வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி
இளவல் விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளவல் விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2010/12/24

எமதூதருடன் செல்ல நசிகேதன் விடைபெற்றான்


12
பெற்றோர் வருத்தமும் உற்றோரின் வேதனையும்
கற்றோர் கருத்தையுங் கட்டினான் - துற்றுத்
தடைமுற்றுந் தன்தமிழால் தீர்த்தான் வணங்கி
விடைபெற்றான் விண்ணேக வித்து.

    தாய் தந்தையின் துயரமும், உறவினர்களின் மனவேதனையும், அறிஞர்களின் மாற்றுக் கருத்துக்களையும் அடக்கினான். தன் ஆழ்ந்தக் கருத்துக்களாலும் இனிமையான உரையாலும், மேலும் தடைகளை நீக்கினான். அவையோரை வணங்கி, விண் போக விடைபெற்றான் நசிகேதன்.


கட்டினான்: அடக்கினான்
துற்று: பிறகு, மேற்கொண்டு
தமிழ்: செறிவுடைய இனிய மொழி, நசிகேதனின் ஆறுதல் பேச்சுக்கு ஆகிவந்தது
வித்து: விதை, சந்ததி, இங்கே நசிகேதனைக் குறிக்கிறது



    ணர்ச்சியும் உணர்வும் ஒன்றையொன்று சார்ந்திருந்தாலும், இரண்டுக்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. உணர்ச்சி நெஞ்சைத் தொடுவதில்லை. உணர்வு நம் நெஞ்சைத் தொடுகையில் புனிதமாகத் தோன்றினாலும், கண்ணையும் நெஞ்சையும் ஒரு சேரக் கட்ட வல்லது. உணர்வுகளுக்கு அடிமைப்படுவதால் கண்மூடித்தனங்களில் நிலை மறக்கிறோம். எத்தனை கற்றாலும் அறிவுரை பெற்றாலும், உணர்வு கலந்த நிகழ்வுகளைப் பற்றிய எண்ணங்களை மாற்றிக் கொள்வது நடைமுறையில் மிகவும் கடினம்.

தொலைந்தக் காதலைச் சுமையாகப் பிடித்துக் கொண்டு காலமெல்லாம் வாடுவோரைப் பார்க்கிறோமே? துன்பம் நேர்ந்தாலும் 'கல்லானாலும் கணவன்' என்ற நெறியைக் கடைபிடிக்கும் எத்தனை மாதர்களை அறிவோம்?! சூதாட்டம், கள், போதை, பக்தி போன்றவை உணர்ச்சியைக் கடந்து உணர்வைக் கைப்பற்றும் பொழுது அடிமையாகிறோம். சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டதால் ஏற்படுத்திக்கொண்ட உபாதைகளே. பாசமும் பந்தமும் அத்தகைய உணர்வுகளே. பாசமும் பந்தமும் நன்னெறிகள் போல் தோன்றினாலும் அவை பாசாங்கு நெறிகள். கண்களைக் கட்டித் தெருவில் நிறுத்தக் கூடியவை.

ஒரு நிகழ்வை, நிகழ்வின் செயல்-விளைவாகப் பார்த்துப் பழகினால் முழுமைக் கண்ணோட்டத்துடன், உணர்வுகளுக்குக் கட்டுப்படாமல் நடக்கலாம், முடிவெடுக்கலாம், வாழலாம்.

நசிகேதன் கதையின் ஒரு முக்கியக் கட்டம் இளவல் விடை. முழுமையானக் கண்ணோட்டமும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு சிறுவன், தன்னை விட முதியப் பெற்றோரையும் கற்றோரையும் தங்களின் கண்மூடித்தனங்களை அறியச் செய்தக் கட்டம். உணர்வுகளுக்கு அடிமையான அவையினரும், உணர்வுகளை வென்ற நசிகேதனும், எடுத்த முடிவுகளையும் செய்கைகளையும் பற்றிய இந்த கட்டத்தின் பாடம், இனிவரும் பகுதிகளுக்கு அடிப்படை எனலாம்.

    பெற்றோர்கள் அழுது புரண்டார்கள்; உறவினர்கள் துடித்தார்கள்; பொன்னால் செய்த நசிகேதனின் சிலையைத் தானமாக வழங்குவதும் சாஸ்திரப்படிச் செல்லும் என்று வேதங்கற்ற அறிஞர்கள் மாற்று வழிகள் சொன்னார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு, கலவரத்தையும் குறுக்கு வழிகளையும் கட்டுப்படுத்தி, தன் நிலையில் உறுதியாக நின்றான் நசிகேதன்.

தன்னுடையத் தெளிவானக் கருத்துக்களாலும் இனிமையான மொழியினாலும் அனைவருக்கும் ஆறுதல் அளித்துத் தூதர்களுடன் எமனூர் சென்ற நசிகேதனுக்கு, எமன் வீட்டில் எத்தகைய வரவேற்பு காத்திருந்தது?

2010/12/20

தடுக்காதீர் என்றான் வாசனிடம் நசிகேதன்


11
விதைப்பயிராய்ப் பின்விதை யாம்போலே வாழ்வின்
கதைப்பயின்றுங் கண்ணீர் விழலே - எதையும்நாம்
கற்றறிந்தே செய்யுங் குலமன்றோ? நீர்தடுத்தால்
முற்றகையா மேயும் மொழி.

    விதை பயிராகிறது; பின் பயிரே விதையாகிறது. வாழ்வும் அப்படியே. இந்த உண்மையை அறிந்தும் வருந்துவது பயனற்றது. எதையும் நன்கு ஆய்ந்து செயலாற்றும் குலத்தில் வந்தவர்கள் நாம். என்னைப் போகவிடாதுத் தடுத்தால், முள் போன்றதாகி விடும் உமது சொல் (என்றான் நசிகேதன் தந்தையிடம்).

விழலே: பயனற்றதே, வீணே
முற்றகையாம்: முள்+தகையாம், முள் போன்றதாகும்



    முள் தைக்கும் பொழுது வலிக்கிறது. தைத்த முள்ளை விலக்கும் போதும் வலிக்கிறது. சில சொற்கள் அவ்வகையே. வாக்கு கொடுத்துத் திரும்பப் பெறுவது முள்ளுக்கு ஒப்பாகும். ஆத்திரப் பேச்சு, தீச்சொல்; சுடும். ஏமாற்றுப் பேச்சு, முட்சொல்; முன்னும் பின்னும் வலிக்கும்.

மனப்பக்குவத்தின் மறுபக்கம் சுயஅறிவு. சுயஅறிவின் அச்சாணி? தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை கொண்டவர்கள் எதையும் முழுமைக் கண்ணோட்டத்துடன் காணும் திறனுடையவர்கள். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம், தம்பட்டம், பொறாமை இருப்பதில்லை. தன்னம்பிக்கை குறையும் போதே கண்டவற்றையும் காணாதவற்றையும் நம்புகிறோம்; அதிகமாகப் பேசத் தொடங்குகிறோம்; கண்மூடித்தனமாக இயங்குகிறோம். தன்னம்பிக்கையே அமைதி மரத்துக்கான ஆணி வேர். நம்மினும் இளையவருக்கு நாம் வழங்கக் கூடிய நிரந்தரச் சொத்துக்களில் ஒன்று, தன்னம்பிக்கை பற்றியத் தெளிவு.

    'வாக்குத் தவறியச் சுயநலக்காரன்' என்ற பழியை விட, 'அவசரத்தில் அறிவிழந்தவன்' என்ற பழியில் குறைந்த இழிவிருப்பதை அறிந்த நசிகேதன், தந்தையின் மேல் கருணை கொண்டு தன்னைத் தடுக்க வேண்டாம் என்றான். நசிகேதனின் பண்புள்ள சொல்லாலும் செயலாலும் வாசனுக்கு வாக்குத் தவறியப் பழ ஏற்படவில்லை. நசிகேதனின் ஆறுதலுரையில் தெளிந்த பக்குவமும், முழுமைக் கண்ணோடமும், மேலாக, அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் விரவியிருப்பதை அறியலாம். நசிகேதனின் தன்னம்பிக்கை எத்தனை வலுவானதென்பது இனி வரும் பாடல்களில் தெற்றென விளங்கும்.

விதையானது பயிராகி மீண்டும் விதையாகும் விவரத்தை எடுத்துச் சொன்ன நசிகேதன், "தந்தையே, பிறந்தவரெல்லாம் இறந்து மீண்டும் இந்த உலகில் பிறப்பதை நீங்கள் அறிந்தவர் தானே? என்றோ ஒருநாள் இறக்கத்தானே போகிறேன்? இன்னொரு நாள் எமன் வீட்டிற்கு போவதால், யாருக்கென்ன நன்மை? இன்றைக்கு நான் எமன் வீட்டுக்குப் போவதால் உங்களுக்காவது நன்மை உண்டாகுமே? உங்களுக்கு நன்மை கிடைப்பதற்காக எமனுலகம் போகும் வாய்ப்பு பொன்னானது அல்லவா?" என்றான்.

"ஐயா, சொன்னதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும் நம் குலவழக்கம் அல்லவா? எந்தச் செயலையும் எண்ணித் துணியும் கூட்டத்தில் வந்தவரல்லவா நாம்? நீங்கள் அவசரத்தில் சொன்னது போல் தோன்றினாலும், குலகுணம் உங்களுள் ஊறியதால் இது நன்மையிலேயே முடியும். கவலையை விடுங்கள்" என்றான். தந்தையின் செயல் முட்டாள்தனமானதென்றாலும், இடக்கரடக்கல், அவையடக்கம், முதியவர் பேணல் எனும் உயர்ந்த பண்புகளைக் கடைபிடித்து தந்தையின் செய்கையில் பொதிந்திருந்த நன்மையை மட்டும் எடுத்துச் சொன்னான், பால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை.

தந்தை இன்னும் தெளியாதது கண்டு, தன் இறுதி வாதத்தை முன் வைத்தான். "தந்தையே, நீங்கள் அவசரமாகக் கொடுத்த வாக்கு என்றே வைப்போம். அதைத் திருப்பிக் கொண்டால் இன்னும் கேடல்லவா? உங்கள் பெயருக்கு மேலும் இழுக்கு அல்லவா? தைக்கும் பொழுதும் பிரிக்கும் பொழுதும் துன்பப்படுத்தும் முள் போன்றதாகிவிடுமே உம் சொல்?" என்றான்.

தந்தை ஓரளவுக்கு அமைதியானது கண்டு, அங்கிருந்த அனைவரிடமும் விடைபெறத் தொடங்கினான் நசிகேதன்.

2010/12/16

வாசன் மேலும் வருந்தினான்


10
வேகத்தில் விட்டசொல் வாகோ? வதகனுக்கு
யாகத்தில் வேறேனும் ஈகுமோ? வேகும்
உலையிலே நெல்மீட்கும் உன்மத்த மோயென்
நிலையிலாச் சொல்லின் விலை?

    வசரத்தில் கொடுத்த வாக்கு பொருந்துமோ? யாகத்தில் எமனுக்கு வேறேதும் கொடுக்க முடியுமோ? (என் செயல்) கொதிக்கும் சோற்றிலிருந்து நெல்லை மீட்க முயலும் மடத்தனமோ? இதுவே என் அறிவற்றச் சொல்லுக்கு விலையோ?!

வாகு: பொருத்தம், அழகு
வதகன்: மரணத்தைத் தருபவன், இங்கே எமனைக் குறிக்கிறது
ஈகுதல்: வழங்குதல்
உன்மத்தம்: அறிவு மயக்கம்



    துயரத்திடம் ஒரு கெட்டப் பழக்கம் உண்டு; எப்பொழுதும் தாமதமாகவே வரும். அறியாமை மின்னலைத் தொடர்வது, அறிவு இடி. பிறகு, துயர மழை. சொல்லின் தாக்கத்தையோ செயலின் குரூரத்தையோ கண்ணீரால் கழுவ முடியுமா? வேறு ஏதாவது வழியில் ஈடுகட்ட முடியுமா? எல்லாம் சிந்தித்து, முடிவில் விளைவுகள் மறைக்க முடியாத, மறக்க முடியாத வடுக்கள் என்ற புரிதல் ஏற்பட்டக் கணமே, துயரம் நிரந்தரச் சுமையாக மாறிவிடுகிறது.

சுமையை எங்கே இறக்கி வைப்பது?

மனம் என்பது, பிறக்கும் பொழுது பல அறைகளைக் கொண்டப் பெரிய வீடாகப் பிறக்கிறது. தன்னம்பிக்கை, அன்பு, கருணை, பெருந்தன்மை, மனிதாபிமானம், பொறுமை, மகிழ்ச்சி போன்ற அறைகள் பிறக்கும் பொழுதே நிரம்பி வழிவன. மனவீட்டில் இரண்டு அறைகள் வித்தியாசமானவை. ஒரு அறை முழு வெற்றிடமாகவும், மற்றது அரை வெற்றிடமாகவும் பிறக்கிறது. முழு வெற்றிடமாகப் பிறக்கும் அறையின் பெயர் நிம்மதி. தெளிந்த சொல்லாலும் செயலாலும் சிறுகச்சிறுக நிம்மதியைச் சேர்த்துச் சேமிக்க வேண்டியக் காரணத்தால் இந்த அறை முழு வெற்றிடமாகப் பிறக்கிறது.

சுமையை எங்கே இறக்கி வைப்பது என்ற கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கிறது. 'நிம்மதி என்ற அறையில் ஏதுமில்லையே? அங்கே வைப்போம்' என்று இறக்கி விடுகிறது மனம். நிம்மதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம், அறிவற்ற சொல் செயல்களால் சேர்த்தத் துயரச் சுமைகளுக்கு நிரந்தரக் கிடங்காகி விடுகிறது.

இரண்டு வித்தியாசமான அறைகளில், ஒன்று நிம்மதி. இன்னொன்று? அறிவு. பிறக்கும் போது பாதி அறிவு, பாதி வெற்றிடமாகப் பிறக்கிறது. நிம்மதி சேரும் அதே நேரம் உடன் வரும் அறிவும் சேர, வெற்றிடம் நிரம்புகிறது; அல்லது, துயரச்சுமை சேரச்சேர உடன் வந்த அறியாமை எனும் புதுக்குடி, இருந்த அறிவை மெள்ளத் துரத்தி விடுகிறது.

இதன் நடுவே, அறியாமை மற்றும் துயரச்சுமையுடன் குடியிருக்கப் பிடிக்காமல் தன்னம்பிக்கை பொறுமை கருணை மனிதாபிமானம் போன்றவை, தத்தம் அறைகளை விட்டுத் தலைதெறிக்க ஓடத் தொடங்குகின்றன. மகிழ்ச்சி முதலில் ஓடுகிறது. முடிவில், மனம் எனும் வீட்டில் பல வெற்றிடங்களுக்கு நடுவே அறியாமை மட்டும் துயரச்சுமையுடன் ஆட்டம் போடுகிறது. எண்கட்டு என்பது இது தான்.

ஞாயிறு காலைகளில் வெளிவீடெங்கும் தூசு தட்டிச் சுத்தம் செய்வது போல், உள்வீட்டையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வழி தெரிந்தால் எவ்வளவோ மேன்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    ன்னன் வாசன், சுமை தாங்காமல் துடித்தான். குறுக்கு வழிகள் தோன்றின. அவசரமாகக் கொடுத்த வாக்கு செல்லாது என்று சொல்வதா? வந்திருக்கும் எமதூதருக்கு வேறு ஏதாவது கொடுத்து 'அட்ஜஸ்ட்' செய்து விடுவதா? 'இதென்ன சோதனை!' என்று சோர்ந்தான். அண்டவாகை வேள்வியில் தானம் கொடுப்பதாகச் சொன்னது கொடுத்தது போலவே என்பதால், வாக்கைத் திரும்பப் பெற முடியாதுத் தவித்தான். தான் அறியாமல் சொன்ன சொல்லுக்குக் கொடுக்க நேர்ந்த விலையை எண்ணி நிம்மதியிழந்து துயரத்தில் ஆழ்ந்தான்.

வேகும் சோற்றிலிருந்து நெல்லை எடுக்க இயலுமோ? சோறு வடிக்க எண்ணி வைத்த உலை பொங்குகிறது. நெல் அரிசியாகி உலையில் விழுந்து சோறாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெல் மீட்பது இயலாதது மட்டுமல்ல, மடத்தனம் அல்லவா? மன்னன் தன்னுடையதை அறிவில்லாமல் தகாத தானம் கொடுத்த கணமே, மகன் தனக்குச் சொந்தமில்லை என்றாகிவிட்டது. தானம் கொடுத்தது தெரிந்ததும், எமதூதர்கள் தங்களுக்குச் சொந்தமானதைப் பெற வந்துவிட்டார்கள். இப்போது இன்னொருவருடைய பொருளை முன்போல் தனக்குச் சொந்தமாக்குவதென்பது முடிகிற செயலா, முட்டாள்தனமா?

எமதூதர்களைப் பார்த்தான் நசிகேதன். அவர்களுடன் போகுமுன், துயரச்சுமையில் வருந்தியழும் தந்தைக்கு ஆறுதல் சொல்லி விடை பெற எண்ணினான். ஆழ்ந்தத் தத்துவமும் செறிந்த பண்பும் கலந்த நெறியொன்றை எடுத்துச் சொல்லித் தேற்ற, வாசனை அணுகினான்.

2010/12/14

நசிகேதனைப் போகவிடாது தடுத்தான் வாசன்


9
புண்பட்ட நெஞ்சாலும் பண்பட்டுப் பேசுமுன்
கண்பட்டக் கோடெல்லாம் வண்சிறப்பு - எண்கட்டி
ஒண்கெட்டப் பண்ணிட்டுச் செண்கெட்டச் சேறெந்தன்
மண்தொட்டே மன்னித் திரு.

    னம் புண்பட்டாலும் குணம் குறையாமல் பேசும் திறன் கொண்ட உன் கண் பார்வை பட்ட இடமெல்லாம் சிறப்படையும்; விதியின் சூழ்ச்சியில் சிக்கி நெறி தவறிப் பேசியதால் (பெருமையிழந்து) கொண்டை இழந்த சேவல் போல் நிற்கும் என்னை மன்னித்து, என்னுடன் இந்த உலகத்திலேயே தங்கியிரு (என்று மன்னன் நசிகேதனிடம் சொன்னான்)

கண்பட்டக் கோடெல்லாம்: கண்பட்ட இடமெல்லாம் (கோடு:எல்லை)
வண்சிறப்பு: மிகுதியான சிறப்பு
எண் கட்டி: வினைச்சுழலில் சிக்கி ('கர்மம்', 'ப்ராரப்தம்' என்று வழங்கப்படும் வினைச் சூழ்ச்சி, சுழற்சி | எண்:வினை)
ஒண் கெட்டப் பண் இட்டு: பொருந்தாத, நெறி தவறிய நிந்தையை, இகழ்ச்சியைச் செய்து, பொருந்தாத ஒழுக்கத்தைக் கடைபிடித்து (ஒண்: பொருத்தம், நெறி | பண்: நிந்தை, ஒழுக்கம்)
செண் கெட்டச் சேறு: கொண்டை இழந்த சேவல்



    றியாமை மின்னல், கண்மூடச் செய்கிறது; தொடர்ந்து வரும் அறிவின் இடியோசை, விழிக்கச் செய்கிறது. 'என்ன செயல் செய்தோம்' என்று வெட்கமும் வேதனையும் பட வைக்கிறது. கடவுள் முதல் மனிதர் வரை விதிவிலக்கில்லாமல் சொல்லிழுக்குப் பட்டவர்களைக் காணலாம். அவசரத்தினாலும் ஆத்திரத்தினாலும் ஏற்படக்கூடிய நாசங்களைத் தவிர்க்க, அன்பும் அமைதியும் தான் வழி. சிறிய அளவிலே, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம், அன்பையும் அமைதியையும் கடைபிடிக்க முடிந்தால் அதன் மொத்த விளைவு மகத்தானதாக இருக்கும்.

    ன் ஆத்திரத்தின் விளைவைப் புரிந்து கொண்ட மன்னன், மகன் நசிகேதனின் கேள்வியைக் கேட்டு இரங்கினான். "எப்பேற்பட்ட பிள்ளை இது!" என்று அவனுக்கும் தோன்றியது. "ஐயா, நீ பார்த்தாலே போதும், அந்த இடம் சிறந்து விடும்" என்றான். 'எமனுக்கு உன்னால் பயனுண்டு, கவலைப்படாதே' என்றாலும், அவன் மனதில், 'இந்தப் பிள்ளையினால் எமனை விட தனக்கல்லவா மேன்மை!' என்ற ஏக்கம் தாக்கியது.

மன்னன் என்ன சொன்னாலும் செய்தாலும் இனி மக்கள் எள்ளி நகைப்பார்களே! கொக்கரித்தாலும், கொண்டை இழந்த சேவலுக்கு மதிப்பு ஏது? தானும், தன் தீச்சொல்லின் விளைவால், பெருமையிழந்ததை உணர்ந்தான் வாசன். 'கொடுத்த வாக்கு கொடுத்ததே' என்பது அவனுக்குப் புரிந்தாலும், நசிகேதனிடம் தான் சொன்னதைப் பொருட்படுத்தாமல், தவறை மன்னித்துத் தன்னுடனேயே இருக்க வேண்டினான். தந்தையின் நிலை, கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கியக் கதை என்பதை அறிந்தும் அமைதி காத்தான் நசிகேதன். சில கணங்களில் நசிகேதனைத் தானம் பெற எமனின் தூதர்கள் வருவார்களே என்று பதைத்து, மன்னன் இன்னும் புலம்பினான்.

2010/12/11

தந்தையைத் தேற்றினான் நசிகேதன்


8
உன்னாது சொன்னாலும் உத்தமரே இத்தானம்
பின்னாள் பெரும்பேறே என்றறிவீர் - என்னளவில்
முன்னவன் நானெனினும் மூத்தோருள் நாசனுக்கிச்
சின்னவனால் என்ன சிறப்பு?

    சிந்திக்காமல் சொல்லியிருந்தாலும், உத்தமராகிய நீங்கள் பின்னாளில் பெறப்போகும் பெரும்பேறே இந்தத் தானமாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். என் வயதொத்தவருள் நான் சிறந்தவன் என்றாலும், என்னை விட முதிர்ந்தவர்கள் இருக்குமிடத்தில் எமனுக்கு என்னால் என்ன பயன்? (என்று கேட்டான் நசிகேதன்).

உன்னாது: சிந்திக்காமல்
நாசன்: எமன்



    வீட்டில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பந்து பட்டுக் கணணாடிப் பொருள் உடைந்துவிட்டது. என்ன செய்கிறோம்? பிள்ளையைக் கடிந்து கொள்கிறோம் அல்லது இரண்டு அடி முதுகிலும் தலையிலும் வைக்கிறோம். உடைந்த பொருள் திரும்பி வரப்போவதில்லை. கடிந்ததால், பிள்ளையின் மனதில் நம்மைப் பற்றி ஒரு பயமும் வெறுப்பும் பதிந்ததே தவிர, தன் செயலின் படிப்பினை மறந்துவிட்டது. உடன்படாத செயலைச் செய்தாரென்று மனைவியையோ கணவனையோ கடிந்து பேசுகிறோம். நடந்ததை மாற்ற முடியாது. மேலாக, காழ்ப்பு வேறு சேர்ந்து விட்டது.

'நடந்தது' என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 'நடந்ததை மாற்ற முடியாது' என்பதை அறிந்துகொள்ளவே முடியும். அறிந்துகொண்டால், நம் செயல்களும் அதற்கேற்ப அமையும். புரிதலுக்கும் அறிதலுக்கும் உள்ள வேறுபாடு இதுவே. "நீங்கள் சொல்வது புரிகிறது" என்று தலையாட்டிவிட்டு மீண்டும் செய்ததையே செய்பவர்களை நாளில் எத்தனை முறை சந்திக்கிறோம்?! அவர்களுக்கு 'அறியும் சக்தி' இல்லையென்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடப்பதே நன்று.

தனக்கோ அல்லது இன்னொரு உயிருக்கோ ஆபத்து இல்லாத சூழலில், நடந்து முடிந்த ஒரு செயலுக்கான நம் எண்ணங்களையும் எதிர்செயலையும் வெளிப்படுத்தும் முன்னால், நிதானிக்கச் சொல்கிறார்கள். பெருமூச்சுகள் விடவும், பத்து வரை எண்ணவும், வெளியே சுற்றி வரவும் பலவகை வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

எதிர்பாராத நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது, தெய்வத்தையோ விதியையோ மற்றவற்றையோ போற்றாமலும் பழியாமலும், நிகழ்வுகளில் அடங்கியிருக்கும் நன்மை-தீமை மற்றும் ஆக்கம்-அழிவுக்கான வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி நடப்பது அறிவுள்ள மனிதரின் இலக்கணம் எனலாம். மனித அறிவுக்கு மட்டுமே இது சாத்தியம். (இதுபோன்ற ஆழ்ந்த கருத்துக்களைக் கேள்வி-பதில் பாணியில் உணர்த்தும் பல பாடல்கள் கடோபனிஷதத்தில இனித் தொடர்ந்து வருகின்றன.)

    ந்தை தன்னை எமனுக்குத் தானம் கொடுப்பான் என்பதை நசிகேதன் எனும் சிறுபிள்ளை தெரிந்து கொண்டிருக்கச் சாத்தியமில்லை. தானம் கொடுத்ததுமே அதன் பரிமாணம் அவனுக்குப் புரிகிறது. அந்த நிலையில் அவன் அறிந்து கொள்ளவேண்டியது ஒன்று மட்டுமே. 'தந்தையின் தானத்தைப் பயனுள்ள தானமாக்குவது எப்படி?' என்பதே. "ஏன் இப்படிச் செய்தீர்கள்? நான் உங்கள் மகனில்லையா? உங்களுக்குப் பொறுப்பில்லையா?" போன்ற கேள்விகளுக்கு அவன் மனதில் இடமில்லை.

அரச குடும்பத்திலே பிறந்து வளர்ந்த காரணத்தினாலும், அறிவைப் பயன்படுத்தும் இயல்பினாலும், தன் வயதொத்தவருள் நசிகேதன் முன்னணியில் நிற்கச் சாத்தியமுண்டு. அதனால் அவன் தன்னை, 'என்னளவில் முன்னவன்' என்றான். அது ஆணவமில்லாத விவரமறிந்த கருத்து என்பது, தொடரும் கேள்வியிலிருந்து புரிகிறது. போகுமிடமோ எமனுலகம். 'வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் அங்கிருக்கையில், தான் எந்த விதத்தில் பயனுள்ளவனாக இருப்போம்?' என்று அவனுக்கு ஐயம் தோன்றியது. 'பயனில்லாத பசுக்களைப் போலவே தானும் பயனற்றத் தானமாகி விட்டால், தந்தைக்கு இன்னும் அல்லல் தீர்ந்தபாடில்லையே!' என்பது அவன் எண்ணம். 'தன்னைப் பயனுள்ளவனாக மாற்றிக் கொள்ள ஏதாவது வழி உண்டா?' என்று அவன் சிந்தித்ததாகவும் கொள்ளலாம். அந்த நிலையிலும், 'எமன் தன்னைப் பயனுள்ளவனாகக் கருத வேண்டுமே' என்று நசிகேதன் நினைத்தது, தந்தை மேல் அவன் கொண்டிருந்தக் கருணையைக் காட்டுகிறது.

கேள்வி கேட்குமுன்னர், 'தந்தை ஒரு முட்டாள் என்பதை எப்படிச் சொல்வது?' என்று நினைத்தான் நசிகேதன். எடுத்துச் சொல்லாவிட்டால், அடுத்த முறை மனைவியையோ வேறு ஏதாவது சொந்தத்தையோ தானம் கொடுத்து விட்டால்? நசிகேதன் அளந்து சொன்னான்: 'உன்னாது சொன்னீர்'. "சிந்திக்காமல் பேசிவிட்டீர்கள்" என்று தொடங்கினான். ஒரே ஒரு சூடு! நாட்டுக்கே மன்னன், சிந்திக்காமல் நடப்பது எத்தகைய அவமானம்! சிறுவனிடமிருந்து இப்படிப் பேச்சு வாங்குவது இன்னும் அவமானமாயிற்றே! நசிகேதன் அத்தோடு நிறுத்தாமல், "பரவாயில்லை, இது உங்களுக்குப் நற்பேறையே சேர்க்கும்" என்ற நற்செய்தியோடு அறிவுரையை வழங்கினான். "சிந்திக்காமல் செய்வதே இத்தகையப் பலனைத் தருமென்றால், மனிதராகிய நீங்கள் சிந்தித்து நடந்தால் இன்னும் பெரும்பேறு பல பெறலாமே?" என்பது மறைபொருள்.

    கனின் கேள்விக்கு மன்னன் தகுந்த பதில் சொன்னனா?

2010/12/09

விளைவை எண்ணி வாசன் துடித்தான்


7
தொல்லைப் பொறுக்காதுத் தூற்றி உறுக்கிலே
எல்லை மறந்துநான் ஏசினேன் - வல்லைக்
கடுஞ்சொல் விடுத்திந்த வேள்வியிலே கோடிக்
கொடுத்துங் கெடுத்தேன் குடி!

    ன் தொல்லை பொறுக்காமல், கோபத்தில் வரம்பு மீறி நான் ஏசினேன். கோடி தானங்கள் வேள்வியில் கொடுத்தாலும், வேகத்தில் கடுமையாகப் பேசி என் குடியை நானே கெடுத்தேன் (என்றான் மன்னன், மகனிடம்).

உறுக்கு: கோபம்
வல்லை: வேகம், கடுப்பு, வருத்தம்



    றிவு, அறியாமை இரண்டுமே சக்திகள் தாம். அறிவை விட, அறியாமை சக்திக்கு ஆயுள் குறைவு. தாக்கிய மறுகணமே தன் எதிரியான அறிவிடம் சரணடைந்து விடும். நம்மில் பெரும்பாலானோர், அறியாமையின் விளைவை அதன் தாக்கத்தில் செயல்பட்ட அடுத்த கணத்திலேயே புரிந்துகொண்டு விடுகிறோம். அறியாமை மறைந்து அறிவு தோன்றிவிடுகிறது. அறிவை விட ஆயுள் குறைவென்றாலும் அறியாமையின் தாக்கம் வலுவானது. அறிவைப் போலவே, பலநேரம் அறிவைக் காட்டிலும், அறியாமையின் விளைவு நிலைக்கிறது. அறியாமையின் ஒரு கணத் தாக்குதல் பல ஆயுளுக்கும் நிலைக்கும் தன்மையது. மூவாயிரம் வருடங்களுக்குப் பிறகும் வாசனின் அறியாமையைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் நடக்கிறதே! அறிவை அடக்க முடியாது. அறியாமையை அடக்க முடியும். இந்த உண்மையைக் காலங்கடந்தே புரிந்துகொள்கிறோம். நம் கண்மூடித்தனத்தினால் அறிவை அடக்க முயற்சி செய்கிறோம்; அறியாமையை அடக்காது நிற்கிறோம். விந்தையான முரண் அல்லவா?

சுயநலமும் பேராசையும் மனதுள் புகுந்து விட்டால் விலகாது. சாதாரண உரையாடலைக் கூட உடனே தன்னிலைப் படுத்திப் பேசுவதிலிருந்து
("இன்னிக்கு கணக்கில் நூத்துக்கு நூறு வாங்கினேன்பா" - "இதென்ன பிரமாதம், நான் எப்பவுமே கணக்குல நூத்துக்கு நூறு தான்" | "லட்ச ரூபாய் கொடுத்து இந்த நகை வாங்கினேன்" - "என்னோட நகை பத்து லட்சமாக்கும்" | "ஒரு நிமிசம் பொறுங்க, பிள்ளைக்கு சாப்பாடு போட்டு வரேன்" - "சம்பாதிக்கிற என்னை மொதல்ல கவனி" | "அடுத்த வருசம் ஸ்விட்சர்லந்து போலாம்னு இருக்கேன்" - "ஸ்விட்சர்லந்து நான் மூணு தடவை போயாச்சு" | "எனக்குக் காலைலந்து தலைவலி" - "எனக்குத் தலைவலி வரப்பல்லாம்...")
பொதுவாழ்வின் முக்கியச் செயல்கள் வரை
(வீட்டு-அலுவலக அரசியல், சகோதர-சுற்றத்துப் பழக்கம், நாட்டு-உலக நடப்பு)
இவற்றின் தாக்கத்தில் நாமும் நம்மைச் சுற்றி இருப்போரும் தினமும் பல விதங்களில் இயங்குகிறோம். நம் செயல்கள் பலநேரம் சுயநலம் மற்றும் பேராசையின் விளைவுகள், வடிவங்கள், என்பது நமக்குப் புரிவதில்லை. அல்லது, காலம் கடந்து புரிகிறது. அடுத்தவர் நம்முடன் உரையாடும் பொழுது ஒரு முறை, நாளில் ஒரே ஒரு முறை, நாம் கவனிப்பதோடு நிறுத்தி, தன்னிலைப்படுத்தாமல் உரையாடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.

    கனை எமனுலகு அனுப்பியதைக் கூடத் தன்னிலைப்படுத்தி வருந்துகிறான் மன்னன். தவறு செய்து புலம்பும் பொழுதும், "உன்னுடைய தொல்லையினால் இப்படிப் பேசினேன்" என்று பழியை மகன் மேல் சுமத்துவது போலிருக்கிறது. மகனைத் தானம் செய்த மாபெரும் தவறு ஒரு புறம் இருக்க, "கோடிப்பொன் தானம் போனதே, பயனில்லையே" என்ற ஆதங்கமே மேலாக வெளிப்படுகிறது. "குடி கெடுத்தேனே" என்ற வருத்தத்திலும், "சந்ததி இல்லாமற் போனதே" என்ற தன்னிழப்பு மேலோங்கியிருப்பதாகச் சொல்லலாம்.

தொடர்ந்துப் புலம்பியத் தந்தையைப் பொறுமையுடன் கவனித்ததால், அவர் புலம்பலிலும் பேராசை மற்றும் சுயநலச் சுவடுகள் இருப்பதை அறிந்த நசிகேதன், தன் தந்தையின் தவறை எடுத்துச் சொல்லி, தான் கேட்க எண்ணிய முக்கியக் கேள்வியைக் காலதாமதமின்றி அவர் முன் வைக்கத் துணிந்தான்.

2010/12/07

தன் தவறை உணர்ந்தான் வாசன்


6
உரைத்ததன் வன்சொல் உறைத்ததும் மன்னன்
தரைதொட்ட மீனாய்த் துடித்தான் - கரைந்தழுதான்
அந்தோ! எனதம்பே என்னை அடித்ததென்று
வெந்து புலம்பினான் வேந்து.

    தான் சொன்ன கொடிய சொற்களின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட அரசன், தரையில் விழுந்த மீன் போல் துடித்தான். உருகி அழுதான். "அந்தோ! நானெறிந்த அம்பு என் மேலே பாய்ந்ததே!" என்று வாடினான்.

வேந்து: அரசன்
ஈற்றடி உதவி: சிவகுமாரன்


    வசரத்திலும் ஆத்திரத்திலும் சொற்களை வீசுவது மிக எளிது. ஞானிகளும் மேதைகளும் கூட இப்படித் தவறுவதைப் பார்க்கிறோம்; மதக்குருக்களும் ஒழுக்க சீலர்களும் வழிகாட்டிகளுமே அடிக்கடி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதாவது சொல்லி வம்பில் சிக்கிக்கொள்வதைப் பார்க்கிறோம்.

கொட்டினால் அள்ளக்கூடியதா சொல்? நாவினால் சுட்ட வடு ஆறாது எனும் இருவரி நெறியை மறக்கலாமா? நா காக்கத் தவறிய வாசனின் அறியாமை, நமக்கெல்லாம் ஒரு இலவசப் பாடம். எத்தனை பாடம் படித்தாலும், சாதாரண மனிதர்களுக்கு அளந்து பேசும் இயல்பு ஏற்படுவது மிகக் கடினம் என்பதே நடைமுறை உண்மை. சிறுபிள்ளையாக இருக்கையில், 'பேச்சு வரவில்லையே' என்று கவலைப்படுகிறோம். வளர்ந்து பேசத்தொடங்கியதும், 'பேச்சை நிறுத்தினால் பரவாயில்லையே?' என்று கலங்குகிறோம். நம்மில் எத்தனை வாசன்கள் என்பது நமக்குத்தான் தெரியும்! அவசியமில்லாத, அறிவற்ற, ஆத்திரப் பேச்சு எனும் மாயவலையில் சிக்கினால் விடுபடமுடியாது என்பது புரிந்தாலும், சிக்குவதைத் தவிர்க்கச் சரியான வழி தெரியவில்லை.

    வேள்வியில் தானமும் பலியும் வழங்கும் நேரத்தில் 'தந்தேன்' என்ற பொருளில் எது சொன்னாலும் அதை வழங்கியது போலாகும். "எமனுக்குத் தந்தேன் உன்னை" என்று எந்த நிமித்தமாக வாசன் சொல்லியிருந்தாலும், அது தானம் தந்ததாகவே ஆகிவிட்டது. அறிவில்லாமல், அவசரத்தில் தான் செய்த தவறை உணர்ந்த மன்னன், கொடுத்த வாக்கை எடுக்க முடியாமல் தவித்தான். பெற்ற பிள்ளையை இழக்க மனமில்லை. 'மரபுப்படிக் கொள்ளி வைக்க சந்ததி வேண்டுமே?' என்ற கூடுதல் சுயநலத்தால் புலம்பினானா? அல்லது, தான் செய்த தவறை எண்ணி உண்மையிலேயே வருந்திப் புலம்பினானா?

தந்தை புலம்புவதைக் கண்டான் நசிகேதன். தான் நினைத்தபடியே தந்தை தன்னை வேள்வியில் தானம் வழங்கியதை எண்ணி நிம்மதியடைந்தாலும், காலனுக்குக் கொடுத்தத் தானம் பற்றிய முக்கியக் கேள்வி ஒன்று அவன் மனதில் எழுந்தது. தந்தையிடம் அக்கேள்வியைக் கேட்குமுன், அவர் கழிவிரக்கம் தணியட்டும் எனக் காத்திருந்தான். தந்தையைப் போல் தானும் அவசரப்படக் கூடாது என்று, பொறுமையாக வாசனின் வருத்த மொழிகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.