வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/01/20

அவையில் ஆயிரம் கேள்விகள்


79
பிறப்பிறப்பு பேரின்பம் பாழ்நரகம் பற்றித்
திறந்திட்டக் கேள்விமடை கண்டான் - விறவாது
வெள்ளம் வடியும் நிலமாய் நசிகேதன்
மெள்ள மொழிந்தான் எழுந்து.

   பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம், மோட்சம் பற்றிப் பலவித கேள்விகள் மடை திறந்த வெள்ளம் போல் அவையோரிடமிருந்து வந்தன. அஞ்சாமல் விலகாமல் கேள்விகளை ஏற்ற நசிகேதன், வெள்ளத்தை வடித்து எழும் நிலம் போல மெள்ளத் தன் கருத்துக்களைச் சொல்ல எழுந்தான்.


விறவாது: அஞ்சாது, தயங்காது

    மனுலகம் சென்று வந்த நசிகேதனைக் கண்ட அவையோரின் பிரமிப்பு அடங்கத் தொடங்கியது.

அவையோரின் மனதில் ஆயிரம் கேள்விகள். 'எமன் எப்படியிருப்பான்? சொர்க்கம் எப்படியிருக்கும்? நரகம் எப்படியிருக்கும்? எமனுலகில் என்ன கண்டான்? மரண ரகசியம் என்பது என்ன? மோட்சம் என்பது உண்மையா பொய்யா? எமனிடமிருந்து நசிகேதன் என்ன கற்று வந்தான்? என்ன பரிசுகள் பெற்று வந்தான்? பிறவாமை என்பது சாத்தியமா? உண்மையிலேயே எமனைச் சந்தித்துத் திரும்பினானா? அங்கே கொடுமைகள் உண்டா? தேவர்கள் உண்டா? கடவுளைக் கண்டானா? யாரைச் சந்தித்தான்? யாருடன் பேசினான்? பாவத்திற்கு தண்டனை கொடுத்தார்களா? புண்ணியங்களுக்கு பரிசு கொடுத்தார்களா? தானம் தவம் செய்வதால் சொர்க்கம் கிடைக்குமா? பாவங்களை போக்கடிக்கும் மருந்து உண்டா? சடங்குகளில் சிறந்தது எது? பிறவாமைக்கு உத்தரவாதம் தரும் ரகசியத்தை எமன் சொன்னானா? எமனைக் கண்டு அஞ்சுவதில் பொருளுண்டா? சொர்க்கப் பதவி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? எத்தகைய தானம் சிறந்தது? எந்த விரதங்களைக் கடைபிடிக்க வேண்டும்? எந்தக் காவிகளின் பின் செல்ல வேண்டும்? யாரை வணங்க வேண்டும்? எத்தகைய யாகங்கள் செய்ய வேண்டும்? அடுத்த பிறவியில் அரசனாகப் பிறக்க வழி உண்டா? வேதங்கள் ஓதியும் யாகங்கள் புரிந்தும் மோட்சம் பெற முடியுமா? எமன் அன்பாகப் பழகுவானா? நசிகேதனைத் துன்புறுத்தினானா? இனி நசிகேதனுக்கு மரணமுண்டா? பிறவியுண்டா? நசிகேதன் எமனுடன் என்ன பேசினான்? நசிகேதன் எமனை ஏமாற்றியது எப்படி? அல்லது எமன் மனமிறங்கி நசிகேதனை அனுப்பி வைத்தானா? மகனையே எமனுக்குத் தானம் கொடுத்த தந்தையை நசிகேதன் மன்னித்தானா? தந்தை செய்த தவறுக்கு தண்டனை கிடைக்குமா? எமன் வருவதை அறிவது எப்படி? நசிகேதன் இறந்தவர்களை எமனுலகில் சந்தித்தானா? இறந்த மனிதர்கள் எப்படி இருந்தார்கள்? ஓலமிட்டார்களா? துடித்தார்களா? மகிழ்ச்சியோடு இருந்தார்களா? செய்த பாவங்களை எண்ணிப் புலம்பினார்களா? புண்ணியங்களுக்குப் பொருத்தமான பலன் அவர்களுக்குக் கிடைத்ததா? சொர்க்கம் கிடைக்க ஏதாவது மந்திரம் ஜெபிக்க முடியுமா? நசிகேதன் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் என்ன? ஏதோ ஒளி வீசுவது போல் தோன்றும் காரணம் என்ன? தங்கள் நலத்துக்காக எமனிடம் வேண்டினானா? நசிகேதனின் கால்களைத் தொட்டால் மோட்சம் கிடைக்கும் என்று தோன்றுகிறதே? சொர்க்க நரகம் பற்றிக் காவிகளும் தாடிகளும் சொன்னதெல்லாம் பொருந்தியதா? எவ்வளவு பொன்னும் பசுவும் தானம் தர வேண்டும்? ... ' என்று அடாத கேள்வி மழை.

மடை திறந்த வெள்ளம் போல் வரிசையாகவும் வேகமாகவும் அவையிலிருந்து கேள்விகள் வந்தவண்ணம் இருந்தன. வெள்ளம் பரவி நிலத்தை மூடுவது போல் நசிகேதனைக் கேள்விகள் மூழ்கடித்தன.

எத்தகைய வெள்ளத்தையும் கிரகித்து வடித்து வெளிவரும் நிலத்தைப் போல நசிகேதனும் கேள்விகளை ஏற்று பதில் சொல்ல மெள்ள எழுந்தான். அவையோரை வணங்கித் தன் உரையைத் தொடங்கினான்.

12 கருத்துகள்:

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! பின்னி எடுக்கிறீர் ஐயா! இத்தனை கேள்விகளுக்கும் பதில் கொடுத்தால் மக்களுக்கு நல்லதுதானே! வாழ்த்துக்கள்---காஸ்யபன்

geetha santhanam சொன்னது…

இந்த மாதிரி கேள்விகள் எங்கள் மனதிலும் தோன்றுவது உண்மைதான். குறைந்த பட்சம் 1. இறந்த மனிதர்களை நசிகேதன் சந்தித்தானா 2. இறந்தபின் ஆன்மாவுக்கு என்ன ஆகும் என்ற இரு கேள்விகளுக்காவது நசிகேதன் பதிலுரைப்பான் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

எத்தனை கேள்விகள்....

santhanam சொன்னது…

migavum arumai. best wishes!!!

அப்பாதுரை சொன்னது…

நன்றி kashyapan, geetha santhanam, ஸ்ரீராம்,, santhanam, ...

அப்பாதுரை சொன்னது…

//இந்த மாதிரி கேள்விகள் எங்கள் மனதிலும்..

தவறே இல்லை. இந்த மாதிரி கேள்விகள் தான் நம் மனதில் தோன்றும். அவையோரைப் பொறுத்தமட்டிலும் நசிகேதன் சந்திரனுக்கு சென்று திரும்பியவன் போல. ஐம்பது வருடங்களுக்கு முந்தைய foreign returned. என்ன பார்த்தான், என்ன பேசினான், என்ன வாங்கினான், என்ன சாப்பிட்டான் (அடடா.. இந்தக் கேள்வி மறந்து போச்சே?!) போன்ற கேள்விகள் தான் தோன்றும். ஒரு சிலர் கொஞ்சம் ஆழமாகக் கேட்கலாம் - சொர்க்கம் போக என்ன வழி போன்ற கேள்விகள். அதுவும் ஒரு ஆசையின் உந்துதலினால். இறந்தபின் ஆத்மாவுக்கு என்ன ஆகும் என்று கேட்க சாதாரணருக்குத் தோன்றாது. இறந்தபின் சொர்க்கம் கிடைக்க என்ன வழி என்று தான் கேட்பார்கள்..

நசிகேதனுக்குக் கூட எமனுலகம் போனபின் தானே அந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றியது? இதற்கு எமன் ஏற்கனவே பதில் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன் :)

meenakshi சொன்னது…

//வெள்ளம் வடியும் நிலமாய் நசிகேதன்
மெள்ள மொழிந்தான் எழுந்து.//
இந்த வரிகள் மிகவும் அழகு அப்பாதுரை. சொல்ல சொல்ல இனிக்கிறது. எப்படிங்க இப்படி எல்லாம்! என்னமா கலக்றீங்க! வாழ்த்துக்கள்!

மனப்பாடம் பண்ண பாடத்தை கட கடன்னு ஒப்பிக்கறமாதிரி மட மடன்னு கேள்விகளா எழுதி தள்ளிட்டீங்க. நீங்க சொல்லி இருக்கறது சரிதான். இந்த பதிவுகளை எல்லாம் திரும்ப படித்தால் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இருக்கும். இருந்தாலும் எமன் சொன்னதை நசிகேதன் வாயிலாக கேட்பது இன்னும் அழகாய் இருக்கும் என்று நினைக்கிறேன். பதில்கள் ஒன்றே ஆயினும் சொல்லும் விதம் வேறுபடலாம் இல்லையா!

Expatguru சொன்னது…

// சொர்க்க நரகம் பற்றிக் காவிகளும் தாடிகளும் சொன்னதெல்லாம் பொருந்தியதா?//

அப்பாடா! ஒரு வழியாக காவிகளுடன் தாடிகளையும் சேர்த்து கொண்டீர்களே! இனி அங்கிகள் மட்டும் தான் பாக்கி :)

On a related note, செளதியில் வாராந்திர விடுமுறை நாட்கள் (weekends)வியாழனும் வெள்ளியும் தான் (அமெரிக்காவில் சனி ஞாயிறு போல). "வெள்ளிக்கிழமை உங்களுக்கு புனித நாள் அதனால் விடுமுறை, சரி. ஏன் மற்ற அரபு நாடுகளை போல சனிக்கிழமை விடுமுறை விடாமல் வியாழக்கிழமை விடுகிறீர்கள்?" என்று ஒரு செளதிக்கார தாடியிடம் நான் கேட்டேன். அதற்கு அவன் கூறியது "ஞாயிற்றுக்கிழமை கிறித்துவர்களுடைய‌ பிரார்த்தனை நாள். அது எங்களுக்கு ஏற்புடையது அல்ல. சனிக்கிழமை யூதர்களுடைய பிரார்த்தனை நாள். அவர்கள் எங்களுடைய எதிரிகள். அதனால் அவர்களுடைய பிரார்த்தனை நாளில் நாங்கள் விடுமுறை விட மாட்டோம்" என்றான். என்னத்தை சொல்வது?

கேள்வி கணைகளை தொடுத்து பின்னி விட்டீர்கள். நசிகேதன் என்ன சொன்னான் என்று தெரிய ஆவலாக இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அடாத கேள்வி மழை.

விடாது படிக்கக்காத்திருக்கிறோம்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எத்தகைய வெள்ளத்தையும் கிரகித்து வடித்து வெளிவரும் நிலத்தைப் போல நசிகேதனும் கேள்விகளை ஏற்று பதில் சொல்ல மெள்ள எழுந்தான்.

அழகான சொல்லாட்சி மனதில் நிறைந்தது.. பாராட்டுக்கள்..

Madhavan Srinivasagopalan சொன்னது…

இப்போதுதான் உங்கள் வலைமனை கண்டேன்..

முதலில் நான் படித்த உங்க பதிவிது..
எடுத்த எடுப்பிலேயே சிக்சர் போல உள்ளது..

:-)

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, Expatguru, இராஜராஜேஸ்வரி, Madhavan Srinivasagopalan,...