வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/02/24

புலனடக்கப் பயிற்சி


83
பறியின் பொறியுட் புறத்துந் திறக்குங்
கிறியை அறிய உறங்கு - செறிக்கப்
பொறியை உறியும் நெறியிற் சிறந்து
வறிதைத் துறந்து விளங்கு.

   டலின் ஐம்புலன்கள் அகத்தேயும் பார்க்க வல்லவை என்பதை உறங்கும் பொழுது அறிவீர். (இந்த உண்மையின் உட்பொருளை உணர்ந்து) மூச்சை இழுத்துப் புலன்களைக் கட்டும் யோகத்தில் தேர்ந்து, அறியாமையை ஒழித்து வாழ்வீர் (என்றான் நசிகேதன்).


பறி: உடல்
பொறி: உறுப்பு, புலன்
கிறி: மாயம், தந்திரம்
செறிக்க: அடக்க, அழிக்க (பொறியைச் செறிக்க)
உறியும்: உள்ளிழுக்கும் (இழுத்துக் கட்டும்)
வறிது: அறியாமை



    வையோரின் கேள்விகளைக் கவனமாகக் கேட்ட நசிகேதன் தொடர்ந்தான். "நான் அறிந்ததை உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள். நம் உடலின் ஐந்து பொறிகளும் புற நுகர்ச்சியில் இயல்பாகவே ஈர்க்கப் படுகின்றன என்றேன். அதே புலன்கள் அக நுகர்ச்சியிலும் இயல்பாகவே செயல்பட வல்லவை. நாமறியாமலே நாள்தோறும் அக நுகர்ச்சியிலும் செயல்படுகின்றன. நம் உடலின் இயக்கத்துக்குத் தேவையான அளவில் அவை இயல்பாகவே அடங்கி நடக்கின்றன"

"எங்களுக்குத் தெரியாமல் எங்கள் கண்ணும் மூக்கும் செவியும் வாயும் வேறு எதையோ நுகருமா, என்ன சொல்கிறீர்கள் இளஞ்சுடரே?" என்றார் அவையில் ஒருவர். "விளங்கவில்லையே?"

"உண்மை" என்ற நசிகேதன் புன்னகைத்தான். "நாம் எல்லோருமே உறங்கும் வழக்கம் உள்ளவர்கள். உறக்கம் நமக்கு இயற்கையாகவே வருகிறது. உறங்காதவர் உலகத்தில் இல்லை எனலாம். உறக்கம் உடலின் இயக்கத்துக்குத் தேவைப்படுகிறது அல்லவா?"

"ஆம்.. எனில்.."

"கேளுங்கள். உறங்கும் பொழுது நம் புலன்களின் நிலை என்ன? கண்களால் வெளிக்காட்சியைக் காண முடியாது. செவிகள் வெளி ஓசைகளைக் கேட்பதைத் தாமாகவே நிறுத்திக் கொள்கின்றன. புற நுகர்ச்சியில் ஈடுபடும் நாசி மூச்சை உள்ளிழுத்து விடுவதில் மட்டுமே குறிப்பாக இருக்கிறது. உரையாடல்களை மறந்த வாய் பேசாதடங்குகிறது. உடலின் உணர்வுகள் அடங்கி விடுகின்றன.

இதோ இந்த அறையிலே எண்ணற்ற வண்ணச் சித்திரங்கள் உள்ளன. ஆயிரம் வித மலர்களின் அலங்காரம் கண்ணையும் மனதையும் பறிக்கிறது. மலர்களின் மணம் நம்மை மயக்குகிறது. மேலும் அரச விருந்தின் நறுமணம் நம்மைச் சுற்றி வருகிறது. பலவித உரையாடல்களில் திளைக்கிறோம். இதே அறையில் இந்தச் சூழலிலே சிறிது உறங்கினாலும் இவையெல்லாம் உடனே மறைந்து விடும் மாயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இதே அறையில் இந்தக் கணத்தில் உறங்கும் ஒருவருக்கு இந்த நிறங்களும் மணங்களும் ஒலிகளும் எண்ணங்களும் தெரிவதில்லை. புரிவதில்லை. என்ன காரணம்? அவருடைய ஐம்பொறிகளும் அடங்கி அக நுகர்ச்சியில் ஈடுபடுவதால்.."

"புற நுகர்ச்சியை மறந்து ஒடுங்குவது புரிகிறது.. எனினும், புலன்கள் அக நுகர்ச்சியில் ஈடுபடுகின்றன என்பது சரியா?" என்றார் ஒரு அறிஞர்.

"..இங்கே உறங்கும் மனிதருக்குக் கனவு வருகிறது. கனவில் அவர் ஒரு அரசவைக் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார். இதே போன்ற அறை. இந்த அறை போலவே கனவறையில் வண்ண ஓவியங்களும், மலர்களும், அழகிய சிற்பங்களும் இருப்பதைப் பார்க்கிறார். ஓவியத்தில் இருக்கும் காட்சிகளைப் புரிந்து வியக்கிறார். மலர்களைத் தொட்டு நுகர்கிறார். மலரின் மென்மையை அவர் தொட்டு உணர்கிறார். மலரின் மணத்தை நுகர்ந்துத் திளைக்கிறார். எதிர்பாராமல் திடீரென்று வேகமாக ஓடிவரும் சில சிறுபிள்ளைகளுக்கு வழி விட்டு ஒதுங்குகிறார். ஒதுங்கும் பொழுது அருகிலிருந்தவர் மீது மோதி விழுகிறார். மோதிய வேகத்தில் தோளில் அடிபட்டு வலிக்கிறது. புலம்புகிறார். அதைக் கவனித்த சிறுபிள்ளை ஒன்று அவரை எழுப்பி மன்னிப்புக் கோருகிறது. அவர் மனமிறங்கிப் பிள்ளையைப் பார்த்து முறுவலித்து, அண்மையில் இருக்கும் இனிப்புத் தட்டிலிருந்து ஒரு பண்டத்தைப் பிள்ளைக்குக் கொடுத்துத் தானும் எடுத்து மெல்கிறார். நாவின் இனிமையில் வலியை மறக்கிறார்... இது சாத்தியமென்று நம்புகிறீர்களா?"

"ஆமாம்.. கனவில் எனக்கும் இது போல் தோன்றும்.. நேரில் நடப்பது போலவே உணர்வேன்.." என்றார் ஒருவர். அவையில் பலர் ஆமோதித்தனர். "பிள்ளை சொல்வது சரிதான்.. இத்தனை நாள் தெரியாமல் இருந்தேனே!" என்றார் ஒரு பாமரர். பலர் தங்கள் கனவில் நிகழ்ந்தவற்றை விவரிக்கத் தொடங்கினர்.

"அன்பர்களே, மேலும் சொல்கிறேன் கேளுங்கள். நம்முள் ஒருவர் இதே அறையில் இப்பொழுது உறங்கிக் கனவு கண்டு விழித்தால், எது கனவறை எது நனவறை என்ற குழப்பம் அவருக்கு உண்டாவதில்லை. காரணம், அவரது பொறிகள் புறவிழிப்பினால் சடுதியில் புற நுகர்ச்சியில் இறங்கிவிடுகின்றன."

"கனவுக்கும் புலனடக்கத்துக்கும் தன்னறிவுத் தேடலுக்கும் தொடர்பு உண்டா?" என்றார் ஒரு அறிஞர்.

நசிகேதன் அறிஞரை ஒரு முறை உற்றுப் பார்த்தான். இதென்ன.. என் ஆசான் போலவே தோன்றுகிறாரே? நான் கற்றதை முறையாக முழுதும் பகிர்ந்து கொள்கிறேனா என்று சோதிப்பது போலத் தோன்றுகிறதே? கேள்விகளால் என்னை வழி நடத்திச் செல்வது போல் தோன்றுகிறதே? 'எழுந்திரு! என்றும் விழித்திரு!' என்றாரே? 'கழுந்தராய் ஊழ்வினை என்று உழலாதே, உத்தமர்போல் வாழ்வினை நன்றென வாழ்' என்றாரே? அந்த அறிவை இவர்களுக்குப் புகட்டவே இந்தக் கேள்வி கேட்கப்படுகிறதா?

நசிகேதன் பலவாறு சிந்தித்தான். அறிஞரை நோக்கி வணங்கினான். "சொல்கிறேன்" என்றான். "புற நுகர்ச்சிகளைப் புரியவும் புரியவும் வைக்க இன்றியமையாதவை இரண்டு. முதலாவது மூச்சு. மூச்சு உள்ளவரை புற நுகர்ச்சிகளைப் புரிய முடியும். இரண்டாவது அறிவு. அறிவு உள்ளவரை நுகர்ச்சிகளின் பலனைப் புரிந்து கொள்ள முடியும்.

அக நுகர்ச்சிக்கும் இவையே காரணமாகின்றன. உறங்கும் நேரத்திலும் விழிக்கும் நேரத்திலும் இயங்குவதைப் போலவே, மூச்சும் அறிவும் அக நுகர்ச்சியிலும் இயங்க வல்லவை. உறங்கும் நேரத்து அக நுகர்ச்சி, நமக்கு ஒரு உதாரணம். ஒரு பயிற்சி. புலன்கள் அடங்க வல்லவை என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. உறக்கம் ஒருவித அக நுகர்ச்சி என்றாலும், அறியாமையை அகற்றும் உண்மையான அக நுகர்ச்சி அல்ல. உறங்கும் வேளையில் மூச்சும் அறிவும் நமக்கு பிறிதொரு நுகர்ச்சிக்கு வழி வகுப்பதைப் போலவே, விழிக்கும் வேளையிலும் அக நுகர்ச்சிக்கு வழிவகுக்க வல்லவை. இந்தத் திறனை நாம் இயல்பாகவே பெற்றிருந்தும், புற நுகர்ச்சியின் பலனால் துறந்து விடுகிறோம். புற நுகர்ச்சிகளே உண்மை என்று நம்பிப் பெரும் அறியாமையை வளர்த்து, இயல்பாக நமக்குக் கிடைத்த அறிவை ஒடுக்குகிறோம். ஒடுங்கிய அறிவு நாளடைவில் நலிந்து விடுகிறது.

என் இனிய நண்பர்களே! விழியுங்கள்! கண்களை நன்றாகத் திறந்து உங்கள் அகத்துள் பாருங்கள். புலநுகர்ச்சியின் மாயக்கட்டிலிருந்து விடுபட்டு எழுந்திருங்கள்! 'அகத்தின் ஒளியே அவம் ஓட்டும், அதை விடுத்து வெளியே சிவம் தேடல் வீண்' என்றார் என் ஆசான். தீவினைகளைத் தூண்டும் குணங்களை விரட்டியடிக்கும் ஒளியானது நம்முள்ளேயே இருக்கையில் அதை வெளியே தேடுவதினால் ஒரு பயனுமில்லை என்று பொருள். அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன். அக நுகர்ச்சியைப் பழகுங்கள்"

"ஐயா.. தேர்ந்த அரசவை அமைச்சர் போலப் பேசுகிறீரே? புலனை எப்படிக் கட்டுவது.. என்ன வழி.. என்று சொல்லாமல் அக நுகர்ச்சி அக நுகர்ச்சி என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீரே? அதற்கான வழி உமக்குத் தெரியுமா தெரியாதா? உமது ஆசான் அதை விளக்கினாரா?" என்றுப் பொறுமையிழந்துக் கேட்டார் ஒருவர்.

"அக நுகர்ச்சிக்கான அடிப்படைக் கருவிகள் நம் அனைவரிலும் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்ற உண்மையை நன்றாகத் தெரிந்து, புரிந்து, அறிந்து கொள்ள வேண்டும். உறக்கம் ஒரு எடுத்துக்காட்டு. அதைச் சொல்லவே சற்று நிதானித்தேன். மன்னிக்கவும்" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "உறக்கத்துக்குத் தயாராவது போலவே புலன்கட்டுக்குத் தயாராக வேண்டும். கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்துக் கட்டிப் பழக வேண்டும். இந்த யோகமே தன்னறிவுத் தேடலுக்கான முதல் கட்டப் பயிற்சி. மூச்சையடக்கி புலனறிவைப் பெறவேண்டும். உறக்கத்தில் புலன்கள் கட்டுப்படுவதைப் போலவே நாளடைவில் இந்த யோகத்தினால் விழிப்பிலும் கட்டுப்படும். இது எளிதல்ல. தெளிவானக் குறிக்கோளுடன் ஆழ்ந்த, தேர்ந்த பயிற்சியினால் மட்டுமே அடைய முடியும்.

புலன்களைக் கட்டாது விட்டால் அவை, தறிகெட்டு ஓடும் புரவிகள் தேரை அழிப்பது போலவே நம்மை அழித்துவிடும். நம் புலன்கள் தேர்ப்புரவிகள். நம் உடல் தேராகும். நமது உள்ளமே கடிவாளம். நமது உயிர், தேரின் சக்கரங்கள். தன்னறிவு தேரோட்டி. நாமே, நமது ஆன்மாவே, தேரில் பயணம் செய்யும் வீரர். புரவிகளும் தேரும் வீரருக்கு அவசியம் என்பதை உணர்ந்து, தேரோட்டி தேரை ஒரு கட்டுக்குள் பாதையறிந்து செலுத்துவது போலவே தன்னறிவு நம்மைச் செம்மையானப் பாதையிலே செல்லப் பணிக்கிறது".

"தினமும் புலனடக்கிப் பயிற்சி செய்தால் தன்னறிவு பெற முடியுமா?"

"தன்னறிவுத் தேடலின் முதல் கட்டம், புலனடக்கப் பயிற்சி. அப்பயிற்சி உள்ளிருக்கும் ஒளியை வளர்க்கிறது. பெரும் அமைதியெனும் ஒளி வளர வளர, தீக்குணங்கள் ஒழிகின்றன. தன்னறிவு வளரத் தொடங்குகிறது. தீக்குணங்கள் ஒழிய ஒழிய, தன்னறிவு வளர வளர, பாவ புண்ணிய சொர்க்க நரகம் தொட்ட அறியாமைகள் இருக்க இடமில்லாமல் ஓடுகின்றன. நம் இயல்பை உணரத் தொடங்கிய நேரத்திலேயே பிறப்பு இறப்பு தொட்ட அச்சங்கள் விலகுகின்றன. ஆன்மாவை அறியத் தொடங்குகிறோம். ஆதலால் அன்பர்களே! எழுமின்! விழிமின்! அகவொளியை வளர்த்து அவங்களை அழிமின்! புலனடக்கும் பயிற்சியில் சிறந்து அறியாமைகள ஒழித்து வளமோடு வாழுங்கள்!".

அவையில் அமைதி. நசிகேதன் உரைத்தது உறைக்கத் தொடங்கியது. சிறிது நேரம் பொறுத்து மெல்லிய ஆரவாரம். "இறந்த பிறகு சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ போவதாகச் சொல்கிறார்களே? அந்த உண்மைகளை அறிந்தீரா? எனில் சொல்லுங்கள்" என்றார்கள் சிலர்.

2012/02/17

சொர்க்கத்தின் திறவுகோல்


82
பிறப்பிற் திறக்கும் புறத்தே தறிக்கும்
உறக்கம் வரைக்கும் உறுப்பு - புறத்தே
கறங்குங் கரண மிறுக்குந் துறவே
துறக்கந் திறக்குந் துறப்பு.

   பிறந்தக் கணத்தில் இயங்கத் தொடங்கும் புலன்கள், இறக்கும் வரையிலும் புறத்தையே இயல்பாக நாடுகின்றன. அத்தகையப் புறச் சுழற்சியினின்று மனதை விடுவிக்கும் ஒழுக்க நெறியே சொர்க்கம் எனும் பேரின்பத்தின் திறவுகோல் (என்றான் நசிகேதன்).


தறிக்கும்: நிலையின்றித் தாவும்
உறக்கம்: மரணம்
உறுப்பு: ஐம்பொறிக்கு ஆகி வந்தது
கறங்கும்: சுழலும்
கரணம்: மனம்
இறுக்கும்: நிலைப்படுத்திக் கட்டும்
துறக்கம்: சொர்க்கம்
துறப்பு: திறவுகோல்



    சிகேதன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் எழுந்து, "உள்தூய்மையை வளர்ப்பது எது, வளர்க்க விடாமல் தடுப்பது எது?" என்றார்.

அவையிலிருந்த இன்னொருவர் குறுக்கிட்டு, "அதான் அழகாகச் சொன்னாரே ஐயா. உள்தூய்மையை வளர விடாமல் தடுப்பவை நம் புலன்கள் என்று, கவனிக்கவில்லையா?" என்றார். பிறகு நசிகேதனிடம், "இளஞ்சுடரே! அப்படியெனில் உள்தூய்மையை வளர்ப்பது எது?" என்றார்.

நசிகேதன் புன்னகையுடன், "புலன்கள் தான்!" என்றான்.

அதைக் கேட்டதும். "ஆ! என்ன இது! சில காவிகளைப் போலவே கணத்துக்கு ஒன்று சொல்லிக் குழப்புகிறீரே ஐயா?" என்றார் மற்றொருவர்.

நசிகேதன் அமைதியாக, "விளக்கிச் சொல்ல முயல்கிறேன்" என்றபடி அவையைச் சுற்றி இன்னொரு நோட்டமிட்டான். பிறகு குரலைச் சற்றே உயர்த்திப் பேசத் தொடங்கினான். "அன்பு உள்ளங்களே! உள்தூய்மையே முக்திக்கான நெறி என்றேன். முக்தியடையும் வழியென்றேன். உள்தூய்மை அடையவிடாமல் தடுப்பவை நம்முடைய புலன்கள் என்றேன். உள்தூய்மையை அடைய வழி செய்வதும் புலன்களே!

பிறந்த கணத்திலே மனிதரின் உடல் உறுப்புக்கள் இயங்கத் தொடங்குகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலங்களின் வழியாக மனமானது இயங்கத் தொடங்குகிறது. இயங்கத் தொடங்கிய அந்தக் கணத்திலேயே உள்தூய்மை மாசடையத் தொடங்குகிறது. மனிதன் வளர வளர உள்தூய்மை கெட்டழிந்து போகிறது.

பிறந்த கணத்திலிருந்து நம்முடைய செவியானது வெளிப்புற ஓசைகளையும் ஒலிகளையும் கேட்டு ஒரு புறம் தாவுகிறது. நாசியோ வெளிப்புற மணங்களால் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து தேடுகிறது. கண்களோ புறக்காட்சிகளின் அற்புதத்திலோ அதிர்ச்சியிலோ சிக்கி வேறொரு திக்கிலே தொடர்கிறது. வாயானது இனிய உணவு வகைகளாலும் இன்மொழி வன்மொழிகளாலும் ஈர்க்கப்பட்டு இன்னொரு புறம் தறிகெட்டு ஓடுகிறது. மெய்யான உடலோ தொடல்களில் கிறங்கி இன்ப துன்பமென்று மற்றொரு திக்கிலே சுழல்கிறது. பிறந்த கணத்திலிருந்து வெளிப்புற இன்ப துன்ப உணர்ச்சிகளிலே சிக்கியப் புலன்கள், நாம் இறக்கும் வரையில் அதே நிலையில் தொடர்கின்றன.

இது இயல்பு. நம் புலன்கள் அமைக்கப்பட்டிருப்பது வெளியுலக, உலகாயத கவனத்தோடு செயல்படுவதற்காகவே. அதனால் அவை தமக்கு உணர்வு பிறந்த கணத்திலிருந்து நிலைகெட்டு அலையத் தொடங்குகின்றன".

“விசித்திரமாக இருக்கிறதே! மனிதராகப் பிறந்தவர்கள் உலகத்தை அனுபவிக்காமல் எல்லாவற்றையும் துறந்து ஒடுக்க வேண்டும் என்பது போல் பேசுகிறீரே ஐயா? பிறகு உலக அற்புதங்களினால் என்ன பலன்?”

“அற்புதங்களைத் தேடி அனுபவிக்கவே நம் புலன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றேன். உலகாயத் தேடல்களில் தவறே இல்லை. அதுவே நம் இயல்பு.”

“எனில்?”

“எனில், அத்தகையத் தேடல்களினால் நம்முள் இருக்கும் மனிதம் மேன்மையடைகிறதா, மாசடைகிறதா என்பதே நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி. மாசடைந்த மனம், பாவ புண்ணியங்களில் கவனம் செலுத்தத் தொடங்குகிறது. பாவ புண்ணிய அச்சத்தில் சிக்கித் தவிக்கிறது. மாசகன்ற மனமோ உலகாயத இயல்பிலும் பண்பட்டு நிற்கிறது. பாவ புண்ணிய அச்சங்கள் அதற்கில்லை.

எனது ஆசானான அறவரசன் இதை மிக அருமையாக விளக்கினார். நமது உடலை ஒரு தேர் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அந்தத் தேரில் பூட்டப்பட்டிருக்கும் ஐந்து புரவிகள் நம்முடைய ஐம்புலன்கள். தேரை இழுக்கும் ஐந்து புரவிகளும் தறி கெட்டு ஒவ்வொரு திக்கிலும் ஓடுவது இயற்கையல்லவா?" என்றான்.

"அதெப்படி? தேரோட்டியிருக்கும் பொழுது புரவிகள் ஒரே பாதையில் ஒழுங்காகப் பயணம் செய்யுமே?"

"மிகச்சரி. திக்குத் தெரியாமல் திசைக்கொருவராகத் தேரை இழுத்து நாசமாக்கக்கூடிய அதே புரவிகள், தேரை நேர்த்தியாக நேர்ப்பாதையிலும் கொண்டு செல்ல வல்லவை. அதைப் போலவே நமது ஐம்புலன்களும் நம்மைச் சரியான திசையில் இழுத்துச் செல்ல வல்லவை"

"ஐயா.. நம் உடல் தேர் என்றீர்கள், புரிகிறது. நம் புலன்கள் புரவிகள் என்றீர், புரிகிறது. தேரோட்டி யார்?"

"சொல்கிறேன். என் ஆசான் சொன்னது என் நினைவில் நிற்கிறது. நம் ஆன்மா தேரில் பயணம் செய்யும் வீரரைப் போன்றது. தேரில் பயணம் வீரருக்கு ஒரு இலக்கு இருப்பதைப் போலவே ஆன்மாவுக்கு ஒரு இலக்கு உண்டு. ஆன்மாவின் இலக்கைப் பிறகு விளக்குகிறேன். முதலில் தேரோட்டியை அறிமுகம் செய்து கொள்வோம். தன்னறிவே தேரோட்டி. தன்னறிவே புலன்களைக் கட்டி ஆன்மாவை சரியான பாதையிலே செலுத்த வழிசெய்கிறது. அந்தத் தன்னறிவைப் பெறுவதே நான் முன்பு சொன்ன வேள்வி. அத்தகையத் தன்னறிவை வளர்க்கும் உள்தூய்மையே நான் முன்பு சொன்ன வேள்வித்தீ.

வெளியுலக நுகர்ச்சிகளில் சிக்கியப் புலன்களால் கட்டுண்ட மனம், இயல்பாகவே அந்நுகர்ச்சிகளின் இன்பங்களைத் தக்கவைக்க விரும்புகிறது. அதனால் ஆசை, கோபம், களவு, பொய் எனும் தீக்குணங்களை விதைத்து வளரச் செய்கிறது. இத்தீக்குணங்கள், உள்தூய்மையை அரித்துக் கெடுத்து அழித்து விடுகின்றன. இறக்கும் வரையிலும் இந்த அழிவு தொடர்கிறது.

புறந்தழுவியப் புலன்களைக் கட்டி அகம் தழுவ வைக்கும் ஒழுக்கமே, உள்தூய்மையை வளர்க்கும் நெறியாகும். இந்த நெறியை அறிவதே அரிது. அறிந்து செயல்படுத்துவது இன்னும் அரிது. ஐம்புலன்களின் புறச்சுழற்சியில் சிக்கிய மனம், ஐம்புலன்கள் அடங்கிச் சீரான பாதையிலே இயங்கும் பொழுது தூய்மையடையத் தொடங்குகிறது. நாளடைவில் தூய்மை பெருகத் தொடங்குகிறது. தன்னறிவு பெறும் நிலையடைகிறது. ஐம்புலன்களைக் கட்டி மனதைத் தன்னறிவுப் பாதையிலே அழைத்துச் செல்லும் இத்தகைய ஒழுக்கமே, துறவே, சொர்க்கம் எனும் பேரின்ப நிலையின் திறவுகோலாகும்” என்றான்.

“புலன்களைக் கட்டினால் தன்னறிவைப் பெறலாம் என்கிறாயா?”

“இல்லை. புலன்களைக் கட்டினால் தன்னறிவுப் பாதையிலே செல்லலாம். புலன்களுக்கு அப்பாற்பட்டது தன்னறிவு. தீவிர யோகத்தினால் மட்டுமே தன்னறிவைப் பெற முடியும். புலன்களை கட்டுவதே மிகவும் கடினம். புலன்களைக் கட்டித் தீவிர யோகத்தினால் தன்னறிவைப் பெறுவது இன்னும் கடினம். தன்னறிவு பெற்ற நிலையில், சொர்க்கம் ஒரு பொருட்டேயல்ல. அந்த நிலையே பேரின்பத்தின் திறவுகோலாகும்”

அவையோர் நசிகேதன் பேச்சைக் கவனமாகக் கேட்டனர். “ஐயா, புலன்களைக் கட்டினால் தன்னறிவு பெறலாம் என்றீர்கள். தன்னறிவு சொர்க்கத்தின் திறவுகோல் என்றீர்கள். ஆனால் தன்னறிவைப் பெறத் தீவிர யோகம் செய்ய வேண்டுமா? அது என்ன என்று விளக்கிச் சொல்லுங்கள்” என்றனர்.

2012/02/10

முக்திக்கான வேள்வி


81
சித்தறியுஞ் சத்துவமே உத்தமரே வித்தகரே
முத்தியெனு மத்தமத்துந் தித்தியம் - சித்தமதில்
துத்துநத்து மத்தரிப்புப் பித்தடக்கும் பத்ததியத்
தித்தியத்துள் தத்திடுந் தீ.

   ல்லுள்ளங்களே! அறிஞர்களே! ஆன்மாவை அறியும் நோக்கத்துடனான உள்தூய்மையே முக்தியெனும் நிலையைத் தரும் வேள்வியாகும். பொய்மை, பேராசை, சினம், அறியாமை எனும் இவற்றை உள்ளத்திலிருந்து அகற்றும் ஒழுக்கமே அந்த வேள்வியில் ஒளிவீசும் தீயாகும் (என்றான் நசிகேதன்).


சித்து: ஆன்மா
சத்துவம்: நல்லெண்ணம், உளத்தூய்மை
அத்தம்: அருநெறி
அத்தும்: அடையும் (அத்தம்+அத்தும்: அருநெறி அடையும் | முத்தி யெனும் அத்தமத்தும்)
தித்தியம்: வேள்வி (வேள்விக்கூடம்)
சித்தம்: உள்ளம்
துத்து: பொய்மை
நத்து: பேராசை
மத்தரிப்பு: சினம்
பித்து: அறியாமை
பத்ததி: ஒழுக்கம் (முறைகளை விளக்கும் நூல்)
தத்திடும்: பரவும் (ஒளிவீசும்)



    சிகேதன் தொடர்ந்தான். "பேரின்பம் அல்லது பிறவாமையை வழங்கும் யாகம் பற்றிக் கேட்டீர்களே, சொல்கிறேன். பேரின்பமும் பிறவாமையும் தரும் முக்தி எனும் அரிய நெறி, அரிதான நிலை, அதனை அடைவதற்கு ஒரு வேள்வி உண்டு. ஆன்மாவை அறியும் தன்னறிவைப் பெறுவதே அத்தகைய வேள்வி. தன்னறிவைப் பெற்றவர்கள் பிறப்பையோ இறப்பையோ பற்றிக் கவலைப்படுவதில்லை. பிறவாமை என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இப்பிறவியில் தன்னறிவு பெற்றவர்கள், ஆன்மாவைக் கண்டறிந்தவர்கள், முத்தி அடைந்தவர்களாவர். இதைப் பற்றி மேலும் விவரமாகச் சொல்கிறேன்..."

நசிகேகதனைத் தொடரவிடாமல் அவையில் கேள்விக் கணைகள். 'வேள்வியா? எப்படிச் செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? பெண்களுக்கு அனுமதி உண்டா? இதற்காக வேதங்கள் படித்து ஞானம் பெற வேண்டுமா? விரதங்கள் கடைபிடிக்க வேண்டுமா?' என்று வந்தக் கேள்விகளைப் பொறுமையோடு கேட்டபின் தொடர்ந்தான்.

"இந்த வேள்வியை யார் வேண்டுமானாலும் புரியலாம். இந்த வேள்விக்கான வேதம் மிக எளிதில் புரியக்கூடியதாகும். பெரும் தானங்களும் விரதங்களும் தேவையில்லை. ஆண் பெண் என்ற பேதமில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. ஏழை செல்வந்தர் என்ற பேதமில்லை. படித்தவர் பாமரர் என்ற பேதமும் இல்லை. இன்னார் தான் வேள்வி செய்யவேண்டும் என்ற நியதியில்லை. இந்த வேள்வி வெளியிலே செய்வதல்ல. உள்ளுக்குள் புரியும் வேள்வி. தூய உள்ளத்தை வளர்ப்பதே இந்த வேள்வியாகும். தூய உள்ளத்தில் தொடங்கி தீவிர யோகத்தினால் ஆன்மாவை அறியமுடியும்."

நசிகேதன் சொல்லைக் கேட்டச் சிலர் சிரித்தனர். "சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே? அத்தனை வேதங்களும் முறைகளும் பொய்யாகி விடுமா? உளத்தூய்மை ஆன்ம அறிவாகுமா? இதையெல்லாம் கேட்டு மக்கள் குழம்பப் போகிறார்கள்" என்றனர்.

நசிகேதன் தயங்காமல் தொடர்ந்தான். "வேதங்களும் முறைகளும் பொய்யென்று சொல்லவில்லை. ஆனால் வேதங்களும் முறைகளும் உளத்தூய்மை இல்லாத நிலையில் பலனற்றுப் போய்விடுகின்றன. கண்மூடித்தனத்தை வளர்க்கும் கபடங்களாகின்றன. ஏமாற்றுச் சாதனங்களாகி விடுகின்றன. உளத்தூய்மை இருந்தால், வேதங்களுக்கும் முறைகளுக்கும் தேவையில்லாமல் போகிறது. உளத்தூய்மையை எல்லோரும் பெற முடியும். சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் என்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்காமல், சடங்குகளும் கண்மூடித்தனங்களும் நிறைந்தப் பாதையிலே அழைத்துச் செல்லுமானால் வேதங்களும் நெறிகளும் பொய்யே. தன்னையறியும் பாதையிலே நல்லுணர்வோடு நற்குணங்களோடு பயணம் செய்ய உதவாமல் போனால்.. வேதங்களும் சடங்குகளும் பொய்யே!"

"ஆகா!" என்றனர் சிலர்.

"ஆனால் உளத்தூய்மை பெறுவது எளிதல்ல. புற வேள்வியில் தீ வளர்ப்பது போலவே அக வேள்வியிலும் தீ வளர்க்க வேண்டும். புற வேள்வித் தீயில் தானங்களை வழங்குவது போலவே அக வேள்வித் தீயிலும் புரியவேண்டும்."

"புரியவில்லையே.."

"நம்மை நன்னெறியினின்றுப் பிறழச் செய்யும் ஆசை, பொய்மை, கோபம், அறியாமை போன்றவை நம் மனதிலே குடிகொண்டு அறிவை விரட்டியடிக்கக் கூடியவை. இவற்றை அறிந்து களைய வேண்டும். ஆசை, கோபம், களவு, அறியாமை இவற்றை உணரச்செய்யும் ஒழுக்கமே இந்த வேள்விக்கான வேதம். இந்த ஒழுக்கமே வேள்வித்தீயாக ஒளிவீசி, நாளடைவில் வேள்விப்பயனான தன்னறிவைப் பெற வழி செய்கிறது. அகவேள்வித் தீயில் நாம இடவேண்டியவை நம் தீக்குணங்கள். தூய மனதில் துக்கமில்லை. தூய மனதுக்கு சுகம் துக்கம் நன்மை இன்பம் துன்பம் எல்லாம் ஒன்றே. அந்த நிலையில் புறத்தியாகங்களைப் புரிந்து பொய்யான பலன்களை எதிர்நோக்கும் அவசியமில்லை"

"நல்ல பிள்ளையப்பா! நீதி சொல்லக் கிளம்பிவிட்டான்.." என்றார் ஒரு அறிஞர். "சாத்திரங்கள் சொல்லாதப் புதுக்கதையை சொல்கிறான். இதைக் கேட்க வந்தோமே!" என்று அவையை விட்டுக் கிளம்பினார்.

"ஐயா, பொறுங்கள்" என்றார் இன்னொரு அறிஞர். நசிகேதனிடம், "இளவரசே! நீங்கள் சொல்வது போல் உள்தூய்மையால் தன்னறிவு பெற முடிந்தால் ஏன் அனைவரும் பெறுவதில்லை?" என்றார்.

அவையில் சிலர், "ஆமாம் மகனே.. எங்களுக்கும் அந்த ஐயம்.. பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம் என்று பயந்து கொண்டிருக்கும் எங்களுக்கு உள்தூய்மை பற்றி விவரமாகச் சொல்லுங்கள்.. பேரின்பம் இவ்வளவு எளிதானதென்றால் ஏன் எல்லோரும் சடங்குகளை நம்பிக் கொண்டிருக்கிறோம்?" என்றனர்.

நசிகேதன் தொடர்ந்தான். "சொல்கிறேன். ஆன்மாவை அறியும் நோக்கத்துடன், ஆசை கோபம் களவு அறியாமை இவற்றை அகற்றி உள்தூய்மையை வளர்ப்பதே முக்தி என்னும் அரிய நிலையடையும் வழி. எனினும், உள்தூய்மை என்பது எளிதல்ல. உள்தூய்மை அடைய விடாமல் தடுப்பவை, நம் புலன்களாகும்" என்றான்.

2012/02/03

ஆன்மா எனும் உண்மை


80
அழிந்தும் எழும்பும் அழலான் வழியே
செழிக்கும் சுழியே சித்து - கழியில்
அழுப்புக ஆசான் கொழித்தக் கெழுமை
முழுதும் பொழிந்தான் மொழிந்து.

   விண்ணுலக ஆசான் வழங்கிய குறையற்ற அறிவொளியை அவையிலே பொழிந்த நசிகேதன், உதயமாகி மறையும் ஆதவனைப் போன்று ஆன்மாவும் சுழன்று வளர்வதாகும் என்று சொல்லி முடித்தான்.


அழலான்: ஆதவன் (அழல், அழலன்)
சுழி: விதை, சுழற்சி
சித்து: ஆன்மா
கழியில்: குறையில்லாத (கழி+இல்)*
அழுப்புகம்: விண்ணுலகம்
கொழித்த: பொழிந்த, பெருமளவில் வழங்கிய
கெழுமை: ஒளி, சிறப்பு (அறிவு)
* நசிகேதன் தன் ஆசானைக் குறையற்றவன் என்றதாகவும் பொருள் கொள்ளலாம்



    வையினர் கேட்டக் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்லுவதென்று சிந்தித்தான் நசிகேதன். அவையை நோட்டமிட்டான். அவன் மனதிலும் எண்ண மழை. உணர்வு ஓடை. எழுச்சி நதி.

திகைத்தான். எத்தனை பேர் கூடியிருக்கிறார்கள்! படித்தவர்கள் பாமரர்கள் என்றப் பாகுபாடின்றி அத்தனை பேரும் என்னைக் காண வந்திருக்கிறார்களே! எதற்காக? எத்தனை விதமான கேள்விகள் கேட்கிறார்கள்! கேள்விகளில் அறிவும் அறியாமையும் தொனிக்கிறதே! என் எமனுலகப் பயணக் கதையைக் கேட்க வந்திருக்கிறார்களா? இருக்காது. பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதால் இவர்களுக்கு ஏதாவது பயனேற்படுமா? பயண விவரங்களின் சிலிர்ப்பும் திகைப்பும் சில கணங்களில் மறைந்து விடுமே? இவர்களுடைய கேள்விகளின் வேர் யாது? சொர்க்கம் பற்றித் தெரிந்து கொள்வதா? அதை அடைவதற்கான வழி முறைகளைத் தெரிந்து கொள்வதா? அவ்வுலக நிலையை அறிந்து கொள்வதா?

விழித்தான். அவ்வுலகம் பற்றி அறிந்து கொள்ளும் பக்குவம் இவர்களுக்கு இருக்கிறதா? கண்மூடத் தயங்காத இவர்கள் கண்திறக்கத் தயங்குவார்களா? எத்தகைய வேள்வி புரியவேண்டும் என்று கேட்கிறார்களே? எத்தகைய தானங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே? வேள்வியைப் பற்றி எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்களா? 'புரிந்தவர்க்கும் பொன்னுலகும் பிக்கும், பேதைக்கோ என்னுலகம் என்றும் எதிர்' என்றாரே என் ஆசான்! இவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது!

திடுக்கிட்டான். அடடா! ஆசானிடம் நான் இவர்களைப் போலத்தானே அடாது கேட்டேன்? அவரும் என்னைப் போல் மனதைப் பிசைந்து கொண்டிருப்பார் என்பது இப்போதல்லவா புரிகிறது! ஆசான் என்னைச் சோதித்தது போல் நான் இவர்களைச் சோதிப்பதா? தேவையில்லை. அதனால் பலனில்லை. இவர்களின் தேவை, தேர்ந்த அறிவல்ல. ஞானமல்ல. இவர்களுக்குத் தேவை, குறுக்கு வழி. ஒரு பதில். இன்றையப் பொழுதுக்கான ஒரு வடிகால். சாதனம். வேறு வரங்கேள் என்று ஆசான் என்னை வற்புறுத்தியது இப்போதல்லவா புரிகிறது? பொன்னை அறியும் மாந்தரிடம் சற்றுத் தன்னையும் அறியச் சொல்வதால் பலனுண்டா? மெய்யறிவை வழங்குவதை விட, பொன்னையும் மணியையும் இவர்களுக்கு வழங்கினால் மகிழ்வார்களோ?

கலங்கினான். அந்தோ! அப்படி எண்ணிக் கைவிட முடியவில்லையே?! பிறகு, இந்த அறிவை இவர்கள் பெற முடியாது போகுமே! நான் பெற்ற அறிவின் பலனும் அழிந்து விடுமே! பாமரர்களை விட, படித்தவர்கள் மேல் பரிதாபம் தோன்றுகிறதே! படிப்பும் பட்டறிவும் பல கேள்வி ஞானமும் பெற்றும், தானும் கண்மூடிப் பிறரையும் குழியில் தள்ளுகிறார்களே! இவர்களின் கண்மூடித்தனத்துக்குக் கல்வியே காரணமோ? பாமரர்களோ பயந்திருக்கிறார்களே? இவர்களின் கண்மூடித்தனத்துக்கு பயம் காரணமோ? மெய்யறிவைப் பையிலடைத்து இவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறேன்?

சிலிர்த்தான். தேவர்கள் உண்டா, கடவுளைக் கண்டாயா என்றார்களே! கண்டேன் என்றால் புரிந்து கொள்வார்களா? என் ஆசிரியரை நினைத்தால் மெய் சிலிர்க்கிறதே! 'வெளியே சிவந்தேடல் வீண்' என்றதன் பொருள் இப்பொழுதல்லவா புரிகிறது! ஆசான் என்ன சொன்னார்? 'சுகம் தேடிச் செல்வார் போல் மெய்யறிவில் மூழ்க மனங்கொள்' என்றாரே? அவர் சொல்லின் உண்மைப் பொருள் இப்பொழுதல்லவா விளங்குகிறது! சாதாரணப் பாமரர்கள் தான் மெய்யறிவைச் சுலபமாகப் பெறத் தகுதியானவர்கள். சுகந்தேடும் அவர்களால் தான் மெய்யறிவிலும் மூழ்க முடியும். தத்துவப் பித்து கொண்ட தாடிகளும் காவிகளும் தங்களின் கண்மூடித்தனத்தினாலும் ஆணவத்தினாலும் மெய்யறிவைப் பெறும் தகுதியற்றவர்கள் என்பது இப்போதல்லவா புரிகிறது!

மருண்டான். மெய்யறிவுப் பாதையில் கல்லும் இல்லை முள்ளும் இல்லை. மெய்யறிவுப் பாதை எளிதான பாதை, எனினும் பயணம் கடுமையானது என்பதைப் புரிந்து கொள்வார்களா? யாகங்கள் விரதங்கள் தானங்கள் தியாகங்கள் எல்லாமே தேவை.. ஆனால் அவை இவர்கள் இப்போது புரியும் யாகங்கள் அல்ல, விரதங்கள் அல்ல, தானங்கள் அல்ல, தியாகங்கள் அல்ல என்றால் உணர்ந்து கொள்வார்களா? தேவைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு வெளி வரத் தயங்குகிறார்களே? வெளியே தீ வளர்த்துத் துதி பாடி தானம் செய்து கண்மூடும் இவர்களை உள்ளே தீ வளர்க்கச் சொல்வதெப்படி? வெளியில் பொன்னும் மணியும் பசுவும் சிசுவும் தானம் செய்யும் இவர்கள் செய்ய வேண்டிய தானங்களும் தியாகங்களும் அவர்களுக்குள்ளேயே இருப்பதை எப்படிச் சொல்வது? எனக்கே எமனுலகம் போனபின் தானே இவை புரிந்தது? ஒருவேளை இவர்களும் இறந்தபின் புரிந்து கொள்வார்களோ?

வருந்தினான். அடடா! இந்தப் பேதைகளின் முகங்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறதே! இல்லாததை நம்பிப் பொல்லாததைப் புரிகிறார்களே! இத்தனை எளிமையான உண்மையை இவர்கள் இறந்து அறிய வேண்டியிருக்கிறதே! தான் கற்றத் தத்துவம் 'ஞாலத்து மையகற்றும் ஞாயிறு' என்றதன் உண்மை உறைத்தது. அவனுள் நன்றியுணர்வு பொங்கியது. என் தந்தையின் அறியாமையினால் தானே எனக்கு அறிவு கிடைத்தது! தந்தையைப் பார்த்து மனதால் நன்றி சொன்னான்.

கனிந்தான். மீண்டும் அவையினரைப் பார்த்தான். 'உன்னால் மைவிலகி உய்யட்டும் உலகு' என்ற எமனின் ஆசி நினைவுக்கு வந்தது. ஒரு உயர்ந்த மாணவன் தன் மேலான ஆசிரியருக்குச் செலுத்த வேண்டிய நன்றியைப் புரிந்து கொண்டான். அவந்தேடி ஓட்டும் அகத்தின் ஒளியைப் பற்றி இவர்களுக்குத் தெளிவாகச் சொல்லியே தீரவேண்டும் என்ற வேகம் அவனுள் எழுந்தது. இவர்களுக்குத் தன்னறிவைப் பற்றிச் சொல்லியே தீரவேண்டும். இவர்களில் ஒரு சிலர் புரிந்து கொண்டாலும் பலன் தானே?

மகிழ்ந்தான். அவன் எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன. 'மூன்று வரங்கேள்' என்ற ஆசானின் நினைவு வந்தது. தானும் இதே நிலையில் இருந்ததை எண்ணினான். இவர்கள் ஞானப்பாதையில் போக விரும்புவதினால் தானே கேட்டார்கள்? பதிலுக்கு மெய்யறிவை வழங்க வேண்டியது என் கடமையல்லவா! எத்தகைய வாய்ப்பு இது! நான் பெற்ற ஞானம் இவ்வையமும் பெறுவதில் ஞானத்துக்குத் தானே பெருமை! இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே பெரும் பேறு! இதற்காகவே தன்னை எமன் தயார் செய்திருப்பது புரிந்தது. தன் ஆசானுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துவிட்டுத் தொடங்கினான்.

"என்னைக் காண வந்த நல்ல உள்ளங்களே!" என்றான். "எல்லாம் அறிந்த ஞானிகளே!" என்றான். "உங்கள் அன்புக்கு முதலில் என் வணக்கங்கள்!" என்றான்.

அவையில் அமைதி.

எமனுடன் நடந்த உரையாடலை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று சிந்தித்தான் நசிகேதன். அவையோர் கேள்வியின் பின்னே இருந்த அச்சத்தை, ஆன்மாவின் சுழற்சி பற்றிய ஐயத்தை, அது தொட்ட பாவ புண்ணிய சொர்க்க நரக நம்பிக்கைகளை, அவற்றைப் பெறவும் விடவும் புரிய வேண்டியதாகச் சொல்லப்படும் கண்மூடித்தன சடங்குகள் பற்றிய அறியாமையை.. அனைத்தையும் நீக்க வேண்டிய, விளக்க வேண்டிய, தருணம் வந்ததை உணர்ந்தான். தன் ஆசான் இதற்காகவே தன்னைப் தயார் செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தான். தன் உரையைத் தொடங்கினான்.

"அன்புடையீர்.. இதோ இருக்கும் என் தந்தை அறியாமையினால் என்னை எமனுக்குத் தானம் கொடுத்தார். தனக்குச் சொர்க்கம் கிடைக்குமென்று காவிகள் சொன்னக் கட்டுக்கதையை நம்பி, பெரும் வேள்வி புரிந்து, பெற்ற மகன் என்றும் பாராமல் என்னை எமனுக்குத் தானம் கொடுத்தார்" என்று தொடங்கினான். அரியணையிலிருந்த அரசனை, வாசனை, தன் தந்தையைப் பார்த்தான். நசிகேதனின் பார்வையிலே ஆத்திரம் இல்லை. மாறாக கருணையும் நன்றியும் ஒளிர்ந்தது. "அப்பா!" என்று வணங்கினான். தொடர்ந்தான்.

"அன்புடையீர்.. என் தந்தையின் செயல், அறியாமையின் விளைவு என்றாலும் அவர் அவ்வாறு செய்யாதிருந்தால் எனக்கு இந்த அறிவைப் பெறும் வாய்ப்பு, பெற்று உங்களுடன் பகிரும் நிறைவு.. இரண்டுமே கிடைத்திருக்காது. அவருக்கு என் நன்றி. அறவரசனான எமன் என்னை அன்புடன் ஏற்று ஒப்பற்ற மெய்யறிவை வழங்கினார். என் ஆசான் களங்கமற்றவர். என் ஆசான் மாபெரும் அறிஞர். என் ஆசான் கருணையே உருவானவர். என் ஆசான் உங்கள் அனைவருக்கும் உய்யும் வழியை என்னிடம் சொல்லியனுப்பினார். அதனை முழுதுமாக உங்களிடம் சேர்க்க எனக்கு அவர் தொடர்ந்து அருள் புரியட்டும். எனக்குத் துணை நிற்கட்டும்.

மண்ணிலே விதை விதைக்கிறோம். விதை வளர்ந்துப் பயிராகிறது. பயிர் அழிந்து விதையாகிறது. விதை மீண்டும் அதே மண்ணிலே அதே பயிர் வளரக் காரணமாகிறது. இதைப் புரிந்து கொண்டவர்கள், விதை பயிராவதால் பெருமகிழ்ச்சியோ பயிர் விதையாவதால் பெருந்துயரமோ அடைவதில்லை. பயிர் அழியும் காலத்தில் விதையின் உண்மை, வளர்ச்சியின் தத்துவம், அறிந்து அமைதியாக இருக்கிறோம். பிறப்பும் இறப்பும் அது போலவே. உயிர் பிறப்பது விதை முளைப்பது போல. உயிர் பறப்பது பயிர் அழிவது போல. முளைத்து நல்முறையில் வளர்ந்து செழிப்பது மட்டுமே பயிரின் கடமை. விதையின் உரிமை பயிருக்கு இல்லை. அதுபோல் நல்முறையில் வளர்ந்து, மனித நேயத்தில் செழித்து, தன்னையறிந்து நடப்பதே நமது கடமையாகும்.

மழை நீரை அறிவோம். விழும் இடம் பார்த்தா விழுகிறது? கடலிலோ ஏரி குளங்களிலோ நிலத்திலோ விழுகிறது. விழுந்த நீர் குளத்திலோ நதியிலோ கடலிலோ கலந்து, அத்தன்மைக்கேற்ப உருமாறுகிறது. அறவே கலந்த மழைநீரானது, தான் விழுந்து கலந்த குளம் நதி கடலினின்று விலகி, தன்மைகளை விடுத்து மேலெழுந்து, உருமாறி மீண்டும் மழைநீராகவே அதே இடங்களிலோ, இடம் மாறியோ, விழுகிறது. ஆயின், இந்த சுழற்சி மாறுவதேயில்லை. தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து வேறு விதமாக மாறத் தெரியாத நீரானது எப்படி மழையாக மாறி கடல் நதி நிலம் என்றுச் சுற்றி வருகிறதோ, அதுபோல் ஆன்மாவானது உடலினின்று விலகிக் கலந்து விலகிக் கலந்துச் சுழல்கிறது.

என் ஆசான் இதைப் பற்றிச் சொல்லும் பொழுது, 'பாமரர்கள் மட்டுமல்ல பெரும் ஞானிகளும் தங்களைப் பற்றிய உண்மையை அறியாமல், பிறவாமை எனும் பேற்றினைத் தேடி என்னுலகம், பொன்னுலகம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் வந்து போகிறார்கள்' என்றார். அன்பர்களே! இந்தச் சுழற்சி தவிர்க்க முடியாதது. இயல்பானது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் போன்றவற்றின் நிறங்களை அறிய முடியும். இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல. சுழற்சியின் கவர்ச்சியில் விழுவது எளிது. அதனால் நாம் பேராசைகளையும் பெருந்துயரங்களையும் வளர்த்து உழல்கிறோம்.

இங்கே விருந்துண்டோம். விருந்திலே மா பலா வாழை என முக்கனிகள் பரிமாறப்பட்டன. நம்மால் எத்தனை உண்ண முடிந்தது? முதல் கனியை வாய் ருசித்தது. மனம் மகிழ்ந்தது. எனினும், எத்தனை கனிகள் உண்ண முடிந்தது? மூன்றாவதாகவோ ஐந்தாவதாகவோ பறிமாறப்பட்டவை முதல் கனியின் சுவை போலவே இருந்ததா? இல்லையே? சாதாரணச் சாப்பாட்டின் இனிமையே நிலையில்லாதது என்று உணரும் பொழுது, நமக்கு எத்தகைய அதிர்ச்சி காத்திருக்கிறது புரிகிறதா?

நிலையாமை என்பது நம் ஒவ்வொரு செயலிலும் இயக்கத்திலும் செய்தியாகப் புதைந்திருக்கிறது. நாம் தான் அறிவதில்லை. அறிவது எளிதல்ல. தன்னையறியும் பொழுது நிலையாமை முகத்தில் அடித்தாற்போல் புரிகிறது.

நீரிலே எழும்பித் திரியும் குமிழியில் பல வண்ணங்கள் பட்டுத் தெறித்து, கண்களுக்கும் மனதுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. குமிழி நிலைப்பதில்லை. குமிழி எப்போது வெடிக்கும் என்று தெரியாது. வாழ்வும் குமிழி போன்றதே. உலகத்தில் அளவற்ற நாள் வாழ வழியிருந்தாலும், அது நிலைக்காத குறுகிய காலமே. இசையும் இளமையும் வாரிசும் வாழ்வும் நசையாகும். அதனால், வாழும் காலத்திலே தன்னை உணர்ந்து கண்மூடித்தனங்களை விட்டு அறிவைத் தொடர்ந்து வாழ வேண்டும். அறிவுப் பாதையிலே போவோருக்கு அச்சமில்லை. துயரமில்லை. நல்ல மனிதராக வாழ்ந்த நிறைவு, அச்சத்தையும் துயரத்தையும் அழிக்க வல்லது.

எனது ஆசான் சொன்னதை இங்கே நினைவு கூர்கிறேன். 'மானிடத்துக்கு ஒரு சாபம் உண்டு. தனக்கு அறிவு இருப்பதையே உணராமல் செயல்பட வேண்டிய சாபம். கண்மூடி இருப்பதில் சுகம் காணும் மானிடம், கண் திறந்து செயலாற்றச் சோம்பித் திரியும் இயல்பினது. இந்தச் சாபத்திலிருந்து விடுபட வைப்பதும் அறிவே; ஆனால், அதற்குள் அறிவு அடங்கி விடுகிறது. இன்னொரு அறிவை நம்பித் தன்னறிவை தக்கி வைக்கும் பரிதாபம் மானிடத்துக்கே உரியது' என்றார்.

அஞ்சாதீர்கள். நமக்கு சாபம் எதுவும் இல்லை. நாம் அறிய வேண்டியதை, புரிய வேண்டியதை எடுத்துச் சொல்லவே என் ஆசான் அப்படிச் சொன்னார்.

என் ஆசானை நான் நன்கு அறிவேன். கள்ளமற்றவர். குறையற்றவர். கருணை வடிவானவர். தன்னையறியாமல் மானிடம் தடுமாறுவதைக் கண்டு வருந்தி அல்லாடுபவர். அவர் சொன்னது இது தான்.

நம் அறிவானது, இன்பங்களையே முதலில் அடையாளம் காண வைக்கிறது. நன்மைகளை நாம் கேட்டாலொழிய அடையாளம் காட்டாது. நாம் தொடர்ந்து இன்பங்களையே தேர்ந்தெடுத்தால், நம் அறிவும் அதற்கேற்றபடிப் பதப்பட்டு, நன்மைகளைத் தேடும் இயல்பினை இழந்து விடுகிறது. இன்பங்களையே நாடும் அறிவு, தொடர்ந்து அந்தப் பாதையிலேயே நம்மை அழைத்துச் செல்கிறது. மெய்யறிவுக்கானப் பாதையிலிருந்து விலகி நம்மை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகிறது. இது பொய்யறிவு.

இன்பத்தையே தேடி அலையும் நாம், அதற்கானத் தடைகள் வரும்பொழுது குறுக்கு வழிகளைச் சிந்திக்கிறோம். தவறுகளைச் செய்யத் துணிகிறோம். தான் என்ற எண்ணத்திற்கு அடிமையாகிறோம். பேராசை, பகட்டு, பொறாமை போன்றவற்றில் தன்னை மறந்து, அகக் கண்ணாம் அறிவை நிரந்தரமாக மூடி விடுகிறோம். நம்மைச் சுற்றியிருப்பவரையும் இன்பத்தேடலில் ஈடுபடுத்துகிறோம். குறுக்குவழிகளில் பயணிக்க வைக்கிறோம். நம்மில் பலர், பாதையின் குழப்பத்தை அறியாமலே வாழ்க்கையை முடிக்கின்றனர். அறிந்து கொள்ளும் சிலருக்கோ காலம் கெட்டுப் புரிவதால், மானம் கெட்டு மடிகின்றனர்.

நம்மை அறிய வைக்கும் வழியே நல்வழி. நன்மைகளைத் தரும் நெறிகளாலான வழி. நம் ஒவ்வொரு செயலும் நம்மை - முதலில் நமக்கும், பிறகு நம் சுற்றத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது. அதனால் அன்பர்களே, இன்பமா நன்மையா எது தேவை என்பதை எப்பொழுதும் மனதில் வைத்து செயலில் இறங்குங்கள்.

மானிடம் இருவகைப்படும். ஒன்று அறிவுள்ள இனம். மற்றது அறிவற்ற இனம். நம்மில் வேறு பேதமேயில்லை.

அறியாதவர்கள் என்றால் எழுத்தறிவில்லாதவர்கள், கல்வி கற்காதவர்கள் என்று பொருளல்ல. அறிவற்றவரும், பார்வைக்கு அறிவுள்ளவர் போலவே தோன்றுவர். அறிவில்லாதவர் நன்கு படித்திருக்கலாம்; நெறிகளையும் வேதங்களையும் சாத்திரங்களையும் தந்திரங்களையும் கற்றிருக்கலாம்; வித்தை தெரிந்தவராக இருக்கலாம். எனினும், அறிவற்றவர்களாக நடப்பதாலும், பிறரை அறியாமையில் இழுப்பதாலும், இவர்கள் அறிவில்லாதவர்களே.

அரை எழுத்துக் கல்லாதவர், பாமரனிலும் பாமரன், வேதங்களோ சாத்திரங்களோ இன்னதென்றே தெரியாதவர், மிகச் சாதாரணர், அறிவோடு நடந்தால் அவர் அறிந்தவர் ஆவார்.

மனித மனம் இயல்பிலே இன்பத்தை நாடும் தன்மையது. துன்பத்திலிருந்து விலகி ஓடும் தன்மையது. இன்பத்தைத் தேடிச் சேர்க்கும் பொழுதும், துன்பத்திலிருந்து விலகும் பொழுதும், தூண்டுதல்களுக்குக் கட்டுப்படும் மனிதன் என்னென்ன செயல்களைச் செய்கிறான் என்பதே அறிந்தோனையும் அறியாதவனையும் அடையாளம் காட்டும்.

அறிவற்றோர் நற்குணங்களில் சிறிதும் வளர்ச்சி பெறாதவர்கள்; பகுத்தறிவு மழுங்கியவர்கள்; சந்தனம் கலந்த சாக்கடை போன்று சொல்லும் செயலும் கொண்டவர்கள்; தீய குணங்களில் தேர்ந்தவர்கள்; தன்னிலை உயரவேண்டி, கண்மூடித்தனங்களை விரும்பி ஏற்பதனால், இவர்கள் தங்களுக்குப் பிறவியிலே கிடைத்த நல்லறிவை அழித்துக் கொள்கிறார்கள்.

அறிவுள்ளவர்கள் புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு, வாலறிவு எனும் நான்கு வகை அறிவினையும் பெற்றவர்கள். தங்களுக்குள் இருக்கும் அசாதாரண சக்தியைப் புரிந்து கொண்டு, அதனால் தானும் தன்னைச் சுற்றியிருப்போரும் பயனடையும் விதத்தில் நடப்பவர்கள். அறிவுளோரின் அடையாளம் என்று என் ஆசான் சொன்ன பெரும் ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிறப்பால் பெறும் மூன்று சொத்துக்களில் தன்னறிவு மட்டுமே இறக்கும் பொழுதும் உடன் வருவது என்பதை அறிந்தவரே அறிவுளோர்" என்றான்.

"பிறப்பால் வரும் சொத்துக்களா? பிறக்கும் பொழுது எதுவும் கொண்டு வருவதில்லை, இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்வதும் இல்லை. இதென்ன புதுக்கதை?" என்றார் ஒரு ஞானி.

நசிகேதன் புன்னகைத்தான். "சொல்கிறேன் அறிஞரே! மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் கொண்டு வரும் சொத்துக்கள் மூன்றாகும். முதல் சொத்து உள்ளறிவு. இரண்டாவது, உயிர்த்துடிப்பு. மூன்றாவது, தாய்-தந்தை என்ற உறவு. இவை மூன்றுமே பிறப்பால் உண்டாகும் சொத்துக்கள்.

பிற செல்வங்களும் சொந்தங்களும் இடையில் சேர்ப்பவை அல்லது தொலைப்பவையாகும்.

இம்மூன்று சொத்துக்களில் இரண்டு உண்டானவை, ஒன்று உருவாவது. இந்த மூன்றில் 'உண்டான' இரண்டு, பெற்ற உறவும் உயிர்மூச்சும் ஆகும். அவற்றை மாற்றவோ சீராக்கவோ மனிதரால் முடியாது. 'உருவாகக்' கூடியது உள்ளறிவு மட்டுமே. அதனை மட்டுமே மனிதரால் தேடியறிந்து, தன் விருப்பம் போல் உருவாக்கிச் சீராக்க முடியும். பிறப்பிலிருந்து இறப்பு வரை, அறிவுள்ள மனிதரின் ஒரே குறிக்கோள், தன்னறிவைத் தேடி வளர்த்துத் தனக்கும் பிறருக்கும் பயனுற வாழ்வதாக இருக்க வேண்டும். 'எப்படி வாழ்ந்தோம் என்கிற முத்திரையைப் பதிக்க வல்லது தன்னறிவு' என்பது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.

பிறப்பால் பெற்ற மூன்று உடைமைகளில், இறக்கும் பொழுது உயிர்த்துடிப்பு நின்று விடுகிறது. உயிர் நின்ற கணமே உடன் வந்த பெற்றோர் உறவும் முறிந்து விடுகிறது. அந்நிலையில், இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள். ஆதலின் அன்பர்களே, அறிவுள்ளவராக விளங்குவோம்" என்றான்.

அவையில் பெரும் அமைதி. கூடியிருந்த ஒவ்வொருவரும் தம் நுகர்ச்சிப் பாதைகளை எண்ணினர். இன்பத்தை நாடுகிறோமா, நன்மையும் தேடுகிறோமா என்று சிந்திக்கத் தொடங்கினர். எத்தகையக் கண்மூடித்தனங்களில் வாழ்வைக் கழிக்கிறோம் என்ற கழிவிரக்கத்தில் சிலர் வாடினர். நசிகேதன் தொடர்ந்தான்.

"தன்னறிவு என்பது மிக நுண்மையான அறிவாகும். தன்னறிவைப் பற்றி என் ஆசிரியர், 'தன்னறிவுக்கு உருவமில்லை. பன்னிரண்டு கைகளோ, நான்கு முகங்களோ, மூன்று கண்களோ, எட்டு தோள்களோ, பத்து தலைகளோ இல்லை. எனினும், அதை அடையாளம் காணலாம். தன்னறிவு, ஆறு தீக்குணப் பகையழிக்க வல்லது. எனினும், சூலமோ ஆயுதமோ வில்லோ வாளோ ஏந்தி நிற்பதில்லை. பூமிக்கும் ஆகாயத்தும் அண்டத்துக்கும் அப்பாற்பட்டுப் பரந்திருக்கக் கூடியதாயினும், அணுவுக்குள் அணுவாக அடங்கி எளிதில் புலப்படாத தோற்றமுடையது' என்றார். என் ஆசானின் அறிவை நான் என்னென்று போற்றுவேன்! கேளுங்கள். புறக்கண் இழந்தக் குருடர்களால் எப்படி வெளிக்காட்சிகளைக் கண்டு செயலாற்ற இயலாதோ, அவ்வாறே அகக்கண் குருடர்களால் தனக்குள்ளே கண்டு தன்னறிவைத் தேடிச் செயலாற்ற முடியாது"

"தன்னறிவை எப்படிப் பெறுவது என்று சொல்லுங்கள் இளவலே" என்றார் அவையில் ஒருவர்.

"அகக்கண்ணை மூடியே வைத்திருப்பது மனிதரின் இயல்பான குணம். புலன்கள் நம்மைக் கட்டுகின்றன. புலன்கள் இடையூறு எனும் களையாகி, தன்னறிவு எனும் பயிர் செழித்து வளராமல் தடுக்கின்றன. புலன்களை நாம் கட்டவேண்டுமெனில், அவற்றின் ஆக்கிரமிப்பில் இருந்து முதலில் விடுபட வேண்டும். தித்தியத் தீ என நான் முன் சொன்னது போல், உள்மனதின் தீ வளர்த்து புலனடக்க வேண்டும். தீவிர யோகத்தினால் மட்டுமே உள்ளுக்குள் உறையும் தீயை வளர்க்க முடியும். உள்மனதின் தீ வளர வளர, அதன் வெம்மையில் புலன்களின் ஆதிக்கம் அடங்கி ஒடுங்கும். அதன் ஒளியில் தன்னறிவின் தடம் விளங்கும். இடையூறு செய்யும் புலன்களின் நாராசத்தை அடக்குவது, ஓம் எனும் ஒரு அகவொலியாகும். இதையறிந்துத் தன்னறிவைத் தேடிப் பெறுவோம். தன்னறிவைக் கண்டவர்கள் ஆன்மாவை அடையாளம் காண முடியும்"

"தன்னறிவும் ஆன்மாவும் வேறா?" என்று கேட்டார் ஒருவர்.

"தசையினால் கட்டப்பட்ட நம் உடல், தேர் போன்றது. உயிரானது, தேரின் சக்கரங்கள் போன்றது. எளிதில் அடங்காத நமது ஐம்புலன்கள், தேரில் பூட்டப்பட்டிருக்கும் புரவிகள் போன்றவை. ஆன்மாவோ அனைத்தையும் கவனித்தபடி தேரில் பயணம் செய்யும் வீரர். தேரையும் குதிரைகளையும் இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியே தன்னறிவாகும்"

அரியணையிலிருந்து இறங்கி வந்து அவையோருடன் அமர்ந்தான் வாசன். நசிகேதனை வணங்கி, "ஐயா, தன்னறிவு, ஆன்மா பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள். ஆன்மாவை அறிந்த உயிருக்கு என்ன கதி?" என்றான்.

"தந்தையே! நம்முடைய புலன்களுக்கும் பல நிலைகளுக்கு அப்பால் இருப்பது ஆன்மா. அதற்கும் அப்பால் பல நிலைகள் கடப்பதே உயிர்ப் பயணத்தின் இலக்கு. ஆன்மா சுழன்று கொண்டே இருக்கிறது" என்றான்.

புரியாமல் விழித்த வாசனையும் அவையோரையும் கண்ட நசிகேதன் தெளிவுடன் தொடர்ந்தான். "ஒன்றன் மேல் ஒன்றாக ஆறு குகைகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். முதல் ஐந்து குகைகளில் தடுமாறித் தவறினா மீண்டும் முதல் குகையிலிருந்துத் தொடங்க வேண்டும். ஆறாவது குகையில் தடுமாற வழியில்லை. நமது பயணத்தின் நோக்கம் ஆறாவது குகைக்குச் செல்வதல்ல. ஆறாவது குகையை விட்டு வெளியேறுவதாகும்"

"ஆன்மாவைப் பற்றிக் கேட்டால் இந்தப் பிள்ளை ஏதோ குகையைப் பற்றிச் சொல்கிறதே?!" என்றார் ஒருவர்.

நசிகேதன் தொடர்ந்தான். "ஐம்புலன்களை அறிவோம். புலன்களை அறிய வைப்பது உணர்ச்சிகள். உணர்ச்சிகளே முதல் குகை. உணர்ச்சிகளை விட நுண்மையானவை உணர்வுகள். உணர்வுகளே அடுத்தக் குகை. உணர்வுகளை விட நுண்மையானது குணம். அதுவே மூன்றாவது குகை. குணத்தினும் நுண்மையானது, அப்பாற்பட்டது, மனம். அடுத்தக் குகை. மனதைக் கட்டும் அறிவோ, அதனினும் நுண்மையானது. அறிவே அடுத்தக் குகை.

மனித உயிரானது, பிறப்பிலிருந்து இறப்பு வரை உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் உயிரானது உலகாயதச் சிந்தனை மற்றும் செயல்களில் ஈடுபட்டுச் சுழல்கிறது. அவ்வப்போது தவறி விழுந்து மீண்டும் பயணத்தைத் தொடங்க நேரிடுகிறது.

அறிவுக்கும் அப்பாற்பட்டத் தன்னறிவு, ஆறாவது குகையாகும். அறிவு தன்னுடைய மனதை ஒழுங்கு செய்யும். தன்னறிவோ பிறருடைய மனதையும் ஒழுங்கு செய்யும் தன்மை கொண்டது. தன்னறிவு கண்டவர்கள் வெகு சிலரே. தன்னறிவைக் கண்ட உயிர், பிற குகைகளுக்குத் திரும்புவதில்லை.

மனிதன் இறக்குமுன் ஆறாவது குகைக்கு உயிரைச் செலுத்த வேண்டும். அனைத்து உயிர்களுமே தொடர்ந்து பயணிக்கின்றன என்றாலும், ஆறாவது குகையைக் கடந்த உயிருக்கு மட்டுமே, அடுத்தப் பயணத்தின் தெளிவு உண்டாகிறது. தன்னறிவை அறியாத உயிர்கள், ஆன்மாவை அறியாமலே பயணம் செய்ய நேரிடுகின்றன.

தன்னறிவுக் குகை வரையில், உயிரானது உடலென்னும் கூட்டுக்குள்ளேயே பயணம் செய்கிறது. உடலைப் பிரிந்ததும், உயிர் திடீரென்று பரந்த வெளியில் சிக்கியப் பறவை போலாகிறது. பறந்து பழகாத பறவையும் பறக்க அஞ்சும் பறவையும் கீழே விழும். உயிர்ப்பறவைக்குப் பறக்கும் பழக்கத்தைக் கொடுப்பது தன்னறிவு. தொடர்ந்து பயணிக்கவும், சேரவேண்டிய இலக்கைத் தேடிச் சேரத் தேவையான வலிமையையும் திடத்தையும், தருவது மேம்பட்டத் தன்னறிவு.

தன்னறிவுக்கு அப்பாற்பட்டது ஆன்மா. உடலெனும் கூட்டைவிட்டுப் பிரிந்த உயிர் ஆன்மாவுடன் கலந்துத் தனி ஆன்மாவாகிறது. ஆன்மாவையும் கடந்து நிற்பது, அனைத்து உயிர்களின் ஆன்மா அல்லது பேரான்மா. உயிரின் இலக்கு, பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை" என்றான்.

"பேரான்மாவா? அப்படியென்றால்?"

"பேரான்மா... ஒரு பேரலை போன்றது. பேரலை என்று தனியாக ஏதுமில்லை என்றறிவோம். பேரலை என்பதே சிற்றலைகளின் கூட்டாகும். வலுவானச் சிற்றலைகளை சேரச்சேர, பேரலை உருவாகிறது. வலுவானச் சிற்றலைகளின் சக்தி, பேரலையை உருவாக்குகிறது. வலுவடைந்த பேரலை, மற்றச் சிற்றலைகளை ஈர்த்து இன்னும் பெரிதாகிறது. பேரலையை வலியச் சேரும் வலுவான சிற்றலைகளினால், பேரலை இன்னும் பெரிதாகிப் பாறைகளையும் உடைத்தெறியும் சக்தியைப் பெருகிறது. பேரலையைச் சேராதச் சிற்றலைகள், நீராகவே ஒடுங்கி விடுகின்றன.

வலுவற்றச் சிற்றலைகளும் பேரலையைச் சேருகின்றன. வலுவற்றச் சிற்றலைகள், பேரலையின் வலுவைக் குறைக்கின்றன. பேரலையும் அடங்கிவிடுகிறது. சிற்றலையின் நோக்கம் பேரலையுடன் சேர்வதே. சிற்றலையின் சக்தி, பேரலையினால் புலனாகிறது, எனினும் சிற்றலையின்றிப் பேரலையை அறியவே முடியாது.

ஆன்மாவின் இலக்கு, பேரான்மாவுடன் இணைவதே. பற்றறுத்து, நல்லொழுக்கத்துடன் தன்னையறிந்த ஆன்மா, சக்தி வாய்ந்தது. சக்தி வாய்ந்த ஆன்மா, பேரான்மாவை எளிதாகச் சேர்கிறது. வலுவானச் சிற்றலை பேரலையுடன் இணைவது போலவே. அவ்வாறு சக்தி வாய்ந்த ஆன்மாக்களின் கூட்டணியில் உருவாகும் பேரான்மா, பெருஞ்சக்தி பெறுகிறது.

தன்னையறியாத ஆன்மாக்கள் பேரான்மாவுடன் இணைய முயன்று தோற்கின்றன. இணைந்தாலும் பேரான்மாவின் வலிமையைக் குறைத்து விடுகின்றன" என்றான்.

"பேரான்மாவுடன் இணைந்த உயிருக்குப் பிறப்பில்லையா?"

"இறப்பும் பிறப்பும் விபத்துக்கள். ஒரு பானைக்குள் அடைபட்டக் காற்றுப் போன்றது பிறப்பு. பானையைக் குயந்ததும் காற்று உட்சென்றதா? காற்றைச் சுற்றிப் பானை உருவானதா?

பானை உடைந்ததும் காற்று தன் இயல்பான நிலையில் கலந்தது போலவே, உடலை விட்டுப் பிரிந்த உயிரானது தன் இயல்பான நிலையில் கலக்கிறது. பானை உடைந்து போனதே என்று வருந்துவதில் பயனே இல்லை. உள்ளிருந்த காற்று தன் இயல்பு நிலைக்குச் சென்றதை எண்ணி அமைதியடைவதே முறை.

பானைக்குள் புகுந்த காற்று வெளிப்படக் காத்திருப்பது போலவே உயிரும் தன் இயல்பு நிலையில் சேரக் காத்திருக்கிறது என்பதை அறியாமல், பிறப்பைக் கொண்டாடுகிறோம். இறப்பை எண்ணி வருந்துகிறோம்.

கூட்டுக்குள் சிக்கிய உயிர், பேரான்மா எனும் பெரும் சக்தியின் அம்சம். அதை உணர்ந்தால் கூட்டின் மேன்மையை உணர முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கை நெறிகளை அறிய முடியும். வாழ்க்கை நெறிகளை அறிந்து கொண்டால் பற்றறுத்து, பேராசையொழித்து, தீக்குணம் தவிர்த்து நல்வழியில் வாழ முடியும். கூடு கலைந்த பின் சக்தியும் தொலையும் என்பதை உணர்ந்தால், கூட்டையும் உடன் வந்த சக்தியையும் தனக்கும் பிறருக்கும் பலனளிக்கும் விதத்தில் பாதுகாக்க முடியும்" என்றான்.

"எனில், சொர்க்கம் நரகம் ஏதும் உண்டா? அல்லது அதற்கும் சட்டி, பானை என்று ஏதாவது சொல்லப் போகிறாயா?" என்றார் ஒரு ஞானி.

"சொர்க்கம், நரகம் உண்டு. உண்மை. ஆனால் அவை இடங்களல்ல. சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள். உயிரானது, உடலுடன் சேர்ந்த நேரங்களில் அனுபவிப்பதைப் போலவே, உடலைப் பிரிந்த நேரத்திலும் சொர்க்க நரகத்தை அனுபவிக்கிறது.

ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா என்பது மிகப்பெரும் சக்தி என்பதை அறிந்தோம். பேரான்மாவுடன் இணைவதே ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளாகும். தன்னையறிந்த ஆன்மாவினால் பேரான்மாவுடன் இணைந்து மேலும் வளரமுடிகிறது. சிற்றலை பேரலையாவது போல. காற்றைக் கட்ட முடியாத பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானை உருவாக முடியாதல்லவா? அதுவே பிறப்பற்ற நிலை. பேரான்மாவுடன் இணைந்த நிலையில் அதுவே சொர்க்கமாகிறது.

ஒடுங்கிய சிற்றலை நீரில் வீழ்வது போல், தன்னறிவு பெறாத ஆன்மாக்கள் தடுமாறிச் சரிகின்றன. பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன. பேரான்மாவுடன் கலக்காத நிலையில் அதுவே நரகமாகிறது.

அன்பு, அறம், அடக்கம், கருணை எனும் நான்கு குணங்களைக் கடைபிடித்துத் தன்னறிவைப் பெற்ற உயிரானது, உடலைச் சார்ந்த நிலையிலும் இனிய அனுபவமான சொர்க்கத்தைப் பெற முடியும். அதாவது உயிருடன் இருக்கும் பொழுதே வாழ்வைச் சொர்க்கமாக்க முடியும். உடலைப் பிரிந்த நிலையில், தன்னறிவின் சக்தியால் உந்தப்பட்டுப் பேரான்மாவுடன் கலக்க முடிகிறது. அந்நிலையிலும் சொர்க்க அனுபவத்தைப் பெற முடிகிறது.

உடலோடு சேர்ந்த நிலையில் தங்கள் வாழ்வையும் பிறர் வாழ்வையும் பலர் நரகமாக்குகிறார்கள். நற்குணங்களைப் பேணாது தன்னறிவை மறந்து உடலைப் பிரிந்த நிலையில் அத்தகைய உயிர்கள் பேரான்மாவுடன் சேரமுடியாது ஒடுங்கிவிடுகின்றன. தன்னறிவு பெறாத உயிர்கள், பிறவிச்சுழலில் உடனடியாகச் சிக்கி மீண்டும் தன்னறிவு பெறும் முயற்சியில் இறங்க முற்படுகின்றன"

"அப்படியெனில் ஆன்மாவின் தன்மை தான் என்ன?"

"காலையில் கதிரவன் கிழக்கிலே தோன்றி மாலையில் மேற்கே மறைகிறான் என்கிறோம். சூரியன் ஒளிப்பிழம்பு, அக்கினிக் குழம்பு என்கிறோம். அப்படிப்பட்ட அக்கினிக்குழம்பு தினமும் தோன்றி மறையக்கூடியதா? சிந்திப்போம். உலகத்தையே ஒளிமயமாக்கும் ஒளிப்பிழம்பு தோன்றி மறைவதல்ல. சூரியன் தோன்றுவதும் இல்லை. மறைவதும் இல்லை. இருப்பினும் பூமியின் நடைமுறை வாழ்க்கைக்கு, இவற்றின் தோற்றமும் மறைவும் அவசியமாகின்றன. சூரியன் தோன்றாவிட்டால், சக்தி குன்றி ஆக்க சாதனமற்றுப் போகிறது. மறையாவிட்டால், சக்தி மேம்பட்டு அதுவே அழிவுச் சாதனமாகிறது.

பேரான்மா என்பது, சூரியனைப் போல அபரிமித ஒளிப்பிழம்பு, சக்திக்கூட்டு. பேரான்மா தனித்திருந்தால் ஒரு பயனும் இல்லை. பூமியின் கண்களுக்குச் சூரியன் தோன்றி மறைவது போலவே, மனிதத்தின் கண்களுக்கு பேரான்மா தோன்றி மறைகிறது. பேரான்மா உயிர்ப்பயணம் மேற்கொள்கிறது. பூமியின் வளர்ச்சிக்கு சூரிய தோற்றமும் மறைவும் அவசியம்; அது போலப் பேரான்மா, ஆன்மாவாகி வந்து போனால்தான் மனிதம் வளர முடியும்.

உலகில் நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே நமக்காக ஏற்பட்டவை. நம் அறிவு வளர உருவானவை. மனிதநேயம் வளரத் தோன்றியவை. படிப்பினைகளும் பாடங்களும் நிறைந்தவை. உலகம் பிறந்ததும், ஓடும் நதிகளும் காற்றின் ஒலிகளும் கடலின் அலைகளும் நமக்கானப் பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கேட்கும் நாளில், கேட்டுச் செயல்படும் நாளில், மனிதம் சிறப்படையும். நாம் உய்வோம். அது புரியாமல் தீக்குணங்களிலும், கண்மூடித்தனங்களிலும், அறியாமையிலும் உழன்றால் மேம்பாட்டைக் காணாது உய்யும் வழியினின்று வெகு தூரம் விலகிச் செல்வோம்" என்றான்.

அவையின் அமைதி, பேரொலியை விடச் சக்தி வாய்ந்ததாக இருந்தது. நசிகேதன் சொன்னவை அவையோர் மனதிலே பதியத் தொடங்கியது.

தான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்த நசிகேதன் எழுந்தான். "என் வணக்கத்துக்குரியவர்களே! அன்புக்குரியவர்களே! எனதருமைத் தந்தையே! எழுமின்! அறிவுக்கண் திறந்து எழுந்திருங்கள். விழிமின்! என்றைக்கும் அறியாமையைக் கண்டு விலக விழிப்புடன் இருங்கள்! பளபளக்கும் வாளின் முனையைப் போன்றது நமது வாழ்வு. அறிவு மழுங்கியவர்களைப் போல விதியை நம்பி வீணாகாமல், நன்னெறிகளைப் பேணும் மேன்மையானவர்களைப் போல் சிறப்பாக வாழ்வோமாக!" என்று சொல்லி முடித்தான்.

தன் தந்தையையும் அவையோரையும் விழுந்து வணங்கினான். எழுந்து, "அன்புக்குரியவர்களே! என் ஆசானிடம் நான் பெற்றதை உங்களிடம் சேர்த்து விட்டேன்" என்றான்.

அவையிலே அமைதி மறைந்து பெருத்த ஆரவாரம் எழுந்தது. தங்கள் முன் நின்ற இளையவன் அறிவிலே அவர்கள் அனைவருக்கும் முதியவன் என்று உணர்ந்து நசிகேதனை வாழ்த்தினார்கள்.

வாசன் எழுந்தான். "மகனே நசிகேதா! நீயே எங்களுக்கு ஆசான். எமனிடம் பெற்ற அறிவெனும் ஒளிமழையை எம்மேலும் பொழிந்தாய். நன்றி" என்றான்.

"ஆம் ஐயா!" என்றனர் அவையோர். "அப்படியெனின்ல் முக்தி என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது? இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர்.