வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி
காலன் வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலன் வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2011/01/08

நசிகேதனுக்கு வரமளிப்பதாகச் சொன்னான் எமன்


16
ஆறுமுறை அந்தனே! என்னறை உன்சிறையாய்
ஊறுநிறை ஆறிலரைப் போதிருந்தாய் - கூறுன்
குறையேதுந் தீர்த்தால் தறையேன் கறைபோம்
முறையேநீ மூன்றுவரங் கேள்.

    று நற்குணங்களின் இருப்பிடமான அழகனே! துன்பம் நிறைந்த மூன்று நாட்களை என் இல்லமென்னும் சிறையில் கழித்தாய்; உன் குறைகளைச் சொல், தீர்த்து வைத்தால் விருந்தோம்பல் தவறினால் இழிவடைந்த என் களங்கம் நீங்கும்; (எனவே) மூன்று வரங்களைக் கேட்பாயாக (என்றான் எமன்).

  ஆறுமுறை: ஆறும் + உறை | ஆறு நிறைகுணங்களின் இருப்பிடமான | அன்பு, நன்றி, கருணை, அடக்கம், பொறுமை, நேர்மை என்பன ஆறு நிறைகுணங்கள் | முதல் மூன்றை நற்குணங்களாகவும், கடை மூன்றின் எதிர்குணங்களைப் பகைகளாகவும் (ஆசை, வெகுளி, மயக்கம் எனும் முப்பகை), இறை மற்றும் நெறி இலக்கியங்கள் விவரிக்கக் காணலாம்
  அந்தனே: அழகனே, அறியாதவனே | அரச இளவலை அழகனே என்று எமன் அறிந்து விளித்ததாக ஒரு பொருள் | நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் சிறுவனின் அறிவு இன்னும் விரிவடையவில்லை, வரப்போகும் அறிவூட்டத்தைக் குறிப்பாலுணர்த்தும் பொருட்டு அறியாதவனே என்று விளித்ததாக மற்றொரு பொருள்
  ஊறு: இன்னல், துன்பம்
  ஆறிலரை: மூன்று | நசிகேதன் துன்பப்பட்ட மூன்று நாட்களின் எண்ணிக்கை
  தறை: குற்றம், இழிவு | விருந்தோம்பலில் தவறிழைத்துத் தறைபட்டான் என்பதால் தன்னைத் தறையேன் என்றான் எமன்
  கறை: இருள், இழுக்கு, அழுக்கு | விருந்தோம்பலில் ஏற்பட்ட தவறு, தவறின் பலன்



    ணத்தால் மதிப்பிட்டாலும் சரி, வேறு முறைகளைப் பயன்படுத்தினாலும் சரி, மனித மனதுள் அனைத்துக்கும் விலை உண்டு; அனைத்து நஷ்டங்களுக்கும் இணையான ஈடு உண்டு. பொதுநலக் கொள்கைகளைச் செயல்படுத்தும் போதும், பொதுச்சட்டங்களை இயற்றும் போதும் இந்த "விலையை" கணித்து, அதற்கேற்ற படி திட்டங்கள் சட்டங்களாகின்றன. சம்பளப்படி நிர்ணயத்திலிருந்து இழப்புக்கான நஷ்டஈடு கணிப்பு வரை, 'நியாயமான ஈடு' முறை பயன்படுத்தப்படுகிறது. கலவரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளில் நஷ்டஈடு முக்கியமானது. வழங்கப்படும் ஈட்டின் அளவுக்கேற்ப, பாதிக்கப்பட்டவர்களின் மனம் நிறைவடைகிறது.

    அழையா விருந்தாளிக்கு மாளிகையும் சிறையே. விருந்தாளி என்றில்லை; நம் குடும்பத்திலோ வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அண்டியிருப்போரை மதியாதபோது அவருக்கு மனதளவில் சிறைத்தண்டனையை வழங்குகிறோம்.

    தன் எதிரியின் வலிமையை அறிந்து கொண்டவன்தான் போரிலே வெற்றி பெற முடியும். தன் மாணவனின் அறிவுத் திறனை, அறியும் திறனை, முழுமையாக அறிந்து கொண்டவனே நல்ல ஆசிரியனாக முடியும்.

    விருந்தோம்பலில் இருந்தக் கவனம், மூன்று வரங்களுக்குத் திசைமாறிவிட்டது. மூன்று நாட்களுக்கு ஈடாக மூன்று வரங்கள் என்ற கணக்கானாலும், எமன் ஒரு வரத்தோடு நின்றிருக்கலாம். 'தர்மராசன் என்று போற்றி வந்தவர்கள் எல்லோரும் இனித் தன் தவறைப் பற்றியல்லவா பேசுவார்கள்?' என்ற பொதுப்பார்வை காரணமாகவும், தன் தவறால் மூன்று நாட்கள் துன்பப்பட்ட பிள்ளையை எண்ணி வருந்தியதாலும், எமன் மூன்று வரங்கள் அளிப்பதாக வாக்களித்தான்.

    வாசன் அவசரப்பட்டு வாக்கு கொடுத்ததாலன்றோ நசிகேதனுக்கு இந்த நிலை ஏற்பட்டது? எமனும் அவசரப்பட்டு வாக்களித்தானா? நசிகேதன் என்ன கேட்பான் என்பதை எமன் அறியாவிட்டாலும், நசிகேதன் கேட்கும் வரங்களை எப்படி வழங்குவது என்பதை எமன் அறிந்திருந்தான் என்றே கொள்ள வேண்டும்.

    நசிகேதனை அறிவுள்ளவன் என்று அறிந்தவனும் அறிவுள்ளவன் தானே? கேள்வியின் தரத்தை வைத்துத்தானே மாணவனை எடை போடுகிறார் ஆசிரியர்? கேட்கும் வரங்களின் தரங்களை வைத்து கேட்பவனின் தரத்தை எடை போடும் வித்தை. இங்கே எமன் வீசியிருப்பது வலை. நசிகேதன் எப்படிப்பட்டவன்? என்ன கேட்பான்? அவனும் எமனை ஆழம் பார்க்கிறானா? எமனுக்கும் நசிகேதனுக்கும் இடையிலான சதுரங்க ஆட்டம் இனித் துவக்கம்.

2011/01/04

பண்பற்றோர் இழப்பை எமன் விவரித்தான்


15
நல்வினை நற்பயன் நம்பிக்கை நாற்பேறு
நல்லுரை நல்லன்பர் நாணயம் - எல்லாம்
சிதலையின் வாயுட் சிலையாய் விருந்திற்
கிதமாகார் வீட்டுள் கிடக்கும்.

    ல்வினை புரியும் வாய்ப்பு, சேர்த்த நற்பயன், நன்னடத்தையால் பிறருக்கு உண்டான நம்பிக்கை, நான்கு விண்ணுலகச் செல்வங்கள்*, நற்கல்வி, நல்ல நண்பர்கள், நேர்மையால் கிடைத்த மதிப்பு - இவையெல்லாம், விருந்தினர்களை அன்பாக நடத்தாதவர்கள் வீட்டில் கறையான் அரித்த சிலை போன்றதாகிவிடும் (என்று எமன் நசிகேதனிடம் சொன்னான்).


*மண்ணுலகச் செல்வங்கள் நான்கினுக்கும் பொருந்தும். அரச வேள்வியில் நாற்பேறு பற்றிய விவரம் காண்க
சிதலை: கறையான், தொட்டதை அரித்தழிக்கும் பூச்சிவகை
நாணயம்: நடத்தையால் சிறுகச் சேர்க்க வேண்டிய ஒழுக்கப்பலன்; பணத்துக்கான தெருப்பெயர் இதனால் வந்தது
நல்லுரை: நல்ல நூல்களைப் படித்தும் அறிஞர்களின் பேச்சைக் கேட்டும் வளர்க்க வேண்டிய அறிவு



    யிரோட்டமென்றால் அப்படி உயிரோட்டமுள்ள சிலையொன்றை, உள்ள சொத்தையெல்லாம் கொடுத்து வாங்கி, பெருமகிழ்ச்சியுடன் வீட்டில் வைத்துக் கொண்டாடுகிறோம். ஒரு நாள் காலையில் எழுந்து சிலையருகே சென்றால், எங்கிருந்து வந்ததென்று புரியாதபடி, சிலையைக் கறையான் அரித்திருப்பதைப் பார்க்கிறோம். கண்ணுக்கு விருந்தானது கறையானுக்கு விருந்தான திடீர் இழப்பின் தவிப்பை, அதிர்ச்சியை, எப்படிச் சொல்லில் வடிப்பது?

    உழைப்போ பொருளோ செலவழிக்காமல் நாம் செய்யக்கூடிய மிகச் சிலவற்றுள் ஒன்று, பிறரை மதிப்பது. நம் குடும்பமானாலும் சரி, மேலதிகாரியானாலும் சரி, சக மாணவர் தொழிலாளர் நண்பரானாலும் சரி, தெருவில் கைநீட்டி உதவி கோரும் ஏழையானாலும் சரி - முகம் சுளிக்காமலும், மரியாதை குறைத்துப் பேசாமலும், எரிச்சல் ஆத்திரம் படாமலும், ஏளனம் செய்யாமலும் இதமாக நடந்து கொள்ளும் பண்பை வளர்க்க வேண்டும். நம் நிலை உயர்வாக இருப்பதை, பிறர் நம்மை அண்டியிருப்பதை, எண்ணி இறுமாந்துப் பண்பற்று நடக்கலாகாது. சொல் எளிது; செயற்கரியது.

    சதுரங்கம். முற்றுகை மற்றும் போர்த் தந்திரங்களை வளர்ப்பதற்காகக் கிழக்கில் தோன்றிய விளையாட்டு. சதுரங்க ஆட்டமுறைகளில் மேலாண்மைத் தந்திரம் நிரம்பி வழிகிறது. 'Castling' என்று அரணெழுப்பும் ஒரு ஆட்டமுறை. அடுத்தவர் முற்றுகையிடுமுன் தன்னைத் தானே அரணிட்டுக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சுயபாதுகாப்பு முறை. கலவரக் கட்டுப்பாட்டுக்கும் சதுரங்க ஆட்டமுறைகளுக்கும் பொருத்தமுண்டு. அடுத்தவர் தன்னைத் தாக்குமுன் (அவதூறும் தாக்குதலே), தானே தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளும் தந்திரம். உண்மையில் அதுவே மிகப் பாதுகாப்பாகி விடுகிறது.

    னக்குக் கிடைத்தது தானம் என்றாலும், வீடு தேடி வந்தவரை மதிக்கும் பண்பு எமனிடம் இருந்தது. தீயோர்கள் சேருமிடம் என்று சொல்லப்படும் நரகத்துக்கு அதிபதி என்று கருதப்படும் எமனும் விருந்தோம்பலெனும் உயர்ந்த பண்பைக் கடைபிடித்தான். நாடி வந்தவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உதவி செய்யாவிட்டாலும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதே எமன் மொழிவழிச் சொல்லப்பட்டுள்ள உள்கருத்து.

    சிதலை சிதைத்தச் சிலை போல் தன் பண்பெல்லாம் போனதாக உணர்ந்தான் எமன். ஒழுக்கம் கெட்டதாக நினைத்தான். தவறுக்கு வருந்தியவன், தன்னிலைப் பற்றியும் சிந்தித்தான். ஒரு தவறு, தன் மாட்சியை முற்றும் அழிப்பதா? உடனே நசிகேதனை வெல்லும் செயலில் இறங்கினான். கொடுத்த நீரை ஏற்றதும், தேர்ந்த தந்திரக்காரனைப் போல் அடுத்த முறைகளை உற்சாகத்துடன் செயல்படுத்தினான். தன்னுடைய கவனக்குறைவால் தனக்கு ஏற்பட்ட இழப்பை தேவைக்கதிகமாக விவரித்து, விருந்தோம்பலில் விளைந்த தவறினால் தன் செல்வங்களை எல்லாம் இழந்தவன் போல் பேசினான். விருந்தாக வந்தவனிடம் இதமாக நடக்காதது, தன்னை மிகவும் தாழ்மைப்படுத்தியது போல் பேசினான். நசிகேதனின் மனதை மெள்ளத் தன்வசமிழுக்கத் தொடங்கினான்.

2011/01/01

எமன் நசிகேதனிடம் மன்னிப்புக் கோரினான்


14
மன்னிக்க வேண்டுகிறேன் மன்னிக்க வேண்டுகிறேன்
என்னில்லில் ஏற்பட்ட இன்னலுக்கு - என்றெமனும்
ஏகிப் பணிந்தான் நயந்தான் நசிகேதன்
தாகந் தணியவே நீர்.

    மன் நசிகேதனை அணுகி, தன் வீட்டில் எந்த வசதியுமில்லாது தங்கியிருக்க நேர்ந்த இன்னலுக்குப் பலமுறை மன்னிப்பு கோரினான். நசிகேதனின் தாகம் தணிய நீர் அளித்தான்.

நயந்தான்: அன்புடன் வழங்கினான், உபசாரம் செய்தான், நட்புடன் பழகினான்


    ரு வாய்த் தண்ணீர் தருவதில் மகத்துவமோ சூட்சுமமோ இருக்கிறதா?

    விருந்தினருக்கு முதலில் நீர் வழங்குவது, உலகக் கலாசாரமாகும். இது பற்றியக் குறிப்புகள் இலக்கியங்களிலும் இறைநூல்களிலும் மதநூல்களிலும் உள்ளன. வந்தவருக்கு நீர் கொடுக்க இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள்: 1)விருந்தாளி சுத்தம் செய்து கொள்வதால் விருந்தோம்புகிறவருக்கும் நன்மை 2)நீர் அருந்தினால், விருந்தினர் விருந்தோம்பலை ஏற்றதாகப் பொருள். கொடுத்த நீரை ஏற்க மறுத்துவிட்டால் பகையைக் காட்டுவதாகப் பொருள். ('அவன் வீட்டில் பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன்' என்ற ஏச்சை அறிவோம்). தண்ணீர் கொடுப்பது, சமாதானத்தையும் அமைதியையும் நாடுவதற்கு இணை.

    கலவரக் கட்டுப்பாடு (crisis control) என்பது நுண்ணிய மேலாண்மைத் தந்திரம். இது அனைவருக்கும் அவ்வப்போது தேவைப்படும், ஆனால் எளிதில் வராத கலை. கலவரக் கட்டுபாட்டின் முதல் படி, பொறுப்பேற்றல். கவன மாற்றம் (deflection or change of focus), திருத்தம் (correction), பரிகாரம் (remedy) என்று வழிமுறைகள் தொடரும். தவறுக்கு உடனே பொறுப்பேற்பது, சிறந்த வாடிக்கைச் சேவை மற்றும் மேலாண்மையின் அடையாளம். பொறுப்பேற்றவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்தப் பாதுகாப்பும் தேவையானக் கவனிப்பும் அளிக்க வேண்டியது அவசியம். தவறைப் பற்றிய அவர்களின் நினைவுகளை திசைதிருப்பவும் மறக்கடிக்கவும் என்ன செய்ய வேண்டுமோ, அவற்றை நேர்மையாகவும் உண்மையாகவும் உடனே செய்தாக வேண்டும். அரசியல் தலைவரோ, அம்பீஸ் கபே முதலாளியோ - இந்த நெறியும் எதிர்பார்ப்பும் பொதுவாகும். சுனாமித் தீவிரமாகட்டும் ஸ்பெக்டரம் சிக்கலாகட்டும், கலவரக் கட்டுபாட்டுக் கலை அவசியம்.

    வறு நிகழ்ந்து விட்டது. தான் செய்யாவிட்டாலும், தன் வீட்டில் நடந்த தவறென்பதால் எமனே பொறுப்பேற்றான். தன் வீட்டில் நடந்த கேடு, தனக்குப் பொதுவில் அவமானமாக மாறி, நீதிக்கு அரசனான தன் மதிப்பைக் கெடுக்குமோ என்று அஞ்சினான். கேளாத தானம் தானாக வந்து, பெரும் தலைவலியாகிவிடும் போலிருக்கிறதே என்று நினைத்தான். விருந்தினரைக் காக்க வைப்பது பாவம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், வந்தவனோ பச்சிளம் பிள்ளை - களைப்பில் அவனுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்? இது அனைவருக்கும் தெரிந்தால் தன் செல்வாக்கு என்னாகுமோ என்று எமன் கலங்கினான்.

    பார்த்தக் கணத்திலேயே பிள்ளையின் முகத்தில் அகம் தெரிந்து கொண்டான் எமன். அவனைத் தன்வழிப்படுத்த எண்ணினான். விருந்தோம்பல் குறைகளுக்கு வருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்டான். தண்ணீர் கொடுத்தது, நசிகேதனின் களைப்பைப் போக்க மட்டுமல்ல. தண்ணீர் வெம்மையைத் தணிக்க வல்லது. 'சான்றோர் சினம்' எனும் வெப்பத்தைத் தவிர்ப்பதே, எமன் தண்ணீர் வழங்கியதன் உட்பொருள். நசிகேதனைத் தன்வழிப்படுத்த, எமன் என்ன செய்தான்?

2010/12/27

நசிகேதனின் வரவறிந்தான் எமன்


13
ஓர்நாள் பிறகோர்நாள் பின்னோர்நாள் ஒன்றேலும்
சீர்காணா ஏரை எமன்கண்டான் - ஆர்த்தன்
முகத்திலகம் வெய்தறிந்தான் முந்து விருந்து
செகத்தகனம் செய்ச்சுடர் என்று.

    மூன்று நாட்கள் தொடர்ந்து (தன் வீட்டு வாயிலில்) கவனிப்பாரற்று இருந்த அழகிய நசிகேதனை எமன் பார்த்தான். களைத்துத் துன்புற்றிருந்தாலும் நசிகேதன் உலகத்தையே எரிக்க வல்லத் தீச்சுடர் என்பதை அவன் முகப் பொலிவிலிருந்துப் புரிந்து கொண்டான் (எமன்).


சீர் காணா ஏர்: மதிக்கப்படாத அழகு | கவனிப்பாரின்றிக் கிடந்த நசிகேதன்
ஆர்த்தன்: எளியவன், துன்பமுற்றவன் | பசி, களைப்பால் வாடிய நசிகேதன்
முகத்திலகம்: முக+திலகம் என்று பிரித்தால் பொலிவு, முகத்தில்+அகம் என்று பிரித்தால் 'உள்ளத்தைக் காட்டிய முகம்' என்று பொருள் | நசிகேதனின் அகமேன்மை புறத்தே தெரிந்தது
வெய்தறிந்தான்: வெய்து+அறிந்தான் | வெய்து என்றால் விரைவாக, விரும்பக்கூடியது (வெய்யது) என்றும் பொருளுண்டு. 'முகத்திலகம் வெய்து அறிந்தான்' என்று சேர்த்தால் 'முகப்பொலிவு விரும்பத்தக்கது என அறிந்தான்' என்றும், 'முகத்தில் அகம் வெய்து அறிந்தான்' என்று சேர்த்தால் 'உள்ளத்து ஆழத்தை வெளியே காட்டிய முகம் என்பதை விரைவாக அறிந்தான்' என்றும் பொருள் துய்க்கலாம்
முந்து: முதலில், எதிர்ப்பட்ட | 'வெய்தறிந்தான் முந்து' எனச் சேர்த்தால், 'எமன் அவசரமாக முதலில் தெரிந்து கொண்டான்' என்ற கருத்தாகும் | 'முந்து விருந்து' எனச் சேர்த்தால், 'முன்னாலிருக்கும், அல்லது, எதிரிலிருக்கும் விருந்தினன்' என்று பொருள்
செகத்தகனம் செய்ச்சுடர்: உலகத்தை அழிக்க வல்லத் தீச்சுடர், 'செய்ச்சுடர்' என்பதை வினைத்தொகையாகக் கொண்டால் மேலும் சுவை. (சான்றோர் சீற்றம் முக்காலத்திலும் சுடும் என்ற பொருளில்)



    னிதக் கண்டுபிடிப்புகளில் தீ முதன்மையானது. மனித நாகரீகத்துக்கு வழி வகுத்த மூன்று கண்டுபிடிப்புகளில் ஒன்று தீ என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். தீயின் தன்மை வியக்கத்தக்கது. சிறிய விளக்கொளியாக அமைதியின் சின்னமாக விளங்கும் தீ, பரந்து காட்டையும் நாட்டையும் கடலையும் அழிக்கும் தன்மை கொண்டது. அறிவும் அப்படித் தான். ஆக்கவும் அழிக்கவும் வல்லது. அறிவு மிகுந்த சான்றோரைப் பேணுதல் நம் கடமையாகும், அந்தச் சான்றோன் நம் பிள்ளை என்றாலும்.

ஆங்கிலத்தில் 'first impression' பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் பல பிரபல அமெரிக்க நிறுவனங்களில் 'creator of first impressions' என்று வரவேற்பறைப் பணியாளரை அழைத்தார்கள். அறிமுகம் சரிமுகமாக இருக்கவேண்டும் என்பது எத்தனை முக்கியமோ, சரிமுகத்தை உடனே அறியவேண்டும் என்பதும் அத்தனை முக்கியம். பல ஜப்பானிய நிறுவனங்களில் விருந்தினரைப் பற்றி முன்பே அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வார்கள்; விருந்தினர்களுக்கு வியப்பாக இருக்கும், தன்னைப் பற்றி இத்தனை தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று. விருந்தோம்பல் என்றாலும், இது ஒரு நுட்பமான மேலாண்மைத் தந்திரம். நம்மூர் மளிகைக் கடைகளிலும் இதைக் கவனிக்கலாம். முன்பின் பார்த்திராத வாடிக்கையைக் கூட உள்ளே நுழையும் பொழுதே 'அளந்து' விடும் தந்திரம். அதற்கேற்ப வரவேற்பார்கள்.

நசிகேதனைப் பார்த்த எமனின் செயலில் மேலாண்மை நுட்பம் புதைந்திருப்பதை இந்தப் பாடலிலும் பின்னாலும் பார்க்கலாம். மற்ற தேவர்களை விட காலதேவனுக்குப் பண்பு அதிகமென்பது போல் பல மதங்களில் சித்தரித்திருக்கிறார்கள். இந்து மதத்தில் எமனைத் தர்மராசன் என்றும் அழைக்கிறார்கள். நல்லதையும் அல்லாதையும் ஒருங்கே அறிந்து நியாயம் வழங்க வேண்டிய நிலையில் எமனைச் சித்தரித்திருக்கிறார்கள்.

    தூதர்கள் எமனைக் காணாது, நசிகேதனை எமன் வீட்டு வாயிலறையில் விட்டுச் சென்றனர். அங்கே மூன்று நாட்கள் எமனைச் சந்திக்காமல் உண்ண உணவோ பருக நீரோ, எந்த வகை வரவேற்பும் வசதியும் கொடுக்கப்படாமல் காத்திருந்தான் நசிகேதன். நான்காம் நாள் அவனைப் பற்றியும் அவன் அங்கு வந்த விதத்தைப் பற்றியும் அறிந்த எமன், நசிகேதனைச் சந்தித்தான். களைத்திருந்தாலும் சளைத்தவனல்லவே நசிகேதன்? அவன் முகப்பொலிவிலிருந்து, 'வந்திருப்பவன் சாதாரண விருந்தாளியல்ல, இவனுடைய அறிவுச் சுடர் உலகத்தை அழிக்கும் தீயாக மாறும் தன்மையுடையது' என்பதை அறிந்து கொண்டான்.

நசிகேதனை அழைத்து வந்த தூதர்கள், இறந்தவர்களைச் சேர்க்குமிடத்தில் அவனைச் சேர்க்காமல், தானமாக வழங்கப்பட்டது எமனுக்குச் சொந்தம் என்ற காரணத்தால், எமன் வீட்டில் விட்டுச் சென்றார்கள் எனலாம். அழையா விருந்தாளியென்றாலும், வீட்டுக்கு வந்த விருந்தினரை மூன்று நாட்கள் வாட விடுவது கொடுமையல்லவா? அதிலும் பச்சிளம் பாலகன், அவனைக் காக்க வைக்கலாமா? இதை உணர்ந்த எமன், உடனே தன் சேவர்களை அனுப்பி நசிகேதனை கவனிக்கச் சொல்லி, தானே அவனைப் பணிந்து வரவேற்றான்.