வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/06/28

ஆன்மா மானிடத்தினும் பெரிது


56
சாதிகள் சோறு இனமதம் தின்பண்டம்
வாதிடும் நாமதன் வாய்க்கவளம் - வேதி
கனிகள் குடிநீர் முகுலப் பசிக்கு
மனிதம் முழுதும் விருந்து.

   னிதம் முழுவதையும் விழுங்க வல்லது ஆன்மா. சாதிகள் அதற்குச் சோறு போல; இலையிலிட்டப் பண்டங்களாகும் இன மதங்கள்; ஞானிகள் கனிரசமும் குடிநீரும் போல; ஆன்மாவைப் பற்றி விவாதம் செய்யும் நீயும் நானும், விருந்தின் ஒரு கவளம் போலாவோம் (என்றான் எமன்).


வேதி: ஞானி
கனிகள்: பழங்கள், பழரசம் (கனி+கள்), பழமும் மதுவும் (கனி, கள்) எனப் பலவகையில் பொருள் கொள்ளலாம்


['..the soul is divine, immortal, intelligible, uniform, indissoluble, self-consistent and invariable..' - socrates ]

    பெரிய நேர்கோடை எப்படி அடையாளம் காண்பது? கீழ்க்காணும் கோடு சிறியதா பெரியதா?


    இது euclid காலத்து தந்திரக் கேள்வி. 'பெரிய' என்று எதுவுமில்லை. அதாவது, அதனருகே, 'சிறிய' என ஒன்று தோன்றும் வரை. நேர்கோடை, 'பெரிய' நேர்கோடு என அடையாளம் காண வேண்டுமானால், அதனருகே 'சிறிய' நேர்கோடு ஒன்று எழுத வேண்டும். எழுதியதும், அதுவரை புலப்படாத 'பெரிய' தன்மை, திடீரென்று கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படுகிறது.



    'பெரிய' நேர்கோடை அறிய முடிந்தது, 'சிறிய' நேர்கோடை நாம் அறிந்ததாலா? சற்றுச் சிந்தித்தால், சிறிய நேர்கோடை 'சிறியது' என்று அறியவில்லை என்பதும் புரியும். சிறிய நேர்கோடை, நேர்கோடு என்றே அறிகிறோம். ஆயின், அதை அறிந்த அந்தக் கணத்தில், பெரிய கோடு புலப்படுகிறது.

    சரியா? பாதி சரி :)

    கோடுகள் வெறும் கோடுகளே. பெரிய கோடு தெரிவதில்லை - புரிவதாகும். அறிவதாகும். பேதம் புலனுக்குத் தெரியவும், மனதுக்குப் புரியவும் காரணமாக இருந்தது அறிவு.

    இதே உத்தியினால் பெரியதைச் சிறியதாக்கவும் முடியும். தொடர்ந்து பெரிதும் சிறிதுமாக எழுதினால், in theory, அணுவை விடச் சிறிதாகவும் அண்டத்தை விடப் பெரிதாகவும் எழுதிக்கொண்டே போகலாம். to infinity and beyond.

    திடீரென்று ஒரு ஞானவீச்சு நம்மைத் தாக்குகிறது.

    எனில், பெரியது, சிறியது என்று எதுவுமே இல்லையோ? எல்லாம் ஒன்று தானோ?

    நம்மை விடப் 'பெரிய' ஒன்றை நமக்குள்ளே அடக்குவதும் அப்படித்தானோ? நமக்குள்ளே அடங்கியிருக்கும் சிறிய ஒன்றை அறிந்ததும், பெரியது தன்னால் விளங்குமோ? கண்ணுக்குப் புலப்படாததை மனம் புரிந்து கொள்ளுமோ? அறிவு அறிந்து கொள்ளுமோ?

    சாதாரண வடிவியல், இப்படிக் கண்ணைக் கட்டித் திறக்கிறதே?

    புதுப்பார்வையில், திடீரென்று ஏனோ எல்லாமே நம்மை விடப் பெரியதாகவும், அதேநேரம் நமக்குள்ளே அடங்குவதாகவும் தோன்றுகிறது.

['..காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது..' - கண்ணதாசன் ]

    "ஆன்மாவை எப்படி அடையாளம் காண்பது?" என்றான் நசிகேதன்.

    "ஆன்மாவை அடையாளம் காண முடியாது" என்றான் எமன்.

    நசிகேதனுக்குக் குழம்பியது. "ஐயா, இத்தனை நேரம் ஆன்மாவை அறிய வேண்டும், ஆன்மா அப்படிப்பட்டது, ஆன்மா இப்படிப்பட்டது, என்று பலவாறாகச் சொல்லி ஆர்வத்தையும் அறிவையும் தூண்டிவிட்டு இப்போது ஆன்மாவை அடையாளம் காண முடியாது என்கிறீர்களே? புரியவில்லையே?" என்றான்.

    "ஆனால், அறிய முடியும்" என்றான் எமன், புன்னகையுடன்.

    "காண முடியாது, அறிய முடியும் என்கிறீர்கள். அதனால், அறிந்தவுடன் காணலாம் என்கிறீர்கள்" என்றான் நசிகேதன் துடிப்புடன்.

    "மிகச்சரி" என்ற எமன், மகிழ்ந்தான். "நசிகேதா, ஆன்மா உருவமற்றது, பிறப்போ இறப்போ அற்றது, அழிவற்றது என்ற நிலையில்... அதனைச் சுலபமாக, நேராக, அடையாளம் காண முடியாது அல்லவா? கேள், ஆன்மாவின் இன்னொரு தன்மையையும் விளக்குகிறேன். ஆன்மா, மனிதத்தினும் பெரியது. நம் அத்தனை உயிரினும் பரந்தது.

    ஆன்மாவின் பசிக்கு அத்தனையும் விருந்து.

    எத்தனை சாதிகள், மதங்கள், இனங்கள், குலங்கள் என்று மனிதம் பிரிந்தாலும் அத்தனையும் ஆன்மாவின் விருந்து இலையில் அரிசிச் சோற்றின் பருக்கைகள் போன்றவை. உலகின் அத்தனை பேதங்களும் ஆன்மாவின் இலையில் பல்வகைத் தின்பண்டங்கள், கறிகள், கூட்டுகள், வறுவல்கள் போன்றவை. மெத்தப் படித்தவர், செல்வந்தர், ஞானி, உயர்ந்தவர், அரசர் என்று வெவ்வேறு சமூகத் தட்டுக்களைத் தேடியவர்கள் எல்லாம் ஆன்மாவின் இலையில் பழத்துண்டு, பழச்சாறு, குடிநீர் போலாவர். எல்லாம் விருந்தின் அம்சங்களே.

    அவ்வளவு ஏன்? ஆன்மாவைப் பற்றி இதோ நீயும் நானும் பேசியும் விவாதித்தும் வருகிறோம். நாம் இருவரும் ஆன்மாவின் விருந்தில் ஒரு வாய்க் கவளத்தினும் சிறியவர்கள். விருந்தோ முடிவில்லாத விருந்தாகும்" என்றான் எமன்.

    "புரிகிறது" என்றான் நசிகேதன். "ஆன்மாவின் வீச்சு அனைத்தையும் அடக்கி அதற்கு மேலும் பரவுகிறது. அதை அடையாளம் காணவும் அறியவும் முடியுமா என்ற அச்சம் எனக்குள் தோன்றுகிறது ஐயா".

    "ஆன்மா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. அதே நேரம், அதன் அம்சம் நமக்குள் அடங்கியிருக்கிறது. ஆன்மா எனும் பெருங்கடல் உன்னுள் ஒரு சிறு குமிழியில் அடங்கியுள்ளது. அம்சத்தை முயன்று அறிந்தால், அதன் பயனாக நீ முழுமையான ஆன்மாவையும் அறியலாம்" என்றான் எமன்.

    "ஆன்மாவை எப்படி அறிவது என்ற கேள்வி எனக்குள் பெரும் கடலலையாய் எழுகிறது. அறியத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் சிறு அலையாய்ப் பின் தொடர்கிறதே?" என்றான் நசிகேதன்.

2011/06/24

ஆன்மா அழிவற்றது


55
கொல்வாரும் கொல்லப் படுவாரும் இல்லையே
கொல்லாது ஆன்மா கொலையுறாது - வல்லார்செய்
சட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும்
கட்டுமோ கொட்டுமோ காற்று?

    யிரைப் பறிப்பவரில்லை; துறப்பவருமில்லை. ஆன்மாவை அழிக்க முடியாது; தானே அழிவதுமில்லை. திறமையுள்ளோர் குயந்தச் சட்டிப்பானைகள் என்றாலும் அவற்றுள் காற்று அடங்கி இருக்குமா? அவை உடைந்தால் உள்ளிருந்து காற்று வெளியே விழுமா? (என்றான் எமன்).


பட்டாலும்: உடைந்தாலும், அழிந்தாலும்

['...by substance, we can understand nothing else than a thing which so exists that it needs no other thing in order to exist' - rene descartes]

    சில வருடங்களுக்கு முன் நானும் என் ஆசிரிய நண்பர் அரசனும் வேன்கூவரில் ஒரு 'அறிவியக்க' மாநாட்டிற்குச் சென்றிருந்தோம். அரசனுக்கு இதுபோல் கெட்டப் பழக்கங்கள் உண்டு. 'பல வருடப் பிரிவுக்குப் பிறகு சந்திக்கிறோம், போக மறுத்து அவரைப் புண்படுத்த வேண்டாம்' என்று உடன் சென்றேன். 'கண்மூடிகளைச் சாடும் கூட்டம்' என்று எண்ணிப் போனவனுக்கு அதிர்ச்சி. ஆன்மா, தன்னறிவு, சுயதேடல் பற்றிய சொற்பொழிவு, பட்டறை, அனுபவமுகாம்கள் என மூன்று நாட்கள் படாத பாடு படுத்திவிட்டார்கள்.

    முகாமில் முதல் நாள் இரவு. சுமாரான சாப்பாட்டைத் தொடர்ந்து, அரை மணி நேரத் தியானத்துக்குப் பின், உறங்கலாம் வாருங்கள் என்று ஆற்றங்கரைப் பக்கம் அழைத்துப் போனார்கள். இயற்கை முகாமில் இரவுப் படுக்கை என்று நினைத்துப் போனேன். ஆற்றிலே அசைந்து கொண்டிருந்த, பத்தடிக்குப் பத்தடி அளவில், தெப்பம் எனலாம், ஒரு தெப்பத்துக்கு ஐந்து பேர் கணக்கில், ஆளுக்கு ஒரு பாயும் போர்வையும் தந்து இரவைக் கழிக்கச் சொன்னார்கள். தெப்பத்தின் நான்கு முனைகளிலும் முக்காலடிக்குக் கழி நட்டு, சுற்றிலும் கயிற்றினால் பாதுகாப்பு வேலி கட்டியிருந்தார்கள், இருந்தாலும், கயிற்றின் இடைவெளிகளில் சுலபமாக உருண்டு விழக்கூடும் போல் தோன்றியது. போதாக்குறைக்கு தெப்பத்தின் நட்டநடுவில் கனன்று கொண்டிருந்தது ஒரு அகண்ட தணல் சட்டி. "நடுவில் கூடாமல், தெப்பத்தின் ஓரங்களிலோ அல்லது ஒருவருக்கொருவர் நிறைய இடம் விட்டோ படுத்துக் கொள்ளுங்கள்" என்றார், அமைதியே வடிவான ஒரு காவி வேட்டி.

    தெப்பமோ மெள்ள ஊர்ந்து கொண்டிருந்தது. அதில் தாவி ஏறுவதற்கே பெரும்பாடாகி விட்டது. பல்லவன் பஸ் ஏறத் தாவியச் சென்னை நினைவுகளுடன், "என்னய்யா காவி வேட்டி, கிண்டலா?" என்றேன்.

    "என்ன?" என்றார், அமைதியின் வடிவம்.

    "நடுவில் கூடாமல், தெப்பத்தின் விளிம்புகளில் அதுவும் இடம் விட்டுப் படுக்கச் சொல்கிறீரே? இத்தனை பெரிய, ஆழமான ஆற்றில், இரவில், தன்னிச்சையாய் மிதந்து போகும் தெப்பத்தில், படுத்துறங்கச் சொல்கிறீரே? எங்களுக்குத் தூக்கமோ வரப்போவதில்லை, வந்தாலும், நாளை எந்த ஊரில் எந்தக் கரையில் விழிப்போம் என்ற பீதியில் வந்தத் தூக்கமும் போய்விடும். தெப்பத்தை யாரும் இயக்குவதாகத் தெரியவில்லை. எங்களுக்கு இதை நிறுத்தவும் தெரியாது. எங்களுக்கு ஏதாவது ஆகுமா என்று தெரியாது. எங்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், நாளை எந்த இடத்தில் விழிப்போம், எங்கே போகிறோம், எப்படித் திரும்புவோம் என்று எதுவும் தெரியாது..." என்றேன் கிலியுடன்.

    என்னை நிதானமாகப் பார்த்தக் காவி வேட்டி, "ஆன்மாவைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்கிறீர்களே? நீங்கள் அல்லவா இந்த அனுபவமுகாமை நடத்த வேண்டியவர்?" என்றார். அவர் கிண்டல் புரிந்தது போல் இருந்தாலும், 'வசமாகச் சிக்கினோம்' என்ற எண்ணத்தில், அரசனை வாய்க்கு வந்தபடித் திட்டிவிட்டுப் பாயில் சுருண்டேன்.

    படுத்தவர்கள் சற்று நேரம் பேசினோம். இருளில், நதியோட்டத்தில், மிதவை எதில் இடித்து மூழ்குமோ, அல்லது தணல்சட்டி எப்போது காற்றில் தீப்பிடித்துத் தெப்பத்தோடு எரியுமோ என்ற கவலை கலந்த பயம் எனக்கு. அரசனோ திடீரென்று அமைதியானார். பல முறை அழைத்த பின், "நதி எங்கே போகிறது, அப்பாதுரை?" என்றார் கண்ணதாசன் குரலில். பிறகு, விசை இயக்கினாற் போல் தூங்கிவிட்டார். இரவின் மடியில், நதியில், இலக்கிலாது மிதக்கும் பெரிய தெப்பத்தில் படுத்திருந்த நான் கண்ணெதிரே விரிந்த வானம், நட்சத்திரம், நிலா, இருள், மரங்கள், காற்று, கதம்ப மணம், புள்ளொலி, அவ்வப்போது பொறித்துக் காற்றில் கலக்கும் தணல் சட்டியின் கனல் நடத்திரம்.. என மலைத்துப் போய் உறங்காமல் உறங்குகையில், 'நதி எங்கே போகிறது?' என்ற கேள்வி, போதை போல் என்னைச் சுற்றி வந்தது.

    'மனித இயக்கத்தின் அடிப்படை, அம்சம், ஆதாரம் - எல்லாமே ஆன்மா தான்' என்கிறார் தத்துவ மேதை ரெனே தேகார்ட். 'இயக்குவதும் ஆன்மா, இயங்குவதும் ஆன்மா; ஒரு இயக்கத்தின் விளைவுகள், தொடரும் இயக்கங்களுக்கு வித்தாகவும் வழியாகவும் அமைகின்றன' என்கிறார். ஆன்மாவின் குறுகிய இயக்கம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு எனினும், அதே இயக்கம் மனிதருக்கு மனிதர் என்ற பரந்த அமைப்பிலும் செயல்படும் என்கிறார். கண்ணுக்குத் தெரியாத, முன்பின் சந்தித்திராத நபருடன் நட்போ பகையோ பாராட்டும் செயலிலிருந்து, புலனுக்கும் அறிவுக்கும் எடுபடும் செயல்கள் வரை, எல்லாமே ஆன்மாவின் இயக்கம் என்கிறார்.

    சிகாகோ பல்கலைக்கழக வெளியீடான 'the correspondence between rene descartes and princess elisabeth of bohemia' எனும் அற்புதமான புத்தகத்தைப் படித்தபோது சற்று மெய் சிலிர்த்தது. எல்லாவற்றையும் பகுத்தறிவுக்குள் அடக்க நினைப்பவர்களை, கேள்வி மேகங்களிடையே நாற்காலியில் அமரவைத்து அமர்ந்தபின் நாற்காலிகளை உருட்டி விட்டுத் தொக்கி நிற்பதை, வேடிக்கை பார்க்கும் தீவிரச் சிந்தனைகள். முன் தந்த மேற்கோள் வரிகளைப் போல் நிறைய சிந்தித்திருக்கிறார். இரண்டு வரிகள் புரிய அரை மணியாகிறது. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் படித்து அனுபவிக்க வேண்டியப் புத்தகம்.

    தி சங்கரரின் தத்துவச் சிந்தனைகளில் தொலைந்து போனதுண்டா? இறை சேர்த்தாலும் தவிர்த்தாலும், வேறுபாடின்றி அனைவரும் அனுபவிக்கக் கூடிய அறிவார்ந்தச் சிந்தனைகள். ஆதி சங்கரர் சிந்தனைகளை எனக்கு அறிமுகம் செய்த வேன்கூவர் சுப்ரமணியத்துக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன். பலரும் பலவாறு அறிந்திருக்கக்கூடிய ஒரு ஆழமான, சுவையானக் குட்டிக்கதையைச் சுட்டிக்காட்டி அமைகிறேன்.

    ஆதி சங்கரர் தன் சீடர்களுடன் நடந்து வருகையில், வழியில் ஒரு குறவனைக் கண்டாராம். குறவன் கிழிந்த உடைகளுடன், அழுகிய பழங்களும் பண்டங்களும் நிறைந்த கூடைகளுடன், அழுக்கேறிய கூடாரம் ஒன்றைக் கட்டி, நடுத்தெருவில் கிடந்தானாம். அவனைச் சுற்றிலும் நாய்களும் பூனைகளும் குரங்குகளும் ஓட்டை ஒடிசலும் இன்னபிறவும் இருந்தனவாம்.

    'குளித்து முடித்துத் தூய்மையுடன் இறைவனை வழிபட வந்துகொண்டிருக்கும் குருவின் வழியில் இப்படி ஒரு குறவனா?' என்றுப் பதைத்தச் சீடர்கள், விரைந்து சென்றுக் குறவனை வழியிலிருந்து விலகச் சொன்னார்களாம். குறவனோ சட்டை செய்யாமல் படுத்துக் கிடந்தானாம். சீடர்கள் தொடர்ந்து குறவனை அப்புறப்படுத்த முனைகையில், ஆதி சங்கரரும் வந்து விட்டாராம். குறவனிடம், "ஏய், எழுந்திரு" என்றாராம் உரக்க. நாலைந்து முறை கேட்டும் குறவன் சட்டை செய்யாதிருக்கவே, ஆதி சங்கரர் தன்னிடமிருந்தக் கழியால் அவனை மெதுவாகக் குத்தி எழுப்பி, "ஏய்! உன்னுடையதை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்தப் பக்கமாக ஒதுங்கி, கொஞ்சம் எங்களுக்கு வழி விடப்பா" என்றாராம்.

    குறவன் முதுகைச் சொறிந்தபடி எழுந்து அமர்ந்தானாம். காலை நீட்டி, மூக்கைச் சிந்தி, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "எது என்னுதுன்றீங்க சாமி?" என்றானாம்.

['..மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்..' - கண்ணதாசன் ]

    'நசிகேதா, ஆன்மாவைப் பற்றி மேலும் சொல்கிறேன் கேள்" என்றான் எமன். "ஆன்மாவுக்கு அழிவே இல்லை. ஆன்மாவை எவராலும் அழிக்க முடியாது. தானாகவும் அழிவதில்லை. ஆன்மாவுடன் மனிதர் பிறக்கிறாரே தவிர, மனிதர் பிறக்கும் பொழுது ஆன்மா பிறப்பதில்லை. மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் வரும் மூன்றில் ஒன்றாகும் ஆன்மா. மனிதர் இறக்கும் பொழுது, மனிதரைப் பிரிகிறதே தவிர ஆன்மா இறப்பதில்லை, அழிவதில்லை."

    "மனிதர் இறந்தார் என்று சொல்கிறோமே?" என்றான் நசிகேதன்.

    "மனித உடல் செயலற்றுப் போனது, அவ்வளவே. உயிரைத் துறந்தவரில்லை; பறித்தவரும் இல்லை. கொலை செய்தேன் என்று சொல்வோரும் பேதைகள்; கொலையுண்டேன் என்று வருந்துவோரும் பேதைகள். உயிரை எடுத்தேன் என்பது அறிவற்ற ஆணவம்; அது போல் உயிர் போனதே என்று வருந்துவது அறிவற்றக் கோழைத்தனம். மரணம் நிகழ்வது உடலுக்கு. ஆனால் உடல் என்ற கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் உயிர், ஆன்மா, உன் உண்மை உருவான தன்னறிவு.. அழிவதே இல்லை" என்றான் எமன்.

    "சற்றுக் குழப்பமாக இருக்கிறது" என்றான் நசிகேதன்.

    அருகிலிருந்த ஒரு பானையை எடுத்தான் எமன். "நசிகேதா, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்வாயா?" என்றான்.

    எமனையும் அவன் கையிலிருந்த பானையையும் பார்த்தபடி, "கேளுங்கள்" என்றான் நசிகேதன்.

    எமன் தொடர்ந்தான். "இதோ, இந்தப் பானையைப் பார். இதற்குள் என்ன இருக்கிறது?" என்றான்.

    நசிகேதன் பானையுள் தடவிப் பார்த்துவிட்டு, "வெறும் பானை. உள்ளே ஒன்றும் இல்லை" என்றான்.

    எமன் புன்னகையுடன், "உள்ளே காற்று இருக்கிறது என்பதை மறுப்பாயா?" என்று கேட்டான்.

    நசிகேதன், "சரியே. பானைக்குள் வெளி அல்லது காற்று இருக்கிறது எனலாம்" என்றான்.

    "அப்படியா? வெளி அல்லது காற்று இந்தப் பானைக்குள் எப்படிப் போனது? இதைச் செய்தக் குயவன் அடைத்தானா?" என்று கேட்டான். நசிகேதன் விழித்து யோசித்துக் கொண்டிருக்கையில் எமன் பானையைத் தரையில் வீசி உடைத்தான். "பானைக்குள் போன காற்று இப்போது எங்கே விழுந்தது? எங்கே கொட்டியது? என்ன ஆனது?" என்றான்.

    எமனின் சிந்தனை நசிகேதனுக்குப் புரியத் தொடங்கியது. "பானைக்குள் காற்று அடங்கவும் இல்லை, உடைந்தபின் கொட்டவும் இல்லை. காற்றோ வெளியோ அங்கேயே தான் இருந்தது" என்றான்.

    எமன் மகிழ்ந்து, "சபாஷ், நசிகேதா!" என்றான். "ஆன்மாவும் அப்படியே. பானையைச் செய்தக் குயவன் காற்றை அடைக்கவில்லை. காற்றைச் சுற்றிப் பானையைச் செய்தான் எனலாம். மனித உடலும் அவ்வாறே. ஆன்மாவை உள்ளடக்கிப் பிறக்கிறது. என்றும் குறையாத வெளியானது பானைக்குள்ளும் அடக்கம், வெளியிலும் அடக்கம். பானை என்பது பரந்த வெளியில் ஒரு சிறு தடுப்பு, அவ்வளவே. மனித உடலும் பரந்த ஆன்மாவின் வீச்சில் ஒரு சிறு தடுப்பு. பானை உடைந்ததும் வெளிகள் கலப்பதைப் போலவே, உடல் அழிந்ததும் பரந்த ஆன்மாவும் ஒன்றாகிக் கலந்து விடுகிறது. அடுத்தப் பானைக்குக் காத்திருக்கும் வெளி போல, அடுத்த உடலுக்கு ஆன்மாவும் காத்திருக்கிறது. எப்படிக் காற்றானது பானைக்குச் சொந்தமில்லையோ, ஆன்மாவானது உடலுக்கும் சொந்தமில்லை. பானையெனும் தற்காலிக அடைப்பிலிருந்து விலகும் வெளியைப் போலவே ஆன்மாவும் உடலினின்று விலகுகிறது.

    உயிரைக் கொன்றேன் என்ற வீரப்பேச்சும் ஆணவமும் முட்டாள்தனம். உயிர் போகிறதே என்று அச்சப்படுவதும் கலவரப்படுவதும் முட்டாள்தனம். உயிரின் போக்கைத் தீர்மானிக்கும் உரிமை மனிதருக்கில்லை. இந்த உண்மையை உணரும் மனிதர், தன்னுடைய மரணத்துக்கு அஞ்சுவதில்லை. பிறருடைய மரணத்துக்கு வருந்துவதில்லை" என்றான் எமன்.

    "உயிரும் ஆன்மாவும் ஒன்றா?" என்றான் நசிகேதன்.

    "பரந்த ஆன்மாவின் குறுகிய வெளிப்பாடே உயிர். மூச்சு அந்த வெளிப்பாட்டைத் தொடக்கி வைக்கிறது. ஆன்மாவின் தேடலுக்கும் அந்த மூச்சே ஏதுவாகிறது" என்றான் எமன்.

    "நீங்கள் முன்பு சொன்ன உள்ளிருக்கும் தீ புரியத் தொடங்கியது" என்றான் நசிகேதன்.

2011/06/21

ஆன்மா பிறப்பற்றது


54
பிறவாது மட்கி மறையாது பண்டம்
துறந்துந் தளிரும் முகுலம் - மறப்பிலி
வத்தியம் வித்திலாச் சித்ததால் நித்தியம்
தத்திடுந் தத்துவத் தீ.

   ன்மா பிறப்பதில்லை; வாடி அழிவதில்லை; உடலைப் பிரிந்தாலும் தழைத்துச் வளர்வது. முக்காலம் அறிந்தது. இறப்பற்ற இப்பெரும் நுட்பம், உருவாகவோ அழியவோ காரணமற்று இருப்பதால், உண்மை ஒளியென நிலையாக என்றும் எங்கும் தாவிப் பரவுகிறது (என்றான் எமன்).


மட்கி: வாடி, அழிந்து
பண்டம்: உடல்
தளிரும்: தளிர்க்கும், வளரும்
முகுலம்: ஆன்மா, தன்னறிவு
மறப்பிலி: விவேகமுள்ள, 'நடந்த நடக்கின்ற நடக்கவிருக்கும்' அறிவுள்ள*
வத்தியம்: இறப்பு, அழிவு
வித்திலா: துவக்கமற்ற, உருவாக்க இயலாத, உருவாகும் காரணமற்ற, விதையற்ற
சித்ததால்: அறிவு, நுட்பமான பொருள் (சித்து+அதால், சித்து அதனால்)
நித்தியம்: நிலையாக, அழியாமல், என்றும் எங்கும்
தத்திடும்: தாவும், பரவும், வீசும்
தத்துவம்: பெரும் உண்மை, நுட்பமான ஆழ்ந்த அறிவு
* இங்கே காரண-காரிய-விளைவு பற்றிய, 'தொட்டால் சுடும்' என்றப் புலனறிவிலிருந்து, 'தீக்குணம் நன்மை தந்ததில்லை, தருவதில்லை, தரப்போவதில்லை' எனும் உள்ளுணர்வு வரையிலான, அறிவைக் குறிக்கிறது. 'முக்கால அறிவு' என்று நம்பப்படும் பலவகைப் பாமரக் கண்மூடித்தனங்களை அல்ல :).


['..thou canst not stir a flower, without the troubling of a star' - francis thompson]

    தொடரும் அஜாதசத்ரு-பாலாகி உரையாடல்:

"இதோ உறங்கிக் கொண்டிருக்கிறானே, இவனை எழுப்புவோம்" என்ற மன்னன் ஞானியிடம், "இவன் யார் சொல்ல முடியுமா?" என்றான்.

"தெரியாது" என்றார் ஞானி.

"நம்மைப் போல் ஒருவன். உடல், உயிர், உள்ளம், அறிவு, உணர்வு கொண்ட மனிதன் என்பதை ஏற்கிறீர்களா? விழித்திருக்கும் நிலையில் நம்மைப் போல் இயங்கக்கூடியவன், சரியா?"

"சரியே"

மன்னன் புன்னகைத்து, உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப முனைந்தான். பலவாறு பெயர் சொல்லி, முதலில் மென்மையாகவும் பிறகு உரக்கவும், அழைத்தான். உறங்கிக் கொண்டிருந்தவன் அசையக் காணோம். பிறகு, தன்னுடைய வாளையெடுத்து அதன் முனையால் மெல்ல உறங்கிக் கொண்டிருந்தவனின் உடலில் அழுத்தினான். உறக்கத்திலிருந்து அலறியடித்து எழுந்தவன், சுற்றுமுற்றும் பார்த்து விழித்தான். மன்னனையும் ஞானியையும் பார்த்துத் திகைத்தான். எனினும், மன்னனைப் புரிந்துகொண்டு பணிந்தான்.

மன்னன் ஞானியிடம், "ஐயா, இவன் இப்போது எங்கிருக்கிறான் சொல்வீர்களா?" என்று கேட்டான்.

"நம்மோடு இந்த அறையில் இங்கே இருக்கிறான்" என்றார் ஞானி.

"சரி. இப்போது புலன்களோடும் உயிரோடும் உணர்வோடும் செயல்படும் இவன், சற்றுமுன் அடங்கி இருந்தான். எத்தனை அழைத்தும் எழவில்லையே? ஏன்? அவனுடைய புலன்களும் உணர்வுகளும் எங்கே போயின? உறக்கத்திலிருந்தவன் எங்கே இருந்தான்?" என்று கேட்டான் மன்னன்.

"தெரியாது" என்றார் ஞானி.

"சிந்தியுங்கள். இப்போது தன்னைப் பற்றியும் என்னைப் பற்றியும் சுற்றச்சூழல் தெரிந்தும் உடனடியாகச் செயலபட்டவன், உறக்கத்தில் ஏன் அடங்கியிருக்க வேண்டும்? அவனுடைய புலன்களும் அறிவும் என்ன ஆயின? உறங்கும் நேரத்தில் வெளியே அவனுக்கு நல்லதோ கேடோ ஏற்பட்டிருந்தால் அறிய முடியாமல் போவது ஏன்? அவனுடைய உணர்வுகள் அடங்கியது ஏன்? சலனமேயில்லாது உறங்கியவன் எங்கே போனான்? என்ன செய்தான்? கேளுங்கள், ஞானியே. மனிதரை அடையாளம் காட்டுவது அறிவு. அறிவே மனிதரின் மிக மேன்மையான பேறாகும். உண்மையில், அறிவு நீங்கலாக மனிதருள் பயனுள்ள வேறு எதுவுமில்லை எனலாம். அத்தகைய அறிவு, கண்மூடித் தூங்கிய பொழுது எங்கே போனது? எங்கே புதைந்தது? இதோ இப்போது மென்மையாகப் பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்கும் இவன், உரக்க விளித்தும் உறங்கிக் கிடந்தானே, ஏன்? மன்னன் வந்திருப்பதைக் கூட மதிக்காமல் கிடந்தானே, ஏன்? தான் என்ற உணர்வு, தான் என்ற எண்ணம், தான் என்ற வேகம், தன்னை முன்வைத்த செயல், பிறர் அறிவு, பிறரைப் பொருட்படுத்தும் செயல்,... இவையெல்லாம் எங்கே போயின?"

"எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை" என்றார் ஞானி, பரிதாபமாக.

"எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன், ஞானியே!" என்ற மன்னன் தொடர்ந்தான். "மனிதர் அனைவருக்கும் அறிவு உண்டு. அதன் உருவத்தை அறிய முடியாது. சக்தியை எளிதில் உணர முடியாது. எனினும் அறிவு மனிதருக்கு உள்ளும் வெளியும் நிரந்தரமாகப் பரவியிருக்கிறது. தேவைக்கேற்ப வெளிப்பட்டும் அடங்கியும் நடக்கிறது. விழித்த நிலையில் செயல்படும் மனித அறிவு, உண்மையான அறிவின் மிக மிகச் சிறிய பகுதியே என்பதால், அதை மனிதரின் உண்மையான அறிவு அல்ல என்பேன். விழித்திருக்கும் மனிதரின் அடையாளம் உறக்கத்தில் மறைந்து விடுகிறது. உறக்கத்தில் இருப்பவருக்குத் தன்னை அடையாளம் காண முடிவதில்லை. உறக்க நிலையில் இந்த மனிதர் ஒரு அரசனாகவோ, ஆண்டியாகவோ, பண்டிதராகவோ, பாமரனாகவோ, விலங்காகவோ, மரமாகவோ இருந்திருக்கலாம். உறங்கியிருந்த நிலையில், கனவுலகில், அரசனாக இருந்தவன் அரசனாகவே வாழ்ந்திருந்தான்; விலங்காக இருந்தவன் அப்படியே வாழ்ந்திருந்தான். நான் இவனை என் வாளால் தொட்டு எழுப்பாவிடில் தொடர்ந்து அரசானகவோ ஆண்டியாகவோ வாழ்ந்து கொண்டிருப்பான். தன் வெளியுலக அடையாளங்களைத் துறந்து உள்ளே இன்னொரு உலகில் இருந்தவனுக்கு, நம் வெளியுலகம் தேவைப்பட்டதாகத் தெரியவில்லை. வெளியுலகின் வெற்றிகளும் தோல்விகளும் தவிப்பும் இழப்பும் பாதிக்கவில்லை. அவனுடைய கண்கள் காணவில்லை; செவி கேட்கவில்லை; மெய் உணரவில்லை; வாய் பேசவில்லை; மூச்சிலும் ஏற்றத் தாழ்வில்லை; அறிவும் நாம் வெளியே உணரும் வகையில் இயங்கவில்லை. ஏன்?"

"ஐயா, தெரியாதய்யா" என்றான் ஞானி.

"மனிதரின் தன்னறிவே தன்னுணர்வின் வேர். உணர்வு எங்கே இருக்கிறதோ மனிதன் அங்கே இருக்கிறான். தன்னறிவானது பெருந்தீ போன்றது. விழித்திருக்கும் நிலையில் நம் உணர்வுகள் தன்னறிவுத் தீப்பொறிகளாக எங்கும் சிதறிப் பரவுகையில், நம்மைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற இயலாமல் போகிறது. உறக்க நிலையில் பொறிகள் அடங்கிவிடுகின்றன. கண்களுக்கு வெளிப்பார்வையில்லை, நாவுக்கு வெளிப்பேச்சில்லை, செவிகளுக்கு வெளிக்கேள்வியில்லை, மெய்க்கு வெளியுணர்வில்லை, வெளிமூச்சிருந்தும் உணர்வில்லை... என எல்லாம் அடங்கிவிடுகின்றன. விழித்திருக்கும் நிலையில் நாம் யார் என்பதை அறிய முடியாது. புலன்களைக் கட்டிய நிலையில் நாம் யார் என்று அறிய ஒரு வழி ஏற்படுகிறது. புலன்களை அடக்குவதால் மட்டுமே 'தான் யார்' என்ற உண்மை அறிவைப் பெற முடியாது, எனினும், புலன்கள் அடங்கிய நிலையில் புறத்தாக்கம் மறைந்து விடுவதால், மனிதர்கள் தமக்குள்ளே காணுகிற, தேடுகிற, வாய்ப்பைப் பெறுகிறார்கள்."

உறங்கிக் கொண்டிருந்தவனை உதாரணமாகக் காட்டியதன் காரணம் ஞானிக்குப் புரிந்தது.

   யிர்கள் அனைத்துக்கும் பொதுவான உணர்வு உண்டு என்று சாக்ரேட்ஸ் காலத்திலிருந்து, அவருக்கும் முந்தைய வேத அறிஞர்கள் காலத்திலிருந்து, சொல்லி வருகிறார்கள். 'மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும்; காரணம், மனிதர்களுக்கிடையே இருக்கும் பொதுவான உணர்வு தான்' என்ற திசையில் போகிறது இவர்களின் தத்துவம். மானிடம் என்றில்லாமல், இயற்கை முழுதையும் இந்தச் சித்தாந்தத்துள் அடக்கிய சிந்தனையாளர்கள் நிறைய பேர் உண்டு. மனிதம் தொட்ட உணர்வே காதல், அன்பு, பாசம் போன்ற பரந்த புரிதல்களுக்குக் காரணம் என்கிறார்கள். மனிதரை விடுங்கள். நாம் கோபமாகவோ அல்லது மகிழ்ச்சியுடனோ இருக்கிறோம் என்பதை, நம் வீட்டு நாய் எப்படிப் புரிந்து கொள்கிறது? பிறவி அறிவுகளுக்கப்பாற்பட்ட இத்தகைய உணர்வின் ஒருவித உன்னத நிலையே ஆன்மா என்கிறார்கள். ஆன்மா என்பது மானிடத்தை விட, இயற்கையை விடப் பெரியது என்கிறார்கள். உபனிஷதுகள் பெரும்பாலும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றன. நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும், என் மனதில் இருப்பதை நான் சொல்லாமலே பிறர் புரிந்து செயல்படும் நேரங்களில் உள்ளங்கால் வரைத் திடுக்கிட்டுப் போகிறேன்.

   த்தனையோ வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது, நினைவுக்கு வருகிறது. ஹைதராபாதில் வேலை செய்த நாட்கள். ஒரு கடுமையான வெயில் நாளில், சார்மினார் சதுக்கத்தில் எங்கள் விநியோகஸ்தரின் ஆளைத் தேடி அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தோம். எனக்கும் உடன் வேலை செய்த நண்பனுக்கும் எரிச்சலோ எரிச்சல். கடைகளில் சரக்கைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பலாம் என்று நினைத்தால் சரக்கு கொண்டு வந்த ஆளைக் காணோம். வெயில் கொடுமை தாளவில்லை. ஒரு ஓரமாக அரைகண்மூடிச் சாய்ந்திருந்த ஃபகீர் ஒருவனிடம் விவரம் கேட்கலாமென்று நினைத்த என்னைத் தடுத்து, "இருடா, உனக்கு இந்தி தெரியாது. நான் கேக்குறேன்" என்ற நண்பன், தன் உடைந்த இந்தியில் ஃபகீரிடம், "இதர்.. ஏக்.. ஆத்மி.. சைகிள் லேகே.. கயா.. தேகா?" என்றான்.

   ஃபகீர் எங்களை இரண்டு நிமிடம் போல் மௌனமாகப் பார்த்துவிட்டு, சரளமாகத் தொடங்கினான்:
        இதர் சே உதர் கயா
       உதர் சே இதர் கயா
       கிதர் சே கிதர் கயா
       கிஸீ கோ க்யா பதா?
       அல்லா கோ பதா

               இங்கிருந்து அங்கு சென்றான்
               அங்கிருந்து இங்கு சென்றான்
               எங்கிருந்து எங்கு சென்றான்
               யாருக்கு என்ன தெரியும்?
               அல்லாவுக்கே தெரியும்.
        இனோனே ஓ லாயா
       உனோனே ஏ லாயா
       கினோனே க்யா லாயா
       கிஸீ கோ க்யா பதா?
       அல்லா கோ பதா

               இவனோ அதை எடுத்து வந்தான்
               அவனோ இதை எடுத்து வந்தான்
               எவன் எதை எடுத்து வந்தான்
               யாருக்கு என்ன தெரியும்?
               அல்லாவுக்கே தெரியும்.

   "ஐயா, இந்தப் பக்கமாக ஒரு சைக்கிள்காரன் சரக்கு எடுத்துப் போனதைப் பார்த்தீர்களா?" என்ற சாதுவான கேள்விக்கு, சாதுவின் பதிலில் அரண்டு போனோம். ஃபகீர், 'இந்த பதா அந்த பதா' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான். நண்பனும் நானும் வேறுவகை தாவில் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

   இப்போது நினைக்கையில், அந்த ஃபகீர், நசிகேதன் கதையை விட நுண்மையாக ஏதோ சொல்ல வந்தான் என்று தோன்றுகிறது.

   டமொழிக் கடோபனிஷதில், இந்தப் பாடல் தொடங்கித் தொடரும் சில பாடல்களின் கருத்தும் வரிகளும், அப்படியே கண்ணன் கீதையில் சொல்வதாக வருகிறது என்கிறார்கள். பெருங்கடவுளின் கருத்தாகக் 'கட் அன்ட் பேஸ்ட்' செய்யப்பட்டிருப்பது, நூலின் கருத்தாழத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்.

['நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' - கண்ணதாசன்]

    "நசிகேதா, ஆன்மாவுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை" என்றான் எமன். "சாதாரணப் பிறவிகளுக்கு பிறப்பு, வளர்ச்சி, மூப்பு, வாடல், மரணம் என்ற ஐந்து நிலைகள் உண்டு. தன்னறிவுக்குக் கிடையாது. தன்னறிவு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது" என்றான்.

    "மனிதருக்குள் தானே இருக்கிறது தன்னறிவென்னும் ஆன்மா?" என்றான் நசிகேதன்.

    "ஆம்" என்றான் எமன்.

    "எனில், மனிதர்கள் இறந்ததும், அவர்களின் உடல் அழிந்ததும், ஆன்மாவுக்கு என்ன ஆகிறது? ஏன் அழிவதில்லை?" என்றான் நசிகேதன். இதே கேள்வியைப் பலமுறை கேட்டதைக் குறிப்பால் நினைவூட்டினான்.

    எமன் புன்னகைத்தான். அவனுக்கு நசிகேதனின் அறிவுக்கான அவசரம் புரிந்தது. "நிதானமாகச் சொல்கிறேன், பொறுமையாகக் கேள்" என்றான். "உடல் அழிகிறது. உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை. தன்னறிவு தழைத்து வளர்கிறது. அதற்குக் காரணம், ஆன்மா பிறவியினும் பெரிது. பரந்திருப்பது. முக்கால அறிவையும் பெற்றுத் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் பிரம்மாணடமாகும். அத்தனைப் பிரம்மாண்டமும், மனிதருக்குள் அடங்கியிருக்கையில் அணுவிலும் அணுவாக, ஆழமாகப் புதைந்திருப்பதாகும்.

    தன்னறிவு எதனின்றும் உருவாவதில்லை; எதையும் உருவாக்குவதும் இல்லை. உருவாகவோ அழியவோ காரணமே இல்லாது, என்றைக்கும் எப்போதும் நிலையாக இருப்பதாகும்.

    தீயானது தன்னிச்சையாக எப்படித் தாவிப் பரவுகிறதோ, அது போல் ஆன்மா எனும் ஞானஒளி நிரந்தரமாக, அழிவில்லாமல், உன்னிலும் என்னிலும் ஏனையோரிலும், தாவிப் பரந்து வீசுகிறது" என்றான் எமன்.

2011/06/17

ஆன்மா உருவமில்லாதது


53
புலனின்பத் துன்பநிலை ஒன்றெனும் போதர்
விலகாது வவ்விடும் ஆன்மா - அலயம்
புலப்படாது மூலக் குழிக்குள் புதைந்தப்
பலகோடிக் காலப் பயிர்.

   புலன்களால் அறியக்கூடிய இன்ப துன்ப நிலைகளில் ஒருமையைக் காணும் ஞானிகள் தங்கள் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் உறுதியுடன் பற்றி நிற்கும் தன்னறிவானது, தோற்றமின்றி, அழிவின்றி, பிறவிக்குப் பின் பிறவியாக, உயிர்க் குழிக்குள் ஆழப் புதைந்திருப்பதாகும் (என்றான் எமன்).


வவ்விடும்: பற்றும், உறுதியாக இருக்கும்
அலயம்: தோற்றம்
மூலக்குழி: ஆதாரமான உயிர், இதயம், அறிவு


['..there is more wisdom in your body than in all philosophy' - friedrich nietzsche]

    டலுறுப்புக் கண்ணோட்டத்திலிருந்து ஒதுங்கி, உணர்வுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சில சுவாரசியமானக் கேள்விகளை, குழப்பங்களை எதிர்கொள்ளலாம். அறிவும் இதயமும் ஒன்றா? அறிவும் மனமும் ஒன்றா? இதயமும் மனமும் ஒன்றா?

   பொருள், புகழ், கல்வி, பொது நடத்தை தொடர்பானச் சகிக்க ஒண்ணாதச் செயல் புரிவோரிடம், "உமக்கு மூளை இல்லையா? அறிவு இல்லையா?" என்கிறோம்.

   அன்பு, கருணை, பாசம் தொடர்பானச் சகிக்க ஒண்ணாதச் செயல் புரிவோரிடம், "உமக்கு இதயமே இல்லையா? எப்படி மனம் வந்தது?" என்கிறோம்.

   உலகாயதம் தொட்ட நடத்தைகளுக்கு அறிவையும், உணர்வுகள் தொட்ட நடத்தைகளுக்கு இதயத்தையும் குறி வைக்கிறோம்.

   உணர்வுகள், செயல்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைப்பது அறிவே, எனினும், உணர்வு என்ற கண்ணோட்டத்தில் இதயமும் அறிவும் வசதியாக ஒன்றுக்கொன்று இடமாறுவதை ஏற்கிறோம்.

   தன்னறிவு என்பது உணர்வா? இதயமா, அறிவா? அறிவைக் கட்டும் இதயமா? இதயத்தைக் கட்டும் அறிவா? அறிவைக் கட்டும் உணர்வா? உணர்வைக் கட்டும் அறிவா? எல்லாமேவா?

   chaos theory என்பது கணிதம், பௌதிகம் கலக்கும் ஒரு சுவாரசியமான பிரிவு. இந்தப் பிரிவின் தாக்கம் கணிதம் பௌதிகம் இரண்டையும் கடந்து, இன்றைக்கு உலக அறிவியலின் அனைத்துக் கிளைகளிலும் பரவியிருக்கிறது.

   முன்சொன்ன அறிவு, இதய இடமாற்றங்கள் உள்நோக்கிய chaos theoryயே என்பது, இன்றைய உளவியல் பார்வை. மனித மனதின் சிக்கல்களைப் புரிந்து கொள்ள chaos theoryன் அடிப்படையில் சில முறைகளைப் பின்பற்றுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். தொடர்கொலை, கற்பழிப்பு, பேரழிவு போன்றத் தீவிர குற்றங்களைச் செய்வோரின் மனநிலைகளைப் புரிந்து கொள்ள இந்த வழிமுறைகள் உதவும் என்கிறார்கள். ம்ம்ம்... தீவிரக் குற்றவாளிகளுக்கு அறிவு இல்லையா? அல்லது இதயம் இல்லையா?

   உளவியலை விட்டு மேலாண்மைக்கு வருவோம். organizational design, information network design பிரிவுகளில் chaos theory பயன்படுகிறது என்பதை நம்பமுடியவில்லை. tunnel, spiral என்று இரண்டு வித வடிவ மாதிரிகள் உண்டு. organizational designன் முக்கிய அம்சங்களான authority flow, delegation, control flow போன்றவற்றைப் பரவலாகவும் அடிக்கடியும் கொடுக்க, எடுக்க, மாற்ற நேரிடும் என்பதால் சுலபமான வடிவமைப்பு தேவை. அதே போல், தகவல் துறையிலும் எந்த ஆய்வையும் உடனடியாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கத் தகுந்த வடிவமைப்பு தேவை. இரண்டு ஒழுங்குகளிலும், வடிவ மாதிரிகளைத் தேவைக்கேற்றபடி உடனடியாக மாற்றியமைக்க வசதி வேண்டும். tunnel வடிவமைப்பில் உள்ளே போகவும் வெளியே வரவும் ஒரே வழி. spiral வடிவமைப்பிலே உள்ளே சென்றால் சென்றது தான்.

   புதிர்: இரண்டு அமைப்புகளில் எது வசதியானது? எது வேகமானது? எது சுலபமானது? எது உகந்தது?

   விடை: []


       படத்தில் விவரம் சரியாக விளங்காது போனாலும் (விளக்கியவர் குறை :), spiral வடிவம் மேலானது. வேகமானது. வசதியானது.

       spiralகளை மேலும் கீழும் முன்னும் பின்னும் கூடியும் குறைத்தும் விரைவில் வடிவை மாற்ற முடியும். tunnel ஒரு முறை அமைத்தால் அமைத்தது தான். மொத்த spiralன் பரிமாணம் கெடாமல், உள் வட்டங்களுள் ஒன்றை சுலபமாகவோ சிரமப்பட்டோ நீக்க முடியும். ஆனால், tunnelல் அந்த வசதி அறவே இல்லை.

       பல தொன்மையான, வளர்ந்த, பெரிய வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மேலாண்மைச் சோகத்தில் வாடுவதன் காரணம், tunnel style நிர்வாக அமைப்பு என்கிறார்கள் வல்லுனர்கள்.

       இதற்கும் chaos theoryக்கும் என்ன தொடர்பு? chaotic dynamics என்று ஒரு பரிமாணம். அதீத முரண்களையும் மாறுதல்களையும் முறைப்படுத்தி அறிந்து கொள்ளும் முறை. அதீத முரண்களையும் மாறுதல்களையும் அறிந்து கொள்ள மனித மனதை விட ஒரு சிறந்த மாதிரி கிடைக்குமா என்ன? tunnel, spiral இரண்டில் மனித மனம் எந்த வடிவின் மாதிரி?

   மனித இயல்புகளை, நடத்தைகளை, பண்புகளை இயக்கவோ ஆளவோ அடக்கவோ இதே முறைகளைப் பயன்படுத்த முடியுமா? வடிவமைப்புகளைக் கொஞ்சம் புரட்டிப் போட்டுச் சிந்திக்க வேண்டும். செய்வோம்.

['தென்னை இளநீருக்குள்ளே, தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே, தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்...' - கண்ணதாசன் ]

    "தன்னறிவை நல்லாசிரியரிடம் பெற வேண்டும்" என்ற எமன், தொடர்ந்தான். "பயிரானது வளர்ந்து செழித்து கொடுத்து அழிந்து மீண்டும் எழுந்து வளர்ந்து செழிப்பது அல்லவா? ஆன்மாவும் அப்படியே. கோடிக் கணக்கான பிறவிகளாக தோன்றி மறைந்து மீண்டும் தோன்றி வளர்ந்து வருவது தன்னறிவு. நீண்ட காலமாக செழித்து வளர்ந்து வரும் பயிர். ஆயின், அதற்கு உண்மையான அழிவு இல்லை."

   "தன்னறிவு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?" என்றான் நசிகேதன்.

   "தன்னறிவுக்கு உருவமில்லை. பன்னிரண்டு கைகளோ, நான்கு முகங்களோ, மூன்று கண்களோ, எட்டு தோள்களோ, பத்து தலைகளோ இல்லை. எனினும், அதை அடையாளம் காணலாம். தன்னறிவு ஆறு தீக்குணப் பகையழிக்க வல்லது எனினும், சூலமோ ஆயுதமோ வில்லோ வாளோ ஏந்தி நிற்பதில்லை. பூமிக்கும் ஆகாயத்தும் அண்டத்துக்கும் அப்பாற்பட்டுப் பரந்திருக்கக் கூடியதாயினும், அணுவுக்குள் அணுவாக அடங்கி எளிதில் புலப்படாத தோற்றமுடையது" என்றான் எமன்.

   "அது எங்கே இருக்கிறது என்பதைச் சொல்வீர்களா?" என்று கேட்டான் நசிகேதன்.

   "தன்னறிவு, உயிர்த்துடிப்புக்கும் உணர்வுத்துடிப்புக்கும் இடையே பெருங்குழியில் புதைந்திருக்கிறது. குழிக்குள் குழிவெட்டி, குகைக்குள் குகைக் குடைந்து, ஆழப் புதைந்திருக்கிறது" என்றான் எமன்.

   "எனில், அதை அறிவது எப்படி? அடைவது எப்படி?" என்றான் நசிகேதன்.

   "போதர்கள் வழியில் போனால், தன்னறிவை அடையாளம் காணலாம். தம்முடைய இலக்கிலிருந்து சற்றும் விலகாமல், புலனைக் கட்டி, மூச்சைக் கட்டி, தவத்தால் உள்ளிருக்கும் தீயை எழுப்பி, வளர்த்து அதன் ஒளியில் குழிகளைக் கடக்கிறார்கள்; குழிகளுக்குள் கிடக்கும் குகைகளைக் கடக்கிறார்கள். அதனுள்ளே புதைந்திருக்கும் தன்னறிவை அடையாளம் காண்கிறார்கள். குகைகளைப் பெயர்த்தெடுக்கிறார்கள்; குழிகளை நிரப்புகிறார்கள். அத்தகைய அருந்தவம் செய்துத் தன்னறிவைப் பெறுவதனால், அவர்களால் அனைத்து இருமைகளையும் அடையாளம் காண முடிகிறது. இருமையின் ஒருமையை உணர்ந்து செயலாற்ற முடிகிறது. அவர்களது பாதையைப் பின்பற்றினால் தன்னறிவை அறியலாம், அடையலாம்" என்றான் எமன்.

   "ஐயா, சற்றுக் குழப்பமாக இருக்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை, ஆனால் பிறவிக்குப் பின் பிறவியாகத் தோன்றி மறைந்து வளரும் என்கிறீர்கள். தன்னறிவுக்கு உருவமில்லை, ஆனால் புலப்படாதத் தோற்றம் கொண்டது என்கிறீர்கள். ஆன்மாவை அடையலாம், ஆனால் அடைய விடாமல் புதைந்திருக்கும் என்கிறீர்கள். குழி என்கிறீர்கள், குகை என்கிறீர்கள். எங்கிருந்து வந்தன எனக்குள் குழியும் குகையும்? சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்" என்று பணிந்தான் நசிகேதன்.

   "நசிகேதா! அகத்துக்கும் புறத்துக்கும் பொதுவானது அறிவு. புலன்களில் மிக முக்கியமானது கண். வெளிப் பார்வைக்குத் தெரிந்தவற்றைப் புரிந்து கொள்ள முனைகிறது புலனறிவு. வெளியே இருப்பவற்றைக் கண்டு புரிந்து கொள்ள உதவும் புறக்கண் போலவே, மனிதருக்கு அகக்கண்ணும் உண்டு. மனிதம் அகக்கண்ணால் தனக்குள்ளே தேடிப் பார்க்க வேண்டும். மலர்களும் மிருகங்களும் இன்பமும் துன்பமும் பசியும் பிணியும் புன்சிரிப்பும் போர்களும் புறக்கண்ணுக்குப் புலப்படுவதைப் போல, அடக்கமும் அமைதியும் அழுக்காறும் ஆணவமும் கருணையும் பொறாமையும் பேராசையும் அகக்கண்ணுக்குப் புலப்படும். புறத்தே இருக்கும் புதர்களும் காடுகளும் குகைகளும் போலவே அகத்தேயும் தீக்குணங்கள் குழி தோண்டி வேர் விடுகின்றன, குகை கட்டிக் குடியிருக்கின்றன. குழிகளும் குகைகளும் வளர வளர தன்னறிவு புதைந்து கொண்டே போகிறது. தவத்தாலும், முயற்சியாலும் அகக்கண்ணால் தொடர்ந்து தேட அறிவைப் பழக்கினால், தன்னறிவை அடையாளம் காணலாம். புறக்கண் இழந்தக் குருடர்களால் எப்படி வெளிக்காட்சிகளைக் கண்டு செயலாற்ற இயலாதோ, அவ்வாறே அகக்கண் குருடர்களால் தனக்குள்ளே கண்டு தன்னறிவைத் தேடிச் செயலாற்ற முடியாது. அகக்கண்ணை மூடியே வைத்திருப்பது மனிதரின் இயல்பான குணம்" என்றான் எமன்.

   தன்னறிவு பற்றிய விவரங்கள், நசிகேதனுக்குப் புதுமையாகவும் சற்றே அச்சமூட்டுவதாகவும் தோன்றின.

2011/06/14

தன்னறிவை நல்லாசிரியரிடம் பெறவேண்டும்


52
வாதத்தால் வாராத வண்ணாகும் வாலறிவை
ஆதரோ ஆசிரியச் சொல்லிடார் - சாதகரும்
நுட்பத்துள் நுட்பமென்பார் போதரிடம் போதிக
ஒட்பமிதை ஓதல் ஒழுங்கு.

   ன்னறிவு, வாதங்களால் தெளியாது; அறியாதவரால் இதனைப் பிழையின்றி விளக்க முடியாது; யோகியரோ இதனை விளக்கத்துக்கு அப்பாற்பட்டப் பெரும் நுட்பமென்பார்கள்; ஆன்மாவை மூவகையிலும் அறிந்த ஞானிகளிடமே கற்றுத் தெளிதல் முறையாகும் (என்றான் எமன்).


வண்: தெளிவு
வாலறிவு: தான் இறையான உணர்வு, தன்னறிவு, தூய்மையான அறிவுநிலை
ஆதர்: அறிவு குறைந்தவர், மூடர்
ஆசிரிய: பிழை நீங்க (ஆசு+இரிய)
சாதகர்: பயிற்சி செய்பவர், யோகி
போதர்: முற்றுமறிந்தவர், ஞானி
போதிகம்: ஆன்மா
ஒட்பம்: நுணுக்கம், பெருமை
ஓதல்: படித்தல், கற்றல்


['the wise teacher does not bid one to enter the house of wisdom, but leads one to the threshold of their own mind' - khalil gibran]

    ஜாதசத்ரு-பாலாகி உரையாடல் நினைவிருக்கலாம். தன்னறிவு பெற்றவன் என்று தானே நினைத்துக் கொண்டு, அரசனுக்கும் சொல்லித்தர முனைந்து, தன் அறிவையும் குருவென்னும் அந்தஸ்தையும் இழந்த 'ஞானி'யின் கதை. ஒரு கேள்வி: இருவரில் யார் அறிஞர்?

    அறிஞர்கள் பலவிதம்.

    எதையும் முழுதும் அறிந்து கொள்ளாமல், எல்லாவற்றையும் சற்றே கொறித்தவர்கள் சிலர். அகலம் கண்டு, ஆழம் தொலைத்தவர்கள்.

    எதையும் சற்றே கொறித்து, ஏதோ ஒன்றை முழுமையாக அறிந்தவர்கள் சிலர். அகலம் கண்டு, ஆழம் அறிந்தவர்கள்.

    எல்லாம் அறிந்தும், எதையும் அறியாதவர் போல் இருப்பவர் சிலர்.

    எதையுமே அறியாமல், எல்லாம் அறிந்தது போல் நடப்பவர் சிலர்.

    தன் சாதாரண அறிவை மிகைப்படுத்திப் பேசும் வகையினர் சிலர்.

    தன் மிகைப்பட்ட அறிவை சாதாரணப்படுத்திப் பேசும் வகையினர் சிலர்.

    தேவையில்லாமல் அடுத்தவரிடம் தன் அறிவை வெளிப்படுத்துவோர் சிலர்.

    தேவையிருந்தும் அடுத்தவரிடம் தன் அறிவை மறைப்பவர் சிலர்.

    தன்னை விட அறிவாளியைச் சந்தித்ததும் தன் அறிவின்மையை உணர்ந்து, அறிவைத் தேடும் 'பாலாகி' வகையினர் சிலர். தன்னை விட அறிவாளியைச் சந்தித்ததும் வேறு இலக்கைத் தேடுவோர் சிலர். இரண்டையும் விட்டு, சந்தித்தவருக்கு அறிவில்லை என்று வாதாடி நேரம் கழிப்போர் சிலர்.

    அடுத்தவர் அறிவின் வால் பிடித்து அதை வைத்தே சமாளிப்பவர்கள் சிலர். ஒருவரிடம் கேட்டறிந்ததை, விவரம் புரிந்து கொள்ளாமல், இன்னொருவரிடம் சொல்லித் தனக்குப் பெருமை தேடிக்கொள்வாகள். தவறான விவரம் என்று புரிந்ததும், முதலில் சொன்னவரின் பெருமையைக் குலைத்துத் தப்பிக்கும் ரகமும் உண்டு.

    அறிந்து கொள்ளும் பொறுமையும் ஆற்றலும் முனைப்பும் உழைப்பும் இல்லாதவர் சிலர். தவறு என்று தெரிந்திருந்தும் அதையே தொடர்ந்து செய்யும் ரகம். 'எது தவறு' என்ற அறிவை நிரம்பப் பெற்றவர்கள். தவறானப் பாதையைப் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். சரியான பாதையைப் பற்றி அறியாத 'அறிஞர்'கள். எதைச் செய்யக்கூடாது என்பதை இவர்களிடம் அறியலாம்.

    எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தும், அறிவைப் பெறும் பொறுமை இல்லாதவர்கள் சிலர். அவசரத்துக்கு அறிவைப் பலிதரும் வகையினர்.

    எத்தனை அறிவைப் பெற்றிருந்தாலும், அதை வெளிப்படுத்திப் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்கள் சிலர். அறிவைப் பரப்பினால் அடுத்தவர் விழித்து விடுவாரே என்று அஞ்சுவார்கள்.

    எத்தனை அறிவைப் பெற்றிருந்தாலும், அதை முறையாக வெளிப்படுத்தத் தெரியாதவர்கள் சிலர்.

    எல்லாம் அறிந்திருந்தும், அறிவைத் தேடுவோர் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அறிவை முறையில்லாமல் வெளிப்படுத்தி, அறிவுத் தேடலுக்கு முடிவு கட்டுவோர் சிலர்.

    எல்லாம் அறிந்திருந்தும், அதைச் சிறுகச் சிறுக வெளிப்படுத்தும் விதத்தில் அறிவுத் தேடலை வளர்ப்போர் சிலர்.

    அறிந்தும், 'அறிந்தென்ன ஆவது?' என்று இருப்போர் சிலர்.

    'அறிந்தென்ன ஆவது?' என்று, அறியாமலே இருப்போர் சிலர்.

    எத்தனை அறிந்தும், அறியாதது அண்டத்தினும் பெரிது என்றிருப்பவர் சிலர்.

    இந்தச் சிலருள் ஒருவரையோ பலரையோ ஆசான், குரு என்று தினம் தேடி ஏற்கிறோம். சில நேரம் தேடியது கிடைக்கிறது. பல நேரம் தேடி வந்ததே மறந்து விடுகிறது. 'எதை அறிவது' என்பது புரியவேண்டும். 'யாரிடம் அறிவது' என்பதும்.

['ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா, குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா' - கண்ணதாசன்]

    "தன்னறிவு நுட்பமானது. தூய்மையானது. பரந்தது. ஆழமானது. இதை நூல்களிலும் மேடைகளிலும் காண முடியாது. படித்தறிவதல்ல. பேசியோ விவாதித்தோ அறிவதல்ல. இதைப் பற்றிய கட்டுரைகள் இல்லை. கவிதைகள் இல்லை" என்றான் எமன்.

    "தன்னறிவை எப்படிப் பெறுவது? யாரிடம் பெறுவது?" என்றான் நசிகேதன்.

    "தன்னறிவைப் பெறுவது எளிதல்ல. தன்னறிவில்லாதவர்களிடம் இதைத் தேடிப் பெற முடியாது. இவர்கள் போலிகள். கண்மூடித்தனத்தை வளர்ப்பவர்கள். தானும் அறியாமல் பிறரின் அறிவுத் தேடலையும் அழிப்பவர்கள். பிழையான அறிவை வழங்கும் இவர்களிடம் தன்னறிவைப் பெற முடியாது.

    தன்னறிவைத் தேடுவோர் அதன் நுட்பத்தைப் புரிந்து கொண்டவர்கள். அதைப் பெறுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டவர்கள். யோகிகள். புலனடக்கி, உள்ளிருக்கும் தீயை வளர்த்து, அறிவைக் காண முனைப்பாக இருப்பவர்கள். உழைப்பவர்கள். இருப்பினும், தன்னறிவின் நுட்பத்தை வியந்து அஞ்சும் இவர்களாலும் தன்னறிவுக்கான வழிகாட்ட முடியாது.

    பொறிவாயில் ஐந்தவித்துப் பொய்தீர் ஒழுக்க நெறி கற்றவர்கள் ஒரு சிலர். இவர்களுள் ஆன்மாவை அடையாளம் கண்டு, ஆன்மாவைப் பற்றிய அறிவை, தன்னறிவை, முழுதும் அறிந்தவர்கள் இன்னும் மிகச்சிலர். தன்னறிவின் மேன்மை அறிந்து, அதை முறையாக வெளிப்படுத்தவும், பிறருக்கு உணர்த்தவும், வழிகாட்டவும் தெரிந்த இத்தகைய ஞானிகளிடமே தன்னறிவுக்கான பாடமும் பயிற்சியும் பாதையும் பெற வேண்டும்" என்றான் எமன்.

2011/06/10

தன்னறிவு நுட்பமானது


51
அண்டமும் காற்றும் அணுவும் கடலதும்
கண்டவொரு பண்டிதரைக் கண்டாயோ? நுண்ணறிவைக்
கண்ணாகக் கற்றல் அரிததிலும் கற்பிக்கும்
அண்ணாவிப் பற்றல் அரிது.

   ண்டங்களையும், காற்றையும், அணுவையும், கடலையும் முழுதும் அறிந்தோரை அறிவாயோ? (அறியாய், நசிகேதா). இவற்றை விடப் பரந்த, விரிந்த, நுட்பமான, ஆழமான தன்னறிவை, கண்களைப் பேணுவது போல் போற்றிக் கற்பது அரிது; கற்றுத்தரும் ஆசிரியரைப் பிடிப்பது இன்னும் அரிது (என்றான் எமன்).


அண்ணாவி: ஆசிரியர்

['is there anyone so wise, as to learn from the experience of others?' - voltaire]

    சிரியர்-மாணவர் தேர்வு முறைகளைப் பற்றி முதல் பகுதியில் பார்த்ததைச் சற்றே நினைவுபடுத்திக் கொண்டு தொடர்வோம்.

   ஆசிரியர் மாணவரைத் தேர்ந்தெடுக்கிறாரா, அல்லது மாணவர் ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கிறாரா? பொதுக் கல்வி என்று பார்த்தால், குருகுல முறை தொடங்கியதிலிருந்து இன்று வரை, ஒருவரை ஒருவர் தேர்வு செய்யும் வசதி குறைந்து ஏறக்குறைய நின்று விட்டது எனலாம். தனிக்கல்வியிலும் இந்த வசதி அனேகமாக ஒருதலையாகவே இருக்கிறது. இப்போதைக்கு, ஒருவரையொருவர் தேர்ந்தெடுக்க வசதி இருப்பதாகக் கொள்வோம்; எனில், எது எளிது? ஆசிரியர், தனக்குத் தகுந்த மாணவரைத் தேர்ந்தெடுப்பதா? மாணவர், தனக்குத் தகுந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதா? ஒரு கணம் சிந்திக்கவும். விடை புலப்பட்டதா? இது சற்றே விவகாரமான வட்டக்கேள்வி. சிந்திக்கக் கணமெடுத்தமைக்கு நன்றி.

   பொதுவாக, மாணவர்கள் கல்வி கற்றுப் பலவும் அறிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள். அது அவர்கள் கடமை. அறிவை வழங்கத் தயாராக இருக்கும் ஆசிரியருக்கு மாணவர்கள் கிடைப்பது அரிதல்ல. கிடைத்த மாணவர்களுள், தான் வழங்கவிருக்கும் கல்வியை முக்கியமென எண்ணி, சிறந்த முறையில் குறிக்கோளோடு பயின்று, பரந்தும் ஆழ்ந்தும் அறிய முனையும் ஒன்றிரண்டு மாணவர்களையாவது ஆசிரியர்கள் விரும்புவார்கள். அந்த மாணவர்களைத் தேடிப் பிடித்து அறிவு புகட்டுவதே ஆசிரியருக்கு நிறைவு தருகிறது. அத்தகைய மாணவர்கள் கிடைப்பது அரிது. நூறு மாணவர்களில், அல்லது ஆயிரம் மாணவர்களில், ஒருவர் கிடைக்கக்கூடும். மாணவருக்கான இலக்கணங்களுள், 'தான் பெற்றக் கல்வியறிவைத் தொடர்ந்து பரப்ப வேண்டும்' என்பது ஒரு முக்கியமான இலக்கணம் என்று முன்னர் பார்த்தோம். கல்வி கற்க வரும் மாணவர்களுள் ஒருவராவது ஆசிரியராகும் எண்ணத்துடன் கற்பார்களா என்பது சந்தேகமே. இன்றையக் காலக்கட்டத்தில் 'ஆசிரியர்' என்பது காசு சேர்க்கும் ஒரு இடைநிலைத் தொழில் என்றாகிவிட்ட நிலையில், இந்த ஆய்வு சோர்வைத் தரலாம். இருப்பினும், சற்று சிந்தித்தோமானால், அத்தகைய மாணவர்களையே இன்றைய நாளிலும் நல்ல ஆசிரியர்கள் விரும்புவார்கள் என்பது புலப்படும். அந்த மாணவர்கள், ஆசிரியர்களாகியோ அல்லது வேறு விதத்திலோ, தாம் பெற்ற கல்வியைப் பரப்புவார்கள் என்ற நம்பிக்கை ஆசிரியர்களுக்கு இருப்பதால், அத்தகைய மாணவர்கள் தன்னைத் தேடி வரும் பொழுது மிகுந்த களிப்புடனும் நிறைவுடனும் கற்பிக்கிறார்கள். கற்க வரும் மாணவன் கற்ற கல்வி அவனுக்குப் பயன்படலாம்; அறிய வரும் மாணவன் கற்ற கல்வி அனைவருக்கும் பயன்படும். கற்க வரும் மாணவருக்கும் அறிய வரும் மாணவருக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்கள் முகத்திலிருந்து அறியலாம் என்று ஆசிரியர்களைக் கேட்டால் சொல்வார்கள்.

   நல்ல மாணவர்கள் கிடைப்பது அரிது; எனில், நல்ல ஆசிரியர்கள் கிடைப்பது? இன்றைய நிலவரத்தில் நல்ல ஆசிரியர் கிடைப்பது மிக அரிது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். காரணம், முன்னர் சொன்னது போல் வயிற்றுப் பிழைப்புக்கான வழியென்றானதும் ஆசிரியர் தொழிலிலும் குறைகள் நிரம்பிவிட்டன எனலாம். ஒரு வாதத்துக்காக இன்றைய நிலையை சற்றே மறந்துத் தொடர்வோம். நல்ல ஆசிரியர் என்பவர் யார்?

   நல்ல மாணவரெல்லாம் நல்ல ஆசிரியராவதில்லை; ஆனால், நல்ல ஆசிரியர் அனைவருமே நல்ல மாணரானவர்கள். அறிவைப் பெறுவதில் கருத்தாக இருந்தவர்கள், அறிவைத் தருவதில் குறையோடு நடக்கக்கூடும். நம் வீட்டுக்குள்ளேயே உதாரணங்களைப் பார்க்கலாம். நன்கு படித்த தந்தையோ தாயோ தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இயலாமல் தவிப்பதைப் பார்க்கிறோம். ஆசிரியருக்கான இலக்கணங்களுள் பொறுமை, சகிப்புத்தன்மை, அடக்கம், அன்பான கண்டிப்பு போன்றவை அறிவுக்கு இணையானவை எனலாம். ஒரு மாணவரின் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது... தனக்குத் தேவையான அறிவைக் குறை வைக்காமல், அதே நேரம் தன் அறிவு வளர்ச்சிக்கேற்ற விதத்தில் தன்னளவுக்கு இறங்கி வந்து, தன்னோடு வளர்ந்து, அறிவை வழங்கி, சரியான நேரத்தில் தன்னிடமிருந்து விலகும் ஆசிரியரையே நல்ல மாணவர்கள் விரும்புகிறார்கள். நம்மில் எத்தனை பேர் நல்ல ஆசிரியராகத் தகுதியானவர்கள்? (நான் ஏதாவது சொல்லித் தருகிறேன் என்றாலே என் பிள்ளைகள் தலைதெறிக்க ஓடுவார்கள்).

   அறிவில் கன்றாக இருக்கும் மாணவருக்கு இணையாக இறங்கி நின்று, அதே நேரம் மாணவரை வளர்த்து, மாணவரோடு வளர வேண்டியிருப்பதால்... நல்ல ஆசிரியர் கிடைப்பதே, நல்ல மாணவர் கிடைப்பதைக் காட்டிலும் அரிது.

   ஆசிரியரைக் குரு என்கிறோம். குரு என்றால் வழிகாட்டி. வழிகாட்டிக்கு பாதையில் சென்ற அனுபவம் இருக்க வேண்டும்; பாதையைப் பற்றிய விவரங்களை, நல்லது கெட்டதை அறிந்து, பயணிக்கேற்றபடி சொல்லத் தெரியவும் வேண்டும். அதுவும், வாழ்வுக்கு வழிகாட்டியெனில், 'குரு' எத்தகைய அறிவும் சிறப்பும் பெற்றிருக்க வேண்டும்! 'குரு என்பவரே உண்மையான மேன்மையான அறிவின் உரு' என்ற பொருளில் வடமொழியில் குருவழிபாடு உண்டு. (கடவுளுக்கு வழங்கப்படும் தகுதி - பரப்ரம்ஹம் எனும் மேன்மையான அறிவு). போஸ்டர் ஒட்டிக் காசு சேர்க்கும் காவி வேட்டியெல்லாம் குருவாகிவிட்ட இந்த நாளில், இத்தகையச் சிந்தனை பெரும்பாலும் வாதத்துக்கு மட்டுமே உதவும். எனினும், சிறந்த வழிகாட்டிகளை மக்கள் அவ்வப்போது அடையாளம் கண்டு குருவாக ஏற்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் தங்கள் சீடர்களின், மாணவர்களின், மக்களின் வாழ்வில் ஏதாவது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். காவி வேட்டிகளைத் தாண்டி சில நேரம் நம்மாலும் காண முடிகிறது.

['தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதிலலையா?' - கண்ணதாசன் ]

    "தன்னறிவு என்பது மிக நுண்மையான அறிவாகும்" என்றான் எமன். "தெரியும், ஆனால் தெரியாது; புரியும், ஆனால் புரியாது".

   "ஆ!" என விழித்த நசிகேதனைப் பார்த்துப் புன்னகைத்தான் எமன். "நசிகேதா! அண்டம் என்பது பல உலகங்களையும் சூரியன் சந்திரன் என இன்னும் பல நட்சத்திரங்களையும் கோள்களையும் வெளியையும் தன்னுள் அடக்கி, விவரிக்க முடியாத அளவுக்கு பரந்திருப்பதாகும். நம்முடையப் பார்வைக்குத் தெரிவது மிகச் சிறிதே. பார்வைக்குத் தெரியாத அண்டம் மிகப்பெரிது. தன்னறிவு என்பது அதைப் போன்றது. நம் பார்வைக்கு, உணர்வுக்கு, தெரிந்ததும் புரிந்ததும் சிறிதே. எனினும் மிகப் பரந்ததாகும். தேடத் தேட வளரும் அறிவாகும்.

   அண்டத்தைப் போல் கண்ணுக்குப் புலப்படுவது கடல். கடல் புலப்பட்டாலும், கடலின் ஆழம் கண்ணுக்குத் தெரிவதில்லை. தன்னறிவும் அப்படியே. ஆழமானது என்று தெரிந்தாலும், அதன் ஆழம் தோண்டத் தோண்டப் புரியும். உள்ளத்தின் உள்ளே புதைந்திருப்பதால் மட்டுமல்ல, தன்னறிவு கண்டோரின் நடத்தை ஆழ்ந்த அறிவின் அடையாளங்களை எடுத்துக் காட்டுவதாலும், தன்னறிவு கடலைப் போலவும் கடலை விடவும் ஆழம் என்பேன்.

   கண்ணுக்குப் புலப்படாதது காற்று. காற்றை உணர முடியும். கண்ணுக்குப் புலப்படாதாயினும் காற்று எங்கும் நிறைந்திருப்பது. தன்னறிவும் காற்றைப் போன்றது. அளவிட முடியாதத் தன்னறிவின் பலனை நீ உணர முடியும்; உணர்த்த முடியும்.

   கண்ணுக்குப் புலப்படாத இன்னொன்று அணு. மிக மிகச் சிறியது. ஆனால் காற்றைப் போலவே எங்கும் பரவியிருப்பது. தன்னறிவும் அத்தகையதே. கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு நுட்பமானது. ஆனால் எங்கும் எதிலும் நிறைந்திருப்பதாகும்.

   அண்டத்தையும் காற்றையும் கடலையும் அணுவையும் நன்கு அறிந்தவர்களை நீ அறிவாயோ? அறிய மாட்டாய். காரணம் அவர்கள் மிக மிக அரிதானவர்கள். தன்னறிவு பெறுவதும் அரிதான செயலே.

   தன்னறிவைப் பெற விழையும் மாணவன், குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அத்தகைய மாணவர்கள் கிடைப்பது அரிது. தன்னறிவைத் தகுந்த முறையில் கற்பிக்கத் தகுதி வாய்ந்த ஆசிரியர் கிடைப்பது, அதனினும் அரிதாகும்" என்றான் எமன்.

'அது தெரிந்து தானே வரம் கேட்கும் பொழுதே மூவாசான் நீர்தான் என்றேன்?' என்று மனதுள் நினைத்தாலும் எமனிடம் பணிவுடன், "மேலும் சொல்லுங்கள்" என்றான் நசிகேதன்.

2011/06/07

அறிவுளோர் தன்னறிவு தேடுவார்


50
நன்மையும் இன்பமும் ஒன்றென்பார் நாலறிந்தார்
தன்பெருமை தட்டாதார் புன்மையிலார் - தன்னறிவே
கொண்டுவந்த ஒன்றிரண்டில் கொண்டுபோகும் ஒன்றென்னும்
அண்டமெய் கண்டார் அவர்.

   ன்பம் நன்மை இரண்டையும் சீராக ஏற்பவர்கள் அறிவுள்ளவர்கள்; நால்வகை அறிவும் பெற்றவர்கள்; தற்பெருமை பேசாதவர்கள்; அற்ப குணம் அற்றவர்கள். பிறப்பால் வரும் மூன்று உடைமைகளில், இறப்பிலும் உடன்வருவது தன்னறிவு மட்டுமே என்ற மகத்தான உண்மையைப் புரிந்தவர்கள் (என்றான் எமன்).


நாலறிந்தார்: பெறக்கூடிய நான்கு வகையிலும் அறிவைப் பெற்று முதிர்ச்சி அடைந்தவர்
புன்மையிலார்: அற்ப குணங்கள் இல்லாதவர்கள்
கொண்டுவந்த: உடன் பிறந்த
ஒன்றிரண்டு: மூன்று
அண்டமெய்: மிகப்பெரிய உண்மை


['life: the ignorant live it, the clever master it, the wise illuminate it' - emil nolde]

    றிவில் நான்கு வகை என்பதற்குப் பல விளக்கங்கள் உண்டு.

   நான்கு வேதங்களையும் கற்றறிந்த அறிவு என்பது சாதாரண விளக்கம். மனிதரை மேம்படுத்தும் எழுத்து, பேச்சு, சித்திரம், இசை என நான்கு வகைக் கலையறிவுகள் என்பது சற்றே விவரமான விளக்கம். படிப்பறிவு, பட்டறிவு, கேள்வி, ஞானம் என்பன நான்கு வகை அறிவுகள் என்பது சற்றே ஆழமான, எனினும் குறுகிய விளக்கம். மனிதம், மிருகம், தாவரம், கிருமி என நால்வகை உயிரினங்களைச் சேர்த்து வைத்த இயற்கையைப் புரிந்து, அதற்கேற்பச் சீரான மனித வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவு என்பது விளிம்பு விளக்கம்.

   இன்னும் பரந்த, ஆழமான பொருளுண்டா?

   மனித வாழ்க்கை என்பது அறியாமையிலிருந்து அறிவுக்கான பயணம் என்பதை ஏற்றோமானால், அறியாமையும் அறிவே அல்லது அறிவின் ஒரு நிலையே என்பதையும் ஏற்க வேண்டியிருக்கிறது. அறியாமையிலிருந்து அறிவுக்கான பயணத்தின் நான்கு நிறுத்தங்கள் என்று நால்வகை அறிவைக் காண முடியுமா? காண முடிந்தால், அறிவின் ஆழமும் அழகும் புலப்படும் என்று தோன்றுகிறது.

   ஐம்புலன்களினாலும் உணர்ந்து பெறக்கூடியது புலனறிவு. இது பொதுவான, சாதாரண, அடிப்படை அறிவு. புலனுள்ளோர் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய அறிவு. புலனறிவு தேவை; எனினும், புலனறிவை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு வாழும் மனிதர்கள் வீணர்கள்.

   தன் மற்றும் பிறரின் செயல்களை நன்மை, தீமை என்றுப் பகுத்துப் புரிந்து கொள்வது பகுத்தறிவு. மனித எண்ணம் மற்றும் செயல்களில் இரு நிலைகள் உண்டு; ஒவ்வொரு நிலையும் தரக்கூடியப் பலனை ஆய்ந்தறிந்து அதற்கேற்ப நடக்கத் தூண்டுவது பகுத்தறிவாகும். புலனறிவிலிருந்துப் பகுத்தறிவுக்கு நாம் அடியெடுக்கிறோம். எனினும், நம் கண்மூடித்தனங்களினால் புலனறிவுக்கே அடிக்கடி பின்தள்ளப்படுகிறோம். பகுத்தறியும் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ளாதவர்களுக்குக் கோளில் பொறியில் குணமில்லை எனலாம். ('உண்டு, இல்லை என்பதே பகுத்தறிவு' என்பவர்கள் புலனறிவு மட்டுமே கொண்டக் கண்மூடிகள்).

   புலனறிவையும் பகுத்தறிவையும் மட்டுமே கொண்டு வாழ முடியும். புலனறிவு-பகுத்தறிவு-புலனறிவு என்ற சுழலில் வாழ்வின் பெரும்பகுதியை அல்லது முழுவதையுமே கழிக்கிறோம். எனினும், இவை அறிவல்ல. அறிவைப் போன்ற உணர்வுகளே தவிர, அறிவல்ல. வாழ்க்கை என்பது அறியாமைக் காட்டிலிருந்து அறிவூரை நோக்கிய பயணமென்றால், புலனறிவும் பகுத்தறிவும் அறியாமைக் காட்டின் பகுதிகள். புலனறிவும் பகுத்தறிவும் அறிவல்ல என்று உணர்ந்தவர்கள் அறியாமைக் காட்டைக் கடந்தவர்கள் எனலாம். அறிவூரின் எல்லை மெய்யறிவில் தொடங்குகிறது.

   மெய்ப்பொருள் காண்பதும் அறிவு. இருமைகளின் நிலையறிந்து, இருமைக்குள் ஒருமையும் ஒருமைக்குள் இருமையும் அடங்கியிருப்பதைப் புரிந்து கொண்டு, சீரான சிந்தையும் நடத்தையும் பெறச்செய்வது மெய்யறிவு. பொய்தீர் ஒழுக்க நெறியைப் புகட்டுவது மெய்யறிவு. 'இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி, ஒளியும் இருளும் வட்டத்தின் விட்டங்கள், பிறப்பும் இறப்பும் சுழலின் வேகம்' போன்ற எளிய, ஆழமான உண்மைகளின் ஆணிவேர் மெய்யறிவு. புலனாலும் பகுப்பாலும் புரிந்தவற்றை வாழ்வின் நடைமுறையாக்கி உணர்ந்து செயல்பட வைப்பது மெய்யறிவு. மெய்யறிவைப் பெற மனமில்லாதவருக்குப் புலனறிவினாலும் பகுத்தறிவினாலும் பயனில்லை எனலாம். மனிதருக்கு அப்பாற்பட்டது மெய்யறிவு என்று சொல்லப்படுகிறது. அதன் உட்பொருள், மெய்யறிவு மனிதரால் எளிதில் பெறமுடியாது என்பதல்ல; மெய்யறிவு பெற்ற மனிதர் கடவுள் போனறவர் என்பதே.

   'ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கும்' என வரும் திருநெறிப்பாடல் தெரிந்திருக்கலாம். உமாபதித் தேவரின் கொடிக்கவி பாடலில் வருகிறது. 'ஒளிக்கும் இருளுக்கும் இடம் ஒன்றே; அறிவுக்கும் ஆணவத்துக்கும் (அறியாமை) இடம் ஒன்றே. இரண்டு சக்திகளுக்கும் ஒரே இடம் தான். ஒரு சக்தி மேலிட்டால் இன்னொன்று ஒளிந்து கொள்ளும். அறியாமை மேலிட்ட காலத்து அறிவு ஒளிந்து கொள்ளும்' என்ற பொருளில் தொடரும் பாடல், அறிவு அறியாமையை வென்று நிற்கும் என முடிகிறது. (திருமதி. கீதா சாம்பசிவம் விளக்கியிருக்கும் இந்தப் பாடலின் பின்னணிக்கதை சுவையானது).

   மெய்யறிவு கண்டவர்கள் சக்தி உடையவர்கள். தங்கள் வாழ்வின் அருமையை அறியத் தொடங்கியவர்கள். மெய்யறிவுப் பாதையெனில் 'ஒருமைக்கானத் தீவிர யோகம்' என்று பொருளல்ல. தான் பிறந்த காரணத்தைப் புரிந்து, தன் வாழ்விற்கு ஒரு இலக்கைத் தீர்மானித்து, அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள முனைவதும் முயற்சியில் இறங்குவதும் மெய்யறிவே. அறியாமைக் காட்டிலிருந்து வெளிவந்ததும், மெய்யறிவு நிறுத்தத்தில் இளைப்பாறுவது இயல்பே. அங்கிருந்து பயணத்தைத் தொடரலாம், என்றாலும் மெய்யறிவைக் கண்டதே வாழ்வில் பெரும் நிறைவைக் கொடுக்கும் எனலாம்.

   மெய்யறிவில், அறிவின் எல்லையில், காலடி வைத்து மீண்டும் அறியாமைக் காட்டுக்குள் அடைக்கலம் புகுவோர் எண்ணற்றோர். சிலரே தொடர்ந்து பயணித்து வாழ்வின் பொருளறிகிறார்கள்; இலக்கை அடைகிறார்கள்.

   சொந்த பந்த இன்ப துன்ப கால இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு, தன்னையும் பிறரையும் மதித்து, எளிமையான நிலையிலும் தன் வாழ்வை, தன் விருப்பம் போல் வாழந்தால் அதுவே கடவுளைக் கண்டதற்கு ஒப்பான நிறைவையும் நிம்மதியையும் கொடுப்பதால், மெய்யறிவு பெற்றவர்களைக் 'கடவுளைக் கண்டவர்' என்கிறோம்.

   கடவுளைக் காணத் தூண்டுவது மெய்யறிவென்றால், கடவுளைக் கைக்குள் அடக்குவது வாலறிவு. கடவுளைத் தேடி வெளியே போக வேண்டியதில்லை; உள்ளிருக்கும் கடவுளை உன்மனியால் உணர்வது வாலறிவு. 'கடவுளைக் கண்ட' நிலைக்கும் மேலானதொன்று உண்டென்றால், அது 'கடவுளைக் கொண்ட' நிலை எனலாம். இறையையும் தன்னையும் ஒன்றாக்கும் நிலை வாலறிவு. 'தானே இறைவன், தனக்கு இணையானவர் இல்லை, தன் சக்தியும் பெருமையும் எல்லையற்றது' என்று நினைப்பது வாலறிவு அல்ல; அது வாலறுந்த புலனறிவு. வாலறிவு என்பது, ஆணவம் கடந்த அமைதி நிலை. 'தானே இறைவன்' என்ற மகத்தான உண்மை அறிந்து ஆணவமொழித்த நிலை. வாலறிவுக்கு வழிபாடுகள் இல்லை. வாலறுந்த அறிவுக்குக் கோவிலும் வழிபாடும் பலிகளும் உண்டு. இதைப் புரியாமல், கண்மூடிப் புலனறிவுக்குள் புரண்டு கொண்டிருக்கும் மனிதம் பரிதாபமானது.

   வாலறிவாளர் பெரும் சக்தி கொண்டவர்கள். அவர்களின் சாதனைகள் காலத்தை வென்றவை. சாதாரண புலனறிவு, பகுத்தறிவுச் சாதனைகளுக்கு அப்பாற்பட்டவை. மேம்பட்டவை. அதனால் தான் கலிலியோவின் பல சாதனைகளை விட, காந்தியின் ஒரு சாதனைக்கு மதிப்பு அதிகம்.

   வாலறிவு, அறிவூரின் மையம். வாழ்வின் மெய்ப்பொருள் அறிந்த நிலை.

['..தேன் என்ன, கடிக்கும் தேள் என்ன, ஞானப்பெண்ணே? வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதையென்ன?' - கண்ணதாசன் ]

    றிவுள்ளவர்களை அடையாளம் காட்டத் தொடங்கினான் எமன். "நசிகேதா, அறிவில்லாதவர்களின் குணங்களைத் தவிர்ப்பவர்கள் அறிவுள்ளவர்கள். எந்த நிலையிலும் சீராக எண்ணிச் செயல்படுவார்கள். 'எல்லாம் நன்மைக்கே' என்ற நிலை கொண்டவர்கள் என்பதால், இன்பங்களினால் பாதிக்கப்படுவதில்லை. இயல்பாகப் பெறுவதையும் ஒதுக்குவதில்லை; தொடர்ந்து இன்பம் தேடும் முயற்சியிலும் ஈடுபடுவதில்லை.

   அறிவுள்ளவர்கள் புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு, வாலறிவு எனும் நான்கு வகை அறிவினையும் பெற்றவர்கள். தங்களுக்குள் இருக்கும் அசாதாரண சக்தியைப் புரிந்து கொண்டு, அதனால் தானும் தன்னைச் சுற்றியிருப்போரும் பயனடையும் விதத்தில் நடப்பவர்கள்.

   அறிவுள்ளவர்களுக்கு எந்த வகைத் தற்பெருமையும் கிடையாது. தன்னையும் பிறரையும் மதிப்பவர்கள். தன்னுடைய பெருமையைப் பிறரின் பெருமையாக எண்ணும் பக்குவமுடையவர்கள்.

   ஆறு வகை நற்குணங்களைக் கொண்டவர்கள். ஆறு வகைத் தீக்குணங்களைக் களைந்தவர்கள். அறிவுள்ளவர்களிடம் அற்பமான எண்ணமோ செயலோ காணமுடியாது" என்றான் எமன்.

   நசிகேதன் சிந்தித்தான். அறிவுள்ளவரைப் பற்றி அறிந்து கொண்டதில் அவனுக்கு மகிழ்ச்சி; எனினும், ஒரு வெறுமையை உணர்ந்தான். அறிவில்லாதவர்களுக்கு எதிர்நிலை என்பது புரிந்தாலும், 'அறிவென்பது இதானா?' என்ற அசாதாரணம் அவன் மனதில் தோன்றியது. 'இதற்கா இவ்வளவு தூரம் வந்தோம்?', 'இவ்வாறு நடந்து கொண்டால் பிறவிப்பிணி தீருமா?' என்று பல கேள்விகள் அவன் மனதுள் ஓடின. "ஐயா, அறிவுள்ளவர்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள்" என்றான்.

   நசிகேதனின் எண்ணங்களைப் படித்த எமன், தன் மாணவன் அடங்கா அறிவுப்பசி கொண்டவன் எனப் புரிந்து கொண்டான். "நசிகேதா, அறிவுள்ளவரின் மிகப் பெரிய அடையாளத்தைச் சொல்கிறேன், கேள். பிறப்பால் பெறும் மூன்று சொத்துக்களில் தன்னறிவு மட்டுமே இறக்கும் பொழுதும் உடன் வருவது என்பதை அறிந்தவர்கள், அறிவுள்ளோர்" என்றான்.

   "பிறப்பால் வரும் சொத்துக்களா? அப்படியென்றால்?" என்று கேட்டான் நசிகேதன்.

   "மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் கொண்டு வருபவை மூன்று. முதல் சொத்து தாய்-தந்தை என்ற உறவு. இரண்டாவது, உயிர்த்துடிப்பு. மூன்றாவது, உள்ளறிவு. இவை மூன்றுமே பிறப்பால் உண்டாகும் சொத்துக்கள். பிற செல்வங்கள் சொந்தங்கள் எல்லாம் இடையில் சேர்ப்பவை, தொலைப்பவை. மனிதர்கள் இறக்கும் தறுவாயிலும் பிறப்பால் பெற்ற மூன்று சொத்துக்களுக்கும் உடைமையாளராக, உரிமையாளராகவே இறக்கிறார்கள்.

   இந்த மூன்றில் 'உண்டான' இரண்டு, பெற்ற உறவும் உயிர்மூச்சும் ஆகும். அவற்றை மாற்றவோ சீராக்கவோ மனிதரால் முடியாது. 'உருவாகக்' கூடியது உள்ளறிவு மட்டுமே. அதனை மட்டுமே மனிதரால் தேடியறிந்து தன் விருப்பம் போல் உருவாக்கிச் சீராக்க முடியும். பிறப்பிலிருந்து இறப்பு வரை, அறிவுள்ள மனிதரின் ஒரே குறிக்கோள், தன்னறிவைத் தேடி வளர்த்துத் தனக்கும் பிறருக்கும் பயனுற வாழ்வதே. 'எப்படி வாழ்ந்தோம் என்கிற முத்திரையைப் பதிக்க வல்லது தன்னறிவு' என்பது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.

   பிறப்பால் பெற்ற மூன்று உடைமைகளில், இறக்கும் பொழுது உயிர்த்துடிப்பு நின்று விடுகிறது; உயிர் நின்ற கணமே உடன் வந்த பெற்றோர் உறவும் முறிந்து விடுகிறது. அந்நிலையில், இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள்" என்றான் எமன்.

   நசிகேதனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. ஒருமையும் ஒண்குணங்களையும் கடந்தத் தன்னறிவின் வீச்சைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினான். தன்னறிவே தான் தேடிய விடை என்பது அவன் உள்ளத்தில் உருக்கொள்ளத் தொடங்கியது. "ஐயா, தன்னறிவு என்றால் என்ன? அதன் இலக்கணத்தையும் தன்னறிவு பெற்றோரின் குணங்களையும் பற்றி மேலும் அறிய விழைகிறேன்" என்றான்.

2011/06/03

அறிவிலார் எமன் வலையில் விழுவார்


49
இன்பங்கள் உண்டு இதுவே உலகென்பார்
அன்னோ! அறிவுச் சிறாரவர்! - அன்னாரோ
உன்மனி யாண்டும் பெறாது உருக்குலைவார்
என்வலையில் மீண்டும் விழுந்து.

   ன்றைக்கு, இப்போது என இன்பங்களை நுகர்ந்து வாழும் அறிவற்றவர்கள், இதுவே உலகம் இதைத்தவிர வேறு உலகமில்லை என்று, விவரம் தெரியாத குழந்தைகள் போல் எண்ணி அறியாமையில் உழல்வார்கள். அந்தோ! உயர்ந்த யோகநிலையினால் அடையக்கூடியத் தன்னறிவை அவர்கள் எந்தக் காலத்திலும் எந்தப் பிறவியிலும் பெற வழியில்லாமல், பிறவிக்குப் பின் பிறவியாக எடுத்துக் கலைத்து, மீண்டும் மீண்டும் என் பிடியில் சிக்குவார்கள் (என்றான் எமன்.)


அன்னோ: பரிதாபச் சொல் (ஐயோ, அந்தோ)
சிறார்: சிறுவர், வளர்ச்சி குன்றியவர், சிறுமையானவர்
உன்மனி: உள்ளிருக்கும் சக்தி, யோக அறிவு, மெய்யறிவு
யாண்டும்: எங்கேயும் எப்போதும் (எந்த உலகிலும், எந்தப் பிறவியிலும்)


['if ignorance is bliss, why aren't more people happy?' - thomas jefferson ]

    வரவருக்குத் தனி அலகு என்றாலும், பொதுவாக 'பொருண்மை அல்லது உலகாயதம் (materialism) எந்த அளவுக்கு நம்மைப் பாதிக்க அனுமதிக்கிறோம்?' என்ற கேள்வியை அடிக்கடி கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. 'பதில் தேடி ஏதும் செய்கிறோமோ?' என்பது இரண்டாம் படி. கேள்வி கேட்கும் முதல் படியே நம்மில் பலருக்கு மிக உயரமாகத் தோன்றுகிறது.

   'rapture ready' என்று ஒரு மதக்குழு. அதன் தலைவர், கேம்பிங் என்று ஒரு மதவாதி. "2011ம் ஆண்டு மே மாதம் 21தேதி மாலை ஆறு மணிக்கு தேவன் வருவார்; அன்றைக்கு 200,000 பேர்களுக்கு தேவனின் ராஜ்ஜியத்திற்கு இலவசப் பயணச்சீட்டு கிடைக்கப் போகிறது; மற்ற எல்லோருக்கும் அவரவர் பாவங்களின் சம்பளம் கிடைப்பதுடன், உலகமும் அழியப் போகிறது" என்று கிட்டத்தட்ட ஒரு வருடமாக உலகமெங்கும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தார். 1970லிருந்து பிரசாரத்தை விட்டுவிட்டுத் தொடங்கினாலும், சமீப இரண்டு ஆண்டுகளாக இவரது பிரசாரம் தீவிரமானது. சென்ற ஒரு வருடத்தில் மட்டும் இவரது பிரசார நிறுவனம் ஏறக்குறைய 11 மிலியன் டாலர் நன்கொடைகள் பெற்றிருக்கிறது.

    தேவ ராஜ்ஜியக் கனவில் இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அல்லது அறிந்து, செய்த செயலின் விளைவு என்ன? மே 21ம் தேதி வந்து போனது. தேவனைக் காணோம். உலகம் அழியவில்லை. பாவங்கள் குறையவில்லை. ஆனால், கேம்பிங்கை நம்பியவர்களின் நிலை குலைந்தது. ஒரே இரவில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட முப்பத்தாறு குடும்பங்களைப் பற்றி, ஒரு வாரமாக அமெரிக்க ஊடகங்களில் அலசல். "சொர்க்கம் கிடைக்கும், நிரந்தர நிம்மதி கிடைக்கும், சொர்க்கத்தில் தேனும் பாலும் ஓட அதில் என் பூர்வீகத்தோடு குளிப்பேன்" என்று கனவு கண்டதாகவும், கட்டத் துணி கூட இல்லையென்றும், ஏமாந்தவர்கள் இப்போது புலம்புகிறார்கள். மதவாதி கேம்பிங் என்ன சொல்கிறார்? "கணக்கில் தேதி தவறாகி விட்டது; அக்டோபர் மாதம் 21ம் தேதி நிச்சயம் அழியப்போகிறது. அன்றைக்குத் தேவனின் பொன்னுலகக் கதவுகள் திறக்கும்" என்கிறார்.

    கேம்பிங் நிறுவனம் பெற்ற 11 மிலியன் டாலரில் சல்லிக்காசு கூட திருப்பப் படவில்லை. சட்டப்படி அவர் எதுவும் தவறு செய்யவில்லை. முறையாக வரி கட்டியமைக்கு, அமெரிக்க வருமானவரித்துறை கேம்பிங் நிறுவனத்தைப் பாராட்டியிருக்கிறது. கேம்பிங் தன் 60 ரேடியோ நிலையங்களில் அக்டோபர் 21ம் தேதிக்கான பிரசாரத்திலும் பிரார்த்தனையிலும் இறங்கிவிட்டார். சொர்க்கத்தில் பொன்னும் மணியும் இன்பமும் அமைதியும் தேடி, இன்னும் எத்தனை குடும்பங்கள் இவரைத் தொடர்வார்கள்? அக்டோபர் 22ம் தேதி தெரியும்.

    ப்பில் நிறுவனம். சாதாரண நுட்பத்தை பப்பளப்பாக்கி ஐ-இது ஐ-அது என்று உலகெங்கும் விற்று, இளைய சமுதாயத்தின் மொத்த ஆதர்சத்தும் அதிபதியாக, இன்றைக்கு உலகத்தின் மிக விலைமதிப்பு மிக்க நிறுவனமாக இயங்குகிறது.

    சில நாட்கள் முன்பு, ஆப்பில் தொழிற்சாலை ஒன்றில் பதினைந்து பேர் கோரமான விபத்தில் இறந்து போனார்கள். நிறைய பேருக்கு இது தெரியவே போவதில்லை. காரணம், தொழிற்சாலை சைனாவில் இருப்பதால் அல்ல; அது ஆப்பில் நிறுவனத்தின் நேர் நிர்வாகத்தின் கீழ் வராததால் மட்டுமல்ல; விபத்தினால் வர்த்தக இழப்பு நேர்ந்து விடக்கூடாதே என்று அவசரமாகக் கூட்டுச்சேர்ந்த இயக்கங்களின் முதிர்ந்த எண்ணத்தினால், முயற்சியினால்.

    உலக மக்கள் ஐபாட், ஐபேட் வேண்டும் என்று துடிக்கிறார்கள். அதனால் ஆப்பில் தயாரிப்புக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. தேவையைச் சமாளிப்பதற்காக அவசரமாக நியமிக்கப்பட்ட தொழிற்கூடங்களில் விபத்து ஏற்பட்டுப் பதினைந்து தொழிலாளிகள் மரணமடைந்தது, அப்படியொன்றும் பெரிய செய்தியல்ல. செங்டுவில் அந்தப் பதினைந்து குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டு விட்டது. அக்குடும்பங்களில் அடுத்தத் தொழிலாளிக்கு வேலையோ அல்லது அதற்கான உத்தரவாதமோ கொடுக்கப்பட்டு விட்டது.

    நல்லவேளையாக, ஐபாட் ஐபேட் தயாரிப்பு தடையில்லாமல் நடைபெறுகிறது. அதைவிட்டு, அரசாங்கமும் தனியார் வர்த்தக நிறுவனங்களும் கூட்டாண்மையும் சமூக இயக்கங்களும் சேர்ந்து இதைப் பற்றி ஏதாவது செய்திருந்தால் என்னவாகி இருக்கும்? நினைத்தாலே நடுங்குகிறது.

    முதல் வேலையாகத் தொழிற்கூடங்களைத் தற்காலிமாக மூடியிருப்பார்கள். விசாரணை தொடங்கியிருப்பார்கள். தயாரிப்பு முடக்கப்பட்டிருக்கும். நஷ்டவழக்கு போட்டு நியாயம் பெற்றுத் தருவதாகப் பெரிய பெரிய சட்ட நிறுவனங்கள் களமிறங்கியிருக்கும். விற்பனை பின்தங்கியதால் ஆப்பில் நிறுவனததுக்கு வருமானம் குறைந்திருக்கும். நிறுவனத்தில் வேலை செய்வோருக்குக் கால்வருட போனஸ் கிடைத்திருக்காது. பங்குச்சந்தையில் ஆப்பில் நிறுவனம் அடிபட்டு பலருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். கடைகளில் விற்கப் பொருளில்லாமல் தவிப்பார்கள். மக்கள் ஐபாட் ஐபேட் வாங்க முடியாமல் பெரும் துன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள். சைனா-அமெரிக்கா தொழிலுறவு முறைகளில் சிக்கல் உண்டாகியிருக்கும். மற்ற நிறுவனங்கள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பார்கள். அது, மேலும் சைனாவின் தொழிற்சாலைகளைப் பாதிக்கத் தொடங்கும். அங்கிருப்போர் வேலையிழப்பார்கள். சைனா அரசாங்கத்துக்கு செலவு ஏற்பட்டிருக்கும். இதனால் 6 பிலியன் டாலர் பொருள் நஷ்டம் உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

    உயிர்ப்பலி கொடுத்தப் பதினைந்து குடும்பங்களுக்கு அவசர நஷ்டஈடும், மறு வேலைக்கான உத்தரவாதமும் கொடுத்து, பங்கு பெற்ற அத்தனை இயக்கங்களும் மகத்தான இழப்பைத் தவிர்த்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய சமயோசிதம். இதனால் பள்ளி, கல்லூரித் திறப்பு, மற்றும் மணநாள், பிறந்தநாள், பண்டிகை, பிற விழாக்களைப் பரிசு வழங்கிக் கொண்டாடப் பொதுமக்களின் விருப்பப்படி கலர் கலராய் ஐபாட் ஐபேட் கிடைக்கும். 6 பிலியன் டாலரும் பிழைத்தது.

   னிதராய்ப் பிறக்க, மாபெரும் தவமும் புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஆறறிவாமே?

['மனிதஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா' - கண்ணதாசன் ]

    'அறிவற்றோர் கதி பற்றிச் சொல்கிறேன், கேள்" என்று தொடர்ந்தான் எமன். "இன்பங்களைத் தேடியடைந்து, நற்குணங்களை விரட்டி, தீக்குணங்களை வளர்த்து தன்னைச் சுற்றியே வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவில்லாதவர்கள் செய்வது என்ன? இன்பங்களை நுகரும் அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் யாவை?

   இன்பத்தில் மிதப்பதால், அறிவை இழந்த நிலையில் என்ன செய்கிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்தக் கணத்தின் இந்த இன்பம் நிலைக்கும், இதுவே உலகம், இதைத் தவிர வேறு உலகமே இல்லை என்று ஆணவமாக எண்ணத் தொடங்குகிறார்கள். விவரம் அறியாச் சிறு குழந்தைகள் போல, தன் உலகம் நிலையானது, இன்பம் நிரந்தரமானது என்றுத் தங்கள் சிந்தனை, சொல், செயல்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

   அவர்களின் நிலை பரிதாபமானது. ஆணவத்தாலும், அறிவின்மையாலும் வேறு உலகங்கள், நிலைகள் பற்றிய எண்ணங்களே அவர்களுக்குத் தோன்றுவதில்லை. எடுத்துச் சொன்னாலும், பிடிவாதம் கொண்ட விவரமறியாக் குழந்தை போல் அவர்கள் புரிந்துகொள்ள மறுப்பார்கள்.

    ஒவ்வொரு மனிதருக்கு உள்ளிருக்கும் அறிவை, யோகமுறை மற்றும் சீரிய நெறிகளால் உணர்ந்து பயன்படுத்தக் கூடிய சக்தியை, தன்னறிவை... இத்தகைய அறிவிலிகள் அடையவே முடியாது" என்றான் எமன்.

   "அப்படியென்றால் அவர்களுக்கு உய்வில்லையா?" எனக் கேட்டான் நசிகேதன்.

   "பரிதாபம்! உடல், உணவு, பொருள் என்று புலனின்பம் மட்டுமே தேடிப் பிற நிலைகளைச் சிறிதும் எண்ணாத அறிவிலிகளுக்கு உய்வில்லை. அவர்களுக்கு எந்தக் காலத்திலும் ஞானம் கிடைக்காது. மெய்யறிவு கிடைக்காது. பிறவியைத் தொடர்ந்து பிறவி என்று, என் வலையில் விழுந்து விழுந்து எழுவார்கள். மீண்டும் வந்து விழுவார்கள்" என்றான் எமன்.

   நசிகேதனுக்கு இந்த உண்மை புரிந்ததும் தன்னைப் பற்றிய ஒரு ஐயம் எழுந்தது: தான் அறிவில்லாதவனா, அறிவுள்ளவனா? "நன்றி ஐயா, அறிவற்றோரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். அறிவுடையோரைப் பற்றிச் சொல்லுங்கள்" என்று எமனிடம் கேட்டான்.