்கள் நம்முள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தன்னறிவு பெற்றவர்களிடம் இனம் புரியாத, சில சமயம் விபரீத, அமைதியும், ஆழ்ந்த உள்நோக்கும், அடுத்தவர் மனதுடன் தொடர்பு கொள்ளும் சக்தியும், சிறியதானாலும் பொருளுள்ள வழிகாட்டும் அற்புதங்களை நிகழ்த்தும் திறனும் இருப்பதாக நினைக்கிறேன். கோபம், பொறாமை தவிர்த்தக் கட்டத்திலிருந்து, தன்னறிவு பெற மிக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஆசை, கோபம், பொறாமை தவிர்த்தும், அதற்குப் பின்னும் பல்லாண்டுகள் ஆகலாம் தன்னறிவைக் கண்டறிய என்று நினைக்கிறேன். தன்னறிவு கண்டவர்கள், பெரும் சாகசக்காரர்களாக, பில் கேட்ஸ் போல் பிரபல சாதனையாளராக இருக்கவேண்டியதில்லை. மகாத்மா காந்தி, அன்னை தெரசா போல் தியாகச் சின்னங்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. விவேகானந்தர் போல் எழுச்சியின் அடையாளமாக இருக்க வேண்டியதில்லை. பரமஹம்சர் போல் அமைதியின் உருவமாக இருக்க வேண்டியதில்லை.

    தன்னறிவு பெற்றதாக நான் நம்புவோரில் சிலருடன், சில நாட்களோ மணிகளோ நிமிடங்களோ பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். உதாரணம் சொல்கிறேன். தன்னறிவு பெற்றதாக நான் நம்பும் ஒருவர், என் சிறுவயதில் எங்கள் மாமா வீட்டில் உபரிவேலை பார்த்த சுந்தரம் எனும் பெண்மணி. படிப்பறிவில்லாதவர். பரம ஏழை. எனினும், அவர் பேச்சிலும் செயலிலும் ஆழமானப் பண்பிருக்கும். அமைதியிருக்கும். பிரமிப்பூட்டும் சகிப்புத் தன்மையிருக்கும். சந்தோஷமிருக்கும். கூச்சத்தினால் அதிகம் பேசமாட்டார், பேசினால் சேரிப்பேச்சினூடே ஒரு சிந்தனைத்தளம் இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அவர் புரிந்த ஒரு தியாகச் செயலினால் ஒரு சாக்கடைச்சேரிப் பிரதேசத்து அத்தனை பிள்ளைகளும் (முன்னூறு பேர் போல்) இன்றைக்கு சற்றே மேன்மையான வாழ்க்கையைப் பெற முடிந்திருக்கிறது. அந்த முன்னூறு பேரின் சந்ததி என்று தொடர்ந்து எண்ணும் பொழுது, அவர் செயலின் தொலைநோக்கையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். இன்னும் ஐம்பது வருடங்களில் தங்களின் பாட்டனார்கள் சேரியில் மிகச் சாதாரணமாக வாழ்ந்தவர்கள் என்பது அவர்களுக்குப் புரியுமா தெரியாது, ஆனால் அந்த முன்னூறு பேரின் ஆயிரக்கணக்கான வழித்தோன்றலகள், தங்கள் வாழ்வின் நிலை உயர, சுந்தரம் எனும் ஒரு மூதாதையக் கிழவி இட்ட ஒரு சிறிய கோடு பெரும் பாதையானதைப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். சேரி நிலம் பற்றி சுந்தரம் அன்று முடிவெடுத்த போது, அவரை "லூசுக்கிழவி" என்றார்கள். 'தெரிந்து செய்த செயல்' என்பது முப்பது வருடங்களுக்குப் பின் புரிந்து, இன்றைக்கு 'லேசுக்கிழவி அல்ல' என்கிறார்கள். நாளைக்குக் கடவுள் எனலாம்.

    முகத்தில் உரசினாலும் தன்னறிவை நான் அடையாளம் காண்பேனா என்பது சந்தேகமே. தன்னறிவு பெற்றவர்கள் என் போல் சாதாரண மானிடருக்கும் இலவச மேன்மையைத் தருகிறார்கள். அந்த வகையில் அவர்களின் தொடர்ந்தத் தேடலுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

['..பூமியில் நேராக வாழும் மனிதரெல்லாம் சாமிக்கு நிகரில்லையா?' - கண்ணதாசன் ]

    "தனக்குள் இருக்கும் ஆன்மாவை அறிய முயன்று தோல்வியுற்றவர்களைப் பற்றிச் சொன்னீர்கள். ஆன்மாவை அறிய வேண்டும் என்று உறுதியாக இருந்தால் தன்னறிவு பெற முடியாதா?" என்றான் நசிகேதன்.

    எமன் சிரித்தான். "தன்னறிவு பெற முடியும். அது தேடுவோர் உறுதியின் தீவிரத்தைப் பொறுத்தது. சொல்கிறேன் கேள்.

   பலவற்றையும் கற்று, வேதாந்த சாத்திரப் பொருளறிந்து, உலகத்துக்கு உபதேசம் செய்யும் ஞானிகள் கூட மனதைக் கட்டி மூச்சைக் கட்டித் தவமிருந்து தன்னறிவு பெறுவார்களா என்றால் அதிகம் பெற்றதில்லை என்பேன். ஆன்மாவை அறிய வேண்டும் என்ற ஆவல் உண்டே தவிர, அவர்கள் தங்கள் உறுதியில் அடிக்கடித் தளர்ந்து இலக்கைத் தவறவிடுவார்கள்.

   மதம், சடங்கு, நெறி என்று பலவாறு பிரசாரம் செய்யும் குருக்கள் ஆன்மாவை அறிந்தவர்கள் என்று நினைக்கிறாயா? தன்னறிவு பெற்றவர்கள் பிரசாரம் செய்ய மாட்டார்கள். போலிகளே காவி கட்டி, தாடி வளர்த்து தன்னையறிந்த ஞானி போல் 'உய்யும் வழி' என்று கண்மூடித்தனங்களைச் சொல்வார்கள். அவ்வாறு பிரசாரம் செய்யாத காவிகளும் தாடிகளும் உண்டு என்றாலும், அவர்களுக்கும் தன்னறிவு கிடைப்பது கடினம்.

   ஆன்மாவை அறிய முயன்று தோற்ற முனிவர்கள் அதிகம். தவமியற்றி முடிக்கத் தெரியாத முனிவர்களைப் பற்றி நீ அறிவாய் அல்லவா?

   சன்னியாசிகளுக்கும் துறவிகளுக்குமே இந்தக் கதி என்றால், தங்கள் தினசரி வாழ்வில் எண்ணிலா இன்னல்களைச் சந்தித்து ஒவ்வொரு நாளையும் கழிக்கப் பாடுபடும் பேதைகளுக்கு என்ன கதி என்று எண்ணிப் பார். தன்னறிவு பெறுவது சாத்தியமான செயலா? அவ்வாறு முயலும் ஒன்றிரண்டு பேரும் பாதியிலேயே நிறுத்திவிட்டு உலகாயதச் சிக்கல்களைக் கவனிக்கப் போய்விடுகிறார்கள்.

   மனிதர்கள் நிலையில்லாதவர்கள். மனித மனம் இயற்கையிலேயே அலைபாயும் வகையில் அமைக்கப்பட்டது. அதனால் தான் அலைபாயும் புலன்களால் உலகைக் காண்கிறது மனிதம்.

   இவை எல்லாவற்றையும் மீறி, உள்ளிருக்கும் சக்தியை அறிந்தே தீருவது என்று தீர்மானத்துடன் செயல்பட்டு தன்னறிவு பெற்றவர்கள் கோடியில் ஒருவர் என்பேன். அப்படி முயன்று தன்னறிவு பெற்றவர்கள் தனக்கு மட்டுமல்ல, மனித இனத்துக்கு மட்டுமல்ல, ஆன்மாவுக்கே சிறப்பு சேர்க்கிறார்கள்" என்றான் எமன்.

   எமன் சொன்னது நசிகேதனுக்குப் புரிந்தது. எமன் சொல்லாதது இன்னும் தெளிவாகப் புரிந்தது. 'வாய்ப்பு கிடைத்திருக்கிறது, வாசல் திறந்திருக்கிறது, நசிகேதா. உனக்கும் உன் சுற்றத்துக்கும், உன் மானிட இனத்துக்கும், ஏன் ஆன்மாவுக்குமே.. சிறப்பு செய்யத் தயாரா?' என்று எமன் கேட்காத கேள்வி நசிகேதனுக்கு உறைத்தது.

2011/07/05

அறியப்படாத ஆன்மா அடங்கிவிடும்


58
ஆறுகுணம் ஆறாமல் ஆராய்வோர் ஆற்றறுத்து
ஆறுமட்டும் ஆன்மா அறியாரே - ஆறுகைக்கு
ஆறுகாட்டும் ஆறாத்தீ ஆரும் அவருள்ளே
ஆறும் அகலான ஆறு.

   று தீய குணங்களை அடக்காதவர்கள் தங்கள் தேடலை இடையிலேயே கைவிட்டு, தாங்கள் இறக்கும் வரையிலும் ஆன்மாவை அறியமாட்டார்கள்; அமைதிக்கு வழிகாட்டும் அடங்கா ஒளிவடிவான ஆன்மாவோ, அன்னாரின் உள்ளத்திலே, அடங்கிவிடும் ஒரு அகல் விளக்கின் எளிய சுடர் போன்ற நிலையடையும் (என்றான் எமன்).


ஆறுகுணம்: ஆறுவகைக் குறைகுணங்கள்
ஆறாமல்: அடங்காமல், அகற்றாமல், நீங்காமல்
ஆராய்வோர்: தீவிரமாகத் தேடுவோர்
ஆற்றறுத்து: முடிக்காமல் விட்டு, பாதியில் நிறுத்தி, தோல்வியுற்று
ஆறுமட்டும்: அடங்கும் வரை, இறக்கும் வரை
ஆறுகை: பெரும் அமைதி, ஆறுதல்
ஆறுகாட்டும்: வழிகாட்டும் (ஆறுகாட்டி: வழிகாட்டி)
ஆறாத்தீ: அணையாத தீ, ஆறாவது தீ (ஆறாம்+தீ) எனவும் மருவிக் கொள்ளலாம்
ஆரும்: பெறும், ஆகும்
ஆறும்: அடங்கக் கூடிய, ஒடுங்கக் கூடிய
அகல்: விளக்கு, தகழி (அகல்+ஆன)
ஆறு: நிலை
* ஆறுவகைத் தீ: பொறி, சுடர், சுவாலை, கொழுந்து, அனல், ஒளி.


['..you don't have a soul.. you are a soul.. what you have is a body..' - c.s.lewis ]

    வமிருப்பது சுலபமென்றால் நமக்குச் சாகுந்தலம் கிடைத்திருக்காது. இப்படி ஒருசில உபயோகங்கள் இருந்தாலும், பொதுவாக உறுதியின்மையால் தனக்கோ பிறருக்கோ எந்தப் பயனும் கிடைப்பதில்லை. ஒரு எண்ணத்தை மனதில் ஏற்றோமானால் அது நிறைவேறும் வரை ஓயாதிருக்க வேண்டும். ஆன்மாவை அறிவதிலாகட்டும், அடுத்த வேளை சோற்றுக்கான வழி தேடுவதிலாகட்டும் - எடுத்தக் காரியத்தை முடிக்கும் துணிவும் உறுதியும் வேண்டும். 'கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்' என்பது வெறும் சொல்லாட்சி அல்ல. முயற்சியின் வெற்றி தோல்வியை விட, முயற்சியைக் கைவிடுவது உள்ளும் புறமும் பரவலாகப் பாதிக்கிறது. மரணத்தாலன்றி வேறு காரணங்களால் தன் உறுதியைக் கைவிடுவோர் கேவலமானவர்கள்; கோழைகள் மனிதசக்தியையே குன்றச் செய்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. சென் ஞானம் சொல்கிறது. சென் சொல்வதை நான் ஏற்கிறேனா மறுக்கிறேனா என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

   ஞானம் பெறுவதற்காக, நகரத்திலிருந்து வந்த மாணவனை வரவேற்று உபசாரம் செய்தாராம் ஆசிரியர். "வா, டீ சாப்பிடலாம்" என்று மாணவனிடம் ஒரு கோப்பையைத் தந்து டீ ஊற்றினார். கோப்பை நிரம்பி வழிவதைக் கவனித்த மாணவன் ஆசிரியரைத் தடுத்து "ஏனிப்படி செய்தீர்கள்? நிரம்பி வழிவதைக் கவனிக்கவில்லையா?" என்றானாம். "உன் கவனம் கோப்பையிலும், என் கவனம் டீயிலும் உள்ளது" என்றாராம் ஆசிரியர்.

   நான் சுட்டும் பொழுது என் விரலைப் பார்ப்பதால், சந்திரனைக் காணவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறாது மாணவரே!

   மிகச் சிறந்த மல்யுத்த வீரனாக விரும்பிய ஒரு அப்பள நோஞ்சான், சென் ஆசிரியரிடம் உதவி கேட்டானாம். மல்யுத்தப் பயிற்சி பெற இங்கு வந்தானே என்று எல்லோரும் சிரித்தார்களாம். ஆசிரியர் அவனை அழைத்து, "இந்தக் கணத்திலிருந்து உன் பெயர் 'பேரலை'. உன் முன் தோன்றும் அத்தனையையும் விழுங்கி ஏப்பம் விட்டுச் சீறி முன்னேறும் பேரலையாக உன்னை மனதுள் நினைத்து தியானம் செய்" என்றாராம். பல நாட்கள் தியானம் செய்த நோஞ்சான் மனதில் பிற எண்ணமெல்லாம் மறைந்துவிட, ஆசிரியர் அவனை அழைத்து, "நீ மல்யுத்தம் செய்யத் தயார்" என்றாராம். நோஞ்சானைப் பார்த்து ஏளனம் செய்த மல்யுத்த வீரர்களையெல்லாம் பேரலை விழுங்குவதைப் போல் தூக்கியடித்து, நோஞ்சான் மாநிலத்திலேயே மிகச்சிறந்த மல்யுத்த வீரன் என்று புகழடைந்தானாம்.

   னதைக் கட்டுப்படுத்தி ஒரு இலக்கினை நோக்கி விலகாமல் செல்லும் வித்தையை அறிய விரும்பிய மாணவன், சென் ஆசிரியரிடம் வந்து உதவி கேட்டானாம். ஆசிரியர் அவனைப் பார்த்ததும், "உனக்கு முதிர்ச்சி வரவில்லை போ, பிறகு வா" என்றாராம். பலமுறை இப்படித் திருப்பி அனுப்பப்பட்டாலும், மாணவன் தினமும் காலையில் ஆசிரியரிடம் வந்து பயிற்சி தருமாறு கேட்டுக் கொண்டிருந்தானாம்.

ஆசிரியர் அவனிடம், "சரி, உனக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதிக்கிறேன். தயாரா?" என்றாராம். ஆர்வத்துடன் தலையாட்டிய மாணவனிடம், "ஒரு கை ஓசையை அறிந்து வா" என்றாராம்.

   எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு முறை 'transcendental meditation' பழகப் போயிருந்தேன். முதல் நாள் ஒருவரைச் சந்தித்த போது, "எதற்காக இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டார் சென் ஆசிரியர் போல். பதில் தெரியாமல் விழித்த என்னை, "அடுத்த வாரம் வாங்களேன்" என்றார். மூன்று மாதங்கள் பொறுத்து, மீண்டும் அங்கே போய் அவரையே சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டது ஆச்சரியம் என்றால், "பதில் தெரிந்ததா?" என்று அவர் தன் கேள்வியை நினைவில் வைத்திருந்தது அதைவிட ஆச்சரியம். இந்த நினைவையும் 'ஒரு கை ஓசை' சென் கதையையும் பாதியில் நிறுத்தி, பிறகு முடிக்கிறேன். செய்தி, கதையாகக் கூடாதே என்று பார்க்கிறேன் :).

   சிலருக்கு எண்ணம் பிடிக்கிறதே தவிர, செயலாக்கம் பிடிப்பதில்லை. பொருந்தாத, பலநேரம் முட்டாள்தனமான, சாக்குகளைச் சொல்லிச் செயலில் இறங்காமலே சாகிறார்கள். சாதாரண உலகாயத விஷயங்களுக்கே இப்படி என்றால், இவர்களால் தன்னறிவு போன்ற நுட்பங்களை அறிய முடியுமா? வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

   ஒவ்வொருப் புறத்தாக்கமும் 'இலக்கிலிருந்து நம்மை விலகி அழைத்துச் செல்கிறதா?' என்று சிந்தித்து அதற்கேற்ப நடந்தால், செயலில் உறுதியாக இருக்கலாம். இலக்கையே கணந்தோறும் மாற்றிக் கொள்ளும் முட்டாள்களை அறிந்து விலகுவது, ஆரோக்கியமானது. உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நீருள் மூழ்குவோரை நீந்தத் தெரிந்தவர் காப்பாற்றி இழுத்து வரும் சிக்கலுக்கு ஒப்பானது, இத்தகைய முட்டாள்களுடன் பழகுவது. நாமே முழுகிவிடும் அபாயம் உண்டு.

   தீக்குணங்களை முழுதும் அறுத்த பின்னரே மனதைக் கட்டவேண்டும் என்று நினைத்ததுண்டு. அலை ஓய்ந்து கடலில் குளிக்க முடியாது என்பது புரியும் வரை. மனதைக் கட்டவேண்டும் என்ற உறுதியைப் பற்றுக்கோடாகக் கொண்டால், தீக்குணங்கள் தானே அடங்குமென இப்போது நினைக்கிறேன். (நற்குணங்களின் பாதிப்பும் இயல்பாகவே அமைந்துவிடும் - இருமைகள் அடங்கிய ஒருமை). தீக்குணங்களில் பொறாமை, கபடம், பேராசை.. இவை மூன்றையும் அடக்குவது ஓரளவுக்கு எளிதென்று நம்புகிறேன். மூடமும் வெகுளியும் மிகக் கடினமானவை என்று நினைக்கிறேன். இரண்டில் வெகுளியை விட மூடம் மிகவும் மோசம் என்று அறிந்து கொண்டிருக்கிறேன். வெகுளி பிறரைத் தாக்குகிறது; மூடம் தன்னையே அழிக்கிறது. இவையிரண்டுக்கும் இடையில் மயக்கத்தை வைத்திருக்கிறேன்.

['..ஆறு மனமே ஆறு..' - கண்ணதாசன் ]

    "ஆன்மாவை அறியத்தான் வேண்டுமா என்று முன்பு கேட்டாய். ஆன்மாவை அறியாதவர்கள் என் வலையில் விழுந்து விழுந்து எழுவார்கள் என்றேன் அல்லவா? பிறவி எனும் பிணி, பேருலகப் பேராசையில் மண்ணுலக வாழ்வை நாசமாக்கும் குணம், போன்றவை ஒடுங்கவும் கண்மூடித்தனம் ஒழியவும் தன்னறிவு பெற வேண்டும். அறியத்தான் வேண்டுமா என்பதையும், அதைவிட, அறியாவிட்டால் ஆன்மாவுக்கு என்ன ஆகும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

   தன்னறிவைத் தேடுவோர் தம் இலக்கில் தீவிரமாக இருக்க வேண்டும். புறத்தே தென்படும் பலவித இடையூறுகளை வென்று புலனின்பம் அடைவோரை அறிவாய். அகத்தின் இடையூறுகள் தீக்குணங்கள். அவற்றை ஒடுக்காதவர், எத்தனை தேடினாலும் தன்னறிவு பெற இயலாது. காரணம், அத்தீக்குணங்கள் அவர்களை இலக்கினின்று விலகச் செய்து விடும். பேராசை, வெகுளி, மூடம் போன்றத் தீக்குணங்கள் அவர்களின் தேடலையே மறைத்து மறக்கச் செய்வன.

   தீயானது பொறியாக, தன் இருப்பிடத்தை அறிவிக்கிறது. சுடரான நிலையில், பற்றுதலுக்கு முனைப்பாக, எளிய வெற்றியின் நிறைவு போல, விளங்குகிறது. சுவாலையான நிலையில், சுற்றி வெப்பத்தை உணர வைக்கிறது. கொழுந்தான நிலையில், அண்மையையும் எரிக்கத் தொடங்கி வலுவாகிறது. அனலாக, பெரும் ஆக்கிரமிப்புடன் பரவத் தொடங்குகிறது. ஒளியான நிலையில், ஓயாமல் எரிந்து சுற்றிலும் வெப்பமும் ஒளியும் தந்து வளர்ச்சியின் உருவாக மாறிவிடுகிறது.

   உள்மனக்குகையில் புதைந்துள்ள ஆன்மாவைப் பற்றிச் சொன்னேன். அதுவும் தீ போன்றது. பொறியை அறிந்துத் தேடி, அதை வளரவிட்டு ஒளிவடிவமாக மாற்ற வேண்டியது தன்னறிவுத் தேடலின் நோக்கம். தன்னறிவின் ஒளியில் மட்டுமே மனிதம் பரந்த ஆன்மாவை அறிய முடியும்.

   தீக்குணம் கொண்டோரின் உள்மனக்குகையிலும் ஆன்மா இருக்கிறது. தங்கள் தேடல்களை இடையிலேயே நிறுத்தி விடுவதாலும், தீக்குணக் குறுக்கீட்டுக்குப் பணிவதாலும், இவர்களின் தேடல் நிறைவேறாது போகிறது. எந்தப் பிறவியிலும் இவர்களால் நிறைவும் நிம்மதியும் பெற இயலாது போகிறது. இவர்களது ஆன்மா, அணைந்து ஒடுங்கக் காத்திருக்கும் அகல் விளக்கின் சுடர் போன்ற நிலையை அடைகிறது" என்றான் எமன்.

2011/07/01

ஆன்மா தேடினால் புலப்படுவது


57
அசையாது ஆயின் திசையெட்டும் ஏகும்
பசையற்றோர் பக்குவமாம் ஆன்மா - இசையிது
உட்கார்ந்த கட்டில் உலகமேவும் கட்கிலி
கொட்கும் கடைபிடிப்பார் கட்கு.

   ற்றறுத்தோர் அறியக்கூடியதான ஆன்மா எனும் மேன்மை, அசையாமல் எட்டுத்திக்கிலும் பரவக்கூடியது; அமர்ந்த இடத்திலிருந்து அனைத்துலகும் செல்லக்கூடியது; புலப்படாதது எனினும், தளராமல் தீர்மானத்தோடுத் தேடுவோருக்குத் தன்னைத் தெரியப்படுத்தும் (என்றான் எமன்).


பசை: பற்று, பந்தம்
பக்குவம்: தன்மை, முதிர்ச்சி, அறிவு, தகுதி
இசை: உண்மை, அறிவு, மேன்மை, புகழ்
கட்டில்: நிலையில்
கட்கிலி: புலப்படாதது, புலப்படாதவர், மறைந்திருப்பவர்
கொட்கும்: புலப்படுவது, வெளிப்படுவது (வெளிப்படுத்தும், புலப்படும்)
கடைபிடிப்பார்: முடிவைக் காணும் வரையில் உறுதியாகச் செயல்படுத்துவோர்


['..i feel within me a peace above all earthly dignities..' - william shakespeare ]

    "புலனடக்கி, புறத்தாக்கம் மறைந்து விட்ட நிலையில், மனிதம் தன்னறிவைத் தேடும் வாய்ப்பைப் பெறுகிறது" என்ற அஜாதசத்ரு, தொடர்ந்தான். "வாய்ப்பைப் பெறுவதனால் மட்டும் தன்னறிவை அடையமுடியாது. தீவிர முயற்சி வேண்டும். வேகம் வேண்டும். குறிக்கோள் வேண்டும். அலைவது போல் பாவனை காட்டும் ஆன்மாவை, அறிந்தே தீருவது என்ற உறுதி வேண்டும். சிலந்தி வலையைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?"

"பார்த்திருக்கிறேன்" என்றார் ஞானி.

"எத்தனை பெரிதாக வலையைப் பின்னிப் பிணைந்திருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் பூச்சி சிக்கியதைச் சிலந்தி உணர்ந்து விடும். வலையின் குறுக்கும் நெடுக்கும் பயணித்து, சிக்கியப் பூச்சியை உண்டு முடிக்கும் வரை சிலந்தி ஓயாது. நம் மனம் சிலந்தி வலை போன்றது. நமக்குள் புதைந்தத் தன்னறிவு, வலையில் சிக்கியப் பூச்சி போன்றது. நாம் சிலந்தி போன்றவர்கள். அகத்தே சிக்கிய அறிவுப் பூச்சியைக் கண்டறிந்து ஞான விருந்து உண்பதே நமது இலக்கு, குறிக்கோள், பொறுப்பு ஆகும்" என்றான் மன்னன்.

ஞானி தலையாட்டினார். மன்னன் தொடர்ந்தான். "முழுமையான சுய அறிவு என்றால் என்னவென்று உங்களுக்கு இப்போது நான் சொல்கிறேன்" என்றான். ஞானி மறுபடியும் தலையாட்டினார்.

"தன்னறிவில் இருவகை உண்டு. நுட்பமான, குறுகிய, வரைக்குட்பட்டது ஒரு வகை. மற்றது, அறியவும் இயலாத அளவுக்கு நுட்பமான, தொடர்ந்து பரவும், எல்லையற்றது. நீங்கள் குறிப்பிட்ட ஐம்பொறிகள் நுட்பமானவை, மகத்தானவை, சக்தி வாய்ந்தவை; எனினும் அவற்றை அடக்கிச் சுருட்டிச் சாப்பிட்டு விரிந்து கொண்டே இருக்கும் அண்டவெளியோ அளவிட முடியாதது. எல்லையில்லாத மகத்துவம் கொண்டது. வெளியை முழுமையாக அறிய முடியாது, ஆயின், வெளியின் அம்சமான ஐம்பொறிகளைப் புரிந்து கொள்ள முடியும். வெளியின் அம்சமான ஐம்பொறிகளைப் பற்றிய அறிவில், வெளியைப் பற்றிய அறிவுக்கான வழிகள் அடங்கியுள்ளன. ஐம்பொறியின் அறிவை வைத்து வெளியைப் பற்றியத் தெளிவைப் பெறலாம். நமக்குள் இருக்கும் தன்னறிவு, ஐம்பொறிகள் போன்றது. நாம் அதைத் தேடி அறிந்தால் பரந்த ஆன்மாவைப் பற்றிய, முழுமையான சுய அறிவைப் பற்றிய, தெளிவைப் பெறலாம். முழுமையாக அடைய முடியாது எனினும், தன்னறிவைப் பெற்ற நிலையில் முழுமையான சுய அறிவை உணர முடியும். அதுவே ஞானம்" என்ற மன்னன் தொடர்ந்தான். "கேளுங்கள் ஞானியே! மெய்யறிவின் உண்மையான பொருள் "இது அல்ல" என்பதே. பரந்து விரிந்து கொண்டிருக்கும் அண்டம் போன்ற ஆன்மாவைக் குறிப்பிட்ட அடையாளத்தில் கட்டிவிட இயலாது. அது போல், தன்னறிவின் ஒவ்வொரு நிலையையும் "இது அல்ல" என்ற உணர்வோடு கடப்பதே முழுமையான சுய அறிவைப் பெறும் வழி" என்று முடித்தான்.

ஞானி தலையாட்டினார்.

    ப்ரகதாரண்யக உபனிஷதில் இடம்பெறும் அஜாதசத்ரு-பாலாகி உரையாடல் இத்துடன் நிறைவடைகிறது. ஒரே ஒரு மாறுதல் செய்திருக்கிறேன். உபனிஷதில் சிலந்தி ஆன்மாவுக்கு உவமையாக வருகிறது. எனக்கோ, சிலந்தி தன்னறிவைத் தேடும் மனிதனுக்குப் பொருத்தமாகத் தோன்றியது. மற்றபடி, கதைச்சுவைக்காக ஆங்காங்கே உரையாடலில் இட்டுக் கட்டியிருக்கிறேன். பொருளில் எங்கேனும் தவறு செய்திருந்தால் தெரிவித்து, மன்னிக்க வேண்டுகிறேன்.

மற்றக் கதையையும் முடித்துவிடுகிறேன்.

    ஆதிசங்கரர் குறவனிடம், "ஏய், உன்னைத்தான். உன்னைச்சுற்றி இருக்கும் இவை எல்லாவற்றையும் நகர்த்து. நீயும் எழுந்து ஒதுங்கி வழிவிடப்பா" என்றார்.

குறவன் இளித்தான். "ஹிஹி.. சாமியோவ். இதெல்லாம் என்னுதில்லிங்கோ. நானா கொண்டு வந்தேன்? இந்த ஓட்டை ஒடிசல் உசிருங்க எல்லாம் வழியில மானாவாரியா சேந்ததுங்கோ சாமி. நான் சொல்லியா எங்கூட வருதுங்க? நான் சொல்லியா என்னை விட்டுப் போவுதுக? ஏதோ வருது போவுதுங்க சாமியோவ். இதுங்களைப் போய் என்னுதுன்றீங்களே சாமி?" என்று, நாய் குரங்கு பூனைகளை விரட்டினான். அவை குரைத்தும் முறைத்தும் மெள்ளத் தம் வழியே சென்றன.

"சரியப்பா, நீயாவது எழுந்து ஒதுங்கு. குளித்து முடித்து வருகிறோம்; அதே சுத்தத்துடன் சிவபூஜைக்குப் போகணுமப்பா" என்றார் சங்கரர்.

பெரிதாகச் சிரித்தான் குறவன். "ஆவட்டுங்க சாமியோவ். நீயாவது எந்திரிச்சு ஒதுங்குன்றீங்களே, யாருங்க அந்த "நீ"? நானா? நான்றது இந்த ஒடம்பா, இல்லே இதுக்குள்ளாற இருக்குற ஆம்மாவா? உடம்பை எடுத்துட்டு ஒதுங்கிட்டா உள்ளாற ஆம்மா எங்கே போவுதுங்க சாமி? அங்கயே தானே நிக்குது? நின்னுகிட்டே எல்லா இடத்துலயும் வருதுலா? சுத்தம்ன்றீங்களே சாமி, ஹிஹிஹி, ஒடம்புக்குத் தானே சுத்தம்? ஒடம்பு ஒதுங்கினாலும் அதோ இதோ உதோனு ஒளியுற ஆம்மாக்கு ஏது சுத்தம் சாமி? அட, ஆம்மாவை விடுங்க சாமி. எம்மேலே பட்ட காத்து, வெயில், நெழல் தானே உங்கமேலயும் படுது?" என்று தலையைச் சொறிந்தான். "ஆவட்டும் சாமி. நீங்க நல்லா சுத்தமா காவி கட்டியிருக்கிற சாமிங்கோ. உங்க கூட எட்டுபத்து ஆசாமிங்கோ. ஆவட்டும். எல்லாரும் சுத்தமா போங்க சாமி, நான் இதா எந்திரிச்சு ஒதுங்குறேன்" என்றபடி, குறவன் பலத்தக் கொட்டாவியுடன் எழ முனைந்தான்.

சங்கரருக்குப் பொறி தட்டியது. "ஐயா, யாரய்யா நீ? உனக்கிருக்கும் அறிவு எனக்கில்லையே?!" என வருந்திக் குறவனின் காலில் விழுந்தார்.

    இரண்டு கதைகளுக்கும் பொதுவான கரு உண்டு. தன்னறிவைப் பெற வேண்டிய தேவையின் தீவிர வெளிப்பாடு. தன்னறிவைப் பிறர் மேன்மைக்குப் பயன்படுத்தும் பக்குவம். ஆன்மாவைப் பற்றியத் தேடல்.

    இருவரின் தேடலுக்கும் தனிப்பட்ட உந்துதல்கள் உண்டு. அஜாதசத்ரு-பாலாகி கதையில் தன்னறிவைத் தேடியது யார்? அரசனா, ஆண்டியா? சற்றுச் சிந்தித்தால் மறைந்திருந்த வியப்பான உண்மை தெரியும். சங்கரரின் கதைக்கு வருவோம். அவருடைய அத்வைத சிந்தனைகளின் ஆணிவேர் இந்தக் கதையே என்பார்கள். குறவனாக வந்து சங்கரருக்கு வேதங்களையும் தத்துவங்களையும் போதித்தவர் சிவன் என்று கதை தொடர்வது, சாதாரணம். விளைவான சங்கரரின் அத்வைத சிந்தனைகள், அசாதாரணம். விதையானத் தன்னறிவுத் தேடலோ, மகத்துவம். சங்கரரின் மனதில் அதை விதைத்த உந்துதல்? அங்கே தான் பிரமிக்க வைக்கிறது. தன்னறிவுத் தீப்பொறி? (சங்கரரின் உந்துதலை விளக்க ஒரு சுவாரசியமான முன்கதையும் உண்டு).

    ஆன்மாவை அறிய முடியுமா? தன்னறிவு பெற முடியுமா? இந்தக் கேள்விகள் இவர்களைப் போல் என்னையும் வாட்டியுள்ளன, வாட்டுவன. ஒரே ஒரு வேறுபாடு. இவர்கள் கேள்விக்குப் பதிலையும் தேடி, விடாமல் முயன்று, உறுதியோடு நின்று கண்டறிந்தார்கள். நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு அஜாவோ குறவனோ கண்ணெதிரில் வந்தாலும் ஹலோ சொல்லாமல் ஒதுங்கிப் போவேன். பத்து வருடம் பொறுத்து வந்தால், இன்னும் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பேன். தேடினால் தானே பதில் கிடைக்க வாய்ப்புண்டு? தேடும் எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறதே தவிர, தேடும் செயல் அல்ல.

    ஆன்மாவை விடுங்கள். சூட்சுமம். விளக்க முடிகிற வாழ்வை, கண்ணுக்குப் புலப்படுகிற சாதாரண வாழ்வை, பத்தாங்கிளாஸ் அறிவுக்குட்பட்ட காரண-காரிய வாழ்வை, எனக்கும் பிறருக்கும் பயனுள்ளவாறு மாற்றியமைக்கும் எண்ணம் அடிக்கடி வரும். ஆனால், ஆயிரம் நொண்டிச் சாக்குகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் மனம். செயலில் இறங்க மாட்டேன். நொண்டிச் சாக்கு கிடைக்காவிட்டாலும் சோம்பித் திரிவேன். மாறுதல் பழம் தானாகத் தலையில் விழக் காத்திருப்பேன். போலிச் சமாதானம் செய்து கொள்ள அனுமதிக்கும் மனதை, செயலில் தீவிரம் காட்ட அனுமதிக்க மறுக்கிறேன். எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைப் போல் எத்தனை பேர் இங்கே?

['..நாடினேன் தந்தது, வாசலில் நின்றது, வாழ வா என்றது, தேடினேன் வந்தது..' - கண்ணதாசன் ]

    "ஆன்மாவை அறிய வேண்டுமா என்ற கேள்வியில் பெரும்பாலான மானிடம், தம் வாழ்நாளைக் கழிக்கிறது. ஆன்மாவைப் பற்றிய அறிவு, மேன்மைக்கான அறிவு. சாதாரண வாழ்வில் சுகம் காணும் சாதாரண மானிடம், ஆன்மாவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஆன்மாவை விட கண்ணுக்குத் தெரிகிற இன்பமும் நன்மையும் பிணியும் துயரும், அவர்கள் மனதையும் அறிவையும் ஆட்கொள்கின்றன. தன்னறிவைப் பெறத் தயங்குவோர் பிறருக்கு நன்மை ஏற்படும் விதத்தில் வாழ முடியாமல் போவது மட்டுமல்ல, தங்களுடைய வாழ்விலும் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களைச் செய்ய முடியாமல் போவார்கள். பிணியில் வாடுவார்கள். பிணியில் வாடுவது தெரிந்தும் தொடர்ந்து அதையே பற்றியிருப்பார்கள்" என்றான் எமன்.

   எமன் பிணி என்றது உடற்பிணி மட்டுமல்ல என்பதை உணர்ந்த நசிகேதன், "நீங்கள் சொல்வது புரிகிறது. எனினும், சாதாரண மனிதம் அசாதாரண ஆன்மாவை அறிய முற்படுவதே சோதனையான முரணல்லவா?" என்று கேட்டான்.

   "ஆம் நசிகேதா. அதனால்தான் தன்னறிவு எளிதில் கிடைப்பதில்லை. சாதாரண மனிதம் அதைப் பற்றி அறிந்து கொள்ள இயலாது போகிறது. தீச்செயல் புரிவோர் தொடர்ந்து தீச்செயல் புரிவார்கள். அறியாமையில் உழல்வோர் தங்கள் பரிதாப நிலையை அறிந்து கொள்ளாமலே வாழ்ந்து மடிகிறார்கள். ஏற்கனவே மலிந்த அவர்களின் வாழ்வு, ஆன்மாவை அறியாததனால் இன்னும் குறைந்துவிடப் போவதில்லை. எனினும், தங்களின் முழுச் சக்தியையும் உணர முடியாமலே மடிகிறார்கள். வேதனைக்குரியது. அவர்களின் செயல், திகட்டாத அறுசுவை விருந்தை உண்ண மறுத்துக் கட்டிவைக்கும் புலனின்பக்காரர்களின் செயலை ஒத்தது.

   ஆன்மாவை அறியத்தான் வேண்டுமா என்ற எண்ணம், ஒருமை அறியாது இருமைகளைப் பேணுவோரின் மனநிலை. இவர்களை எப்படி அடையாளம் காண்பது? 'இந்தக் கணத்திலிருந்து மாறினேன்' என்பார்கள், எனினும் சொல்லி முடித்த சில நாழிகையில் பழைய செய்கையைத் தொடர்வார்கள். தங்களின் பரிதாப நிலைக்குச் சமாதானமாக, 'நான் மாறப்போவதில்லை, இது என் குணம், என் விதி' என்பார்கள். இவர்களுக்குத் தன்னறிவு கிடைத்து என்ன ஆகப்போகிறது என்ற உன் கேள்வி முறையானதே. தன்னறிவு அவர்கள் வீட்டுக் கதவை உடைத்து வந்தாலும் உறங்கும் வகையினர். அவர்களுக்கு மருந்தும் பிணியாகிறது.

   தன்னறிவைத் தேடும் ஒரு சிலர் தனக்கும் பிறருக்கும் மேன்மையுண்டாகும் விதத்தில் நடக்கிறார்கள். தன்னறிவு பெற்றவர்களால், சாதாரணரின் வாழ்வில் சிறு அளவிலாவது முன்னேற்றம் ஏற்படுகிறது. அந்தப் பாதிப்பினால் பின்னொரு நாளில் அவரோ அவர் சந்ததியோ தன்னறிவைத் தேடுகிறார்கள். பின்னொரு நாளில் ஆன்மாவைத் தேட வைக்கும் உந்துதல் அவருள்ளேயும் வெளியேயும் அடங்கியிருக்கிறது. அதுவே ஆன்மாவின் தன்மையாகும்.

   ஒரு உடலுக்குள் அடைபட்டிருந்தாலும், ஆன்மா உலகங்களெங்கும் பரவக்கூடியது. உன் உடலின் ஆன்ம சக்தி உனக்குப் பிறகு உன் சந்ததிகளுக்குச் செல்லக்கூடியது. உன் ஆன்ம சக்தியின் விளைவு உன்னுடன் இருக்கும், இருக்கப் போகும், இன்னும் பலரால் அனுபவிக்கக் கூடியது. நமக்குள் அடைபட்டிருக்கும் ஆன்மா பரந்த ஆன்மாவுடன் நாமறியாமலே தொடர்பு வைத்துக் கொண்டேயிருப்பதால், ஆன்மா எங்கேயும் எப்போதும் இருப்பதாகத் தோன்றுகிறது. தன்னையறிவதால், பரந்த ஆன்மாவையும் அறியலாம்.

   ஆன்மாவை அறிய முற்படுவோர் இருமைகளை அறிந்து இயங்கும் பக்குவம் பெற வேண்டும். அந்தப் பக்குவம் பெற்றவருக்கே ஆன்மாவைத் தேடும் உந்துதல் பிறக்கிறது. ஆன்மாவைத் தேடி அறியத் தேவையான உறுதியும் தீவிரமும் வளர்கிறது. இருமைகளின் பிடியிலே சிக்கியிருப்போருக்கு தன்னறிவுப் பாதை தெரிவதில்லை. அப்படித் தெரிந்தாலும், அவர்களின் மன உறுதியும் தீவிரமும் வெள்ளத்தில் சிக்கிய மரத்துண்டு போல் நிலையில்லாது போகிறது. சுய முன்னேற்றத்துக்கான எந்தச் செயலையும் தொடங்காது தடுமாறுகிறார்கள். முடிவில் விதி என்று ஓய்கிறார்கள்" என்றான் எமன்.

   "அப்படியென்றால் ஆன்மா புலப்படும் என்கிறீர்களா?" என்று கேட்டான் நசிகேதன்.

   "நிச்சயமாக. ஒருமையில் மனதை செலுத்தி, தன்னறிவைத் தேடும் முயற்சியில் தீவிரமும் உறுதியும் கடைபிடித்தால் அவர்களுக்கு ஆன்மா புலப்படும்" என்றான் எமன். "புலப்படத்தானே பரந்திருக்கிறது ஆன்மா? அறிவாரற்றுப் போனால் அது ஆன்மாவின் தவறல்ல, கவலையுமல்ல. 'அறிவார் நின்று அறிவார், அறியார் நாளை வருவார்' என்று காலங்காலமாக அறியப்பட காத்திருக்கிறது ஆன்மா. மேலும் சொல்கிறேன் கேள்" என்றான் எமன்.

2011/06/28

ஆன்மா மானிடத்தினும் பெரிது


56
சாதிகள் சோறு இனமதம் தின்பண்டம்
வாதிடும் நாமதன் வாய்க்கவளம் - வேதி
கனிகள் குடிநீர் முகுலப் பசிக்கு
மனிதம் முழுதும் விருந்து.

   னிதம் முழுவதையும் விழுங்க வல்லது ஆன்மா. சாதிகள் அதற்குச் சோறு போல; இலையிலிட்டப் பண்டங்களாகும் இன மதங்கள்; ஞானிகள் கனிரசமும் குடிநீரும் போல; ஆன்மாவைப் பற்றி விவாதம் செய்யும் நீயும் நானும், விருந்தின் ஒரு கவளம் போலாவோம் (என்றான் எமன்).


வேதி: ஞானி
கனிகள்: பழங்கள், பழரசம் (கனி+கள்), பழமும் மதுவும் (கனி, கள்) எனப் பலவகையில் பொருள் கொள்ளலாம்


['..the soul is divine, immortal, intelligible, uniform, indissoluble, self-consistent and invariable..' - socrates ]

    பெரிய நேர்கோடை எப்படி அடையாளம் காண்பது? கீழ்க்காணும் கோடு சிறியதா பெரியதா?


    இது euclid காலத்து தந்திரக் கேள்வி. 'பெரிய' என்று எதுவுமில்லை. அதாவது, அதனருகே, 'சிறிய' என ஒன்று தோன்றும் வரை. நேர்கோடை, 'பெரிய' நேர்கோடு என அடையாளம் காண வேண்டுமானால், அதனருகே 'சிறிய' நேர்கோடு ஒன்று எழுத வேண்டும். எழுதியதும், அதுவரை புலப்படாத 'பெரிய' தன்மை, திடீரென்று கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படுகிறது.



    'பெரிய' நேர்கோடை அறிய முடிந்தது, 'சிறிய' நேர்கோடை நாம் அறிந்ததாலா? சற்றுச் சிந்தித்தால், சிறிய நேர்கோடை 'சிறியது' என்று அறியவில்லை என்பதும் புரியும். சிறிய நேர்கோடை, நேர்கோடு என்றே அறிகிறோம். ஆயின், அதை அறிந்த அந்தக் கணத்தில், பெரிய கோடு புலப்படுகிறது.

    சரியா? பாதி சரி :)

    கோடுகள் வெறும் கோடுகளே. பெரிய கோடு தெரிவதில்லை - புரிவதாகும். அறிவதாகும். பேதம் புலனுக்குத் தெரியவும், மனதுக்குப் புரியவும் காரணமாக இருந்தது அறிவு.

    இதே உத்தியினால் பெரியதைச் சிறியதாக்கவும் முடியும். தொடர்ந்து பெரிதும் சிறிதுமாக எழுதினால், in theory, அணுவை விடச் சிறிதாகவும் அண்டத்தை விடப் பெரிதாகவும் எழுதிக்கொண்டே போகலாம். to infinity and beyond.

    திடீரென்று ஒரு ஞானவீச்சு நம்மைத் தாக்குகிறது.

    எனில், பெரியது, சிறியது என்று எதுவுமே இல்லையோ? எல்லாம் ஒன்று தானோ?

    நம்மை விடப் 'பெரிய' ஒன்றை நமக்குள்ளே அடக்குவதும் அப்படித்தானோ? நமக்குள்ளே அடங்கியிருக்கும் சிறிய ஒன்றை அறிந்ததும், பெரியது தன்னால் விளங்குமோ? கண்ணுக்குப் புலப்படாததை மனம் புரிந்து கொள்ளுமோ? அறிவு அறிந்து கொள்ளுமோ?

    சாதாரண வடிவியல், இப்படிக் கண்ணைக் கட்டித் திறக்கிறதே?

    புதுப்பார்வையில், திடீரென்று ஏனோ எல்லாமே நம்மை விடப் பெரியதாகவும், அதேநேரம் நமக்குள்ளே அடங்குவதாகவும் தோன்றுகிறது.

['..காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது..' - கண்ணதாசன் ]

    "ஆன்மாவை எப்படி அடையாளம் காண்பது?" என்றான் நசிகேதன்.

    "ஆன்மாவை அடையாளம் காண முடியாது" என்றான் எமன்.

    நசிகேதனுக்குக் குழம்பியது. "ஐயா, இத்தனை நேரம் ஆன்மாவை அறிய வேண்டும், ஆன்மா அப்படிப்பட்டது, ஆன்மா இப்படிப்பட்டது, என்று பலவாறாகச் சொல்லி ஆர்வத்தையும் அறிவையும் தூண்டிவிட்டு இப்போது ஆன்மாவை அடையாளம் காண முடியாது என்கிறீர்களே? புரியவில்லையே?" என்றான்.

    "ஆனால், அறிய முடியும்" என்றான் எமன், புன்னகையுடன்.

    "காண முடியாது, அறிய முடியும் என்கிறீர்கள். அதனால், அறிந்தவுடன் காணலாம் என்கிறீர்கள்" என்றான் நசிகேதன் துடிப்புடன்.

    "மிகச்சரி" என்ற எமன், மகிழ்ந்தான். "நசிகேதா, ஆன்மா உருவமற்றது, பிறப்போ இறப்போ அற்றது, அழிவற்றது என்ற நிலையில்... அதனைச் சுலபமாக, நேராக, அடையாளம் காண முடியாது அல்லவா? கேள், ஆன்மாவின் இன்னொரு தன்மையையும் விளக்குகிறேன். ஆன்மா, மனிதத்தினும் பெரியது. நம் அத்தனை உயிரினும் பரந்தது.

    ஆன்மாவின் பசிக்கு அத்தனையும் விருந்து.

    எத்தனை சாதிகள், மதங்கள், இனங்கள், குலங்கள் என்று மனிதம் பிரிந்தாலும் அத்தனையும் ஆன்மாவின் விருந்து இலையில் அரிசிச் சோற்றின் பருக்கைகள் போன்றவை. உலகின் அத்தனை பேதங்களும் ஆன்மாவின் இலையில் பல்வகைத் தின்பண்டங்கள், கறிகள், கூட்டுகள், வறுவல்கள் போன்றவை. மெத்தப் படித்தவர், செல்வந்தர், ஞானி, உயர்ந்தவர், அரசர் என்று வெவ்வேறு சமூகத் தட்டுக்களைத் தேடியவர்கள் எல்லாம் ஆன்மாவின் இலையில் பழத்துண்டு, பழச்சாறு, குடிநீர் போலாவர். எல்லாம் விருந்தின் அம்சங்களே.

    அவ்வளவு ஏன்? ஆன்மாவைப் பற்றி இதோ நீயும் நானும் பேசியும் விவாதித்தும் வருகிறோம். நாம் இருவரும் ஆன்மாவின் விருந்தில் ஒரு வாய்க் கவளத்தினும் சிறியவர்கள். விருந்தோ முடிவில்லாத விருந்தாகும்" என்றான் எமன்.

    "புரிகிறது" என்றான் நசிகேதன். "ஆன்மாவின் வீச்சு அனைத்தையும் அடக்கி அதற்கு மேலும் பரவுகிறது. அதை அடையாளம் காணவும் அறியவும் முடியுமா என்ற அச்சம் எனக்குள் தோன்றுகிறது ஐயா".

    "ஆன்மா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. அதே நேரம், அதன் அம்சம் நமக்குள் அடங்கியிருக்கிறது. ஆன்மா எனும் பெருங்கடல் உன்னுள் ஒரு சிறு குமிழியில் அடங்கியுள்ளது. அம்சத்தை முயன்று அறிந்தால், அதன் பயனாக நீ முழுமையான ஆன்மாவையும் அறியலாம்" என்றான் எமன்.

    "ஆன்மாவை எப்படி அறிவது என்ற கேள்வி எனக்குள் பெரும் கடலலையாய் எழுகிறது. அறியத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் சிறு அலையாய்ப் பின் தொடர்கிறதே?" என்றான் நசிகேதன்.

2011/06/24

ஆன்மா அழிவற்றது


55
கொல்வாரும் கொல்லப் படுவாரும் இல்லையே
கொல்லாது ஆன்மா கொலையுறாது - வல்லார்செய்
சட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும்
கட்டுமோ கொட்டுமோ காற்று?

    யிரைப் பறிப்பவரில்லை; துறப்பவருமில்லை. ஆன்மாவை அழிக்க முடியாது; தானே அழிவதுமில்லை. திறமையுள்ளோர் குயந்தச் சட்டிப்பானைகள் என்றாலும் அவற்றுள் காற்று அடங்கி இருக்குமா? அவை உடைந்தால் உள்ளிருந்து காற்று வெளியே விழுமா? (என்றான் எமன்).


பட்டாலும்: உடைந்தாலும், அழிந்தாலும்

['...by substance, we can understand nothing else than a thing which so exists that it needs no other thing in order to exist' - rene descartes]

    சில வருடங்களுக்கு முன் நானும் என் ஆசிரிய நண்பர் அரசனும் வேன்கூவரில் ஒரு 'அறிவியக்க' மாநாட்டிற்குச் சென்றிருந்தோம். அரசனுக்கு இதுபோல் கெட்டப் பழக்கங்கள் உண்டு. 'பல வருடப் பிரிவுக்குப் பிறகு சந்திக்கிறோம், போக மறுத்து அவரைப் புண்படுத்த வேண்டாம்' என்று உடன் சென்றேன். 'கண்மூடிகளைச் சாடும் கூட்டம்' என்று எண்ணிப் போனவனுக்கு அதிர்ச்சி. ஆன்மா, தன்னறிவு, சுயதேடல் பற்றிய சொற்பொழிவு, பட்டறை, அனுபவமுகாம்கள் என மூன்று நாட்கள் படாத பாடு படுத்திவிட்டார்கள்.

    முகாமில் முதல் நாள் இரவு. சுமாரான சாப்பாட்டைத் தொடர்ந்து, அரை மணி நேரத் தியானத்துக்குப் பின், உறங்கலாம் வாருங்கள் என்று ஆற்றங்கரைப் பக்கம் அழைத்துப் போனார்கள். இயற்கை முகாமில் இரவுப் படுக்கை என்று நினைத்துப் போனேன். ஆற்றிலே அசைந்து கொண்டிருந்த, பத்தடிக்குப் பத்தடி அளவில், தெப்பம் எனலாம், ஒரு தெப்பத்துக்கு ஐந்து பேர் கணக்கில், ஆளுக்கு ஒரு பாயும் போர்வையும் தந்து இரவைக் கழிக்கச் சொன்னார்கள். தெப்பத்தின் நான்கு முனைகளிலும் முக்காலடிக்குக் கழி நட்டு, சுற்றிலும் கயிற்றினால் பாதுகாப்பு வேலி கட்டியிருந்தார்கள், இருந்தாலும், கயிற்றின் இடைவெளிகளில் சுலபமாக உருண்டு விழக்கூடும் போல் தோன்றியது. போதாக்குறைக்கு தெப்பத்தின் நட்டநடுவில் கனன்று கொண்டிருந்தது ஒரு அகண்ட தணல் சட்டி. "நடுவில் கூடாமல், தெப்பத்தின் ஓரங்களிலோ அல்லது ஒருவருக்கொருவர் நிறைய இடம் விட்டோ படுத்துக் கொள்ளுங்கள்" என்றார், அமைதியே வடிவான ஒரு காவி வேட்டி.

    தெப்பமோ மெள்ள ஊர்ந்து கொண்டிருந்தது. அதில் தாவி ஏறுவதற்கே பெரும்பாடாகி விட்டது. பல்லவன் பஸ் ஏறத் தாவியச் சென்னை நினைவுகளுடன், "என்னய்யா காவி வேட்டி, கிண்டலா?" என்றேன்.

    "என்ன?" என்றார், அமைதியின் வடிவம்.

    "நடுவில் கூடாமல், தெப்பத்தின் விளிம்புகளில் அதுவும் இடம் விட்டுப் படுக்கச் சொல்கிறீரே? இத்தனை பெரிய, ஆழமான ஆற்றில், இரவில், தன்னிச்சையாய் மிதந்து போகும் தெப்பத்தில், படுத்துறங்கச் சொல்கிறீரே? எங்களுக்குத் தூக்கமோ வரப்போவதில்லை, வந்தாலும், நாளை எந்த ஊரில் எந்தக் கரையில் விழிப்போம் என்ற பீதியில் வந்தத் தூக்கமும் போய்விடும். தெப்பத்தை யாரும் இயக்குவதாகத் தெரியவில்லை. எங்களுக்கு இதை நிறுத்தவும் தெரியாது. எங்களுக்கு ஏதாவது ஆகுமா என்று தெரியாது. எங்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், நாளை எந்த இடத்தில் விழிப்போம், எங்கே போகிறோம், எப்படித் திரும்புவோம் என்று எதுவும் தெரியாது..." என்றேன் கிலியுடன்.

    என்னை நிதானமாகப் பார்த்தக் காவி வேட்டி, "ஆன்மாவைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்கிறீர்களே? நீங்கள் அல்லவா இந்த அனுபவமுகாமை நடத்த வேண்டியவர்?" என்றார். அவர் கிண்டல் புரிந்தது போல் இருந்தாலும், 'வசமாகச் சிக்கினோம்' என்ற எண்ணத்தில், அரசனை வாய்க்கு வந்தபடித் திட்டிவிட்டுப் பாயில் சுருண்டேன்.

    படுத்தவர்கள் சற்று நேரம் பேசினோம். இருளில், நதியோட்டத்தில், மிதவை எதில் இடித்து மூழ்குமோ, அல்லது தணல்சட்டி எப்போது காற்றில் தீப்பிடித்துத் தெப்பத்தோடு எரியுமோ என்ற கவலை கலந்த பயம் எனக்கு. அரசனோ திடீரென்று அமைதியானார். பல முறை அழைத்த பின், "நதி எங்கே போகிறது, அப்பாதுரை?" என்றார் கண்ணதாசன் குரலில். பிறகு, விசை இயக்கினாற் போல் தூங்கிவிட்டார். இரவின் மடியில், நதியில், இலக்கிலாது மிதக்கும் பெரிய தெப்பத்தில் படுத்திருந்த நான் கண்ணெதிரே விரிந்த வானம், நட்சத்திரம், நிலா, இருள், மரங்கள், காற்று, கதம்ப மணம், புள்ளொலி, அவ்வப்போது பொறித்துக் காற்றில் கலக்கும் தணல் சட்டியின் கனல் நடத்திரம்.. என மலைத்துப் போய் உறங்காமல் உறங்குகையில், 'நதி எங்கே போகிறது?' என்ற கேள்வி, போதை போல் என்னைச் சுற்றி வந்தது.

    'மனித இயக்கத்தின் அடிப்படை, அம்சம், ஆதாரம் - எல்லாமே ஆன்மா தான்' என்கிறார் தத்துவ மேதை ரெனே தேகார்ட். 'இயக்குவதும் ஆன்மா, இயங்குவதும் ஆன்மா; ஒரு இயக்கத்தின் விளைவுகள், தொடரும் இயக்கங்களுக்கு வித்தாகவும் வழியாகவும் அமைகின்றன' என்கிறார். ஆன்மாவின் குறுகிய இயக்கம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு எனினும், அதே இயக்கம் மனிதருக்கு மனிதர் என்ற பரந்த அமைப்பிலும் செயல்படும் என்கிறார். கண்ணுக்குத் தெரியாத, முன்பின் சந்தித்திராத நபருடன் நட்போ பகையோ பாராட்டும் செயலிலிருந்து, புலனுக்கும் அறிவுக்கும் எடுபடும் செயல்கள் வரை, எல்லாமே ஆன்மாவின் இயக்கம் என்கிறார்.

    சிகாகோ பல்கலைக்கழக வெளியீடான 'the correspondence between rene descartes and princess elisabeth of bohemia' எனும் அற்புதமான புத்தகத்தைப் படித்தபோது சற்று மெய் சிலிர்த்தது. எல்லாவற்றையும் பகுத்தறிவுக்குள் அடக்க நினைப்பவர்களை, கேள்வி மேகங்களிடையே நாற்காலியில் அமரவைத்து அமர்ந்தபின் நாற்காலிகளை உருட்டி விட்டுத் தொக்கி நிற்பதை, வேடிக்கை பார்க்கும் தீவிரச் சிந்தனைகள். முன் தந்த மேற்கோள் வரிகளைப் போல் நிறைய சிந்தித்திருக்கிறார். இரண்டு வரிகள் புரிய அரை மணியாகிறது. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் படித்து அனுபவிக்க வேண்டியப் புத்தகம்.

    தி சங்கரரின் தத்துவச் சிந்தனைகளில் தொலைந்து போனதுண்டா? இறை சேர்த்தாலும் தவிர்த்தாலும், வேறுபாடின்றி அனைவரும் அனுபவிக்கக் கூடிய அறிவார்ந்தச் சிந்தனைகள். ஆதி சங்கரர் சிந்தனைகளை எனக்கு அறிமுகம் செய்த வேன்கூவர் சுப்ரமணியத்துக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன். பலரும் பலவாறு அறிந்திருக்கக்கூடிய ஒரு ஆழமான, சுவையானக் குட்டிக்கதையைச் சுட்டிக்காட்டி அமைகிறேன்.

    ஆதி சங்கரர் தன் சீடர்களுடன் நடந்து வருகையில், வழியில் ஒரு குறவனைக் கண்டாராம். குறவன் கிழிந்த உடைகளுடன், அழுகிய பழங்களும் பண்டங்களும் நிறைந்த கூடைகளுடன், அழுக்கேறிய கூடாரம் ஒன்றைக் கட்டி, நடுத்தெருவில் கிடந்தானாம். அவனைச் சுற்றிலும் நாய்களும் பூனைகளும் குரங்குகளும் ஓட்டை ஒடிசலும் இன்னபிறவும் இருந்தனவாம்.

    'குளித்து முடித்துத் தூய்மையுடன் இறைவனை வழிபட வந்துகொண்டிருக்கும் குருவின் வழியில் இப்படி ஒரு குறவனா?' என்றுப் பதைத்தச் சீடர்கள், விரைந்து சென்றுக் குறவனை வழியிலிருந்து விலகச் சொன்னார்களாம். குறவனோ சட்டை செய்யாமல் படுத்துக் கிடந்தானாம். சீடர்கள் தொடர்ந்து குறவனை அப்புறப்படுத்த முனைகையில், ஆதி சங்கரரும் வந்து விட்டாராம். குறவனிடம், "ஏய், எழுந்திரு" என்றாராம் உரக்க. நாலைந்து முறை கேட்டும் குறவன் சட்டை செய்யாதிருக்கவே, ஆதி சங்கரர் தன்னிடமிருந்தக் கழியால் அவனை மெதுவாகக் குத்தி எழுப்பி, "ஏய்! உன்னுடையதை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்தப் பக்கமாக ஒதுங்கி, கொஞ்சம் எங்களுக்கு வழி விடப்பா" என்றாராம்.

    குறவன் முதுகைச் சொறிந்தபடி எழுந்து அமர்ந்தானாம். காலை நீட்டி, மூக்கைச் சிந்தி, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "எது என்னுதுன்றீங்க சாமி?" என்றானாம்.

['..மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்..' - கண்ணதாசன் ]

    'நசிகேதா, ஆன்மாவைப் பற்றி மேலும் சொல்கிறேன் கேள்" என்றான் எமன். "ஆன்மாவுக்கு அழிவே இல்லை. ஆன்மாவை எவராலும் அழிக்க முடியாது. தானாகவும் அழிவதில்லை. ஆன்மாவுடன் மனிதர் பிறக்கிறாரே தவிர, மனிதர் பிறக்கும் பொழுது ஆன்மா பிறப்பதில்லை. மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் வரும் மூன்றில் ஒன்றாகும் ஆன்மா. மனிதர் இறக்கும் பொழுது, மனிதரைப் பிரிகிறதே தவிர ஆன்மா இறப்பதில்லை, அழிவதில்லை."

    "மனிதர் இறந்தார் என்று சொல்கிறோமே?" என்றான் நசிகேதன்.

    "மனித உடல் செயலற்றுப் போனது, அவ்வளவே. உயிரைத் துறந்தவரில்லை; பறித்தவரும் இல்லை. கொலை செய்தேன் என்று சொல்வோரும் பேதைகள்; கொலையுண்டேன் என்று வருந்துவோரும் பேதைகள். உயிரை எடுத்தேன் என்பது அறிவற்ற ஆணவம்; அது போல் உயிர் போனதே என்று வருந்துவது அறிவற்றக் கோழைத்தனம். மரணம் நிகழ்வது உடலுக்கு. ஆனால் உடல் என்ற கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் உயிர், ஆன்மா, உன் உண்மை உருவான தன்னறிவு.. அழிவதே இல்லை" என்றான் எமன்.

    "சற்றுக் குழப்பமாக இருக்கிறது" என்றான் நசிகேதன்.

    அருகிலிருந்த ஒரு பானையை எடுத்தான் எமன். "நசிகேதா, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்வாயா?" என்றான்.

    எமனையும் அவன் கையிலிருந்த பானையையும் பார்த்தபடி, "கேளுங்கள்" என்றான் நசிகேதன்.

    எமன் தொடர்ந்தான். "இதோ, இந்தப் பானையைப் பார். இதற்குள் என்ன இருக்கிறது?" என்றான்.

    நசிகேதன் பானையுள் தடவிப் பார்த்துவிட்டு, "வெறும் பானை. உள்ளே ஒன்றும் இல்லை" என்றான்.

    எமன் புன்னகையுடன், "உள்ளே காற்று இருக்கிறது என்பதை மறுப்பாயா?" என்று கேட்டான்.

    நசிகேதன், "சரியே. பானைக்குள் வெளி அல்லது காற்று இருக்கிறது எனலாம்" என்றான்.

    "அப்படியா? வெளி அல்லது காற்று இந்தப் பானைக்குள் எப்படிப் போனது? இதைச் செய்தக் குயவன் அடைத்தானா?" என்று கேட்டான். நசிகேதன் விழித்து யோசித்துக் கொண்டிருக்கையில் எமன் பானையைத் தரையில் வீசி உடைத்தான். "பானைக்குள் போன காற்று இப்போது எங்கே விழுந்தது? எங்கே கொட்டியது? என்ன ஆனது?" என்றான்.

    எமனின் சிந்தனை நசிகேதனுக்குப் புரியத் தொடங்கியது. "பானைக்குள் காற்று அடங்கவும் இல்லை, உடைந்தபின் கொட்டவும் இல்லை. காற்றோ வெளியோ அங்கேயே தான் இருந்தது" என்றான்.

    எமன் மகிழ்ந்து, "சபாஷ், நசிகேதா!" என்றான். "ஆன்மாவும் அப்படியே. பானையைச் செய்தக் குயவன் காற்றை அடைக்கவில்லை. காற்றைச் சுற்றிப் பானையைச் செய்தான் எனலாம். மனித உடலும் அவ்வாறே. ஆன்மாவை உள்ளடக்கிப் பிறக்கிறது. என்றும் குறையாத வெளியானது பானைக்குள்ளும் அடக்கம், வெளியிலும் அடக்கம். பானை என்பது பரந்த வெளியில் ஒரு சிறு தடுப்பு, அவ்வளவே. மனித உடலும் பரந்த ஆன்மாவின் வீச்சில் ஒரு சிறு தடுப்பு. பானை உடைந்ததும் வெளிகள் கலப்பதைப் போலவே, உடல் அழிந்ததும் பரந்த ஆன்மாவும் ஒன்றாகிக் கலந்து விடுகிறது. அடுத்தப் பானைக்குக் காத்திருக்கும் வெளி போல, அடுத்த உடலுக்கு ஆன்மாவும் காத்திருக்கிறது. எப்படிக் காற்றானது பானைக்குச் சொந்தமில்லையோ, ஆன்மாவானது உடலுக்கும் சொந்தமில்லை. பானையெனும் தற்காலிக அடைப்பிலிருந்து விலகும் வெளியைப் போலவே ஆன்மாவும் உடலினின்று விலகுகிறது.

    உயிரைக் கொன்றேன் என்ற வீரப்பேச்சும் ஆணவமும் முட்டாள்தனம். உயிர் போகிறதே என்று அச்சப்படுவதும் கலவரப்படுவதும் முட்டாள்தனம். உயிரின் போக்கைத் தீர்மானிக்கும் உரிமை மனிதருக்கில்லை. இந்த உண்மையை உணரும் மனிதர், தன்னுடைய மரணத்துக்கு அஞ்சுவதில்லை. பிறருடைய மரணத்துக்கு வருந்துவதில்லை" என்றான் எமன்.

    "உயிரும் ஆன்மாவும் ஒன்றா?" என்றான் நசிகேதன்.

    "பரந்த ஆன்மாவின் குறுகிய வெளிப்பாடே உயிர். மூச்சு அந்த வெளிப்பாட்டைத் தொடக்கி வைக்கிறது. ஆன்மாவின் தேடலுக்கும் அந்த மூச்சே ஏதுவாகிறது" என்றான் எமன்.

    "நீங்கள் முன்பு சொன்ன உள்ளிருக்கும் தீ புரியத் தொடங்கியது" என்றான் நசிகேதன்.

2011/06/21

ஆன்மா பிறப்பற்றது


54
பிறவாது மட்கி மறையாது பண்டம்
துறந்துந் தளிரும் முகுலம் - மறப்பிலி
வத்தியம் வித்திலாச் சித்ததால் நித்தியம்
தத்திடுந் தத்துவத் தீ.

   ன்மா பிறப்பதில்லை; வாடி அழிவதில்லை; உடலைப் பிரிந்தாலும் தழைத்துச் வளர்வது. முக்காலம் அறிந்தது. இறப்பற்ற இப்பெரும் நுட்பம், உருவாகவோ அழியவோ காரணமற்று இருப்பதால், உண்மை ஒளியென நிலையாக என்றும் எங்கும் தாவிப் பரவுகிறது (என்றான் எமன்).


மட்கி: வாடி, அழிந்து
பண்டம்: உடல்
தளிரும்: தளிர்க்கும், வளரும்
முகுலம்: ஆன்மா, தன்னறிவு
மறப்பிலி: விவேகமுள்ள, 'நடந்த நடக்கின்ற நடக்கவிருக்கும்' அறிவுள்ள*
வத்தியம்: இறப்பு, அழிவு
வித்திலா: துவக்கமற்ற, உருவாக்க இயலாத, உருவாகும் காரணமற்ற, விதையற்ற
சித்ததால்: அறிவு, நுட்பமான பொருள் (சித்து+அதால், சித்து அதனால்)
நித்தியம்: நிலையாக, அழியாமல், என்றும் எங்கும்
தத்திடும்: தாவும், பரவும், வீசும்
தத்துவம்: பெரும் உண்மை, நுட்பமான ஆழ்ந்த அறிவு
* இங்கே காரண-காரிய-விளைவு பற்றிய, 'தொட்டால் சுடும்' என்றப் புலனறிவிலிருந்து, 'தீக்குணம் நன்மை தந்ததில்லை, தருவதில்லை, தரப்போவதில்லை' எனும் உள்ளுணர்வு வரையிலான, அறிவைக் குறிக்கிறது. 'முக்கால அறிவு' என்று நம்பப்படும் பலவகைப் பாமரக் கண்மூடித்தனங்களை அல்ல :).


['..thou canst not stir a flower, without the troubling of a star' - francis thompson]

    தொடரும் அஜாதசத்ரு-பாலாகி உரையாடல்:

"இதோ உறங்கிக் கொண்டிருக்கிறானே, இவனை எழுப்புவோம்" என்ற மன்னன் ஞானியிடம், "இவன் யார் சொல்ல முடியுமா?" என்றான்.

"தெரியாது" என்றார் ஞானி.

"நம்மைப் போல் ஒருவன். உடல், உயிர், உள்ளம், அறிவு, உணர்வு கொண்ட மனிதன் என்பதை ஏற்கிறீர்களா? விழித்திருக்கும் நிலையில் நம்மைப் போல் இயங்கக்கூடியவன், சரியா?"

"சரியே"

மன்னன் புன்னகைத்து, உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப முனைந்தான். பலவாறு பெயர் சொல்லி, முதலில் மென்மையாகவும் பிறகு உரக்கவும், அழைத்தான். உறங்கிக் கொண்டிருந்தவன் அசையக் காணோம். பிறகு, தன்னுடைய வாளையெடுத்து அதன் முனையால் மெல்ல உறங்கிக் கொண்டிருந்தவனின் உடலில் அழுத்தினான். உறக்கத்திலிருந்து அலறியடித்து எழுந்தவன், சுற்றுமுற்றும் பார்த்து விழித்தான். மன்னனையும் ஞானியையும் பார்த்துத் திகைத்தான். எனினும், மன்னனைப் புரிந்துகொண்டு பணிந்தான்.

மன்னன் ஞானியிடம், "ஐயா, இவன் இப்போது எங்கிருக்கிறான் சொல்வீர்களா?" என்று கேட்டான்.

"நம்மோடு இந்த அறையில் இங்கே இருக்கிறான்" என்றார் ஞானி.

"சரி. இப்போது புலன்களோடும் உயிரோடும் உணர்வோடும் செயல்படும் இவன், சற்றுமுன் அடங்கி இருந்தான். எத்தனை அழைத்தும் எழவில்லையே? ஏன்? அவனுடைய புலன்களும் உணர்வுகளும் எங்கே போயின? உறக்கத்திலிருந்தவன் எங்கே இருந்தான்?" என்று கேட்டான் மன்னன்.

"தெரியாது" என்றார் ஞானி.

"சிந்தியுங்கள். இப்போது தன்னைப் பற்றியும் என்னைப் பற்றியும் சுற்றச்சூழல் தெரிந்தும் உடனடியாகச் செயலபட்டவன், உறக்கத்தில் ஏன் அடங்கியிருக்க வேண்டும்? அவனுடைய புலன்களும் அறிவும் என்ன ஆயின? உறங்கும் நேரத்தில் வெளியே அவனுக்கு நல்லதோ கேடோ ஏற்பட்டிருந்தால் அறிய முடியாமல் போவது ஏன்? அவனுடைய உணர்வுகள் அடங்கியது ஏன்? சலனமேயில்லாது உறங்கியவன் எங்கே போனான்? என்ன செய்தான்? கேளுங்கள், ஞானியே. மனிதரை அடையாளம் காட்டுவது அறிவு. அறிவே மனிதரின் மிக மேன்மையான பேறாகும். உண்மையில், அறிவு நீங்கலாக மனிதருள் பயனுள்ள வேறு எதுவுமில்லை எனலாம். அத்தகைய அறிவு, கண்மூடித் தூங்கிய பொழுது எங்கே போனது? எங்கே புதைந்தது? இதோ இப்போது மென்மையாகப் பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்கும் இவன், உரக்க விளித்தும் உறங்கிக் கிடந்தானே, ஏன்? மன்னன் வந்திருப்பதைக் கூட மதிக்காமல் கிடந்தானே, ஏன்? தான் என்ற உணர்வு, தான் என்ற எண்ணம், தான் என்ற வேகம், தன்னை முன்வைத்த செயல், பிறர் அறிவு, பிறரைப் பொருட்படுத்தும் செயல்,... இவையெல்லாம் எங்கே போயின?"

"எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை" என்றார் ஞானி, பரிதாபமாக.

"எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன், ஞானியே!" என்ற மன்னன் தொடர்ந்தான். "மனிதர் அனைவருக்கும் அறிவு உண்டு. அதன் உருவத்தை அறிய முடியாது. சக்தியை எளிதில் உணர முடியாது. எனினும் அறிவு மனிதருக்கு உள்ளும் வெளியும் நிரந்தரமாகப் பரவியிருக்கிறது. தேவைக்கேற்ப வெளிப்பட்டும் அடங்கியும் நடக்கிறது. விழித்த நிலையில் செயல்படும் மனித அறிவு, உண்மையான அறிவின் மிக மிகச் சிறிய பகுதியே என்பதால், அதை மனிதரின் உண்மையான அறிவு அல்ல என்பேன். விழித்திருக்கும் மனிதரின் அடையாளம் உறக்கத்தில் மறைந்து விடுகிறது. உறக்கத்தில் இருப்பவருக்குத் தன்னை அடையாளம் காண முடிவதில்லை. உறக்க நிலையில் இந்த மனிதர் ஒரு அரசனாகவோ, ஆண்டியாகவோ, பண்டிதராகவோ, பாமரனாகவோ, விலங்காகவோ, மரமாகவோ இருந்திருக்கலாம். உறங்கியிருந்த நிலையில், கனவுலகில், அரசனாக இருந்தவன் அரசனாகவே வாழ்ந்திருந்தான்; விலங்காக இருந்தவன் அப்படியே வாழ்ந்திருந்தான். நான் இவனை என் வாளால் தொட்டு எழுப்பாவிடில் தொடர்ந்து அரசானகவோ ஆண்டியாகவோ வாழ்ந்து கொண்டிருப்பான். தன் வெளியுலக அடையாளங்களைத் துறந்து உள்ளே இன்னொரு உலகில் இருந்தவனுக்கு, நம் வெளியுலகம் தேவைப்பட்டதாகத் தெரியவில்லை. வெளியுலகின் வெற்றிகளும் தோல்விகளும் தவிப்பும் இழப்பும் பாதிக்கவில்லை. அவனுடைய கண்கள் காணவில்லை; செவி கேட்கவில்லை; மெய் உணரவில்லை; வாய் பேசவில்லை; மூச்சிலும் ஏற்றத் தாழ்வில்லை; அறிவும் நாம் வெளியே உணரும் வகையில் இயங்கவில்லை. ஏன்?"

"ஐயா, தெரியாதய்யா" என்றான் ஞானி.

"மனிதரின் தன்னறிவே தன்னுணர்வின் வேர். உணர்வு எங்கே இருக்கிறதோ மனிதன் அங்கே இருக்கிறான். தன்னறிவானது பெருந்தீ போன்றது. விழித்திருக்கும் நிலையில் நம் உணர்வுகள் தன்னறிவுத் தீப்பொறிகளாக எங்கும் சிதறிப் பரவுகையில், நம்மைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற இயலாமல் போகிறது. உறக்க நிலையில் பொறிகள் அடங்கிவிடுகின்றன. கண்களுக்கு வெளிப்பார்வையில்லை, நாவுக்கு வெளிப்பேச்சில்லை, செவிகளுக்கு வெளிக்கேள்வியில்லை, மெய்க்கு வெளியுணர்வில்லை, வெளிமூச்சிருந்தும் உணர்வில்லை... என எல்லாம் அடங்கிவிடுகின்றன. விழித்திருக்கும் நிலையில் நாம் யார் என்பதை அறிய முடியாது. புலன்களைக் கட்டிய நிலையில் நாம் யார் என்று அறிய ஒரு வழி ஏற்படுகிறது. புலன்களை அடக்குவதால் மட்டுமே 'தான் யார்' என்ற உண்மை அறிவைப் பெற முடியாது, எனினும், புலன்கள் அடங்கிய நிலையில் புறத்தாக்கம் மறைந்து விடுவதால், மனிதர்கள் தமக்குள்ளே காணுகிற, தேடுகிற, வாய்ப்பைப் பெறுகிறார்கள்."

உறங்கிக் கொண்டிருந்தவனை உதாரணமாகக் காட்டியதன் காரணம் ஞானிக்குப் புரிந்தது.

   யிர்கள் அனைத்துக்கும் பொதுவான உணர்வு உண்டு என்று சாக்ரேட்ஸ் காலத்திலிருந்து, அவருக்கும் முந்தைய வேத அறிஞர்கள் காலத்திலிருந்து, சொல்லி வருகிறார்கள். 'மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும்; காரணம், மனிதர்களுக்கிடையே இருக்கும் பொதுவான உணர்வு தான்' என்ற திசையில் போகிறது இவர்களின் தத்துவம். மானிடம் என்றில்லாமல், இயற்கை முழுதையும் இந்தச் சித்தாந்தத்துள் அடக்கிய சிந்தனையாளர்கள் நிறைய பேர் உண்டு. மனிதம் தொட்ட உணர்வே காதல், அன்பு, பாசம் போன்ற பரந்த புரிதல்களுக்குக் காரணம் என்கிறார்கள். மனிதரை விடுங்கள். நாம் கோபமாகவோ அல்லது மகிழ்ச்சியுடனோ இருக்கிறோம் என்பதை, நம் வீட்டு நாய் எப்படிப் புரிந்து கொள்கிறது? பிறவி அறிவுகளுக்கப்பாற்பட்ட இத்தகைய உணர்வின் ஒருவித உன்னத நிலையே ஆன்மா என்கிறார்கள். ஆன்மா என்பது மானிடத்தை விட, இயற்கையை விடப் பெரியது என்கிறார்கள். உபனிஷதுகள் பெரும்பாலும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றன. நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும், என் மனதில் இருப்பதை நான் சொல்லாமலே பிறர் புரிந்து செயல்படும் நேரங்களில் உள்ளங்கால் வரைத் திடுக்கிட்டுப் போகிறேன்.

   த்தனையோ வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது, நினைவுக்கு வருகிறது. ஹைதராபாதில் வேலை செய்த நாட்கள். ஒரு கடுமையான வெயில் நாளில், சார்மினார் சதுக்கத்தில் எங்கள் விநியோகஸ்தரின் ஆளைத் தேடி அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தோம். எனக்கும் உடன் வேலை செய்த நண்பனுக்கும் எரிச்சலோ எரிச்சல். கடைகளில் சரக்கைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பலாம் என்று நினைத்தால் சரக்கு கொண்டு வந்த ஆளைக் காணோம். வெயில் கொடுமை தாளவில்லை. ஒரு ஓரமாக அரைகண்மூடிச் சாய்ந்திருந்த ஃபகீர் ஒருவனிடம் விவரம் கேட்கலாமென்று நினைத்த என்னைத் தடுத்து, "இருடா, உனக்கு இந்தி தெரியாது. நான் கேக்குறேன்" என்ற நண்பன், தன் உடைந்த இந்தியில் ஃபகீரிடம், "இதர்.. ஏக்.. ஆத்மி.. சைகிள் லேகே.. கயா.. தேகா?" என்றான்.

   ஃபகீர் எங்களை இரண்டு நிமிடம் போல் மௌனமாகப் பார்த்துவிட்டு, சரளமாகத் தொடங்கினான்:
        இதர் சே உதர் கயா
       உதர் சே இதர் கயா
       கிதர் சே கிதர் கயா
       கிஸீ கோ க்யா பதா?
       அல்லா கோ பதா

               இங்கிருந்து அங்கு சென்றான்
               அங்கிருந்து இங்கு சென்றான்
               எங்கிருந்து எங்கு சென்றான்
               யாருக்கு என்ன தெரியும்?
               அல்லாவுக்கே தெரியும்.
        இனோனே ஓ லாயா
       உனோனே ஏ லாயா
       கினோனே க்யா லாயா
       கிஸீ கோ க்யா பதா?
       அல்லா கோ பதா

               இவனோ அதை எடுத்து வந்தான்
               அவனோ இதை எடுத்து வந்தான்
               எவன் எதை எடுத்து வந்தான்
               யாருக்கு என்ன தெரியும்?
               அல்லாவுக்கே தெரியும்.

   "ஐயா, இந்தப் பக்கமாக ஒரு சைக்கிள்காரன் சரக்கு எடுத்துப் போனதைப் பார்த்தீர்களா?" என்ற சாதுவான கேள்விக்கு, சாதுவின் பதிலில் அரண்டு போனோம். ஃபகீர், 'இந்த பதா அந்த பதா' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான். நண்பனும் நானும் வேறுவகை தாவில் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

   இப்போது நினைக்கையில், அந்த ஃபகீர், நசிகேதன் கதையை விட நுண்மையாக ஏதோ சொல்ல வந்தான் என்று தோன்றுகிறது.

   டமொழிக் கடோபனிஷதில், இந்தப் பாடல் தொடங்கித் தொடரும் சில பாடல்களின் கருத்தும் வரிகளும், அப்படியே கண்ணன் கீதையில் சொல்வதாக வருகிறது என்கிறார்கள். பெருங்கடவுளின் கருத்தாகக் 'கட் அன்ட் பேஸ்ட்' செய்யப்பட்டிருப்பது, நூலின் கருத்தாழத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்.

['நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' - கண்ணதாசன்]

    "நசிகேதா, ஆன்மாவுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை" என்றான் எமன். "சாதாரணப் பிறவிகளுக்கு பிறப்பு, வளர்ச்சி, மூப்பு, வாடல், மரணம் என்ற ஐந்து நிலைகள் உண்டு. தன்னறிவுக்குக் கிடையாது. தன்னறிவு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது" என்றான்.

    "மனிதருக்குள் தானே இருக்கிறது தன்னறிவென்னும் ஆன்மா?" என்றான் நசிகேதன்.

    "ஆம்" என்றான் எமன்.

    "எனில், மனிதர்கள் இறந்ததும், அவர்களின் உடல் அழிந்ததும், ஆன்மாவுக்கு என்ன ஆகிறது? ஏன் அழிவதில்லை?" என்றான் நசிகேதன். இதே கேள்வியைப் பலமுறை கேட்டதைக் குறிப்பால் நினைவூட்டினான்.

    எமன் புன்னகைத்தான். அவனுக்கு நசிகேதனின் அறிவுக்கான அவசரம் புரிந்தது. "நிதானமாகச் சொல்கிறேன், பொறுமையாகக் கேள்" என்றான். "உடல் அழிகிறது. உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை. தன்னறிவு தழைத்து வளர்கிறது. அதற்குக் காரணம், ஆன்மா பிறவியினும் பெரிது. பரந்திருப்பது. முக்கால அறிவையும் பெற்றுத் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் பிரம்மாணடமாகும். அத்தனைப் பிரம்மாண்டமும், மனிதருக்குள் அடங்கியிருக்கையில் அணுவிலும் அணுவாக, ஆழமாகப் புதைந்திருப்பதாகும்.

    தன்னறிவு எதனின்றும் உருவாவதில்லை; எதையும் உருவாக்குவதும் இல்லை. உருவாகவோ அழியவோ காரணமே இல்லாது, என்றைக்கும் எப்போதும் நிலையாக இருப்பதாகும்.

    தீயானது தன்னிச்சையாக எப்படித் தாவிப் பரவுகிறதோ, அது போல் ஆன்மா எனும் ஞானஒளி நிரந்தரமாக, அழிவில்லாமல், உன்னிலும் என்னிலும் ஏனையோரிலும், தாவிப் பரந்து வீசுகிறது" என்றான் எமன்.

2011/06/17

ஆன்மா உருவமில்லாதது


53
புலனின்பத் துன்பநிலை ஒன்றெனும் போதர்
விலகாது வவ்விடும் ஆன்மா - அலயம்
புலப்படாது மூலக் குழிக்குள் புதைந்தப்
பலகோடிக் காலப் பயிர்.

   புலன்களால் அறியக்கூடிய இன்ப துன்ப நிலைகளில் ஒருமையைக் காணும் ஞானிகள் தங்கள் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் உறுதியுடன் பற்றி நிற்கும் தன்னறிவானது, தோற்றமின்றி, அழிவின்றி, பிறவிக்குப் பின் பிறவியாக, உயிர்க் குழிக்குள் ஆழப் புதைந்திருப்பதாகும் (என்றான் எமன்).


வவ்விடும்: பற்றும், உறுதியாக இருக்கும்
அலயம்: தோற்றம்
மூலக்குழி: ஆதாரமான உயிர், இதயம், அறிவு


['..there is more wisdom in your body than in all philosophy' - friedrich nietzsche]

    டலுறுப்புக் கண்ணோட்டத்திலிருந்து ஒதுங்கி, உணர்வுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சில சுவாரசியமானக் கேள்விகளை, குழப்பங்களை எதிர்கொள்ளலாம். அறிவும் இதயமும் ஒன்றா? அறிவும் மனமும் ஒன்றா? இதயமும் மனமும் ஒன்றா?

   பொருள், புகழ், கல்வி, பொது நடத்தை தொடர்பானச் சகிக்க ஒண்ணாதச் செயல் புரிவோரிடம், "உமக்கு மூளை இல்லையா? அறிவு இல்லையா?" என்கிறோம்.

   அன்பு, கருணை, பாசம் தொடர்பானச் சகிக்க ஒண்ணாதச் செயல் புரிவோரிடம், "உமக்கு இதயமே இல்லையா? எப்படி மனம் வந்தது?" என்கிறோம்.

   உலகாயதம் தொட்ட நடத்தைகளுக்கு அறிவையும், உணர்வுகள் தொட்ட நடத்தைகளுக்கு இதயத்தையும் குறி வைக்கிறோம்.

   உணர்வுகள், செயல்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைப்பது அறிவே, எனினும், உணர்வு என்ற கண்ணோட்டத்தில் இதயமும் அறிவும் வசதியாக ஒன்றுக்கொன்று இடமாறுவதை ஏற்கிறோம்.

   தன்னறிவு என்பது உணர்வா? இதயமா, அறிவா? அறிவைக் கட்டும் இதயமா? இதயத்தைக் கட்டும் அறிவா? அறிவைக் கட்டும் உணர்வா? உணர்வைக் கட்டும் அறிவா? எல்லாமேவா?

   chaos theory என்பது கணிதம், பௌதிகம் கலக்கும் ஒரு சுவாரசியமான பிரிவு. இந்தப் பிரிவின் தாக்கம் கணிதம் பௌதிகம் இரண்டையும் கடந்து, இன்றைக்கு உலக அறிவியலின் அனைத்துக் கிளைகளிலும் பரவியிருக்கிறது.

   முன்சொன்ன அறிவு, இதய இடமாற்றங்கள் உள்நோக்கிய chaos theoryயே என்பது, இன்றைய உளவியல் பார்வை. மனித மனதின் சிக்கல்களைப் புரிந்து கொள்ள chaos theoryன் அடிப்படையில் சில முறைகளைப் பின்பற்றுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். தொடர்கொலை, கற்பழிப்பு, பேரழிவு போன்றத் தீவிர குற்றங்களைச் செய்வோரின் மனநிலைகளைப் புரிந்து கொள்ள இந்த வழிமுறைகள் உதவும் என்கிறார்கள். ம்ம்ம்... தீவிரக் குற்றவாளிகளுக்கு அறிவு இல்லையா? அல்லது இதயம் இல்லையா?

   உளவியலை விட்டு மேலாண்மைக்கு வருவோம். organizational design, information network design பிரிவுகளில் chaos theory பயன்படுகிறது என்பதை நம்பமுடியவில்லை. tunnel, spiral என்று இரண்டு வித வடிவ மாதிரிகள் உண்டு. organizational designன் முக்கிய அம்சங்களான authority flow, delegation, control flow போன்றவற்றைப் பரவலாகவும் அடிக்கடியும் கொடுக்க, எடுக்க, மாற்ற நேரிடும் என்பதால் சுலபமான வடிவமைப்பு தேவை. அதே போல், தகவல் துறையிலும் எந்த ஆய்வையும் உடனடியாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கத் தகுந்த வடிவமைப்பு தேவை. இரண்டு ஒழுங்குகளிலும், வடிவ மாதிரிகளைத் தேவைக்கேற்றபடி உடனடியாக மாற்றியமைக்க வசதி வேண்டும். tunnel வடிவமைப்பில் உள்ளே போகவும் வெளியே வரவும் ஒரே வழி. spiral வடிவமைப்பிலே உள்ளே சென்றால் சென்றது தான்.

   புதிர்: இரண்டு அமைப்புகளில் எது வசதியானது? எது வேகமானது? எது சுலபமானது? எது உகந்தது?

   விடை: []


       படத்தில் விவரம் சரியாக விளங்காது போனாலும் (விளக்கியவர் குறை :), spiral வடிவம் மேலானது. வேகமானது. வசதியானது.

       spiralகளை மேலும் கீழும் முன்னும் பின்னும் கூடியும் குறைத்தும் விரைவில் வடிவை மாற்ற முடியும். tunnel ஒரு முறை அமைத்தால் அமைத்தது தான். மொத்த spiralன் பரிமாணம் கெடாமல், உள் வட்டங்களுள் ஒன்றை சுலபமாகவோ சிரமப்பட்டோ நீக்க முடியும். ஆனால், tunnelல் அந்த வசதி அறவே இல்லை.

       பல தொன்மையான, வளர்ந்த, பெரிய வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மேலாண்மைச் சோகத்தில் வாடுவதன் காரணம், tunnel style நிர்வாக அமைப்பு என்கிறார்கள் வல்லுனர்கள்.

       இதற்கும் chaos theoryக்கும் என்ன தொடர்பு? chaotic dynamics என்று ஒரு பரிமாணம். அதீத முரண்களையும் மாறுதல்களையும் முறைப்படுத்தி அறிந்து கொள்ளும் முறை. அதீத முரண்களையும் மாறுதல்களையும் அறிந்து கொள்ள மனித மனதை விட ஒரு சிறந்த மாதிரி கிடைக்குமா என்ன? tunnel, spiral இரண்டில் மனித மனம் எந்த வடிவின் மாதிரி?

   மனித இயல்புகளை, நடத்தைகளை, பண்புகளை இயக்கவோ ஆளவோ அடக்கவோ இதே முறைகளைப் பயன்படுத்த முடியுமா? வடிவமைப்புகளைக் கொஞ்சம் புரட்டிப் போட்டுச் சிந்திக்க வேண்டும். செய்வோம்.

['தென்னை இளநீருக்குள்ளே, தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே, தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்...' - கண்ணதாசன் ]

    "தன்னறிவை நல்லாசிரியரிடம் பெற வேண்டும்" என்ற எமன், தொடர்ந்தான். "பயிரானது வளர்ந்து செழித்து கொடுத்து அழிந்து மீண்டும் எழுந்து வளர்ந்து செழிப்பது அல்லவா? ஆன்மாவும் அப்படியே. கோடிக் கணக்கான பிறவிகளாக தோன்றி மறைந்து மீண்டும் தோன்றி வளர்ந்து வருவது தன்னறிவு. நீண்ட காலமாக செழித்து வளர்ந்து வரும் பயிர். ஆயின், அதற்கு உண்மையான அழிவு இல்லை."

   "தன்னறிவு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?" என்றான் நசிகேதன்.

   "தன்னறிவுக்கு உருவமில்லை. பன்னிரண்டு கைகளோ, நான்கு முகங்களோ, மூன்று கண்களோ, எட்டு தோள்களோ, பத்து தலைகளோ இல்லை. எனினும், அதை அடையாளம் காணலாம். தன்னறிவு ஆறு தீக்குணப் பகையழிக்க வல்லது எனினும், சூலமோ ஆயுதமோ வில்லோ வாளோ ஏந்தி நிற்பதில்லை. பூமிக்கும் ஆகாயத்தும் அண்டத்துக்கும் அப்பாற்பட்டுப் பரந்திருக்கக் கூடியதாயினும், அணுவுக்குள் அணுவாக அடங்கி எளிதில் புலப்படாத தோற்றமுடையது" என்றான் எமன்.

   "அது எங்கே இருக்கிறது என்பதைச் சொல்வீர்களா?" என்று கேட்டான் நசிகேதன்.

   "தன்னறிவு, உயிர்த்துடிப்புக்கும் உணர்வுத்துடிப்புக்கும் இடையே பெருங்குழியில் புதைந்திருக்கிறது. குழிக்குள் குழிவெட்டி, குகைக்குள் குகைக் குடைந்து, ஆழப் புதைந்திருக்கிறது" என்றான் எமன்.

   "எனில், அதை அறிவது எப்படி? அடைவது எப்படி?" என்றான் நசிகேதன்.

   "போதர்கள் வழியில் போனால், தன்னறிவை அடையாளம் காணலாம். தம்முடைய இலக்கிலிருந்து சற்றும் விலகாமல், புலனைக் கட்டி, மூச்சைக் கட்டி, தவத்தால் உள்ளிருக்கும் தீயை எழுப்பி, வளர்த்து அதன் ஒளியில் குழிகளைக் கடக்கிறார்கள்; குழிகளுக்குள் கிடக்கும் குகைகளைக் கடக்கிறார்கள். அதனுள்ளே புதைந்திருக்கும் தன்னறிவை அடையாளம் காண்கிறார்கள். குகைகளைப் பெயர்த்தெடுக்கிறார்கள்; குழிகளை நிரப்புகிறார்கள். அத்தகைய அருந்தவம் செய்துத் தன்னறிவைப் பெறுவதனால், அவர்களால் அனைத்து இருமைகளையும் அடையாளம் காண முடிகிறது. இருமையின் ஒருமையை உணர்ந்து செயலாற்ற முடிகிறது. அவர்களது பாதையைப் பின்பற்றினால் தன்னறிவை அறியலாம், அடையலாம்" என்றான் எமன்.

   "ஐயா, சற்றுக் குழப்பமாக இருக்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை, ஆனால் பிறவிக்குப் பின் பிறவியாகத் தோன்றி மறைந்து வளரும் என்கிறீர்கள். தன்னறிவுக்கு உருவமில்லை, ஆனால் புலப்படாதத் தோற்றம் கொண்டது என்கிறீர்கள். ஆன்மாவை அடையலாம், ஆனால் அடைய விடாமல் புதைந்திருக்கும் என்கிறீர்கள். குழி என்கிறீர்கள், குகை என்கிறீர்கள். எங்கிருந்து வந்தன எனக்குள் குழியும் குகையும்? சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்" என்று பணிந்தான் நசிகேதன்.

   "நசிகேதா! அகத்துக்கும் புறத்துக்கும் பொதுவானது அறிவு. புலன்களில் மிக முக்கியமானது கண். வெளிப் பார்வைக்குத் தெரிந்தவற்றைப் புரிந்து கொள்ள முனைகிறது புலனறிவு. வெளியே இருப்பவற்றைக் கண்டு புரிந்து கொள்ள உதவும் புறக்கண் போலவே, மனிதருக்கு அகக்கண்ணும் உண்டு. மனிதம் அகக்கண்ணால் தனக்குள்ளே தேடிப் பார்க்க வேண்டும். மலர்களும் மிருகங்களும் இன்பமும் துன்பமும் பசியும் பிணியும் புன்சிரிப்பும் போர்களும் புறக்கண்ணுக்குப் புலப்படுவதைப் போல, அடக்கமும் அமைதியும் அழுக்காறும் ஆணவமும் கருணையும் பொறாமையும் பேராசையும் அகக்கண்ணுக்குப் புலப்படும். புறத்தே இருக்கும் புதர்களும் காடுகளும் குகைகளும் போலவே அகத்தேயும் தீக்குணங்கள் குழி தோண்டி வேர் விடுகின்றன, குகை கட்டிக் குடியிருக்கின்றன. குழிகளும் குகைகளும் வளர வளர தன்னறிவு புதைந்து கொண்டே போகிறது. தவத்தாலும், முயற்சியாலும் அகக்கண்ணால் தொடர்ந்து தேட அறிவைப் பழக்கினால், தன்னறிவை அடையாளம் காணலாம். புறக்கண் இழந்தக் குருடர்களால் எப்படி வெளிக்காட்சிகளைக் கண்டு செயலாற்ற இயலாதோ, அவ்வாறே அகக்கண் குருடர்களால் தனக்குள்ளே கண்டு தன்னறிவைத் தேடிச் செயலாற்ற முடியாது. அகக்கண்ணை மூடியே வைத்திருப்பது மனிதரின் இயல்பான குணம்" என்றான் எமன்.

   தன்னறிவு பற்றிய விவரங்கள், நசிகேதனுக்குப் புதுமையாகவும் சற்றே அச்சமூட்டுவதாகவும் தோன்றின.

2011/06/14

தன்னறிவை நல்லாசிரியரிடம் பெறவேண்டும்


52
வாதத்தால் வாராத வண்ணாகும் வாலறிவை
ஆதரோ ஆசிரியச் சொல்லிடார் - சாதகரும்
நுட்பத்துள் நுட்பமென்பார் போதரிடம் போதிக
ஒட்பமிதை ஓதல் ஒழுங்கு.

   ன்னறிவு, வாதங்களால் தெளியாது; அறியாதவரால் இதனைப் பிழையின்றி விளக்க முடியாது; யோகியரோ இதனை விளக்கத்துக்கு அப்பாற்பட்டப் பெரும் நுட்பமென்பார்கள்; ஆன்மாவை மூவகையிலும் அறிந்த ஞானிகளிடமே கற்றுத் தெளிதல் முறையாகும் (என்றான் எமன்).


வண்: தெளிவு
வாலறிவு: தான் இறையான உணர்வு, தன்னறிவு, தூய்மையான அறிவுநிலை
ஆதர்: அறிவு குறைந்தவர், மூடர்
ஆசிரிய: பிழை நீங்க (ஆசு+இரிய)
சாதகர்: பயிற்சி செய்பவர், யோகி
போதர்: முற்றுமறிந்தவர், ஞானி
போதிகம்: ஆன்மா
ஒட்பம்: நுணுக்கம், பெருமை
ஓதல்: படித்தல், கற்றல்


['the wise teacher does not bid one to enter the house of wisdom, but leads one to the threshold of their own mind' - khalil gibran]

    ஜாதசத்ரு-பாலாகி உரையாடல் நினைவிருக்கலாம். தன்னறிவு பெற்றவன் என்று தானே நினைத்துக் கொண்டு, அரசனுக்கும் சொல்லித்தர முனைந்து, தன் அறிவையும் குருவென்னும் அந்தஸ்தையும் இழந்த 'ஞானி'யின் கதை. ஒரு கேள்வி: இருவரில் யார் அறிஞர்?

    அறிஞர்கள் பலவிதம்.

    எதையும் முழுதும் அறிந்து கொள்ளாமல், எல்லாவற்றையும் சற்றே கொறித்தவர்கள் சிலர். அகலம் கண்டு, ஆழம் தொலைத்தவர்கள்.

    எதையும் சற்றே கொறித்து, ஏதோ ஒன்றை முழுமையாக அறிந்தவர்கள் சிலர். அகலம் கண்டு, ஆழம் அறிந்தவர்கள்.

    எல்லாம் அறிந்தும், எதையும் அறியாதவர் போல் இருப்பவர் சிலர்.

    எதையுமே அறியாமல், எல்லாம் அறிந்தது போல் நடப்பவர் சிலர்.

    தன் சாதாரண அறிவை மிகைப்படுத்திப் பேசும் வகையினர் சிலர்.

    தன் மிகைப்பட்ட அறிவை சாதாரணப்படுத்திப் பேசும் வகையினர் சிலர்.

    தேவையில்லாமல் அடுத்தவரிடம் தன் அறிவை வெளிப்படுத்துவோர் சிலர்.

    தேவையிருந்தும் அடுத்தவரிடம் தன் அறிவை மறைப்பவர் சிலர்.

    தன்னை விட அறிவாளியைச் சந்தித்ததும் தன் அறிவின்மையை உணர்ந்து, அறிவைத் தேடும் 'பாலாகி' வகையினர் சிலர். தன்னை விட அறிவாளியைச் சந்தித்ததும் வேறு இலக்கைத் தேடுவோர் சிலர். இரண்டையும் விட்டு, சந்தித்தவருக்கு அறிவில்லை என்று வாதாடி நேரம் கழிப்போர் சிலர்.

    அடுத்தவர் அறிவின் வால் பிடித்து அதை வைத்தே சமாளிப்பவர்கள் சிலர். ஒருவரிடம் கேட்டறிந்ததை, விவரம் புரிந்து கொள்ளாமல், இன்னொருவரிடம் சொல்லித் தனக்குப் பெருமை தேடிக்கொள்வாகள். தவறான விவரம் என்று புரிந்ததும், முதலில் சொன்னவரின் பெருமையைக் குலைத்துத் தப்பிக்கும் ரகமும் உண்டு.

    அறிந்து கொள்ளும் பொறுமையும் ஆற்றலும் முனைப்பும் உழைப்பும் இல்லாதவர் சிலர். தவறு என்று தெரிந்திருந்தும் அதையே தொடர்ந்து செய்யும் ரகம். 'எது தவறு' என்ற அறிவை நிரம்பப் பெற்றவர்கள். தவறானப் பாதையைப் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். சரியான பாதையைப் பற்றி அறியாத 'அறிஞர்'கள். எதைச் செய்யக்கூடாது என்பதை இவர்களிடம் அறியலாம்.

    எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தும், அறிவைப் பெறும் பொறுமை இல்லாதவர்கள் சிலர். அவசரத்துக்கு அறிவைப் பலிதரும் வகையினர்.

    எத்தனை அறிவைப் பெற்றிருந்தாலும், அதை வெளிப்படுத்திப் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்கள் சிலர். அறிவைப் பரப்பினால் அடுத்தவர் விழித்து விடுவாரே என்று அஞ்சுவார்கள்.

    எத்தனை அறிவைப் பெற்றிருந்தாலும், அதை முறையாக வெளிப்படுத்தத் தெரியாதவர்கள் சிலர்.

    எல்லாம் அறிந்திருந்தும், அறிவைத் தேடுவோர் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அறிவை முறையில்லாமல் வெளிப்படுத்தி, அறிவுத் தேடலுக்கு முடிவு கட்டுவோர் சிலர்.

    எல்லாம் அறிந்திருந்தும், அதைச் சிறுகச் சிறுக வெளிப்படுத்தும் விதத்தில் அறிவுத் தேடலை வளர்ப்போர் சிலர்.

    அறிந்தும், 'அறிந்தென்ன ஆவது?' என்று இருப்போர் சிலர்.

    'அறிந்தென்ன ஆவது?' என்று, அறியாமலே இருப்போர் சிலர்.

    எத்தனை அறிந்தும், அறியாதது அண்டத்தினும் பெரிது என்றிருப்பவர் சிலர்.

    இந்தச் சிலருள் ஒருவரையோ பலரையோ ஆசான், குரு என்று தினம் தேடி ஏற்கிறோம். சில நேரம் தேடியது கிடைக்கிறது. பல நேரம் தேடி வந்ததே மறந்து விடுகிறது. 'எதை அறிவது' என்பது புரியவேண்டும். 'யாரிடம் அறிவது' என்பதும்.

['ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா, குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா' - கண்ணதாசன்]

    "தன்னறிவு நுட்பமானது. தூய்மையானது. பரந்தது. ஆழமானது. இதை நூல்களிலும் மேடைகளிலும் காண முடியாது. படித்தறிவதல்ல. பேசியோ விவாதித்தோ அறிவதல்ல. இதைப் பற்றிய கட்டுரைகள் இல்லை. கவிதைகள் இல்லை" என்றான் எமன்.

    "தன்னறிவை எப்படிப் பெறுவது? யாரிடம் பெறுவது?" என்றான் நசிகேதன்.

    "தன்னறிவைப் பெறுவது எளிதல்ல. தன்னறிவில்லாதவர்களிடம் இதைத் தேடிப் பெற முடியாது. இவர்கள் போலிகள். கண்மூடித்தனத்தை வளர்ப்பவர்கள். தானும் அறியாமல் பிறரின் அறிவுத் தேடலையும் அழிப்பவர்கள். பிழையான அறிவை வழங்கும் இவர்களிடம் தன்னறிவைப் பெற முடியாது.

    தன்னறிவைத் தேடுவோர் அதன் நுட்பத்தைப் புரிந்து கொண்டவர்கள். அதைப் பெறுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டவர்கள். யோகிகள். புலனடக்கி, உள்ளிருக்கும் தீயை வளர்த்து, அறிவைக் காண முனைப்பாக இருப்பவர்கள். உழைப்பவர்கள். இருப்பினும், தன்னறிவின் நுட்பத்தை வியந்து அஞ்சும் இவர்களாலும் தன்னறிவுக்கான வழிகாட்ட முடியாது.

    பொறிவாயில் ஐந்தவித்துப் பொய்தீர் ஒழுக்க நெறி கற்றவர்கள் ஒரு சிலர். இவர்களுள் ஆன்மாவை அடையாளம் கண்டு, ஆன்மாவைப் பற்றிய அறிவை, தன்னறிவை, முழுதும் அறிந்தவர்கள் இன்னும் மிகச்சிலர். தன்னறிவின் மேன்மை அறிந்து, அதை முறையாக வெளிப்படுத்தவும், பிறருக்கு உணர்த்தவும், வழிகாட்டவும் தெரிந்த இத்தகைய ஞானிகளிடமே தன்னறிவுக்கான பாடமும் பயிற்சியும் பாதையும் பெற வேண்டும்" என்றான் எமன்.