வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/11/25

நசிகேதன் விடைபெற்றான்


76
காலனின் கால்பணிந்தான் தான்கற்றத் தத்துவமோ
ஞாலத்து மையகற்றும் ஞாயிறென்றான் - சால
அமைதி அறிவு அருளுடன் மீண்டான்
இமையான் இதயக் கனி.

   லகத்தின் இருளகற்றும் கதிரவனைப் போன்றதாகும் தான் கற்ற உண்மை, என்று சொல்லி எமனைப் பணிந்து வணங்கினான். மிகுந்த அமைதி அறிவு மற்றும் எமனின் அருளுடன் தன்னுலகம் திரும்பினான், எமனின் இதயத்தில் இடம் பிடித்த நசிகேதன்.


தத்துவம்: உண்மை, நுட்பமான அறிவு
சால: மிகுந்த
இமையான்: எமன்


    சாபம், சாபக்கேடு இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

நாம் கண்மூடித்தனமாக நடக்க வேண்டும் என்பது சாபம். நம் கண்மூடித்தனங்கள் நம் சந்ததிக்கும் பரவ வேண்டும் என்பது சாபக்கேடு. சாபத்தை உணர்ந்துச் சாபக்கேட்டைத் தவிர்ப்பவர்கள் மகான்கள். சாபம் என்பது தெரிந்தும் சாபக்கேட்டைத் தொடர்வோர் மலத்தினும் கேவலமானவர்கள். மதத்தினும் கேவலமானவர்கள் என்று சொல்ல வந்தேன், வசதியானப் பிழையாகி விட்டது.

மகான்களின் வெளிப்பாடுகளை மட்டும் பிடித்துக்கொண்டு, அவ்வெளிப்பாடுகளின் உந்துதலைப் புரிந்து கொள்ளாமல், கிடைத்தப் புதையலை இழக்கிறோம். உதாரணத்துக்கு, காந்தியிடமிருந்து உண்ணாவிரதம் சத்தியாகிரகப் பழக்கங்களைப் பிடித்துக் கொண்டோம். தன்மானம், அமைதியான எழுச்சி, எளிமை, பொதுநலக் கொள்கைத் தீவிரம், தியாகம் போன்றவற்றை உதறிவிட்டோம்.

எத்தனை மகான்கள் தோன்றினாலும் மனிதம் மந்தையினமாகவே இருக்கிறது. இதுவே நியதி என்று நினைக்கும் பொழுது கலக்கமாக இருக்கிறது. பாருங்கள், இத்தனை சூரியன்கள் நட்சத்திரங்கள் இருந்தும், அண்டத்திலும் இருளே அதிகம்.

எனினும், மந்தைகளைப் புரிந்துகொள்ள மகான்கள் தேவை.

    "ஐயா, அறிவிலே ஏழையாக இருந்த எனக்கு மெய்யறிவு எனும் பெருஞ்செல்வத்தை வழங்கினீர்கள். நீங்கள் சொன்னது போலவே அறிவுச் செல்வத்தின் சுமையை உணரத் தொடங்கிவிட்டேன். இதனைப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே சுமை குறையும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

நீங்கள் எனக்களித்த அறிவை எம்மவரிடம் சேர்ப்பேன். தன்னறிவின் தன்மையையும் பெரும்பேற்றின் உண்மையையும் எம்மவருக்கு எடுத்துரைப்பேன். உங்கள் அருளால் நான் கற்றத் தன்னறிவுப் பாடம், எம்முலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவல்ல ஆதவனாகும்.

பெரும் கலக்கத்தோடு இங்கு வந்தேன். நிறைந்த அறிவு, தெளிவு, மற்றும் அமைதியுடன் விடைபெறுகிறேன். எல்லாம் உங்கள் அருள்" என்று எமனைப் பணிந்து நன்றி சொன்ன நசிகேதன், புறப்பட்டான். மண்ணேக விரைந்தான்.

தன் பேரறிவுச் சுமை விலகியதை உணர்ந்தாலும், விடை கொடுத்த எமன் கலங்கினான். வாராது வந்த மாமணியைப் பிரிகிறேனே? இனி என் அறிவைப் புடம் போட இவனைப் போல் யார் வருவார்? இவன் உரையைக் கேட்டு உய்வார்களா இவனுலக மக்கள்? இவனுக்குப் பின் வரும் கண்மூடிகளை நினைத்தாலே கலங்குகிறதே? ஒருவேளை இவன் பேச்சைக் கேட்கத் தொடங்கிவிட்டால்? இவன் பேச்சைக் கேட்டு இவனுலகத்தாரும் மரண பயத்தை விடுத்தால் என்னாவது? கண்மூடித்தனங்களைக் கைவிட்டால் என்னாவது?... என்று பலவாறு எண்ணினான். தன் மாணவனின் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நசிகேகதனுக்குப் பூமியில் காத்திருந்த வரவேற்பை எண்ணியக் காலனின் முகத்தில் கனிவும் புன்னகையும் நிறைந்திருந்தது.

மூன்றாம் பகுதி முற்றும்

2011/11/22

நசிகேதன் கதை நிம்மதி தரும்


75
அசிந்தவர் இல்லம் அமைதியுடன் ஆறும்
நசிகேதா நின்நூல் நவின்றால் - ஒசிவின்றி
இப்பாலில் உய்வாரே உள்ளவர் உன்கதையைத்
தப்பா துரைக்கும் தினம்.

   சிகேதா! உன் சிறப்பைச் சொன்னால், மரணம் உண்டான வீட்டில் துயரடங்கி அமைதி உண்டாகும். (மேலும்) உயிரோடிருப்பவர்கள் உன் கதையைத் தவறாமல் உரைத்தால் மரணக் கலக்கமின்றி இம்மையிலே மேன்மையடைவார்கள் (என்றான் எமன்).


அசிந்தவர்: இறந்தவர்
ஒசிவின்றி: வருத்தமின்றி (ஒசிவு என்பது அழிவு, இழப்பைப் பற்றிய வருத்தம்)
இப்பாலில்: இம்மையில், இப்பிறவியில்


    ங்கேயோ எப்போதோ படித்தது: 'death leaves an ache hard to heal; love leaves a memory hard to steal'.

அழியப்போவதை எண்ணிக் கலங்கி, அழிக்க முடியாததை மறந்து விடுகிறோம். சற்றே இறுக்கமான எண்ணம் தான், எனினும் அடுத்த நிமிடம் நாம் இறந்தால், எத்தகைய சொத்தை விட்டுப் போகிறோம் என்று சிந்திப்போமா? (ஆசானும் நண்பருமான அரசன் என்னிடம் இந்தக் கேள்வியைக் காப்பீடு விற்பனையாளர் போல அடிக்கடி கேட்டதால், அவரோடு பேசுவதையே சில நாட்கள் நிறுத்தியிருந்தேன். அவர் கேள்வியைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை. இன்னும்.)

கொண்டு வந்ததென்ன, அதில் கொண்டு போவதென்ன என்ற வேதாந்தக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உலகாயதப் பார்வையில் அந்தக் கேள்வி பொருத்தமே. 'கொண்டு போவதென்ன?' என்பதை மாற்றி, 'விட்டுச் செல்வதென்ன?' என்றச் சித்தாந்தப் பார்வையில் புரியும் காட்சி, நம்மில் பலரைத் திடுக்கிட வைக்கும் என்றே நினைக்கிறேன்.

'விட்டுச் செல்லும்' சொத்துக்களை, விலைமதிப்புக்கு உட்பட்டவை அப்பாற்பட்டவை என, இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இன்றைய உலக நிலவரத்தில் நம் சந்ததிகளுக்கு இரண்டுமே தேவை.

சந்ததி என்ற பார்வையிலும் சூட்சுமம் இருக்கிறது. ஊனில் கலந்தது சந்ததியா, உறவில் கலந்தது சந்ததியா, உலகம் முழுதும் சந்ததியா? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதப் பார்வையில் அணுகுவார்கள் என்றே நினைக்கிறேன். தவறில்லை. பொருளுக்கேற்ற மருளும் தெருளும் அவர்களின் சிந்தையிலும் செயலிலும் வெளிப்படுகின்றன.

உள்ளிறங்கிய உலகத்தை விட வெளியேறும் உலகம் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களைச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வதில் குறியாக இருக்க வேண்டும்.

விலை மதிப்புக்கு அப்பாற்பட்டவை என்றால் மிகப் பெரும் சாதனைகளாக இருக்க வேண்டியதில்லை. எனில் இவை யாவை?

கோவில் கும்பாபிக்ஷேகம் பூஜை விரதம் புண்ணியச்சடங்குகளில் மட்டுமே இவை உண்டு என்று எண்ணிச் செயல்படுவோர், பெரும் ஏமாற்றத்தை எதிர்நோக்கிப் புரியாமலே பயணிக்கிறார்கள். பேதைகள்.

தன்னைச் சார்ந்தவர்களின் நலனையும் உலக மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படுவோர், சரியான பாதையில் பயணிக்கிறார்கள்.

மேம்பாடு, தான தருமங்களால் மட்டுமே வரவேண்டியதில்லை. அன்பு, கருணை, நல்லெண்ணம், கல்வி, உதவி, வளம், அளவான ஆசை, அளவுக்குட்பட்ட தேவை, மறுமலர்ச்சி, ஆக்கம், அமைதி என்று எத்தனையோ வகையில் மேம்பாட்டை அணுகலாம். அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ப 'விட்டுச் செல்ல வேண்டிய' இத்தகைய சொத்துக்களைத் திட்டமிட்டு, அவற்றைச் செயலாற்றும் திறனும் வயதும் இருக்கும் பொழுதே செய்து முடிக்க வேண்டும்.

விலைமதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களை வழங்க வேண்டியதில்லை; தடுக்க நினைத்தாலொழிய அவை தானாகவே சந்ததிகளிடம் சேருகின்றன. வீடு மனை பணம் பண்டம்... தடுத்தாலும் இச்சொத்துக்கள் வழக்கு நீதிமன்றம் என்று கிளம்பி, சந்ததிகளைச் சேர்ந்துவிடும்.

விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களோ தானாகச் சந்ததிகளுக்குச் சேர்வதில்லை. அன்பு கருணை புன்னகை பொறுமை உதவி தியாகம் நன்னெறி கல்வி அறிவு அடக்கம் அமைதி கூட்டுறவு நேயம்... எந்த நீதிமன்றமும் இவற்றைச் சந்ததிகளுக்குப் பிரித்து வழங்க முடியாது. சேர்ப்பதும் கொடுப்பதும் நம் கையில், நம் முயற்சியில், நம் தீவிரத்தில் இருக்கிறது.

விலைமதிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சிறிய சொத்தை விட்டுச் செல்வது என்று நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துச் செயலாற்றினால், அடுத்த நூறு வருடங்களில் மனிதம் எத்தனை தூரம் நிறைவை நோக்கிப் பயணித்திருக்கும் என்பதைக் கற்பனையிலும் கட்ட முடியவில்லை.

கண்ணதாசன் தனக்கு எழுதிக்கொண்ட இரங்கற்பாவிலிருந்து:
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
   தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
   கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
   காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
   எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
   சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
   இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
   கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
   கொண்டவன் தான் புறப்ப டானோ!
'ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் பிழைத்தோம், இனி இப்படியே வாழ்ந்து முடிப்போம்' என்ற எண்ணமே பெரும்பாலும் நம்மைக் கட்டிப் போடுகிறது. வெட்கக்கேடு, எனினும் இது இயல்பானது என்பதை அறிந்து, தன்னை மறுக்கும் தன்மை பெற வேண்டும். தவறினால் புத்தாவியை எண்ணிப் புலம்பத் தெரிய வேண்டும் :)

சாதனை என்பது உள்பார்வை என உணர்ந்து கொண்டக் கணத்தில், வாழ்வில் நிறைவை நோக்கி அடியெடுக்கிறோம். அவ்வாறு அடியெடுக்கச் சாக்குகளும் புகார்களும் சடங்குகளும் சொன்னோமானால், இன்னும் உணரவில்லை என்றே பொருள்.

நானும் இன்னும் உணரவில்லை.

    "நசிகேதா! இன்னொரு வரமும் தருகிறேன். நம்மிடையே நடந்த உரையாடலை விரிவாகப் படித்து விவாதித்து உன் சிறப்பை எடுத்து சொன்னால், மரணம் ஏற்பட்ட வீட்டில் துயரடங்கி அமைதி உண்டாகும். உயிருள்ளவர்களோ உன் கதையை அறிந்தால் அவர்களது இம்மை வாழ்விலே மேன்மையுறுவார்கள்" என்ற எமன், நசிகேதனுக்கு வாழ்த்துச் சொல்லி விடை கொடுத்தான்.

2011/11/18

உண்மையை உலகுக்கு உரை


74
உன்னய்யன் உம்மக்கள் உய்யவே மெய்யறிந்தாய்
பொன்னனையப் பூவே புறப்படு - இன்மொழியில்
மண்பாண்டம் மண்ணாகும் மாமரமும் வித்தாகும்
நுண்மையினை நாடறியச் சொல்.

   பூவின் மென்மையும், பொன்னின் மேன்மையும் கொண்டவனே! உன் தந்தையும் உன்னுலக மக்களும் உயர்வடைய வேண்டியே நீ மெய்யறிவு பெற்றாய். மண்ணால் உருவான பானை உடைந்து மண்ணிலே கலக்கிறது. மிகப் பெரிய மரமும் விதையிலே அடங்குகிறது. இந்த நுட்பத்தை, இனிமையான தமிழ்மொழியில் அனைவரும் அறியுமாறு எடுத்துச் சொல்லப் புறப்படு (என்றான் எமன்).




   ரு சிறந்த ஆசிரியருக்கு ஒரு சிறந்த மாணவர் நன்றிக்கடன் செலுத்துவது எப்படி? தான் பெற்ற அறிவை பிறருக்கு வழங்குவது மட்டுமே, ஒரு மாணவர் தன் ஆசிரியருக்குச் செய்யும் சிறப்பான நன்றியாகும்.

ப்லேடோவிடம் பயின்ற மாணவர்கள் கல்வி முகாம் முடிந்து விடைபெற வந்தார்கள். ஒவ்வொருவராக ப்லேடோவை வணங்கிப் பல வழிகளில் நன்றி சொன்னார்கள். பூச்செண்டு பொன்னாடை பழங்கள் என்று பரிசுகளையும் காணிக்கைகளையும் வழங்கி, கண்ணீர் மல்க விடை பெற்றார்கள்.

ப்லேடோவின் முகத்தில் சலனமே இல்லை. அமைதியாக விடை கொடுத்தார். மாணவர்கள், தங்கள் ஆசிரியர் பிரிவுத் துயரினால் பேச மறுக்கிறார் என்று நினைத்தார்கள்.

சற்று நேரம் பொறுத்து அரிஸ்டாடில் வந்தார். கையில் பரிசோ பூச்செண்டோ பொன்னோ எதுவும் கொண்டு வரவில்லை. ப்லேடோவுக்குப் பொன்னாடை போர்த்தவில்லை. ஒரு சிறு பழம் கூடத் தரவில்லை. தன் ஆசிரியரை வணங்கினார். பிறகு விரிவாக நன்றி சொல்லத் தொடங்கினார். அவர் நன்றி சொல்வதைக் கேட்டப் பிற மாணவர்கள், 'என்ன இது? அரிஸ்டாடில் என்னவோ உளறுகிறாரே!' என்று அதிர்ச்சியில் வெலவெலத்துப் போனார்கள்.

ஆனால் ப்லேடோவோ மெய்சிலிர்த்துக் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த ப்லேடோ, மகிழ்ச்சியில் கூத்தாடத் தொடங்கினார். ப்லேடோவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. தன் மாணவன் என்றும் பாராமல் அரிஸ்டாடிலை வணங்கினார் ப்லேடோ. பிற மாணவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

அரிஸ்டாடில் விரிவாக நன்றி சொன்னது, ப்லேடோவின் ஆசிரியரான சாக்ரேட்சுக்கு.

தன் மாணவரோடு கல்வி நின்று விடாது தொடர்ந்து பரவ வேண்டும் என்றே ஒவ்வொரு சிறந்த ஆசிரியரும் எதிர்பார்க்கிறார்.

    யா, உங்களிடம் ஒன்று கேட்கலாமா? என்றான் நசிகேதன்.

"கேள்.. இன்னும் ஏதாகிலும் ஐயமுள்ளதா?" என்றான் எமன்.

"என்னை எதற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக்கு மெய்யறிவு பெறும் தகுதியுள்ளதா? எனக்கு இத்தகைய மெய்யறிவை வழங்கிய உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய இயலும்?"

எமன் சிரித்தான். "நசிகேதா.. அறிவு என்பது அற்புதமான பொக்கிஷம். அனைவரும் பெறக்கூடியப் பொக்கிஷம் என்றாலும், ஒரு சிலரே தேடிப் பெறுகிறார்கள். அனைவரும் பெற வேண்டிய அறிவை ஒரு சிலரே பெற்றால்... அறிவைப் பெற்றவர்களுக்கு அதுவே பாரமாகி விடுகிறது. நான் சொல்வது புரிகிறதா?"

"நன்றாகப் புரிந்தது. பரவலாகப் பயன் தர வேண்டிய செல்வத்தை முடக்கிப் போட்ட உணர்வு"

"ஆம். புறம் சார்ந்த சாதாரண அறிவே அப்படி என்றால், அகம் சார்ந்த தன்னறிவு பெற்றவர்களின் நிலை என்ன?"

"தான் பெற்ற செல்வம் பிறரும் பெற வேண்டும் என்றே விரும்புவார்கள்"

"மிகச்சரி. நசிகேதா, நீ அப்படிப்பட்டவன். உன் தந்தையின் வேள்வியில் தானப் பசுக்களைப் பற்றியும், தானம் பெற வந்தவர்களைப் பற்றியும், உன் தந்தையின் சுயநலம் தொட்டப் பாசாங்குத் தானங்களையும் பற்றியும், பசும்பிள்ளையான உன் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்தேன். உன் விவேகம் என்னை வியக்க வைத்தது.

அதன் பிறகு என் இல்லத்தில் உன்னைச் சோதித்தேன். நீ கேட்ட வரத்திலும் கேட்ட விதத்திலும் உன் மன உறுதி எனக்குப் புரிந்தது. பூவைப் போன்ற மென்மையான மனமுடையவன் நீ என்று வேள்வியின் போது பிறருக்காக இரங்கியதில் அறிந்து கொண்டேன். உன் மன உறுதியும் அறிவின் மேன்மையும் பொன்னை விடச் சிறந்தது என்பதை உன் நேடலில் அறிந்தேன். நான் பெற்ற அறிவை உனக்கு வழங்குவதால் என் அறிவுக்குப் பெருமை என்று உணர்ந்தேன். உன் வழியாக இந்த மெய்யறிவு உன்னுலகத்தோர் பெறட்டும் என்று எண்ணினேன்."

"மிகவும் நன்றி" என்றான் நசிகேதன்.

எமன் தொடர்ந்தான். "மண் மட்டுமே நிஜம். பானையல்ல. பானையாகப் பார்த்தால் மண் தெரிவதில்லை. மண்ணாகப் பார்த்தால் பானையும் தெரியும் மண்ணும் தெரியும். விதையாகப் பார்த்தால் விதையும் புரியும் மரமும் புரியும் அல்லவா? பேரான்மாவிலிருந்து பிரிந்த உயிர், உடலாகவும் உயிராகவும் விளங்கினாலும் அது பேரான்மாவே.

இதைப் புரிந்தவர்கள் மனதில் கலக்கமே இருப்பதில்லை. கண்மூடித்தன எண்ணங்கள் ஓடுவதில்லை. சலனங்கள் பாதிப்பதில்லை. கிளை, இலை, மலர், கனி என்பவை நிலைகள் - நிலையற்ற நிலைகள் - என்ற உணர்வு அவர்கள் மனதில் பரவுகிறது. நிலை மாற்றங்களினால் பாதிக்கப்படாமல், அமைதியுடன் நன்னெறியைப் பற்றி வாழ்கிறார்கள். பிறப்பைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் எந்த விதக் கவலையும் இருப்பதில்லை. சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் போன்றவற்றைப் பொருட்படுத்துவதில்லை. இருமைகளின் உள்ளே ஒருமையும், ஒருமையின் உள்ளே பன்மையும் இருப்பதை உணர்ந்து சிறப்பாக வாழ்கிறார்கள்.

நீ அறிந்து கொண்ட இந்த உண்மையை உன் உலகத்தாரும் அறிய வேண்டும். உன் தந்தையும் உன் மக்களும் உன்னால் உயர்வடைய வேண்டும்.

இனி நீ செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. உயிர்ப்பயண நுட்பத்தை, இனியத் தமிழ்மொழியில் உலகத்துக்கு எடுத்து உரைப்பதே இனி நீ முடிக்க வேண்டிய செயலாகும். புறப்படு, என் அருமை மாணவனே!" என்றான் எமன்.

நசிகேதன் மீண்டும் எமனுக்கு நன்றி சொன்னான்.

நன்றியை ஏற்றுக் கொண்ட எமன், "நசிகேதா, உன் ஆர்வத்தையும் உழைப்பையும் மெச்சினேன். உன் உயர்ந்த நோக்கத்தையும் அறிவேன். உன் விருப்பம் போல உம்மக்கள் உயர்வடைய, இன்னொரு வரமும் வழங்குகிறேன்" என்றான்.

2011/11/12

ஓருடலில் அறுவருண்டு


73
ஒருவர் ஒருநூறு என்றுரைப்பேன் என்னுள்
கருமுதல் ஆறுவரைக் கண்டேன் - உருவானச்
சேற்றைக் கணக்கிடப்போம் சேர்ந்திடும் பேரான்மக்
காற்றுக்கு ஏது கணக்கு?

   டல் என்பது சேற்றினாலான பானை போன்றது. உள்சேர்ந்த பேரான்மாவோ காற்றைப் போன்றது. பானைகளைக் கணக்கிடலாம், அவை கட்டியக் காற்றைக் கணக்கிடக் கூடுமோ? (எனினும்) அனைத்துமே பேரான்மா என்பதால் உடலில் தோன்றி மறைவது ஒருவர் எனலாம், ஒருநூறு என்றும் கூறலாம். தோன்றி மறையும் ஆறுபேர் என்னில் உண்டென்பதை நிச்சயம் அறிவேன் (என்றான் நசிகேதன்).



    ந்தக் கேள்விக்கும் நேர்விடை அளிக்காமல், சரியான விடையளித்தது போன்றத் தோற்றத்தை உண்டாக்குவது ஒரு கலை. 'mba answer' என்பார்கள்.

'mba answer' என்றால் என்ன தெரியுமா? 'it depends' என்பதே!
       : நீங்கள் சொல்வதையெல்லாம் செய்தால் என் வியாபாரம் முன்னேறுமா?
       : it depends! பொருட்களின் தரம், விலை, மக்களின் விருப்பம், வியாபாரத்தில் போட்டி இவை எல்லாவற்றையும் பொறுத்தது
       : அது தெரியும்.. இருந்தாலும் உங்கள் பரிந்துரைகளை நீங்கள் சொன்னபடி செய்தால் என் வியாபாரம் முன்னேறுமா?
       : it depends! நாமறியாத வேறு காரணங்களையும் பொறுத்தது
       : அது எனக்குத் தெரியாதா? நாமறியாத காரணங்கள் யாவை?
       : it depends! அறியாதவை என்பது தொழில்நுட்பம், வளர்ச்சி, அரசாங்கக் கொள்கைகள், தடங்கல்கள் இவற்றைப் பொறுத்தது
       : அது தெரிந்து தானே உங்களை இத்தனை பணம் கொடுத்து வேலைக்கு வைத்தேன்? எல்லாமே இதைப் பொறுத்தது அதைப் பொறுத்தது என்றால் இந்தப் பரிந்துரைகளினால் என்ன பலன்?
       : it depends!


நமக்குத் தெரிந்ததைச் செய்தியாகவும் தந்திரமாகவும் நமக்கே பரிந்துரை செய்து, நம்மிடமே பணம் வசூலிப்போர் இருக்கிறார்களே, அற்புதமான கலைஞர்கள்! mba, வக்கீல், மதவாதி, அரசியல்வாதி... இவர்களை இந்தக் கலையின் விற்பன்னர்கள் எனலாம். இவர்களில் யார் மோசமானவர்கள்? it depends! அப்படியெனில், mbaக்களையும் வக்கீல்களையும் நம்பக்கூடாதா? it depends!

   இந்தியா திரும்பிய பதினைந்து வருடங்களுக்குள் பெரும் புரட்சியை உருவாக்கிய மகாத்மா காந்திக்கு, அமெரிக்க டைம் வார இதழ் '1930ம் வருடத்தியச் சாதனையாளர்' பட்டத்தை வழங்கிக் கௌரவம் தேடிக்கொண்டது. பிரிடிஷ் அரசு அவரை கௌரவிக்க விரும்பி இங்கிலாந்து வர அழைப்பு விடுத்தது.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றைத் துவக்கிப் பெரும் மதிப்பைத் தேடிக்கொண்டக் கதர் வேட்டியைக் காண பிரிடிஷ் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினார்களாம். 'ஆட்டுப்பாலும் வேர்கடலையும் தின்று ராட்டை சுற்றும் பொக்கைவாயனா நம் அரசை எதிர்க்கிறார்' என்று அவர்களுக்கு ஆச்சரியம். ஏதோ பஞ்சைப் பராரி என்று எண்ணிய பொதுமக்களுடன், பிரிடிஷ் பத்திரிகையாளர்களும் சமூகப் பிரமுகர்களும் கூடியிருந்தனராம்.

ஒரு பிரமுகர் காந்தியைக் கேட்டாராம்: "மேற்கத்திய நாகரீகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"நல்ல யோசனை என்று நினைக்கிறேன்" என்றாராம் காந்தி.

கூட்டத்தில் நரம்பு ஒடுங்கியது போல் அமைதி. காந்தியின் நான்கு சொற்களில் அணுகுண்டின் தாக்கம் இருந்ததைப் புரிந்து கொண்ட கூட்டம், அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்ததாம். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று கண்ணாடிப் பார்வையுடன் இதைப் பற்றி விரிவாக எழுதியதாம். 'கேள்விக்கு புது வடிவம் கொடுத்த காந்தி' என்று அவரைப் பற்றி எழுதி, 'மேற்கத்தியோர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, தாம் நாகரீகமானவர்கள் தானா என்பதே' என முடித்ததாம்.

   திரையுலகில் ஆசானாக மதிக்கப்படும் கே.பாலசந்தர் சொன்னதாக, என்றோ படித்த நினைவு. இன்றைக்குத் திரைப்புகழின் உச்சத்தில் இருப்பவர்கள், அன்றைக்கு பாலசந்தர் பள்ளியின் கற்றுக்குட்டி மாணவர்கள். காட்சியை விளக்கி நடிக்கச் சொல்வாராம். இரண்டு மாணவர்களும் திணறுவார்களாம். எத்தனையோ ஒத்திகைகளுக்குப் பிறகு, கிடைத்தது போதும் என்றுக் காட்சியைப் படம் பிடிப்பாராம்.

பாலசந்தர், இன்னொரு நடிகருக்கும் ஆசான். மறைந்தக் கலைமாமணி நாகேஷ். ஒரு காட்சியை விளக்கிச் சொன்னதும் அதை மூன்று நான்கு விதங்களில் நடித்துக் காட்டி, 'பாலு, உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை வச்சுக்குவோம்' என்பாராம் நாகேஷ். 'யார், யாருக்கு ஆசான்?' என்று புரியாமல் வியந்து, எதை எடுப்பது எதை விடுவது என்று தவிப்பாராம் பாலசந்தர்.

   எந்தக் கேள்விக்கும், விளக்கெண்ணை கலந்த வெண்டைக்காய் சேப்பங்கிழங்குக் கூழில் ஊறிய வாழைப்பழத் தோலாக விடையளிப்போர் ஒரு வகையினர்; ஒரு விடைக்கு நான்கு விடைகளாக வழங்கி, கேட்டவரைத் திணற அடிப்போர் இன்னொரு வகையினர்; கேட்டவரே தன் கேள்வியை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் நுட்பமும் தெளிவும் ஒருங்கே அமைந்த விடையளிப்போர் மற்றொரு வகையினர்.

எந்த வகையிலும் அடங்கித் தனிப்படாமல், அதே நேரம் தேவைப்படும் பொழுது மிகத் தெளிவாக நடந்து, இம்மூன்று வகையிலும் தேவைக்கேற்பப் புகுந்து வெளிப்படுவோர், பொதுவாக வாழ்க்கையில் மிகுந்த வெற்றியை அடைகிறார்கள். குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் இதைக் கவனத்தில் கொள்வோர், சச்சரவு சிக்கல்களினின்று சுலபமாக விலகி, நம்பிக்கையின் சின்னமாக நடந்து கொள்கிறார்கள். தனக்கும் பிறருக்கும் அமைதியையும் நிறைவையும் தருகிறார்கள்.

    சிகேதன் சிந்தித்தான். என்ன இப்படிக் கேட்கிறாரே ஆசான்? சிறப்பான பதிலைச் சொல் என்கிறாரே? இருப்பது ஒரே ஒரு பதில் தானே? எமன் கேட்ட கேள்வியை மீண்டும் மனதுள் நிறுத்திப் பார்த்தான். உன்னில் பிறப்பவரும் பின்னர் இறப்பவரும் யாவர்? உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார்? எத்தனை பேர்? மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைப் பலவாறு சிந்தித்தான்.

மெல்லக் கனைத்து, "ஐயா.. உங்கள் கேள்வி அன்னையின் அன்பைப் போன்றது" என்றான்.

எமன் சிந்தித்தான். அன்னையின் அன்பைப் போலவே தன்னுடைய கேள்வியும் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை மறைமுகமாகச் சொல்கிறானா என் மாணவன்? "நசிகேதா, ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்றான்.

"ஐயா.. அன்னையின் அன்பு வற்றாதது. எந்த நிலையிலும் தாயிடம் அன்பு சுரந்து கொண்டே இருக்கிறது. அது போல உங்கள் கேள்வி என் சிந்தனைத் திறனைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது" என்றான்.

எமன் மகிழ்ந்தான். "அன்னையின் அன்பு, என் கேள்வித்திறனை விடப் பல மடங்கு உயர்ந்தது. என் கேள்விக்கு எல்லையும் பதிலும் உண்டு. அன்னையின் அன்புக்கு எல்லையோ பதிலோ இல்லை" என்றான். "இருப்பினும் நன்றி".

நசிகேதன் எமனை வணங்கினான். தொடர்ந்துச் சிந்தித்தான். நசிகேதன் சிந்திப்பதைக் கண்டு, "என் கேள்விக்கு பதில் தெரியவில்லையா?" என்றான் எமன்.

"சிறு குழப்பம்" என்றான் நசிகேதன்.

"என்ன குழப்பம்?"

"ஒரு பதிலைச் சொல்வதா? ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைச் சொல்லி உங்கள் தேர்வுத் திறனைச் சோதிப்பதா? அதில்தான் குழப்பம்"

"ஆகா!" என்றான் எமன். "சொல், நசிகேதா. என் கேள்விக்கென்ன பதில்? அத்தனையும் சொல், என் அன்புக்குரியவனே!"

"அனைத்துமே பேரான்மா என்பதை மிகத் தெளிவாக விளக்கினீர்கள். பிறவாது, மட்கி மறையாது, பண்டம் துறந்தும் தளிரும் முகுலம் என்றீர்கள். சட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும் கட்டுமோ கொட்டுமோ காற்று எனக் கேட்டதும் நீங்களே. மன்னுயிர் பாடுபட்டுப் பாவுமிடம் பேரான்மா, வேறில்லை கூடுவிட்டுக் கூடுமிடம் என்று அருமையாக விளக்கியதும் தாங்களே. எனில் உயிர்கள் பிரிவதும் கூடுவதும் பேரான்மாவில் தான் என்பது தெளிவாகிறது. எல்லாமே பேரான்மா எனில் பிறப்பவர் இறப்பவர் எத்தனை என்ற கேள்விக்கு நான் விடை சொன்னால் உங்கள் பாடங்களை முரணாகப் புரிந்து கொண்டவன் ஆவேனே?

எத்தனை பேரான்மாக்களின் அம்சம் என்பதை எப்படிக் கணக்கிடுவது? கட்டுமோ கொட்டுமோ காற்று என்று நீங்கள் சொன்னது போல, காற்றைக் கட்டி வைக்க முயன்றுக் கட்டிய சேற்றை வேண்டுமானால் கணக்கிடலாம். இத்தனை பானைகள் குயந்தேன் எனலாம். பத்து பானைகள் குயந்தேன் என்று சொன்னால் அதற்குள் பத்து காற்றுகள் வைத்திருக்கிறேன் என்று பொருளாகுமா? ஒவ்வொரு பானையும் வேறு என்றாலும், ஒவ்வொரு காற்றும் வேறாகுமோ?

அனைத்துமே பேரான்மா என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. சிற்றலை பேரலையிற் சேரும், சிதறினால் ஒற்றியே நீராய் ஒடுங்கும் என்று நீங்கள் சொன்னது போல பேரான்மாவில் கலக்க முயன்று தோற்ற ஆன்மாக்கள், பிறக்கின்றன. ஏழாவது பானையின் நிலையைப் பற்றிச் சொன்னீர்கள். பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன என்பதைப் புரிந்துகொண்டேன். ஆக, பேரான்மாவிலிருந்தே பிறவியும் மரணமும் ஏற்படுகின்றன.

எனில், பேரான்மா என்பது ஒரு பெருஞ்சக்தி என்றால், என்னுள் பிறப்பவரும் இறப்பவரும் ஒருவரே.

ஆனால் பேரான்மா என்பது சிற்றலை பேரலைகளின் கூட்டெனும் பொழுது, இன்னொரு பதிலும் தோன்றியது. அனைத்தும் பேரான்மாவின் அம்சங்கள் என்பதே.

உயிர்கள் அனைத்தும் பேரான்மாவைச் சேருகின்றன. ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான சிற்றலைகள் தொடர்ந்து பேரலையாகவோ ஒடுங்கியோ அமைகின்றன. அந்நிலையில் என்னுள் பிறந்து இறப்பவர்கள் பேரான்மாவின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான அம்சமானவர்கள் எனலாம்" என்றான் நசிகேதன்.

"மிகச் சரியாகச் சொன்னாய் நசிகேதா" என்றான் எமன். நசிகேதன் மேலும் ஏதோ சொல்ல விழைகிறான் என்பதைப் புரிந்துகொண்ட எமன், ஆவலோடு அமைதி காத்தான்.

நசிகேதன் தொடர்ந்தான். "எதற்காக இப்படியொரு கேள்வி கேட்டீர்கள் எனச் சிந்தித்தேன். மாணவனைச் சோதிப்பது ஆசிரியரின் கடமையென்றாலும், இப்படியொரு கேள்வியை ஏன் கேட்டீர்கள் எனச் சிந்தித்தேன்"

"சொல்"

"நான் உங்களிடம் கேட்ட மூன்று வரங்களில், மூன்றாவது வரம் மெய்யறிவு பற்றியது. எத்தனை பேர் பிறந்து இறக்கிறார்கள் என்றக் கணக்கைப் பற்றியதல்ல. மரணத்துக்கு அஞ்சி, சொர்க்க நரகங்களை நம்பி, பெரும் கண்மூடித்தனங்களைச் செய்யத் துணியும் மனிதத்தை மனதில் வைத்துக் கேட்ட வரம். உயிர்ப்பயணம் பற்றிய கேள்வி"

"நன்றாக நினைவிருக்கிறது. உயிரது புள்ளாய்ப் பறந்த பின்னும் உள்ளார் இலாரென்றுப் பல்லார் சொல்வானேன் என்று கேட்டாய்! எத்தனை அருமையான கேள்வி! சாதலின் நுண்மையே தெள்ளிய மூதறிவென மூன்றாம் வரந்தருவீர் என்றாய். உன் வயதுக்கு மீறிய வரத்தைக் கேட்டாய். உன் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொன்னேனா? நீ நேடிய வரமும் கிடைத்தது அல்லவா?"

"கிடைத்தது ஆசானே, மிகவும் நன்றி. நான் கேட்ட மூன்றாம் வரத்தை மீண்டும் எண்ணியவுடன் உங்கள் கேள்வி மிக நன்றாகப் புரிந்தது. மரணத்தை, உயிர்ப்பயணத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்பதைச் சோதிக்கவே அப்படியொரு கேள்வியைக் கேட்டீர்கள் என்பது புரிந்தது"

எமனுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. "அற்புதம்! அற்புதம்! உனக்கு அறிவுண்டு என்பதில் ஐயமேயில்லை. உன் அறிவின் நுண்மையை நுகரவே அப்படி ஒரு கேள்வி கேட்டேன்" என்றான்.

"உங்கள் வாழ்த்தும் நல்லெண்ணமுமே என்னுடைய சிறப்பு" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "உயிர்ப்பயணம் என்பது கூட்டை விட்டுப் பிரிவது மட்டுமல்ல. கூட்டுக்குள்ளும் உயிர்ப்பயணம் உண்டு. அதைப் பற்றி மனிதம் கவலைப்படுவதில்லை. கூட்டுக்குள் நடக்கும் உயிர்ப்பயணம், கூட்டுக்கு வெளியே நடக்கும் உயிர்ப்பயணத்தைப் புரிந்து கொள்ள ஒரு கருவி என்பதை மனிதம் அறியவில்லை. கூடு பிரியும் உயிர்ப்பயணம் என்பது இயற்கை, தன்னிச்சை என்பதை மனிதம் புரிந்து கொள்ளவே கூட்டுக்குள்ளும் உயிர்ப்பயணம் நடக்கிறது.

மனிதம் என்ற வகையில் எனக்குள்ளும், ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் நடைபெறும் உயிர்ப்பயணத்தைச் சிந்தித்தேன். கரு, பிள்ளை, கிள்ளை, வாலிபன், முதியவன், மூத்தவன் என்ற ஆறு பேர் என்னுள் இருப்பதை அறிவேன். ஆறுவரும் ஓருடலில் இருந்தாலும், தனித்தனி இயல்பும் வாழ்வும் கொண்டவர்கள். அந்த வகையில் உயிரானது கருமுதல் மரணம் வரைப் பயணம் செய்கிறது. அவையும் பிறப்பிறப்புக்களே. கருவிலிருக்கையில் என்ன நடந்தது என்பதைப் பிறந்ததும் அறிய முடியாது. பிறந்த குழந்தை மெள்ள வளர்ந்துக் கிள்ளையாகிறது. எனினும் பிள்ளை வேறு, கிள்ளை வேறு. தொடர்ந்து வாலிபம், முதுமை, மூப்பு என்ற பயணம். பிள்ளையாக இருந்த மனிதன் வேறு, வாலிபனாக வாழும் மனிதன் வேறு. முற்றிலும் மாறுபட்டவர்கள். ஆக, கருவிலிருந்து மூப்பு வரை ஆறு விதப் பிறவிகளும் ஆறுவித மரணங்களும் ஒரு கூட்டுக்குள்ளேயே நடக்கின்றன. கருவிலிருந்து கிள்ளையாவதைக் கண்டு அஞ்சுவதில்லை. பிள்ளையிலிருந்து வாலிபமடைவதைக் கண்டு அஞ்சுவதில்லை. முதுமையிலிருந்து மூப்பையும் இயற்கையெனவே அமைகிறோம். இந்தப் பிறவிகள் அத்தனையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், நிலை கடப்பது மரணத்துக்கு ஒப்பானதே. எனினும் நாம் வருந்துவதில்லை.

ஆனால் கூட்டை விட்டுப் பிரியும் உயிர்ப்பயணத்தை மட்டும் மனிதராகிய நாங்கள் அஞ்சி நடுங்குகிறோம். தேவையற்ற நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுகிறோம். இது எத்தகைய பேதமை என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்த ஆறுவரின் ஒரே தொடர்பு, நினைவு. பேரான்மா என்பது கூட்டை விட்ட ஆன்மாக்களின் கூட்டு என்பதைப் போல, ஆன்மா என்பது கூட்டுக்குள் இருக்கும் நினைவுகளின் கூட்டு எனலாம். சிற்றலைகளை போலவே பல நினைவுகள் ஒடுங்கிவிடுகின்றன. இந்த நினைவுகள் நன்னெறி தொட்ட நினைவுகளாகும் பொழுது வருத்தமே ஏற்படுவதில்லை. அச்சமே ஏற்படுவதில்லை. இந்த ஆறு நிலைகளிலும் தொடர்ந்து வந்து உதவும் நன்னெறி நினைவுகளே தன்னறிவு. அதனால் தன்னறிவு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினீர்கள்" என்றான்.

எமன் மிகவும் மகிழ்ந்தான். "நசிகேதா! உன் விடைகள் ஒவ்வொன்றும் அருமை. என் கேள்வியை மதித்து, தெளிவான நுட்பமான பதிலளித்த உன்னைப் பாராட்டுகிறேன். உன் அறிவைச் சோதிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்!" என்று நெகிழ்ந்தான். "இனி நீ செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே" என்றான்.

2011/11/04

தன்னறிவுத் தேர்வு


72
தன்னறிவின் உண்மைகண்ட என்னருமை மாணவனே
உன்னறிவின் நுண்மைகாணும் என்கேள்வி - உன்னில்
பிறப்பவரும் பின்னர் இறப்பவரும் யாவர்?
சிறப்பாகச் சிந்தித்துச் சொல்.

   ன்னறிவைத் தெளிவாக அறிந்த என்னருமை மாணவனே! நீ பெற்ற அறிவின் நுட்பத்தைக் காண விழைகிறேன். (அதனால்) நன்கு சிந்தித்து என் கேள்விக்கேற்றச் சிறந்த பதிலைச் சொல். உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார்? எத்தனை பேர்? (என்றான் எமன்).




    கேட்ட கேள்விக்கேற்றச் சரியான பதிலைச் சொல்வது, அனைவரும் இளமையிலேயே வளர்த்துக் கொள்ளவேண்டிய கலை. fundamental communication skill.

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வது என்பது சிலருக்கு மிகவும் கடினமான செயல். நடைமுறையில் கேட்கப்படும் சாதாரணக் கேள்விகள் கூட இவர்களுக்குப் பெரும் சங்கடத்தைத் தருகின்றன. இவருள் சிலரது பதில்களோ, கேள்வி கேட்டவரைப் படுத்துகின்றன!

"இன்னிக்கு என்ன சமையல்?"
"போன வாரம் மார்கெட் போனப்போ நாலு பாகற்காய் வாங்கி வந்தேன். அதுல ரெண்டை வறுவல் செஞ்சு போட்டாச்சு.. இன்னும் ரெண்டு இருந்துதா.. அதைவச்சு சாம்பார் பண்ணலாம்னு பாத்தா ஒண்ணு கொஞ்சம் அழுகிப் போனாப்புல.."

"கால்ல அடிபட்டிருச்சா? ரத்தம் வருதே?"
"உடம்பு ஊதிடுச்சா.. கொஞ்சம் ஓடலாம்னு பாத்து வீட்டைச் சுத்தி ரெண்டு ரவுண்டு ஓட நெனச்சேன். முனையில பாருங்க குப்பைத் தொட்டி இருக்குல்லா.."


தன் மகனுக்கு உடல் சுகமில்லை என்று சொல்லியிருந்தார் நண்பர். மறுநாள் பேசியபோது நலம் விசாரித்தேன். கேட்டது இதுதான்: "உங்க மகன் நலமா?". "அது வந்து.. போன வாரம் வீட்டுல சாப்பிட வேணாம்னு ஹோட்டல் போயிருந்தமா.." என்று தொடங்கி தன் மகனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று ஒரு சொற்பொழிவு நடத்தினாரே தவிர, கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை. ஏன் கேட்டோம் என்றாகி விட்டது.

பதில் சொல்கிறார்களோ இல்லையோ, கேள்வியை கேள்வியால் அடிப்பவர்கள் இன்னும் சிலர்.

"என்னங்க, நல்லா இருக்கீங்களா?"
"பாத்தா தெரியலையா?"

"நீ என்னை உண்மையிலே காதலிக்கிறியா?"
"உன்கூட பழகுறதுல இருந்தே தெரிய வேணாமா?"


ஒரு கேள்வி கேட்டால், என்ன பதில் கிடைக்கிறது என்பதை அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.

சுற்றி வளைத்துப் பதில் சொன்னால், ஆசிரிய நண்பர் அரசனுக்குக் கோபம் வந்துவிடும். "ஏன்யா.. இன்னிக்கு என்ன கிழமைன்னு கேட்டா நேத்து சனிக்கிழமைன்னு சொல்றியே?" என்பார். கையில் கிடைத்ததை நம் மேல் எறிவார். "கேள்விக்கு பதில் சொல்லிட்டு ஊர் கதையை சொல்லு.. கேக்கறவனுக்கு மரியாதை வேணாம்.. அட, கேள்விக்கு ஒரு மரியாதை வேணாமா?" என்று கோபிப்பார்.

அரசன் என்றில்லை. பொதுவாக ஆசிரியர்களிடம் இந்தக் 'கெட்டப் பழக்கம்' காணப்படுகிறது. பதிலுக்கு ஏற்றவாறு கேள்வியை மாற்றிக் கொள்ளத் தெரிவதில்லை இவர்களுக்கு. என்ன செய்வது?

    மனும் ஆசிரியன் தானே?

எமன் நசிகேதனிடம், 'சிறப்பான பதிலைச் சொல்' என்றானே, ஏன்?

தன் மாணவனின் அறிவைச் சரியான முறையில் சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிப்படைக் காரணம்.

சிறப்பான பதில் என்றால் என்ன? ஏன் அப்படிக் கேட்டான்?

தன் மாணவன் சுற்றி வளைத்துப் பதில் சொல்லக்கூடாது என்ற எண்ணம் ஒரு புறம். தன் மாணவன் அவசரமாக ஏதாவது சொல்லிவிடக் கூடாதே என்ற எண்ணம் ஒரு புறம். தன் மாணவன் சிந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம். தான் எதிர்பார்த்த பதிலைத் தரவேண்டும் என்ற வேகம் ஒரு புறம்.

இவை எல்லாவற்றையும் விட இன்னொரு நுட்பம் இருக்கிறது. ஆசிரிய-மாணவ உறவிலே வெளிப்படும் நுட்பம்.

இயல்பிலே அறிவாளியான தன் மாணவன், கேட்ட கேள்விக்குச் சரியான விடையளிப்பான் என்பது எமனுக்குத் தெரியும். தன் மாணவனை மதிக்கும் எந்த ஆசிரியருக்கும் தெரியும்.

நல்ல மாணவரின் இலக்கணத்தை முதல் பகுதியில் பார்த்தோம். எமன் அதைத்தான் எதிர்பார்த்தான் இங்கே.

நல்ல மாணவர், தன் பதிலால் கேள்விக்கே சிறப்பைச் சேர்க்கிறார். 'ஆகா! எப்பேர்பட்ட கேள்வியைக் கேட்டோம்!' என்று ஒரு ஆசிரியர் தன்னைப் பற்றிப் பெருமை கொள்ளும் அளவுக்கு மாணவரின் பதில் அமைந்து விட்டால், அதுவே சிறப்பான பதில்.

எமனுக்குத் தன் மாணவன் மேல் அத்தனை நேசம், நம்பிக்கை! 'என் கேள்விக்கு அழகைச் சேர்க்கும் பதிலைச் சொல்லையா, சின்னய்யா!' என்று கேட்காமல் கேட்கிறான்.

'யார், யாரிடம் கற்கிறார்கள்' என்ற உணர்வு கடந்த நிலையடையும் ஆசிரிய-மாணவ உறவு இருக்கிறதே.. அதற்கு வடிவமும் இல்லை, விளக்கமும் இல்லை.

தவறாக எண்ணவில்லையெனில், பொறுமையுடன் இதுவரை எழுபது பாடல்கள் போல் தொடர்ந்து படித்து வந்த உங்களிடம் ஒன்று கேட்கலாமா?

நசிகேதன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?

2011/10/28

எழுந்திரு! விழித்திரு!


71
எழுந்திரு என்றும் விழித்திரு வாளின்
வெழுமுனை யன்னதுன் வாழ்வு - கழுந்தராய்
ஊழ்வினை என்று உழலாதே உத்தமர்போல்
வாழ்வினை நன்றென வாழ்.

   ழுந்திரு! என்றைக்கும் விழிப்புடன் இரு! பளபளக்கும் வாளின் முனையைப் போன்றது உம் மனித வாழ்வு. அறிவு மழுங்கியவர்களைப் போல விதியை நம்பி வீணாகாதே. நன்னெறிகளைப் பேணும் மேன்மையானவர்களைப் போல் சிறப்பாக வாழ்வாயாக! (என்றான் எமன்).


வெழு: பளபளக்கும், சீரான
கழுந்தராய்: அறிவு மழுங்கியவர் போல், சிந்திக்க இயலாதவர் போல்
ஊழ்வினை: விதியின் செயல், பிறவிச் செயல்களின் பலன், தலையெழுத்து


    துயிலெழ மணியடிக்கிறார்கள். துயிலவும் மணியடிக்கிறார்கள். பிறந்தால் மணி. இறந்தாலும் மணி. ஓட மணி. நிற்க மணி. சாப்பிட மணி. உயிரோடும் பசியோடும் உலவும் நம்முடைய சாப்பாட்டுக்கு மணியடிக்கிறார்கள் என்றால், சிலைகளுக்கும் மணியடித்து பழத்திலிருந்து பண்டம் பானம் வரை பாசாங்கு விருந்தோம்பலுக்கும் மணியடிக்கிறார்கள். ஏதேதோ காரணங்களுக்காக, பல நேரம் காரணமே இல்லாமலும், மணியடிக்கிறார்கள். மணியடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அடிக்கும் மணிக்கு ஒரு கோவில் கட்டி, அதற்கும் மணி அடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

எதற்காக?

வேடிக்கைப் பார்வையை ஒதுக்கிவிட்டுச் சிந்தித்தால், மணியோசை போல ஒன்று நம் இயக்கத்துக்குச் சில நேரம் தேவையாக இருக்கிறது. ஒரு துவக்கம் அல்லது நிறுத்தத்திற்கான அடையாளமாகப் பயன்படுகிறது. நம் கவனங்களை ஒருமுகப்படுத்த இந்த அடையாளம் தேவைப்படுகிறது. விழிப்பை ஏற்படுத்த இது ஒரு புறவிசை. உணர்வை ஒருமுகப்படுத்த ஒரு புறவிசை.

அது இல்லாமல் விழிப்பு வருமா? எழுச்சி வருமா? ஒருமுகம் வருமா?

அலாரம் வைத்துத் தூங்குகிறோம். அலாரம் இல்லாமலே விழிப்பு வரும் என்றாலும் ஒரு வேளை தூங்கிவிடுவோமோ என்று அஞ்சுகிறோம். தாமதமாக விழித்துவிட்டு அலாரத்தின் மீது பழியும் போடுகிறோம். அல்லது எழ நேர்ந்த ஆத்திரத்தில் அலாரத்தின் மண்டையிலேயே ஒன்று போட்டு ஒடுக்கித் தொடர்ந்து கண்மூடுகிறோம்.

முரணென்றாலும் இது பெரும்பாலும் மனித இயல்பே. புறவிசையில்லாது நாம் இயங்குவது கடினம். ஏதோ ஒரு அடையாளம் அல்லது அழைப்பு தேவைப்படுகிறது. நம்முடைய தினசரி வாழ்வின் சிக்கல்களின் இடையில் நம்மை ஒரு நிலையில் செலுத்த இத்தகைய அடையாளங்கள் அவசியம் தான். எனினும், அந்த அடையாளம் நம்மை அழைக்கும் பொழுது, அதற்கேற்ப கவனத்தைத் திருப்பி முனைப்போடு செயல்படுகிறோமா?

புலன் தொட்ட வெளிப்பாடுகளுக்கே இப்படியென்றால், அக விழிப்புக்கு அடையாளம் வேண்டாமா? வேண்டும். அகவிழிப்புக்கான மணியோசை இருக்கிறதா? இருக்கிறது.

அதன் பெயர் தன்னறிவு.

    [இந்தப் பாடல், கடோவின் சிறந்த பாடல்களுள் ஒன்று. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் விதம் விதமான சிந்தனைகளைத் தூண்டும் பாடல். அடிப்படை விழிப்புணர்வை மிக அருமையாகத் தேவைப்படுத்திச் சொல்கிறது. உபரி விவரம்: வடமொழிப் பாடலின் முதல் வரிகளை விவேகானந்தர் தன்னுடைய இயக்கத்தின் அழைப்பாக அமைத்துக் கொண்டார். வடமொழிப் பாடலை மாற்றாமல், சற்றே மேம்படுத்திச் சொல்ல முயன்றிருக்கிறேன்.]

    "நசிகேதா! நீ விரும்பியவாறே உனக்கு மெய்யறிவைப் பற்றிய விளக்கத்தையும் அதைப் பெறும் வழிமுறைகளையும் சொன்னேன். இனி நீ பெற வேண்டிய அறிவு என்னிடம் எதுவும் இல்லை. நான் சொன்னது அனைத்தையும் புரிந்து கொண்டாயா?" என்று கேட்டான் எமன்.

"ஆம், ஐயா! பிறப்பிறப்பு உயிர்ப்பயணம் மற்றும் சொர்க்க நரக அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன், நன்றி. கண்மூடித்தனங்களைப் பற்றிப் புரிந்து கொண்டேன், நன்றி. முனைப்புடன் தன்னறிவைப் பெற வேண்டிய அவசியத்தையும் அறிந்து கொண்டேன், நன்றி" என்றான் நசிகேதன்.

"நன்று நசிகேதா! இனி உனக்குச் சொல்ல வேண்டியவை சொற்பமே! பெற்ற அறிவைப் பேணுவதும் பயன்படுத்துவதுமே நல்ல மாணவனுக்கு அழகு. பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவரையும் மேம்படுத்துவதே நல்ல மாணவன் தன் ஆசிரியனுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும். தான் பெற்றை அறிவை, தனக்குப் பிறகும் தொடர்ந்து பரவச் செய்வதே நல்ல மாணவன் தான் பெற்ற அறிவுக்குச் செய்யும் மேம்பாடாகும்" என்றான் எமன். "நசிகேதா! என் அருமை மாணவனே! அகத் துயிலினின்று எழுந்திரு! என்றைக்கும் விழிப்போடு செயல்படு! கண்மூடச் செய்யும் காவிகளைக் கண்டறிந்து ஒதுக்கு. கண்மூடுவதால் கிடைக்கும் எந்தப் பலனையும் ஏற்காதே! விழிப்போடு இரு!".

"நல்லது ஐயா"

"நீ இளவரசன் தானே? வாள் அறிவாய் அல்லவா?"

"அறிவேன். வாளின் பளபளப்பும் சீரான அமைப்பும் கூர்முனையும் என்னை மிகவும் கவர்ந்தவை"

"நசிகேதா! அரசனுக்கு வாளைப் பிடிக்கத் தெரிய வேண்டும். அரசன் வாளினால் போரிட வேண்டியதில்லை. யாரையும் வெட்டித் துண்டு போட வேண்டியதில்லை. ஆனால் அரசனிடம் வாளிருபப்து தெரிந்தால் எல்லாருமே அடங்கி அமைதியாக நடக்கிறார்கள் அல்லவா?"

"ஆமாம்"

"மனிதர்கள் எல்லாருமே அரசர்கள் தான். அவர்களிடம் தன்னறிவு என்ற வாளிருக்கிறது. அதைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. பயன்படுத்தாவிட்டாலும், தன்னறிவு இருப்பது தெரிந்தாலே தீக்குணங்கள் தலைபணிந்து விலகும்"

"புரிகிறது ஐயா"

"இன்னொரு விதத்திலும் சொல்கிறேன் கேள். வாளின் கூர்முனையைப் போன்றது மனிதரின் வாழ்வு. உம்மக்கள் என்று அடிக்கடிச் சொல்கிறாயே, அவர்களின் தினசரி வாழ்க்கை கத்தி முனையில் நடப்பது போன்றதாகும். எதையும் அதிகமாக நுகரத்துணியும் பொழுது அதுவே ஆபத்தாகி விடுகிறது. கத்தி முனையில் அழுந்தி நடப்பதற்கு ஒப்பாகிவிடுகிறது. நன்னெறிகளை மறவாமல் பற்றறுத்து வாழ்வது, கத்தி முனையில் நடந்து முடிப்பதற்கு ஒப்பாகிறது. தன்னறிவு எனும் விசை, கத்திமுனையை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. மனிதகுலம் அதை மறவாமல் வாழவேண்டும்"

"உண்மை எமனாரே!"

"நசிகேதா, மேலும் கேள். இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று தம்மைப் போல் அறிவற்றவரையோ, எல்லாம் அறிந்தவர் போல் போலிப் பகட்டுடன் திரிவோரையோ, முன்வினை பாவம் புண்ணியம் பரிகாரம் என்று பலவாறு சொல்லி ஏய்ப்பவரையோ, பேரான்மாவெனும் மகத்தான மனிதசக்தியைப் போன்றோ அல்லது அதைவிட மேலான சக்தி உண்டென்றோ சொல்லி அதையறியச் சடங்குகளை உண்டாக்கித் திரியும் சதிகாரரையோ... நம்பாதே! அவ்வாறு நம்புவது, அறிவு மழுங்கிய கண்மூடிகளின் செயலாகும். உறங்குவோரை விழிக்கச் செய்யலாம்; கண்மூடிகளை விழிக்கச் செய்வது இயலாது. உழல்வது அவர்களின் வாடிக்கை. அவர்களைப் போல் உழலாமல், நீ விழிப்போடு வாழ வேண்டும். கண்மூடிகளை நான் கவனித்துக் கொள்கிறேன், இறுதியில் என்னிடம் தானே வரப்போகிறார்கள்?"

"நான் என்ன செய்ய வேண்டும், நமனாரே?"

"வாழ்வை நேரான முறையில் சிறப்பாக வாழ்ந்து முடி. எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்தவனாக இரு. வாழும் நாளிலே சிறப்பெய்த, தன்னறிவைத் தேடிப் பெறு. உம்மக்களையும் உய்யச் செய்"

"அப்படியே செய்வேன், ஆசானே" என்றான் நசிகேதன். "எனக்கு விடை கொடுங்கள்".

"பொறு" என்ற எமன், புன்னகைத்தான்.

2011/10/21

சொர்க்க வேள்வி


70
பேரான்மா பேரின்ப மாகும் பிறப்பிறப்பின்
தீராதத் தீர்வாம் பெருஞ்சக்தி - சீராகத்
தன்னை அறிவதே வேள்வி தவறுமுயிர்
என்னை அறியும் அடுத்து.

   ன்னையறிந்த ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா, பெரும் சக்தியாகும். அதுவே சொர்க்கமாகும். தீராதப் பிறப்பு இறப்புச் சுழலின் தீர்வும் அதுவே. முறையாகத் தன்னறிவைப் பெறுவதே அச்சொர்க்கத்துக்கான வேள்வியாகும். அவ்வேள்வியைப் புரியாமல், தன்னறிவைப் பெற்று நடக்கத் தவறும் உயிர்கள் என்னை அறிந்து கொள்கின்றன (என்றான் எமன்).



    காணாத காட்சி, பாடாத பாட்டு, பேசாத மொழி எனும் தொடர்களைக் கேட்டிருக்கிறோம். கண்டால்தானே காட்சி? பின், காணாத காட்சி என்பானேன்? பேசாத மொழியினால் யாதொரு பலனுமுண்டா? இப்படி எதிர்மறையாகச் சொல்வதேன்? ஏதாவது சூனியப் பொருளுண்டா?

பிரமாத சூனியமோ சூட்சுமமோ எதுவும் இல்லை. காட்சியை காணவும் முடியும். உணரவும் முடியும். மொழியைக் கேட்கவும் முடியும். உணரவும் முடியும்.

உதாரணமாக, கனவென்பது கண்ட காட்சியா? காணாத காட்சியா? கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் மனம் எங்கிருந்தோ எப்படியோ இணைப்புகளைத் தேடிக் கனவுகளில் வடிக்கிறதே? பிறவிக்குருடர்கள் கனவு காண முடியுமா? முடியும். அவர்கள் கனவில் காட்சி வருமா? வரும். ஒலிக்கனவுகளையும் உணர முடியும். குருடர்கள் விழித்திருக்கும் போதும் (!) உணரத்தானே செய்கிறார்கள்?

அஜாதசத்ரு-பாலாகி உரையாடல் நினைவிருக்கலாம். உறங்கும் மனிதன் காணும் 'காணாத காட்சி'யை மையமாக வைத்து அஜாதசத்ரு ஆன்மாவை விளக்கும் கதை. கதையில் கனவு காணும் பாமரனின் பிறவிகளை எடுத்துச் சொல்லி ஆன்மாவைப் பற்றிய அறிவை ஞானிக்கு வழங்குகிறான் அரசன்.

பேசாத மொழியைப் புரிந்து கொள்ளமுடியாதா? இன்னொருவர் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியுமென்றால், அங்கே உணர்வுக்கே இடமில்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்பது இதைத்தான். வார்த்தைகளில் வடித்தாலும் சிலர் மற்றவர் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில்லை என்பது வேறு விவாதம்.

இன்னொரு கண்ணோட்டமும் உண்டு.

கண்ட காட்சி மாறுவதில்லை (காட்சி மாறினாலும் கண்டது மாறுவதில்லை). காணாத காட்சி என்பது உணர்வை உள்ளிடுவதால் காணும் பொழுதே மாறும் இயல்பினது. ஒன்றைப் புரிந்துகொள்ள முனைந்து இன்னொன்றைப் புரிந்து கொள்வதில்லையா? அது போல. காணாத காட்சி, பேசாத மொழி இவை இன்னதென்று விவரிக்க இயலாத தன்மையன என்றும் கொள்ளலாம். ஒரு படிமத்துள் அடங்காதவை எனலாம்.

சொல்ல வந்தது இது தான்.

ஒன்று புறத்தெளிவுப் பாதை. இன்னொன்று அகத்தெளிவுப் பாதை. காணாத காட்சியைக் காணவும் பேசாத மொழியைப் புரிந்து கொள்ளவும் பக்குவம் வேண்டும். அதுவே அகத்தெளிவைத் தரும் பக்குவம். அறிவு முதிர்ச்சி, அகத்தெளிவில் வெளிப்படும். குணமும் பண்பும் அகத்தெளிவில் வெளிப்படுவன. காணாத காட்சிகளைக் காணும் திறனும் பேசாத மொழிகளைப் புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவர்களால் சுலபமாக அகத்தெளிவை நோக்கிப் பயணம் செய்ய முடிகிறது. எனினும், இது எல்லோரும் பெறக்கூடிய இயல்பே. முயற்சியும் பயிற்சியும் செய்தால் போதும். ஒருவேளை அங்கேதான் சிக்கலோ?

தீராதத் தீர்வும் அத்தகையதே. பிறப்பு இறப்பில் தீர்கிறது. இறப்பு பிறப்பில் தீர்கிறது. புரிந்தவர்கள் ஒன்றிலொன்றைப் பார்க்கிறார்கள். காணாத காட்சி. பேசாத மொழி.

    "நசிகேதா! சொர்க்கம், நரகம் இரண்டும் உண்மையே. உயிரானது சொர்க்கம் நரகம் இரண்டையும் அனுபவிக்க முடியும். உடலைச் சேர்ந்து இருக்கும் பொழுதும், உடலைப் பிரிந்த நிலையிலும் - இரண்டு நிலைகளிலுமே உயிரானது சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்றை அனுபவிக்க முடியும்" என்றான் எமன்.

"அதெப்படி?"

"சொர்க்கம், நரகம் என்றால் என்ன அறிவாயா?"

"அவை உயிர் சேரும் இடங்கள்"

"அப்படியா? உன்னிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். மனிதர்கள் நரக வேதனை என்கிறார்களே? அது என்ன?"

"கொடுமையான அனுபவங்கள், துன்பங்கள், வலிகளை நரக வேதனை என்று சொல்வது உண்டு"

"வேறு ஏதேனும் உண்டா?"

நசிகேதன் யோசித்தான். "அன்பு இல்லாத குடும்பங்களில் சிக்கியவர்கள், தங்கள் வாழ்வை தினசரி நரகம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்" என்றான்.

"அருமையாகக் கவனித்திருக்கிறாய். இதிலிருந்து என்ன விளங்குகிறது? நரகம் என்பது ஒரு அனுபவம். அது போல சொர்க்கம் என்பதும் ஒரு அனுபவம். எதிர்பார்த்த அளவுக்கு மேலான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடையும் பொழுது மனிதர்கள் அதை சொர்க்கானுபவம் என்று சொல்வதில்லையா?"

"ஆமாம்.. சில நேரம் சுவையான சாப்பாட்டை வயிறு நிரம்ப உண்டபின் சிலர் அப்படி சொல்லிக் கேட்டிருக்கிறேன்"

எமன் சிரித்தான். "வயிற்றை நிரப்பும் சாதாரணச் செய்கையைச் சொர்க்கம் என்றால், சொர்க்கத்தை எப்படி வகைப்படுத்துவது?"

நசிகேதனும் சேர்ந்து சிரித்தான். "எம்மக்கள் சிலர், 'சோறு கண்ட இடமே சொர்க்கம்' என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சாப்பாட்டைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் பொருட்டில்லை. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஏதோ ஒரு சடங்கையும் சாப்பாட்டையும் இணைத்து, வாழ்வில் பெரும்பாலான நாட்களை விதவிதமாக உண்டே கழிக்கிறார்கள்"

எமன் இன்னும் பலமாகச் சிரித்தான்.

நசிகேதன் மெள்ளப் பணிந்து, "உங்கள் கேள்வியின் மகத்துவம் புரிந்தது குருவே" என்றான்.

எமன் நசிகேதனைக் கனிவுடன் நோக்க, நசிகேதன் தொடர்ந்தான். "சொர்க்கம் நரகம் இரண்டுமே உண்மை தான். ஆனால் அவை இடங்களல்ல. இடமென்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முடியாதவை. ஆனால், அவற்றை அனுபவங்கள் என்றக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது தெள்ளத் தெளிவாகிறது. சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள்"

"பிரமாதம், நசிகேதா!" என்று எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்தான். "உண்மை! சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள். உயிரானது, உடலுடன் சேர்ந்த நேரங்களில் அனுபவிப்பதைப் போலவே உடலைப் பிரிந்த நேரத்திலும் சொர்க்க நரகத்தை அனுபவிக்கிறது. ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா என்பது மிகப்பெரும் சக்தி என்பதை அறிந்தாய். ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளும் பேரான்மாவுடன் இணைவதே. தன்னையறிந்த ஆன்மாவினால் பேரான்மாவுடன் இணைந்து மேலும் வளரமுடிகிறது. சிற்றலை பேரலையாவது போல. அதுவே ஏழாவது பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானை உருவாக முடியாதல்லவா? அதுவே பிறப்பற்ற நிலை. பேரான்மாவுடன் இணைந்த நிலையில் அதுவே சொர்க்கமாகிறது. ஒடுங்கிய சிற்றலை நீரில் வீழ்வது போல், தன்னறிவு பெறாத ஆன்மாக்கள் தடுமாறிச் சரிகின்றன. பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன. பேரான்மாவுடன் கலக்காத நிலையில் அதுவே நரகமாகிறது"

"சொர்க்கத்தை அடைவதற்கான வேள்வி என்றீர்களே, அது?"

"வேள்வியும் உண்மையே, நசிகேதா. வேள்வித் தீ பற்றி நான் சொன்னது நினைவிருக்கிறதா?"

"நன்றாக நினைவிருக்கிறது. அடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள் முடக்கவொரு மூச்சில் வரும் தீ என்றீர்கள். அதாவது அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கற்களை அடுக்கி, அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி என்று நீங்கள் சொன்னீர்கள். இப்போது நன்றாகப் புரிந்தது. அன்பு, அறம், அடக்கம், கருணை எனும் நான்கு குணங்களைக் கடைபிடித்துத் தன்னறிவைப் பெற்ற உயிரானது, உடலைச் சார்ந்த நிலையிலும் இனிய அனுபவமான சொர்க்கத்தைப் பெற முடியும். அதாவது உயிருடன் இருக்கும் பொழுதே வாழ்வைச் சொர்க்கமாக்க முடியும். உடலைப் பிரிந்த நிலையில், தன்னறிவின் சக்தியால் உந்தப்பட்டுப் பேரான்மாவுடன் கலக்க முடிகிறது. அந்நிலையிலும் சொர்க்க அனுபவத்தைப் பெற முடிகிறது"

"உன் நினைவுத்திறனை மெச்சுகிறேன்"

"தன்னறிவைப் பெறாத உயிர்களின் கதி?"

"அதற்குத்தானே நானிருக்கிறேன்? உடலோடு சேர்ந்த நிலையில் தங்கள் வாழ்வையும் பிறர் வாழ்வையும் பலர் நரகமாக்குகிறார்கள். உடலைப் பிரிந்த நிலையில் அத்தகைய உயிர்கள் பேரான்மாவுடன் சேரமுடியாது ஒடுங்கும் பொழுது, என்னை அறிந்து கொள்கின்றன. தன்னறிவு பெறாத உயிர்கள், பிறவிச்சுழலில் உடனடியாகச் சிக்கி மீண்டும் தன்னறிவு பெறும் முயற்சியில் இறங்க வேண்டும்"

"சொர்க்கம் செல்வதற்கான சடங்குகள்?"

"நசிகேதா. சொர்க்கம் நரகம் இரண்டுமே அனுபவங்கள் என்று அறிந்தபின் சடங்குகள் தேவையா என்பதை நீயே சிந்தித்து அறியலாமே?"

"நன்றாகத் தெரிந்து கொண்டேன். சடங்குகளால் ஆவதொன்றில்லை. எனினும் எம்மக்கள் சடங்குகளையும், சடங்குகளைத் தூண்டுவோரையும் நம்பி மோசமாவதைத் தடுக்க முடியாதா?"

"முடியும். தன்னறிவுக் கொள்கையைப் பரப்பி உணரச்செய்ய வேண்டும்" என்ற எமன் சற்றே சினந்தான். "சடங்குகளைத் தூண்டுவோருக்கு நிச்சயமாக நரகவேதனை காத்திருக்கிறது. அவர்களுக்காகவே என் வாசல் திறந்திருக்கிறது" என்றான்.

நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, மரணம் உயிர்ப்பயணம் சொர்க்கம் நரகம் என்று பலவற்றையும் விளக்கி, எனக்கு இந்த அறிவையளித்த உமக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? எதுவாகிலும் சொல்லுங்கள் ஆசானே! செய்து முடிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"தான் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்குவதே, நல்ல மாணவன் தன் ஆசிரியருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்" என்றான் எமன்.

2011/10/15

உயிரின் நிலையான இருப்பிடம்


69
வெய்யோன் வருகையும் வெண்சுடர் வாட்டமும்
மெய்யோ மருக்கமும் சிந்தனையோ - செய்யக்
கடல்நீர் மழையானால் கார்க்குமோ மாலில்
அடல்சேர் அளவறிந்தார் ஆர்?

   சூரியன் உதிப்பதும் சந்திரன் தேய்வதும் உண்மையா? காற்று கற்பனையா? கடல்நீர் மழையாக மாறினால் கரிக்குமா? வலையில் எவ்வகை மீன் விழும் என்பதை அறிந்தவர் உண்டா?


வெய்யோன்: சூரியன்
வெண்சுடர்: சந்திரன்
மருக்கம்: காற்று
செய்ய: பண்புச்சொல் (செய்யக் கடல்நீர்: மிகவும் கரிக்கும் கடல்நீர்)
கார்க்குமோ: கரிக்குமோ
மாலில்: வலையில்
அடல்: மீன், கடல்மீன் வகை


    ட்டவாதத்துக்கும் வாட்டவாதத்துக்கும் ஒரு கால் வேறுபாடு :).

வட்டவாதம் வாட்டவாதம் என்பது புலனாகும் போது ஓடுகிறோம், ஒதுங்குகிறோம், ஒடுக்குகிறோம்.

உண்டா இல்லையா என்பது வட்டவாதம். அது புரியாதோர், வட்டவாதத் தீர்வைக் காணாது வாட்டமடைகிறார்கள். உண்டா இல்லையா என்பது, புறச்சிந்தனையை, புறத்தெளிவை நோக்கியப் பயணம். புறத்தெளிவின் மிகப்பெரியச் சிக்கல், அதன் நிலைமாற்றம். புறத்தெளிவினால் பயன் அதிகமில்லை. அகத்தெளிவு சற்றே நிலையானது (புறத்தெளிவைக் காட்டிலும்). அகத்தெளிவின் அடிப்படையில் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் வளர்ப்பதால் குழப்பங்களையும், சிக்கல்களையும், ஏமாற்றங்களையும் குறைத்துக் கொள்ளமுடியும். குறிப்பாக, விழிப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், ஏற்படுத்தவும் முடியும்.

'உண்டா இல்லையா' என்பது புறத்தெளிவைச் சார்ந்தச் சிந்தனையெனில், 'தேவையா இல்லையா' என்பது அகத்தெளிவைச் சார்ந்தச் சிந்தனை.

கடவுள், சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் பற்றிய 'உண்டா இல்லையா' வகைச் சித்தாந்த வேதாந்தச் சிந்தனைகள் ஒருபுறம் இருக்கட்டும். 'தேவையா இல்லையா' என்ற அகத்தெளிவுக் கேள்வி, மனித வாழ்க்கையை இன்றைக்கு.. இப்போது.. நடைமுறையில் எளிமைப்படுத்தக் கூடியச் சாதனம். என் தலைமுறை இதைச் சரியான முறையில் பயன்படுத்த மறந்ததும் மறுத்ததும் வேதனை. வரும் தலைமுறைகள் புறத்தெளிவுக்கும் அகத்தெளிவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து நடப்பார்கள் என்ற நம்பிக்கையின் வித்து, இன்றைய இளைய தலைமுறையின் சிந்தனைகளில் தெரிகிறது. அகத்தெளிவு வளர வளர, இக்கேள்விகள் மதம் கடவுள் சொர்க்க நரகங்களுக்குத் தாவும் என்று நினைக்கிறேன். பல கண்மூடித்தனங்கள் ஒழியும் என்று நம்புகிறேன்.

அண்டம் தோன்றி 13 பிலியன் வருடங்களாகின்றன என்கிறார்கள். விடுங்கள், நம் solar system தோன்றி எட்டு பிலியன் வருடங்களாகின்றன. விடுங்கள், நம் பூமி தோன்றி நாலரை பிலியன் வருடங்களாகின்றன. விடுங்கள், மனித இனம் பரவத் தொடங்கி ஒரு இலட்சம் வருடங்களே ஆகின்றன. விடுங்கள், மனித இனம் பசிக்கு அப்பால் சிந்திக்கத் தொடங்கி எண்பதாயிரம் வருடங்களே ஆகின்றன. 'missing link' என்று தேடப்படும் இடைப்பட்ட இருபதாயிரம் வருடங்களைச் சாக்காக வைத்துக் கொண்டு 'அப்பாற்பட்ட சக்தி' என்று கிளப்பிவிட்டுக் குழப்பியடிக்கும் எண்ணற்றக் காவி அங்கிகளின் கருத்தை மேற்பொருத்திப் பார்த்தால், அவரவர் கண்ணோட்டத்திற்கேற்ப, ஏறக்குறைய நாலரை பிலியனலிருந்து பனிரெண்டு பிலியன் தொள்ளாயிர மிலியன் சில்லறை வருடங்கள் வரை 'எல்லாம் வல்லப் பெருஞ்சக்திகள்' தனியே கும்மியடித்துக் கொண்டிருந்திருக்கிறன என்ற கணிப்பு, அதிர வைக்கிறது. குறைந்த பட்சம் வியக்க வைக்கிறது. குறைவிலும் குறைந்த பட்சம் சந்தேகிக்க வைக்கிறது.

மனிதசக்தி மகத்தானது. உணர வல்லது. உருவாக்க வல்லது. உபயோகிக்க வல்லது. வேறு பெருஞ்சக்திகள் தேவையில்லை. மனிதநேயம் வளர, மனித இனம் உயர, மனிதசக்தி போதும்.

'அப்பாற்பட்ட' அதிசயங்கள் சிலவற்றை இதுவரை கோடிட்டிருக்கிறேன். இங்கே இன்னொன்று. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடக்கிறது. contact lensக்குள் கணிணியும் இணையமும் புகுத்தியிருக்கிறார்கள். இவற்றைக் கண்களில் அணிந்து கொள்ளும் பொழுது, மூளையுடன் நேரடியாக அதிவேகத் தொடர்பு ஏற்படுகிறது. ஒரு பொருளையோ நபரையோ பார்க்கும் பொழுது உடனடியாக அந்தப் பொருளைப் பற்றிய அல்லது நபரைப் பற்றிய அத்தனை விவரங்களும் கண்களுக்கு முன்னே விரிவடைந்து தெளிவாகிறது. காணாத காட்சி காணமுடிகிறது. இன்னும் நூறு வருடங்களுக்குள் இது பரவலாக மூக்குக்கண்ணாடி போல் கிடைக்கும்.

கண்பார்வை அளித்த உண்மையான சக்தி வாய்ந்த மூக்குக்கண்ணாடி தோன்றி முன்னூறு வருடங்களே ஆகின்றன. அதற்குள் அதன் பயன் முழுமையடைந்து மெள்ள மறைந்து வருகிறது. கண்திறக்கும் அசல் சக்தியான மூக்குக்கண்ணாடிக்கு முன்னூறு வருடங்களில் சமாதி கட்டிவிட்டோம். கண்மூடித்தனப் போலிச் சக்திகளை முன்னூறு வருடங்களுக்கு மேல் தொடர்வது பாவிப்பது வருந்த வைக்கிறது. வியக்க வைக்கிறது. சந்தேகிக்க வைக்கிறது.

உருப்படாத அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுவதால் நொபெல் பரிசைப் பற்றிய சந்தேகம் எழுந்தாலும், அவ்வப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுவதால் சற்றே மரியாதைக்குட்பட்டு நிற்கிறது. சமீபத்தில் அண்டவிரிவுக்கான ஆராய்ச்சிக்கு நொபெல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அண்டவிரிவில் அப்படியென்ன அதிசயம்? அண்டவிரிவும் அதைப்போன்ற ஆய்வுகளும் அகத்தெளிவுச் சாதனங்கள்.

பிள்ளைகள் physics படிக்கவேண்டும். இல்லை... எல்லோரும் physics படிக்கவேண்டும். மொழிவன்மையைப் போல இயற்பியல் வன்மை அவசியமாக்கப்பட வேண்டும். சில நியதிகள் அதிகமாக மாறுவதில்லை. அகத்தெளிவுச் சாதனங்களைப் போல. மாற்றமே நிலையானது என்ற சித்தாந்தம் பரவிய உலக வாழ்க்கையில், நிலையாமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி (!) வாழ்வதற்கு அகத்தெளிவுச் சாதனங்கள் தேவை. மனிதசக்தியின் மகத்துவத்தை இளமையிலேயே புரிந்து கொள்ள வித்திட வேண்டும். இளமைக்கான இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், இயற்பியல் கருத்தாகப் படிக்க ஆசை :)

    "நசிகேதா, நீ பல கேள்விகள் கேட்டாய். இனி என் முறை" என்றான் எமன்.

"கேளுங்கள்"

"சூரிய சந்திரனை அறிவாய் அல்லவா?"

"அறிவேன். சூரிய ஒளி பூமியில் வளர்ச்சியை உண்டாக்கக் காரணமாகிறது. எம்மக்கள் பலர் சூரியனைக் கடவுளென்று வணங்குகிறார்கள். சந்திர ஒளி இரவில் குளுமையைத் தந்து எம்மக்களை மகிழச் செய்கிறது. சூரியன் தினம் கிழக்கில் உதயமாகி மேற்கே மறைகிறது. சந்திரன் தினம் வளர்ந்து தேய்கிறது, தேய்ந்து வளர்கிறது"

எமன் சிரித்தான். "நசிகேதா.. நன்றாகப் பார். சூரியன் தோன்றவுமில்லை, மறையவுமில்லை. சந்திரன் வளரவும் இல்லை, தேயவும் இல்லை. நன்றாகச் சிந்தித்துப் பார். பூமியைப் போலவே சந்திரனும் ஒரு கோள். சூரியனோ மாபெரும் ஒளிப்பிழம்பு. சந்திரன் தேய்வதில்லை. சூரியன் மறைவதும் இல்லை. இருப்பினும் பூமியின் நடைமுறை வாழ்க்கைக்கு, இவற்றின் தோற்றமும் மறைவும் அவசியமாகின்றன. சூரியன் தோன்றாவிட்டால், சக்தி குன்றி ஆக்க சாதனமற்றுப் போகிறது. மறையாவிட்டால், சக்தி மேம்பட்டு அதுவே அழிவுச் சாதனமாகிறது. சூரியன் சந்திரன் பூமி இவற்றின் இயக்கங்களில் இப்படிப்பட்டத் தோற்றமும் மறைவும் அவசியக் கற்பனைகள். புரிகிறதா?"

நசிகேதன் தலையசைத்தான். எமன் தொடர்ந்தான். "சூரிய சந்திர தோற்றமும் மறைவும் கற்பனை என்றேன். அவற்றின் தோற்றதையும் மறைவையும் கண்ணால் காண முடிந்தாலும் கற்பனைதான், ஏற்கிறாயா?"

"ஆம். புரிகிறது. கண்ணெதிரே தோன்றி மறைந்தாலும், அவை மக்கள் மனதில் ஏற்படுத்திக்கொண்ட கற்பனையே"

"அடுத்தக் கேள்வி. கண்ணுக்குத் தெரிவதில்லை. தோன்றுவதில்லை. மறைவதில்லை. இருப்பினும் காற்று வீசுகிறது என்கிறோம். காற்றும் கற்பனையோ?"

"இல்லை. காற்றின் சக்தியைப் புரிந்து கொள்ள அசைவுகள் உதவுகின்றன. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் காற்றெனும் சக்தி புலனாகிறது"

"விந்தை. கண்ணுக்குப் புலனாவது கற்பனை, கண்ணுக்குப் புலனாகாதது உண்மை என்கிறாய். விந்தையிலும் விந்தை. சரி, கடலலை பற்றி முன்பு விவாதித்தோம். கடல்நீரை அருந்தப் பிடிக்குமா?"

"கரிக்கும் எமனாரே. அருந்துவதற்கு ஏற்றதல்ல"

"ஆழ்கடலில் எடுத்தால் கரிக்காதோ ஒருவேளை?"

"இல்லை. கரிப்பு, கடல்நீரின் தன்மை. கரையருகிலோ அல்லது நடுக்கடலிலோ சென்று குடித்தாலும் கரிக்கும்"

"மழைநீர்?"

"குடிப்பதற்கேற்றது"

"கடல்நீரும் மழையாக மாறி விழுகிறதே? அப்பொழுது கரிக்குமா?"

நசிகேதன் விழித்தான். ஆசிரியர் ஏன் இப்படிப்பட்டக் கேள்விகளைக் கேட்கிறார்? நானல்லவா கேள்வி கேட்கவேண்டும்? தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது புரிந்து, சிந்திக்கத் தொடங்கினான். எமனுக்குத் தன் மாணவன் சிந்திக்கத் தொடங்குவதும் தெரிந்தது. "நசிகேதா, இன்னுமொரு கேள்வி" என்றான்

"கேளுங்கள் குருவே"

"மீனவன் வலை வீசுகிறான். வலையில் எத்தகைய மீன் விழும் என்பதை அறிவானா? சிறிய மீன், பெரிய மீன், கறுப்பு மீன், சிவப்பு மீன், ஒரு மீன், பல மீன்.. என்று வகையோ வண்ணமோ அளவோ அறிய முடியுமா? வலை வீசும் முன்போ வீசும் போதோ அறிந்தவர் யாராவது உண்டா?"

நசிகேதன் மீண்டும் விழித்தான். "நீங்கள்தானே ஆசிரியர்? என்னிடம் கேட்டால்?" என்றான். பதில் தெரியாத ஆதங்கம் அவன் மறுகேள்வியில் தொனித்தது.

எமன் மீண்டும் பலமாகச் சிரித்தான். அறிவுள்ளவன் என்றாலும் தன் மாணவன் வயதால் மிகவும் சிறியவன் என்பதை உணர்ந்த ஆசிரியன் அல்லவா? நசிகேதனை அன்புடன் தட்டிக் கொடுத்தான். "நசிகேதா.. உனக்கு விடை தெரியாவிட்டால் தவறில்லை. மனிதன் தன்னைச் சுற்றி இருப்பதையும் நடப்பதையும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கேள்விகளை கேட்டேன். உலகில் மனிதரைச் சுற்றி இருப்பது எல்லாமே மனிதருக்காக ஏற்பட்டவை, மனித அறிவு வளர உருவானவை, மனிதநேயம் வளரத் தோன்றியவை, படிப்பினைகளும் பாடங்களும் நிறைந்தவை என்பதை உணர வேண்டும். உலகம் பிறந்ததும் ஓடும் நதிகளும் காற்றின் ஒலிகளும் கடலின் அலைகளும் மனிதருக்கான பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கேட்கும் நாளில், கேட்டுச் செயல்படும் நாளில், மனிதம் சிறப்படையும்..

..பேரான்மா என்பது, சூரியனைப் போல அபரிமித ஒளிப்பிழம்பு, சக்திக்கூட்டு. சந்திரனைப் போல அமைதியின் சாரம், குளுமையின் உறைவிடம். பேரான்மா தனித்திருந்தால் ஒரு பயனும் இல்லை. பூமியின் கண்களுக்குச் சூரியனும் சந்திரனும் தோன்றி மறைவது போலவே, மனிதத்தின் கண்களுக்கு பேரான்மா தோன்றி மறைகிறது. பேரான்மா உயிர்ப்பயணம் மேற்கொள்கிறது. பூமியின் வளர்ச்சிக்கு சூரிய சந்திர தோற்றமும் மறைவும் அவசியம் என்றாயே, அது போலப் பேரான்மா, ஆன்மாவாகி வந்து போனால்தான் மனிதம் வளர முடியும்..

..அசையாத காற்று மூச்சாகி உயிரை வளர்த்தாலும், அசையும் காற்றை மட்டுமே மனிதனால் உணர முடிகிறது. பேரான்மாவின் சக்தியும் அப்படியே. மனித மேம்பாட்டில் மட்டுமே பேரான்மாவின் சக்தியை உணர முடியும். பேரான்மாவெனும் காற்றை அசைத்து உணர தன்னறிவு உதவுகிறது..

..கடல்நீர் கார்க்கும் என்றாலும், அது மழைநீராக மாறும் பொழுது மழைநீரின் இயல்பைப் பெறுகிறது. ஆன்மாவும் அப்படியே. பிறவிக்கேற்ப, வளர்ச்சிக்கேற்ப, தனித்தன்மையைத் தேடிக்கொள்கிறது. சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ, மறைக்கவோ செய்கிறது. எனினும், நீர் எனும் அடிப்படைத் தன்மை மாறுவதில்லை. பேரான்மாவின் அடிப்படைச் சக்தி மாறுவதில்லை. நீரின் சக்தி வெளிப்படுவது நிலத்தில் தானே? ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்துவது மனிதம்..

..பிறப்பும் இறப்பும் விபத்துக்கள் என்றேன். வலை வீசும் மீனவன் 'இத்தகைய மீனைப் பிடிப்பேன்' என்ற திட்டத்துடன் செயல்படுவதில்லை. இத்தகைய மீன் வலையில் விழும் என்று எவராலும் அறிந்து சொல்லமுடியாது. அதுபோலவே, ஆன்மாவும் பிறவி வலையில் விழுகிறது. நழுவுகிறது. எப்படி எப்பொழுது விழும், நழுவும் என்று கணிக்கவியலாது, கணிப்பதால் பலனுமில்லை..

..இவை எல்லாம் இயற்கையாக நிகழ்பவை. தன் இயல்பை நிகழ்வுக்கேற்ப வெளிப்படுத்துகின்றன. மீண்டும் இயல்பையே சேருகின்றன. ஆன்மாவும் அப்படியே. பிறப்பும் இறப்பும் அப்படியே. பேரான்மா எனும் மனிதக் கூட்டுச்சக்தி, மனிதநேயம் தோன்றி வளர்ந்து செழிக்க அவ்வப்போது தன் இயல்பை மாற்றிக் கொண்டு வெளிப்படுகிறது. பின், மாறாத நிலையை மீண்டும் அடைகிறது" என்றான்.

நசிகேதன் எமனை வணங்கினான். "மிக்க நன்றி. பேரான்மா ஆன்மா தன்னறிவின் இணைப்பையும், பிறப்பிறப்பின் இயல்பையும் அறிந்து கொண்டேன். உயிர் உடலை விட்டு விலகினாலும் நம்மைச் சுற்றியே பெருஞ்சக்தியாய் நிலவுகிறது என்பதையும் புரிந்து கொண்டேன். அதுவே உயிரின் நிலையான இருப்பிடம் என்பதையும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி" என்றான். "இருப்பினும்..."

"என்ன நசிகேதா?"

"இருப்பினும்.. சில கேள்விகள் இன்னும் சுற்றி வருகின்றன. சொர்க்கம் நரகம் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள். அவை உண்மையா? அவற்றுக்கான வேள்விகள் பற்றிச் சொன்னீர்கள். அவை தேவையா? எம்மக்கள் ஏழாவது பானையாக என்ன செய்ய வேண்டும்? பாவ புண்ணிய சொர்க்க நரகங்களுக்கு அஞ்சியும் ஆசைப்பட்டும் எண்ணற்றச் சடங்குகளைச் செய்கிறார்களே? அவற்றால் பலனுண்டா? இல்லையெனில எப்படி அறிவுறுத்துவது? எம்மக்கள் விழிக்க வழியுண்டா?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/10/07

பேரான்மாவே பெருஞ்சக்தி


68
சிற்றலை பேரலையிற் சேரும் சிதறினால்
ஒற்றியே நீராய் ஒடுங்கும் - அற்றறியும்
ஆன்மா அருஞ்சக்தி ஆகுமே மற்றவையால்
மேன்மையும் மங்கும் முசிந்து.

   சிறு அலைகள் சேரச்சேர பேரலை எழுகிறது. சேர இயலாத சிற்றலைகள், ஒடுங்கி மீண்டும் நீரோடு கலக்கின்றன. பற்றொழித்து நல்வழியை அறிந்த ஆன்மா, பேரான்மாவோடு இணைந்து அரிய, நுட்பமானச் சக்தியாகிறது. (அவ்வாறு அறிய இயலாத) மற்ற ஆன்மாக்களால், மேன்மையான பேரான்மா வலுவிழந்து குன்றும்.


ஒற்றி: அடங்கி, விழுந்து
அற்றறியும்: அற்று+அறியும், துறந்தறியும்
அருஞ்சக்தி: அரிய, மேலான சக்தி. உருவமற்ற சக்தி என்றும் பொருள் கொள்ளலாம் (அரு=உருவமற்ற)
முசிந்து: இளைத்து


    ழு வயதில் கேட்டக் கதையொன்று. தங்களுக்குள் ஒற்றுமையில்லாத ஐந்து சகோதரர்களை அழைத்தத் தந்தை, அவர்களிடம் ஆளுக்கொரு குச்சியைக் கொடுத்து உடைக்கச் சொன்னாராம். எளிதில் உடைத்துக் கொடுத்தனராம் சகோதரர்கள். பிறகு, இணைத்துக் கட்டிய ஐந்து குச்சிகளைக் கொடுத்து உடைக்கச் சொன்னாராம் தந்தை. எத்தனை முயன்றும் சகோதரர்களால் குச்சிக்கட்டை உடைக்க முடியாமல் போனதாம். படிப்பினையறிந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்தனராம்.

சகோதர ஒற்றுமையா, இணைந்த குச்சிகளின் வலிமையா? கதையில் எது படிப்பினை? அதுவரை இல்லாத வலிமை, குச்சிகள் சேர்ந்ததும் தோன்றியதே? தனிக் குச்சிகளுக்கு அஞ்சாத சகோதரர்கள், இணைந்த குச்சியின் சக்திக்குப் பணிந்தார்களே? ஒன்றான சகோதரர்கள் ஐவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து முயன்றாலும் குச்சிக்கட்டை உடைத்திருக்க முடியுமா? ஏழு வயதில் புரிந்த கதை. எழுபது வயதிலும் புரியாதப் படிப்பினை.

    கூட்டுப் பிரார்த்தனை - ஒரே குறிக்கோள் தொட்ட பல இணைந்த மனங்களின் பிரார்த்தனை - நூற்றாண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. பலனளித்திருக்கிறது. மாய மந்திர தந்திரங்களை ஒதுக்கி, மனித மனங்களின் நல்லெண்ணக்கூட்டு என்றக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சற்றே பிரமிக்க வைக்கிறது. கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்துமே எதிர்பார்த்தப் பலனைத் தருவதில்லை. எனினும், சில நம்பமுடியாதச் சிக்கல்களைக் கூட்டுப் பிரார்த்தனைகள் தீர்த்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஹிட்லர் மரணத்திலிருந்து... கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக நிறைய உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. என் குடும்பத்தில் ஒருவர், தன் உடல் ஆரோக்கியத்துக்குக் கூட்டுப் பிரார்த்தனையே காரணம் என்கிறார். பதினேழு வயது வரை கால்களை அசைக்கவும் முடியாத ஊனமாயிருந்த இவர், இன்றைக்குத் தினம் மூன்று மைல் நடக்கிறாராம். இவருக்கு வயது எழுபத்து மூன்று. பிழைக்க மாட்டார் என்று கைவிடப்பட்ட அமிதாப் பச்சனுக்கு இந்தியா முழுதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கழுத்து நரம்புகளில் குண்டு பாய்ந்துக் குற்றுயிராகக் கிடந்த எம்ஜிஆர் பிழைக்க வேண்டி, அவருடைய மருத்துவரே (என் தந்தைக்கு உறவு) தினம் ஐம்பது பேரை அழைத்து வந்து ஒரு வாரம் கூட்டுப் பிரார்த்தனை செய்ததாகச் சொல்வார்கள் (கடவுள் வழிபாடு எதுவும் இல்லாத பிரார்த்தனை - கறுப்புச் சட்டைக்காரர்). என் காரைக்கால் நாட்களில் ஒவ்வொரு வியாழன் மாலையும் அரபிந்தோ ஆசிரமக்காரர்கள் 'பொதுப் பிரார்த்தனை' செய்ததைப் பார்த்திருக்கிறேன். கிண்டல் செய்திருக்கிறேன். வரலாற்றில் நிறைய அசல் ரிஷ்யச்ருங்கர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். காந்தியின் கூட்டுப் பிரார்த்தனைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் மகான் அல்ல.

இங்கே பிரார்த்தனை என்பது அர்ச்சனை, பக்தி என்ற எதையும் குறிக்கவில்லை. பலரும் ஒரே மனதோடு ஒரு நற்செயலை எண்ணி விரும்பும் மனிதநேயமே கூட்டுப் பிரார்த்தனை. ஒரு மனம் இன்னொரு மனதோடு இணையும் சக்தியே கூட்டுப் பிரார்த்தனை. இதைச் செய்யக் கும்பாபிஷேகங்கள் தேவையில்லை. காவிகளைத் தொடர வேண்டியதில்லை. மூட்டை முடிச்சுகளைச் சுமக்க வேண்டியதில்லை. முப்பது நாள் விரதமிருக்க வேண்டியதில்லை. தினம் ஐந்து வேளை தொழ வேண்டியதில்லை.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உலக மக்கள் அனைவரும் ஐந்து நிமிடங்கள், வேண்டாம்... ஐந்து நொடிகள், ஒரு நற்செயலை மனமுருக எண்ணினால் ஏதாவது பெருஞ்சிக்கல் தீர வாய்ப்புண்டா? உலக மக்கள் வேண்டாம்... ஒரு தெரு... ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்தால் ஒரு சிறு சிக்கலின் ஒரு சிறு பகுதி தீர வாய்ப்புண்டா? பரிசோதனைக்கெல்லாம் ஏது நேரம்? பத்து காசு கோவில் உண்டியலில் போட்டு அரோகரா என்றால், சொந்த நிம்மதிக்கு வழியானது.

மனித மனமே சக்தி. மனித மனங்களின் கூட்டே பெருஞ்சக்தி. அதற்கு நான்கு கைகள் இல்லை. சக்கரங்கள், ஆயுதங்கள் இல்லை. இரத்தம் சொட்டும் நாக்கில்லை. ஆகாயத்தைக் கீறி இறங்கவில்லை. புனிதகர்ப்பம் எதுவுமில்லை.

மனிதசக்தியே அருஞ்சக்தி. கண்ணுக்குப் புலப்படாத சக்தி என்பதற்குக் காரணம் இருக்கிறது. கண்ணுக்குப் புலப்படும் சக்தியைக் கோவிலில் காணலாம். கண்ணுக்குப் புலப்படாத சக்தியை உணர வேண்டும். மனதைக்கட்டி அகத்தில் காண வேண்டும். அதைவிட்டுக் கண்ணுக்குப் புலப்படும் போலிச் சக்திகளை மனதில் நிறுத்தி, அருவம் என்று அலத்துகிறோம். தயங்குவதேயில்லை. நாளைப் பொழுது நமக்கென வாழ்வதில் தயக்கம் உண்டு. அதை நடத்த ஒருவனைக் கோவிலில் தேடத் தயக்கமே இல்லை.

கடவுள் என்றதும் மனதில் தோன்றுவது உருவமா அருவமா? மனிதம் என்றதும் மனதில் தோன்றுவது? இரண்டில் எது அருவம்? எது நுட்பம்? எது பெருஞ்சக்தி? இரண்டில் எது குச்சிக்கட்டு?

    என் நண்பர் ஒருவர், தனக்கு அலுவலகத்தில் ஏதும் நடக்கவேண்டுமென்றாலோ, வியாபாரம் பெருக வேண்டுமென்றாலோ கோவிலுக்குச் சென்று பத்து சுற்று சுற்றிவருவார். பத்து டாலரோ நூறு டாலரோ தயங்காமல் உண்டியலில் போடுவார். (கடவுளுக்கு வருமான வரி உண்டா தெரியவில்லை). இன்னொரு நண்பரின் பதினாறு வயது மகனிடம் "தேர்வில் முதல் மதிப்பெண் பெற என்ன செய்கிறாய்?" என்று கேட்ட பொழுது "பிள்ளையார் சுழி போடுகிறேன். அதனால் எனக்கு எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை தெரிகிறது" என்றார். இன்னொரு குடும்ப நண்பர் ஒருவர், மற்ற மாமிகளுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று சௌந்தர்யலஹரி படிக்கிறார். "ஒரு பாடலின் ஒரு வரிக்காவது பொருள் தெரியுமா?" என்று ஒருமுறை கேட்டேன். "மனமுருகிச் சொன்னால் பொருளறியத் தேவையில்லை" என்றார். ஆ! வியக்க வைக்கும் நம்பிக்கைகள்.

என் ஆசிரிய நண்பர் அரசன் தினமும் காலையில் பிரார்த்தனை செய்வார். "என்ன பிரார்த்தனை செய்யுறீங்க? உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே?" என்றேன் ஒருமுறை. "நீ நல்லா இருக்கணும்னு பிரார்த்த்னை செஞ்சேன்" என்றார். என் குழப்பத்தைப் புரிந்துகொண்டு, "நீ என்றால் நீ இல்லை ஐயா. அடுத்தவன் நல்லா வாழணும் நெனச்சா அதைவிட வேறே என்னா பிரார்த்தனை வேண்டிக் கிடக்குது?" என்றார்.

எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவதன் தயக்கம், நாம் வாழ யார் பாடுவாரில் தொடக்கம். நம் சுய அல்லது குடும்ப நலனுக்காகக் காவியிடமும் கோவிலிலும் வேண்டுவதை நிறுத்த முடியுமா? ஒன்று ஆசை. மற்றது பற்று. இரண்டையும் விட்டுப் பொதுமனித சக்தியின் ஆணிவேரை உணர முடியுமா?

மனிதசக்தியை நம்புவது எளிதல்ல.

    "நசிகேதா, கடலலையைப் பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டான் எமன்.

"பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தப் பொழுது போக்கு" என்றான் நசிகேதன்.

"அப்படியா?"

"ஆம். எங்கிருந்தோ ஆர்ப்பரித்து வரும் பேரலைகள் அருகில் வந்து அடங்கி, இதமாக வருடுவது பிடிக்கும். ஆர்ப்பாட்டத்தோடு இரைந்து பாறைகளை உடைத்தெறிவதும் பிடிக்கும். கடலலையின் சக்தியை எண்ணி வியந்திருக்கிறேன்"

"பேரலை எங்கிருந்து வருகிறது?"

"திடீரென்று உருவாகிறது. சிறு அலைகள் சேர்ந்து பேரலையாக மாறுகின்றன"

"எல்லா சிற்றலைகளும் பேரலைகளாகுமா?"

"இல்லை. எத்தனையோ அலைகள் பேரலையுடன் சேராமல் அடங்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன்"

"நன்று நசிகேதா. பேரலை என்று தனியாக ஏதுமில்லை. பேரலை என்பதே சிற்றலைகளின் கூட்டாகும். வலுவான சிற்றலைகளை சேரச்சேர, பேரலை உருவாகிறது. வலுவான சிற்றலைகளின் சக்தி பேரலையை உருவாக்குகிறது. வலுவடைந்த பேரலை, மற்ற சிற்றலைகளை ஈர்த்து இன்னும் பெரிதாகிறது. பேரலையை வலியச் சேரும் வலுவான சிற்றலைகளினால், பேரலை இன்னும் பெரிதாகிப் பாறைகளையும் உடைத்தெறியும் சக்தியைப் பெருகிறது. பேரலையைச் சேராதச் சிற்றலைகள், நீராகவே ஒடுங்கி விடுகின்றன. வலுவற்றச் சிற்றலைகளும் பேரலையைச் சேருகின்றன. வலுவற்றச் சிற்றலைகள், பேரலையின் வலுவைக் குறைக்கின்றன. பேரலையும் அடங்கிவிடுகிறது" என்றான் எமன்.

நசிகேதன் அமைதியாக இருந்ந்ததைக் கவனித்த எமன், "என்ன சிந்திக்கிறாய்?" என்றான்.

"நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நான் முன்னர் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு விடை கிடைத்ததாக எண்ணுகிறேன்" என்றான் நசிகேதன்.

"என்ன கேள்விகள்?"

"உயிர்ப்பயணத்தை விவரிக்கையில், 'உயிரின் இலக்கு பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை' என்றீர்கள் அல்லவா?"

"ஆம்"

"பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி என்றீர்கள். 'இச்சக்தியுடன் கலப்பதே சொர்க்கமா? பேரின்பமா? பிறவா நிலையா?' என நான் கேட்டேன்"

"ஆம். எந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது?"

"விடை கிடைத்தது என்று எண்ணும் பொழுதே ஐயமும் எழுகிறது"

எமன் சிரித்தான். "நசிகேதா. உன்னுடன் வாதம் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான்.

"சிற்றலையின் நோக்கம் பேரலையுடன் சேர்வதே என்பது புரிகிறது. சிற்றலையின் சக்தி, பேரலையுடன் இணையச் செய்வதோடு, பேரலையின் வலிமையைக் கூட்டும் என்பதும் புரிகிறது. வளர்ந்த பேரலை பிற சிற்றலைகளை ஆதரித்துத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் என்பது புரிகிறது. சிற்றலையின் சக்தி பேரலையினால் புலனாகிறது, சிற்றலையின்றிப் பேரலையை அறியவே முடியாது என்பதும் தெளிவானது."

"அற்புதம்! மேலும் சொல்"

"அது போல, ஆன்மாவின் நோக்கமும் பேரான்மாவுடன் இணைவதாகும் என அறிந்தேன். ஆன்மா எப்படி பேரான்மாவை வலுவாக்குகிறது?"

"உண்மை. ஆன்மாவின் இலக்கு, பேரான்மாவுடன் இணைவதே. பற்றறுத்து, நல்லொழுக்கத்துடன் தன்னையறிந்த ஆன்மா, சக்தி வாய்ந்தது. சக்தி வாய்ந்த ஆன்மா பேரான்மாவை எளிதாகச் சேர்கிறது. வலுவான சிற்றலை பேரலையுடன் இணைவது போலவே. அவ்வாறு சக்தி வாய்ந்த ஆன்மாக்களின் கூட்டணியில் உருவாகும் பேரான்மா, பெருஞ்சக்தி பெறுகிறது. தன்னையறியாத ஆன்மாக்கள் பேரான்மாவுடன் இணைய முயன்று தோற்கின்றன. இணைந்தாலும் பேரான்மாவின் வலிமையைக் குறைத்து விடுகின்றன"

"ஒடுங்கிய சிற்றலைகள் தான் மீண்டும் பிறக்கின்றனவா?"

"ஆம்"

"பேரான்மாவுடன் இணைந்த உயிருக்குப் பிறப்பில்லையா?"

சுற்றுமுற்றும் பார்த்த எமன், "உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்" என்றான்.

"சொல்லுங்கள்" என்றான் நசிகேகன் ஆவலுடன்.

"பிறப்பும் இறப்பும் விபத்துக்கள்"

"புரியவில்லையே?"

"இன்னொரு கற்பனைப் பயணம் செய்வோமா?" என்றான் எமன்.

"நான் தயார்" என்றான் நசிகேதன்.

"உன்னைக் குயவனாக எண்ணிக்கொள். நீ ஆறு பானைகள் செய்ய வேண்டும்"

"சரி"

"பொறு. முதல் பானையை, இதோ தரையில் அமர்ந்து இங்கே செய்" என்றான்.

நசிகேதன் தரையில் அமர்ந்து கற்பனைப் பானை ஒன்றைச் செய்து முடித்தான்.

எமன், "அடுத்த பானையை அதோ பத்தடி தள்ளி சற்று உயரத்தில் நின்றபடி செய்" என்றான்.

நசிகேதன் பத்தடி நடந்து, இரண்டு படிகள் ஏறி சற்று உயரத்தில் இரண்டாவது பானையைச் செய்தான்.

தொடர்ந்து எமன் நசிகேதனை அலைக்கழித்து உயரத்தில் ஏற்றி மற்ற நான்கு பானைகளைச் செய்யச் சொன்னான். எமன் சொற்படி நசிகேதன் ஆறாவது பானையை நூறடி உயரத்தில் செய்து முடித்தான். "ஐயா, ஆறு பானைகளும் தயார்" என்றான்.

"ஏழாவது பானை ஒன்றைச் செய்ய வேண்டும்" என்றான் எமன்.

"சரி, எங்கே சொல்லுங்கள்" என்றான் நசிகேதன்.

எமன் அவனை தொலைவில் அழைத்துச் சென்றான். அங்கே காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. "இங்கே செய்" என்றான்.

நசிகேதன் எத்தனை முயன்றும் பானை சேரவில்லை. "ஐயா, இங்கே காற்று வலுவாக இருக்கிறது. பானை செய்ய முடியவில்லை" என்றான்.

"நன்று நசிகேதா. இனி சில கேள்விகள் கேட்கப் போகிறேன்" என்ற எமன், நசிகேதனை முதல் பானையருகே அழைத்து வந்தான். இதோ.. கீழே தரையில் இருக்கும் இந்தப் பானையில் என்ன இருக்கிறது?"

"காற்று"

"அதோ நூறடி உயரத்தில் இருக்கும் அந்தப் பானைக்குள்?"

"அதுவும் காற்றுதான் எமனாரே"

"அது எப்படி நசிகேதா? கீழே ஒரு காற்று மேலே ஒரு காற்று என்றாகுமா? இரண்டும் ஒரே காற்று தான் எனில் ஒன்று மேலும் ஒன்று கீழும் இருப்பானேன்? நீ கட்டிய பானைக்குள் புகுவானேன்? நீ கட்டியப் பானைக்குள் புகுந்தது எந்தக் காற்று? நீ கட்டிய பானைக்குள் இருப்பது காற்று எனும் பொழுது, காற்று அதிகமாக இருக்கிறது, பானை செய்ய முடியவில்லை என்கிறாயே?"

நசிகேதன் விழித்தான்.

எமன் தொடர்ந்து, "இதோ உன் அனுமதியுடன் இந்தப்பானையை உடைக்கப் போகிறேன்" என்றபடி நசிகேதன் குயைந்த இரண்டு பானைகளை வெவ்வேறு உயரங்களிலிருந்து உடைத்தான். "நசிகேதா, இந்தப் பானைகளுக்குள் இருந்த காற்று எங்கே சென்றது? மேலேயே கீழேயா?"

நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, புரிந்தது. காற்று என்பது பொதுவானப் பரவல். அவ்வப்போது பானைகளுக்குள் சிக்கிய காற்று போலவே, ஆன்மாக்களும் பிறவியில் சிக்குகின்றன"

"ஏழாவது பானையில் என்ன கோளாறு?"

"காற்று பலமாக வீசியதால் பானை நிலைக்கவில்லை"

"கற்பனைப் பானைக்கே இந்தக் கதியா?"

நசிகேதன் மீண்டும் எமனை வணங்கினான். "ஐயா, புரிந்தது. அடங்காத காற்றும் சில இடங்களில் அடங்கி நிற்கிறது. அந்த நேரம் அவ்விடத்தில் பானைக்குள் அடைபடுகிறது"

"நசிகேதா. அடங்குவதும் அடங்காததும் காற்றின் தன்மை. இப்பொழுது என்ன சொல்கிறாய்?"

"ஐயா. அதே போல், பேரான்மாவில் இணைந்த ஆன்மாக்களும் பிறக்க நேரிடும் என்று சொல்கிறீர்கள்"

"நன்று நசிகேதா. இதோ என் காலடி பட்டு உடையும் இந்தப் பானை போன்றது இறப்பு. அதோ உன் கைகளால் அற்புதமாகச் செய்யப்பட்டப் பானை போன்றது பிறப்பு. இரண்டிலும் தங்கிய காற்றின் தன்மையில் வேறுபாடில்லை. பலமான காற்றில் சிக்கியிருக்குவரை பானைக்குள் அடைபடுவதில்லை"

"அப்படியென்றால் பிறவா நிலை என்று ஏதுமில்லையா?"

"என்னருமை மாணவனே நசிகேதா, இறவா நிலை என்று ஏதும் உண்டா?"

நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, எதுவுமே நிலையில்லை என்று அறிந்துகொண்டேன், நன்றி" என்றான்.

"அது மட்டுமல்ல நசிகேதா. இறப்பும் பிறப்பும் விபத்துக்கள். பானை உடைந்ததும் காற்று தன் இயல்பான நிலையில் கலந்தது போலவே, உடலை விட்டுப் பிரிந்த உயிரானது தன் இயல்பான நிலையில் கலக்கிறது. பானை உடைந்து போனதே என்று வருந்துவதில் பயனே இல்லை. உள்ளிருந்த காற்று தன் இயல்பு நிலைக்குச் சென்றதை எண்ணி அமைதியடைவதே முறை. இயல்பான நிலையிலிருந்த காற்றைப் பானைக்குள் புகச் செய்தோமே என்று பிறப்பை எண்ணி வருந்துகிறோமா?"

"உண்மையே. பிறவியைக் கொண்டாடுகிறோம். பானைக்குள் புகுந்த காற்று வெளிப்படக் காத்திருப்பது போலவே உயிரும் தன் இயல்பு நிலையில் சேரக் காத்திருக்கிறது என்பதை அறியாமல், பிறப்பைக் கொண்டாடுகிறோம். இறப்பை எண்ணி வருந்துகிறோம்"

"கூட்டுக்குள் சிக்கிய உயிர், பேரான்மா எனும் பெரும் சக்தியின் அம்சம். அதை உணர்ந்தால் கூட்டின் மேன்மையை உணர முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கை நெறிகளை அறிய முடியும். வாழ்க்கை நெறிகளை அறிந்து கொண்டால் பற்றறுத்து, பேராசையொழித்து, தீக்குணம் தவிர்த்து நல்வழியில் வாழ முடியும். கூடு கலைந்த பின் சக்தியும் தொலையும் என்பதை உணர்ந்தால், கூட்டையும் உடன் வந்த சக்தியையும் தனக்கும் பிறருக்கும் பலனளிக்கும் விதத்தில் பாதுகாக்க முடியும்..

..நல்வழியில் நடந்த ஆன்மா பேரான்மாவுடன் கலக்கையில், இரண்டுமே வலுவாகிறது. பலமான காற்றில் கலந்திருக்கும் வரையில் அங்கே பானைக்கு இடமே இல்லை. மனித ஆன்மாவின் மகத்துவம் தன்னறிவில் அடங்கியிருக்கிறது. பேரான்மாவின் சக்தியே பிறவியைக் கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ முடியும். மகத்துவம் குன்றிய ஆன்மாக்களால் பிறவிகள் நேரும். இது விபத்து என்றாலும், இந்த விபத்தில் பேரான்மாவும் அவ்வப்போது சிக்கும். அடங்கிய பேரலை போலவே"

"பேரான்மாவுக்கும் பிறவி உண்டா?" என்றான் நசிகேதன், சற்று வருத்தத்துடன்.

"மகான்களின் பிறவி ரகசியம் என்று வை. அவர்கள் பிறக்காவிட்டால் சாதாரண மனிதம் என்னாவது? பேரலையின் சக்தி, சிற்றலைகளை ஈர்ப்பது போலவே அவர்களும் சாதாரண மனிதர்களின் அறிவுக்கண்களைத் திறக்கிறார்கள்"

"புரிகிறது"

"அதனால்தான், பிறப்பைக் கொண்டாடுவது போலவே இறப்பையும் கொண்டாட வேண்டும் என்றேன். அன்றேல், இரண்டையும் பொதுவாக எண்ணி கலக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இருபுறங்கள். இரண்டுமே பானைக்காற்றின் இயல்பு நிலை. காற்றுக்காகக் காத்திருக்கும் பானைகளும், பானைகளுக்காகக் காத்திருக்கும் காற்றும் மட்டுமே நிரந்தரம். குயைந்தப் பானையோ கட்டிய காற்றோ அல்ல"

"ஐயா... நீங்கள் சொல்வது புரிகிறது. வாழ்நாளில் மேம்பட்டு வாழ்ந்தால் பலமானக் காற்றாகலாம். பேரான்மாவாக உலாவலாம். அற்பமாக வாழ்ந்தால் என்ன முயன்றும் பலனில்லை. சிதறிய அலை போலவே சுலபமாகப் பிறவியெடுக்க நேரிடுகிறது"

"ஆம்"

"அப்படியெனில்.. அப்படியெனில்... சொர்க்கம் என்று எதுவும் இல்லையா? என் தந்தையார் புரிந்த வேள்விகளும் சடங்குகளும் வீணா? எத்தனை தானங்கள் செய்தார்! எத்தனை யாகங்கள் செய்தார்! எத்தனை கோவில்கள் கட்டினார்! என் தந்தையாருக்குச் சொர்க்கம் தருவதாகச் சொன்னீர்களே? சொர்க்கம் செல்லும் வேள்விக்கான வழி முறைகளை முன்பு சொன்னீர்களே? வேள்விக்கு என் பெயரை வேறு வழங்கினீர்களே? எம்முலக மக்களெல்லாம் சொர்க்கத்துக்கான வழியென்று நம்பிப் புரியும் சடங்குகள் வீண் என்றால், அதை அவர்களுக்கு எப்படி அறிவிப்பது? அவர்களைத் தூண்டிவிட்டுக் கண்மூடித்தனங்களை ஆதரிப்போரை எப்படித் தடுப்பது? ஏழாவது பானையாகும் வழியை எம்மக்கள் அறிவதெப்படி?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/09/23

உயிர்கள் சேருமிடம்


67
தன்னறிவைத் தாண்டியது ஆன்மா அதற்கப்பால்
உன்னறிய வேண்டியது பேரான்மா - மன்னுயிர்
பாடுபட்டுப் பாவுமிடம் பேரான்மா வேறில்லை
கூடுவிட்டுக் கூடு மிடம்.

   ன்னறிவுக்கு அப்பாலிருப்பது ஆன்மா; அதற்கப்பால் இருப்பது பேரான்மா. இதுவே உலகத்து உயிரெல்லாம் பாடுபட்டு அடையும் இடமாகும். உடலைப் பிரிந்த உயிர்கள் சேரும் இடம் வேறில்லை.


உன்னறிய: உணர்ந்து அறிய, அறிவுக்குப் புலப்படுகிற
பாவும்: பரவும், பற்றும்


    றந்த உயிருடன் தொடர்பு கொள்ள முடியுமா?

இறந்த உயிரை வரவழைத்துப் பேசுவதாகச் சொல்வது நூற்றாண்டுகளாக நடந்து வருவது. பித்தலாட்டக்காரர்களின் தனிப்பட்ட உரிமை என்றும் சொல்லலாம். எனில் இறந்த உயிரை "உணர" முடியுமா? இதைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறார்கள். யோசிக்கிறேன். telekinesis, super position போன்ற என் மூளைக்கெட்டாத நிறைய விவரங்கள் பித்தலாட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடைப்பட்ட தளத்தில் ஆராயப்படுகின்றன. கேள்விக்கு வருகிறேன்.

இறந்த உயிரை "உணர" முடியுமா? தெரியாது. விளக்கத்துக்கு அப்பாற்பட்ட சில நிகழ்ச்சிகள் என் வாழ்வில் நடந்திருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக என்னுடன் எரியும், யாருக்கும் சொல்லப் போவதில்லை. சிலவற்றைக் கதையாக எழுதியிருக்கிறேன். சுமார் ஏழு வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது இது.

நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இறங்கி நடக்கையில் சற்றும் எதிர்பாராத வகையில், ஒரு நபர் என் கையைப் பிடித்து இழுத்தாற் போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு நடுத்தர வயதுக்காரர். என்னிடம் என்னவோ சொல்ல வந்தார். அவரால் சொல்ல முடியவில்லை. கெஞ்சுவது போல முகம். "ப்லீஸ்.. ப்லீஸ்" என்றாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. முகபாவத்தை என்னால் மறக்கவும் முடியவில்லை, விளக்கவும் முடியவில்லை. மிக ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் ஒருவர் எப்படியாவது வழி காட்ட வேண்டிக்கொள்வது போல், அத்தனை பரிதாபம். மூழ்கவிருப்பவர் கடைசி முறையாக காப்பாற்றுங்கள் என்று வாய் திறந்து பேசமுடியமல் கதறுவதை போல், அப்படி ஒரு பரிதாபம். ஒரு கணம் தான். பிறகு அந்த நபர் இயல்பாக நடந்து, என்னைக் கடந்து சென்றார்.

நண்பர் வீட்டுக்குப் போகும் வழியிலேயே இதை மறந்து விட்டேன். நண்பர் அவசரமாக எங்கேயோ வெளியே சென்றிருந்தார். நண்பரின் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று அழத் தொடங்கினார். "எனக்கு இந்த ஊர் பிடிக்கலிங்க. இங்கே வாழப் பிடிக்கலிங்க.. என்னை இந்தியாவுக்கு அனுப்பும்படி உங்க நண்பரிடம் சொல்லுங்க. நான் என்ன சொல்லியும் கேட்க மாட்டேங்குறார். என்னைத் துன்புறுத்துறார். ப்லீஸ்..ப்லீஸ்" என்று அழுதார். சட்டென்று ஏர்போர்ட் மனிதரின் முகம் நினைவுக்கு வந்தது.

அத்துடன் நிற்கவில்லை நண்பரின் மனைவி. "காலையிலிருந்து என் அப்பாவைத் திட்டிக் கொண்டிருக்கிறேன்.. என்னை இப்படி மாட்டிவிட்டாரே? என் அப்பா உயிருடன் இருந்தால் இப்படி நடக்குமா? எனக்கு வேறு யாருமே இல்லையே! அண்ணா தங்கை அக்கா தம்பி என்று யாரும் இல்லை, அம்மாவும் போயாச்சு... அப்பா! அப்பா! இப்படி ஒரு இடத்தில் எனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டியே!" என்று விசும்பி விசும்பி அழுதார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "இதை அவர்கிட்டே சொல்லிடாதீங்க.. எப்படியாவது உதவி செய்யுங்க ப்லீஸ்" என்று கெஞ்சினார்.

சிறிது நேரம் நண்பருக்காகக் காத்திருந்தேன். நண்பரின் மனைவி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், 'நானா கிடைத்தேன?' என்ற எரிச்சல் தோன்றியது. உடனடியாக அங்கிருந்து விலக நினைத்தேன். அவருக்கு உதவுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். நண்பர் திரும்பும் வரை சுற்றிக் கொண்டிருக்கலாமென்று சற்றுத் தொலைவிலிருந்த பெரிய வால்மார்ட் ஒன்றில் இலக்கில்லாமல் அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டிருந்த போது, மறுபடியும் என்னை யாரோ இழுத்தாற் போல்.. திரும்பிப் பார்த்தால் ஒரு பெரியவர். என்னவோ சொல்ல முயன்றார், முடியவில்லை. என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார். மறுபடியும் மறுபடியும் கும்பிட்டுக் கொண்டேயிருந்தார்.

எனக்கு மட்டுமல்ல, நானறிந்த சிலருக்கும் இதுபோல் விளக்க முடியாத, விபரீத எல்லையிலான, விளிம்பு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லை என்று ஒதுக்கிவிடக்கூடிய நிகழ்வு. "பகுத்தறிவு" என்று பார்த்தாலும் ஒதுக்கிவிடக்கூடிய நிகழ்வு.

இந்நிகழ்வுகளை ஒரு வட்டத்தின் புள்ளிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், திடீரென்று ஏதோ புரிந்தாற்போல் உணர முடியும். முடிந்தது. மனித சக்தி மகத்தானது, அளப்பரியது என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு, இந்தச் சிந்தனையை இன்னொரு பதிவில் முடிக்கிறேன். (அஞ்ச வேண்டாம், நான் சாதாரணத்திலும் சாதாரண மனிதனே!) :)

    "ஆறாவது குகைக்கு அப்பாற்பட்ட பயணத்தைப் பற்றிக் கேட்டாயல்லவா? சொல்கிறேன்" என்ற எமன் தொடர்ந்தான். "நசிகேதா! நீ புரிந்து கொண்டிருப்பது சரியே. தன்னறிவுக் குகை வரையில், உயிரானது உடலென்னும் கூட்டுக்குள்ளேயே பயணம் செய்கிறது. உடலைப் பிரிந்ததும், உயிர் திடீரென்று பரந்த வெளியில் சிக்கிய பறவை போலாகிறது. பறந்துப் பழகாதப் பறவைகளுக்கு என்ன நேரும் அறிவாயா?"

"கீழே விழும்"

"பறக்கத் தொடங்கிய பறவைக்கு அச்சமேற்பட்டால்?"

"கீழே விழும்"

"ஆம். பறந்து பழகாத பறவையும் பறக்க அஞ்சும் பறவையும் கீழே விழும். உயிர்ப்பறவைக்கு பறக்கும் பழக்கத்தைக் கொடுப்பது தன்னறிவு. தொடர்ந்து பயணிக்கவும் சேரவேண்டிய இலக்கைத் தேடிச் சேரவும் தேவையான வலிமையையும் திடத்தையும் தருவது மேம்பட்டத் தன்னறிவு. தேய்ந்த தன்னறிவினால் எந்தப் பலனும் இல்லை"

"உயிர்ப்பறவை கீழே விழும்"

"ஆம். அதைப்பற்றி மேலும் விவரமாகப் பிறகு சொல்கிறேன். பயணத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள். தன்னறிவுக்கு அப்பாற்பட்டது ஆன்மா. உடலெனும் கூட்டைவிட்டுப் பிரிந்த உயிர் ஆன்மாவுடன் கலந்துத் தனி ஆன்மாவாகிறது. ஆன்மாவைக் கடந்து நிற்பது, அனைத்து உயிர்களின் ஆன்மா அல்லது பேரான்மா. உயிரின் இலக்கு பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை"

"பேரான்மா என்றால்?"

"பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி. தெளிந்த சிந்தையால் மட்டுமே எண்ணிப் புரிந்து கொள்ள முடிகிற சக்தி. மன்னுலக இயக்கங்களுக்கான சக்தி. அறிவுக்கண்ணுக்குப் புலப்படக்கூடிய சக்தி"

"இந்த சக்தியுடன் கலப்பது தான் சொர்க்கமா? பேரின்பமா? பிறவா நிலையா?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/09/16

புலன்களுக்கு அப்பாற்பட்டது தன்னறிவு


66
உணர்ச்சியைத் தாவும் உணர்வதைத் தாவும்
குணமதைத் தாவும் மனமாம் - அணந்தால்
மனமதைத் தாவும் அறிவையும் தாவும்
தனமதுத் தன்னறி வாம்.

   ணர்ச்சிகளைக் கடந்தது உணர்வு; அதைக் கடந்தது நெறி; அதைக் கடந்தது மனமாகும். மேலும் நோக்கினால், மனதைக் கடந்தது அறிவு; அதையும் கடந்தத் தன்மையுடையது தன்னறிவாகும்.


தாவும்: தாண்டும், கடக்கும், அப்பாற்படும்
அணந்தால்: மேல் நோக்கினால்
தனம்: தன்மை


    ல்லோரும் வாழலாம். எப்படியும் வாழலாம்.

'எல்லோரும் வாழலாம்' என்பதில் தொனிக்கும் முற்போக்கும் நம்பிக்கையும் 'எப்படியும் வாழலாம்' என்பதில் தொனிக்கிறதா? என்ன நினைக்கிறீர்கள்?

'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற வரிகளை நிறையச் சிந்தித்திருக்கிறேன். என்ன சொல்கிறார் புலவர்? எல்லோரும் வாழலாம் என்ற பொருளில் பாடினாரா? எப்படியும் வாழலாம் என்ற பொருளில் பாடினாரா?

இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?

துவ்வாமை என்பது தவமுனிகளுக்கும் தமிழ்முனிக்கும் சுலபமாகத் தோன்றலாம். என்னைப் போன்ற சராசரிகளுக்கும் பெரும்பாலான காவி/அங்கிகளுக்கும் துவ்வாமை தொலைவானது. துவ்வல் இன்றியமையாதது. புலன்கள் நம் வாழ்வின் அடிப்படைத் தேவை எனத் தீர்மானமாக நம்புகிறேன். புலன்களை வைத்து தினம் வாழ்வை அனுபவிக்க நேரம் போதவில்லை. இன்னும் ஒரு ஜோடிப் புலன்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அடிக்கடி எண்ணியிருக்கிறேன். அனைத்தையும் இருமடங்காக அனுபவிக்கலாமே என்று எண்ணியிருக்கிறேன். இப்படி வாழலாம்.

தொட்டால் சுடும் என்பதை உணர்ந்து, தொடாமலே வாழ்வது சற்றே முதிர்ந்த வாழ்க்கை என்று நம்புகிறேன். என்னைப் போன்ற சராசரிகள் சிலர், சற்று சுட்டும் சற்று விட்டும் வாழப் பழக முயல்கிறார்கள். உணர்ச்சியைக் கடந்த உணர்வு நிலையில் வாழ்ந்தால் அது இனிமை என்பது தெளிவாகப் புரிகிறது. பந்தம் பாசம், பொறாமை கோபம், காதல் மோதல் என்று உணர்வுகளை முன்வைத்து புலனைப் பின்னணிக்குத் தள்ளி முதிர்ச்சியோடு வாழ்வது கலை. நான் அறிந்த பலர், உணர்ச்சியையும் உணர்வையும் குழப்பிக் கொண்டு இங்கொரு கால் அங்கொரு கால் என்று தத்துகிறார்கள். இப்படியும் வாழலாம்.

உணர்வுக்கும் ஒரு படி மேலே நின்று நெறியைப் பற்றி வாழ்வது இன்னும் முதிர்ந்த வாழ்க்கை. நெறி வாழ்க்கை சற்று சுவாரசியமானது. நெறி வாழ்க்கை என்பது ஒரு முகமூடி போன்றது. தன்னை மறக்க முகமூடி அணியலாம். தன்னை மறைக்கவும் முகமூடி அணியலாம். அணிந்தவரைப் பொறுத்து மாண்புருவது என்றாலும், நெறி வாழ்க்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலை. இந்தக் கூட்டத்தில் விவேகானந்தரும் உண்டு, நித்தியானந்தரும் உண்டு. காலடியும் உண்டு, காஞ்சியும் உண்டு. சீரடியும் உண்டு, சிருங்கேரியும் உண்டு. திருநீர்மலையும் உண்டு, திருப்பதியும் உண்டு. முகமூடிக்குப் பின்னே இருப்பது யார்? அதுதான் சுவாரசியம். நெறி தழுவிய முகமூடிகள் என் போன்றவர்களுக்கு ஒளிவிளக்குகள். நெறி தவறிய முகமூடிகள், புலனை நம்பியே வாழும் என் போன்றவர்களை விடக் கேவலமானவர்கள். பெரும்பாலானக் காவிகளும் அங்கிகளும் இதில் அடக்கம். அத்திபழங்கள். இப்படியும் வாழலாம்.

நெறிக்கும் ஒரு படி மேலேறி, மனதைப் பற்றி வாழ்வது இன்னும் முதிர்ச்சி. மனதைப் பற்றி வாழ்வதா? அப்படியென்றால்? பொய் சொல்லாதே என்கிறது நெறி. 'எங்கேடி உன் பிள்ளை?' என்று ஆத்திரத்துடன் வரும் அறிவற்றத் தகப்பனைத் திசை திருப்ப, 'பிள்ளை இங்கே இல்லை' என்று மறைத்துப் பொய் சொல்லும் தாய் நெறி தவறியவரா, மனம் தழுவியவரா? 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்று படிப்பது நெறி மீசை. 'ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று துடிப்பது மன மீசை. மனதைப் பற்றியவர்கள் மட்டுமே கணவனை இழந்த நிலையிலும் 'தேரா மன்னா!' என்று சிலம்பாட முடியும் என்று நினைக்கிறேன். இப்படியும் வாழலாம்.

ஒன்றைக் கவனித்தீர்களா? உணர்ச்சி, உணர்வு, நெறி இவை மூன்றுமே வெளிநோக்கிய வாழ்க்கை. உள்நோக்கிய வாழ்க்கை என்பதே மனதில்தான் தொடங்குகிறது.

மனதுக்கும் சில படிகள் மேலே அறிவு. அறிவற்றத் தகப்பனிடமிருந்து காப்பாற்ற நினைத்தப் பிள்ளையின் கையில் திருட்டுப் பொருள் இருப்பதைக் கண்டதும், செய்ய வேண்டியதைச் செய்யும் நிலை. 'கல்லானாலும் கணவன்' என்று நம்பியவன், கொடுமைக்காரன் என்று தெரிந்ததும் கணவனைக் கல்லால் அடிக்கும் நிலை. அறிவு மனதைச் சீராக்குகிறது. மனதையும் பற்றி அறிவோடும் வாழ்வோர், மிகச்சிலர். நான் அறிந்த ஆயிரக்கணக்கானவருள் இருபது நபர்களை இந்த வகையில் சேர்ப்பேன். இப்படியும் வாழலாம்.

அறிவுக்கு மேலே பல படிகள் சென்று வாழ்வது தன்னறிவைப் பற்றி வாழும் நிலை. தகப்பனுக்கும் பிள்ளைக்கும் ஒருங்கே மந்திரம் சொல்லும் தாயின் நிலை. நான் அறிந்த ஆயிரக்கணக்கானவருள் ஐந்து பேரை இந்த வகையில் சேர்ப்பேன். இப்படியும் வாழலாம்.

எல்லோரும் வாழலாம் என்ற கொள்கை, நெறி பற்றியது என்று தீர்மானமாகச் சொல்லலாம். ஓரளவுக்கு மனம் பற்றியது என்றும் சொல்லலாம். எப்படியும் வாழலாம் என்ற கொள்கை? உணர்ச்சி, உணர்வு, நெறி, மனம், அறிவு, தன்னறிவு எனும் ஆறு நிலைகளில் ஒன்று என்பதை மட்டும் தீர்மானமாகச் சொல்லலாம் :). ஆனால் எந்த நிலை? ஒரு துப்பு தருகிறேன்: சுவாரசியமானது.

    சிகேதனின் கேள்விகளால் தாக்குண்ட எமன் சிந்தித்தான். இந்தப் பிள்ளை கேள்வி எந்திரமாக இருப்பான் போலிருக்கிறதே? தன் மாணவனின் அறிவுப் பசியைப் போக்கச் சரியான உணவைப் போதுமான அளவு படைக்க வேண்டுமே என்று கலங்கினான். உயிர்ப்பயண உண்மைகளை அறியும் பக்குவம் தன் மாணவனுக்கு இருப்பதை அறிந்து நுட்பங்களைச் சொல்வதென்றுத் தீர்மானித்தான். தான் சொல்லாவிட்டால் எப்படியும் தெரிந்து கொண்டு தனக்கே சொல்லித்தருவான் இந்தப் பிள்ளை என்றும் நினைத்தான். "நசிகேதா! ஆன்மா பற்றிய உண்மைகளை உடனடியாகச் சொல்லத் தொடங்குவேன். நம்முடைய புலன்களுக்குப் பல நிலைகளுக்கு அப்பால் இருப்பது ஆன்மா. அதற்கும் அப்பால் பல நிலைகள் கடப்பதே உயிர்ப் பயணத்தின் இலக்கு. நிறுத்தம்" என்றான்.

"நிலைகள் என்றால்?" என்றான் நசிகேதன்.

எமன் சிந்தித்தான். "நசிகேதா, என்னுடன் ஒரு பயணம் வரத்தயாரா?" என்றான்.

"எதற்கும் தயார். எத்தகையப் பயணம்?"

"கற்பனைப் பயணம். ஒன்றன் மேல் ஒன்றாக ஆறு குகைகளை எண்ணிக்கொள்"

"செய்தேன்"

"கீழ்க்குகையிலிருந்து மேல் குகைக்குப் பயணம் செய்யப் போகிறோம்"

"சரி"

"ஒரு நுட்பம். முதல் ஐந்து குகைகளின் நிலையில்லாமையால் பயணம் அவ்வபோது தடுமாறலாம். தடுமாறினால் தொடங்கிய இடத்துக்கே வர நேரிடும். ஆறாவது குகையில் எந்த விதத் தடுமாற்றமும் கிடையாது"

"பயணத்தின் இலக்கு, ஆறாவது குகையை அடைவதா?"

"பயணத்தில் குறிக்கோள், ஆறாவது குகையிலிருந்து வெளியேறுவதாகும்"

"நன்றி ஐயா.. நான் தயார்"

"புலன்களை அறிவாய் அல்லவா?" என்றான் எமன்.

"அறிவேன். ஐம்புலன்களினால் வாழ்வை நுகரும் எண்ணற்றோருள் நானும் ஒருவனாக இருந்தேன்" என்றான் நசிகேதன்.

"புலன்களை அறிய வைப்பது உணர்ச்சிகள். உணர்ச்சிகளே முதல் குகை. உணர்ச்சிகளை விட நுண்மையானவை உணர்வுகள். உணர்வுகளே அடுத்தக் குகை. உணர்வுகளை விட நுண்மையானது குணம். அதுவே மூன்றாவது குகை. குணத்தினும் நுண்மையானது, அப்பாற்பட்டது, மனம். அடுத்தக் குகை. மனதைக் கட்டும் அறிவோ, அதனினும் நுண்மையானது. அறிவே அடுத்தக் குகை" என்ற எமன், "நசிகேதா, நான் சொல்வது புரிகிறதா? என்றான்.

நசிகேதன் கவனமாகக் கேட்டு, "புரிகிறது" என்றான்.

எமன், "அப்படியென்றால் உனக்குப் புரிந்ததைச் சொல். மாணவனின் திறமையைச் சோதிக்க வேண்டியது ஆசிரியனின் கடமையல்லவா?" என்றான்.

"உயிர்ப்பயணம் பற்றிய என் கேள்விகளைத் தொடர்ந்துக் குகைப்பயணம் பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள். என்னுடைய சிற்றறிவுக்கெட்டிய வரை நீங்கள் குறிப்பிட்டக் கற்பனைக் குகைப் பயணம் உயிர்ப் பயணத்தை ஒத்தது" என்றான்.

எமன் பிரமிப்பை அடக்க முயன்றான். "எந்த வகையில்?"

நசிகேதன் பணிவுடன், "பிறப்பிலிருந்து இறப்பு வரை மனித உயிரானது உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் உயிரானது உலகாயதச் சிந்தனை மற்றும் செயல்களில் ஈடுபட்டுச் சுழல்கிறது" என்றான்.

"மிகச்சரி"

"அப்படியெனில் தன்னறிவு?"

"அறிவுக்கும் அப்பாற்பட்டது தன்னறிவு. ஆறாவது குகை" என்றான் எமன்.

"உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு எல்லாம் புரிந்தது ஆசானே. அறிவுக்கும் அப்பாற்பட்டது தன்னறிவென்றீர்களே? மனதை ஒழுங்கு செய்யும் அறிவுக்கும் தன்னறிவுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வேண்டுகிறேன்"

"அறிவு தன்னுடைய மனதை ஒழுங்கு செய்யும். தன்னறிவோ பிறருடைய மனதையும் ஒழுங்கு செய்யும் தன்மை கொண்டது. தன்னறிவு கண்டவர்கள் தலைவர்கள். தன்னறிவு கண்டவர்கள் வெகு சிலரே. அவர்களால் உணர்ச்சியில் உழல்வோரை உய்யச் செய்ய முடியும். தன்னறிவைக் கண்ட உயிர், பிற குகைகளுக்குத் திரும்புவதில்லை, புரிந்ததா?"

"புரிந்தது. மனிதன் இறக்குமுன் ஆறாவது குகைக்கு உயிரைச் செலுத்த வேண்டும். ஆறாவது குகைக்குள் செல்லாத உயிருக்கு அதைவிட்டு வெளியேற வாய்ப்பில்லாது போகிறது"

"அல்ல. அனைத்து உயிர்களுமே தொடர்ந்து பயணிக்கின்றன. ஆறாவது குகையைக் கடந்த உயிருக்கு மட்டுமே அடுத்த பயணத்தின் தெளிவு உண்டாகிறது"

"தன்னறிவால் ஆன்மாவை அறிய முடியும் என்று முன்பு சொன்னீர்கள். இப்பொழுது இன்னும் தெளிவானது. ஆறாவது குகைக்கு அப்பாலிருப்பது ஆன்மாவா? தன்னறிவுப் பயணம் செய்யாத உயிர்கள் ஆன்மாவை அறியாது போகுமா? ஆறாவது குகை வரையிலான பயணம் முழுதும் மனிதன் உயிருடன் இருக்கையில் செய்வதல்லவா? இறந்த பின்னர், பயணம் ஆறாவது குகைக்கு அப்பால் தொடங்குகிறதா?

எமன் வியந்தான். நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/09/10

தறிகெட்டால் நெறி தப்பும்


65
தறிமுறியின் தேர்ப்புரவித் தேரழியுந் துப்பு
நெறிமுறியின் தன்னறிவு நந்தும் - அறிந்துப்
புலனிறுக்கி இன்றே படிவார் பிறவா
நலமுறுவார் நாளை யவர்.

   றிகெட்டக் குதிரைகள் தேரினை ஒருங்கே இழுக்க இயலாமல், தேரும் வீரரும் கொற்றனும் அழியக் காரணமாகின்றன. நெறி தவறும் புலன்களால் தன்னறிவு அழியும். இதை அறிந்து, புலன்களைக் கட்டி அமைதியைக் கடைபிடிப்பவர்கள் பிறவாமை எனும் சிறப்பினை பின்னாளில்* பெறுவார்கள்.


துப்பு: காரணம்
நந்தும்: தேயும், அழியும்
படிவார்: அடங்குவார், அமைதியாவார்
*நாளை என்ற சொல்லுக்கு 'இறந்த பின்' என்றக் காரணப் பொருளும் உண்டு.



    ன்னிடம் ஒரு பலகை இருக்கிறது.

சிந்தனைப் பலகை. மந்திரப் பலகை.

பலகையில் என்ன மந்திரம்? சொல்கிறேன்.

'புலன்களைக் கட்டிப் போட முடியுமா முடியாதா?' என்றக் கேள்வியும் வாதமும் அங்கி மற்றும் காவிகளின் மொத்த உரிமையென ஒதுக்கிவிட்டு, 'புலன்களைக் கட்டிப் போடுவது தேவையா?' என்று மட்டும் சிந்தித்தேன். அப்படி சிந்திக்கத் தொடங்கியதும், இரண்டு கிளைக்கேள்விகள் தோன்றின.
  1. புலன்களைக் கட்டிப் போடுவது என்றால் என்ன?
  2. புலன்களைக் கட்டிப் போடாவிட்டால் என்ன ஆகும்?

'புலன்களைக் கட்டிப் போடுவது என்றால் என்ன?' என்ற முதல் கிளைக் கேள்வியைப் பற்றிச் சிந்தித்ததும், உடனே இரண்டு உபகிளைக் கேள்விகள் தோன்றின.
  1. எடுத்த எடுப்பிலேயே கட்டிப் போட வேண்டுமா, அல்லது குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பின் கட்ட வேண்டுமா?
  2. சற்று இறுக்கிக் கட்டிவிட்டால் புலனே அழிந்து விடும் அபாயம் உண்டா? புலனைக் கட்டிய பலன் கிட்டுமா? புலனை வெட்டிய பலன் கிட்டுமா?

கேள்விகள் குட்டி போடும் வேகத்தைக் கண்டு அஞ்சி சிந்தனைப் பலகையை அழித்துவிட்டு சுவையாக ஏதாவது சமைத்துச் சாப்பிடலாம் என்று எழுந்தால், 'புலனைக் கட்டுவது பற்றியச் சிந்தனையே இவ்வளவு சிக்கலெனில் செயலில் இறங்குவது எத்தனைச் சிக்கல்?' என ஒரு கேள்வி விடாமல் துரத்தியது.

நம்முடைய தேவைகள் இவைதான் என்ற வரையறை இருந்தால் புலனைக் கட்டும் சிக்கலை சமாளிக்க முடியும் என்று தோன்றியது. தேவைகள் என்றதும் முக்கியத் தேவைகள், அவசியத் தேவைகள், அவசியத்துக்கும் அனாவசியத்துக்கும் இடைப்பட்டத் தேவைகள் என்று கேள்விகளைப் பிரித்துக்கொண்டே போனது சிந்தனைப் பலகை.

இப்போது புரிகிறதா பலகையின் மந்திரம்?

சிந்தனைப் பலகைக்குப் பதில் செயல் பலகை இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மந்திரம் கூட வேண்டாம், சாதாரணச் செயல் பலகை கூடப் போதும் என்று தோன்றியது.

விடுமா சிந்தனைப் பலகை?

'செயல் பலகை என்றால் எத்தகைய செயல் பலகை? உடனே செய்யக்கூடிய செயல் பலகையா, ஒத்திப்போடக்கூடிய செயல் பலகையா?' என்று சிந்தனைப் பலகை சுதாரித்தது.

என் சிந்தனை மீண்டும் 'முக்கியத் தேவை'க்கு தாவியது. வாழ்வில் எது முக்கியம்? முக்கியம் என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறோம்? முக்கியம் என்று தீர்மானிப்பதை உடனே செய்கிறோமா? உடனே செய்ய முடிந்தால் அது உண்மையிலேயே முக்கியமா? உடனே செய்யாவிட்டால் அது எப்படி முக்கியமாகும்?

சிந்தனைப் பலகைக்குள் உற்சாக ஊற்று. பலகையைப் பூட்டி வைத்தேன்.

செயலை ஒத்திப் போடுவது, நம்மில் பெரும்பாலானோர்க்குக் கைவந்தக் கலை. சிந்தனையை ஒத்திப் போடுவது எளிதல்ல. செயலாக்க முடியாதவர்களுக்கு சிந்தனை ஒரு வரம். சிந்தனைகள், கனவுகளின் உரம். கனவுகளோ செயலாக்க மறந்தோரின், துறந்தோரின், மறுப்போரின் அகதி முகாம். கனவுகளையும் கண்டு, சிந்தனையையும் வளர்த்து, அவற்றையும் மீறிச் செயலில் இறங்குவோர் வணக்கத்துக்குரிய வீரர்கள்.

வீரர்களுக்குச் சுதந்திரம் உண்டு. என் போல் பிறருக்குச் சிந்தனைப் பலகையுண்டு.

    'நாளை' என்ற சொல்லை, நம்பிக்கை தரும் சொல்லாகவே அறிந்திருக்கிறேன். எதிர்காலம் என்ற பொருளில், நாளை என்பதைக் கனவுகளின் கிடங்காகப் பொருள் கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னைப் போல் என்றால் அதிர்ச்சிக்குத் தயாராகுங்கள்.

வடமொழியில் நாளை என்பதற்கு எமன் என்று ஒரு பொருள். சற்றுத் தேடிய போது தமிழிலும் அப்படியே என்பதை அறிந்தேன். காலம் என்ற வடமொழி வேர்ச்சொல்லை ஒட்டிப் பிரிந்த கிளைச் சொற்களில் எமனுக்கு இடமிருப்பதை அறிந்தேன். நாள் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் எமன் என்று ஒரு பொருள் இருக்கிறது. நாளான் என்றால் எமன். நாளை என்றால் எமனுடைய என்று ஒரு பொருள். 'நாளை நமதே' என்று சொல்லச் சற்று அச்சமாக இருக்கிறதே?

'நாளைக்கும் எமனென்று பேர்' என்று தெரிந்த மெட்டில் தேவையில்லாத வரிகள் சுற்றிச்சுற்றி வர, இன்று என்பதற்குப் பொருள் தேடினேன். எமன் தொட்ட எந்தப் பொருளும் தென்படவில்லை. நிம்மதி. நாளையிலிருந்து இன்றை மட்டும் மனதில் கொள்ளவிருக்கிறேன்.

    "நசிகேதா, போர்க்களத்தில் இருக்கும் தேரின் பரிகளுக்கு ஒழுக்கம் தேவை. அந்த ஒழுக்கத்தை வழங்குவது தறியென்னும் கடிவாளம். தறி வழுகினால் என்ன ஆகும்? புரவிகளுக்கு யார் தன்னைக் கட்டியாள்பவர் என்பது தெரியாமல் போகும். ஒவ்வொரு புரவியும் ஒவ்வொரு திசையில் போகக்கூடும். ஒன்று அதிவேகமாகப் போக முனையும். இன்னொன்று சோம்பிக் கிடக்கும். மற்றொன்றோ சண்டித்தனம் செய்யும். பிரிதொன்றோ முரட்டுத்தனமாகச் செயல்படும். எஞ்சியிருப்பது குறுக்கு வழியில் தறியை இன்னும் அறுத்துக் கிளம்ப முனையும். அந்நிலையில் தேரோட்டியின் நிலை என்ன?" என்று கேட்டான் எமன்.

"தான் குதிரைகளைக் கட்டும் நிலையொழிந்து, குதிரைகளுக்குத் தான் கட்டுப்பட வேண்டிய நிலையில் இருப்பான். தேரோட்டியின் கடிவாளம் பயனற்றுப் போகும்" என்றான் நசிகேதன்.

"சரியாகச் சொன்னாய் நசிகேதா!" என்ற எமன் தொடர்ந்தான். "தறிகெட்டோடும் துரகங்கள் தேரோட்டிக்கும் தேருக்கும் துரோகமிழைக்கத் தொடங்கும். முதலில் அழிவது தேரோட்டி. பிறகு தேருக்கு ஆபத்து. தேர்வீரருக்கும் ஆபத்து. புரவிகளுக்கும் அழிவேற்படும். தேரழியும். சீரழியும்" என்றான்.

"தேர்வீரரின் நிலை?"

"இன்னொரு தேர், இன்னொரு தேரோட்டி, இன்னொரு வகைப் புரவிகள் என்று தேர்வீரர் தொடர்ந்து பயணம் செய்யலாம். ஆனால் போரில் கவனம் செலுத்த முடியாது போக நேரிடும்".

நசிகேதன் சிறிது அமைதியாக இருந்தான். பிறகு, "எமனாரே! உங்கள் விளக்கத்துக்கு நன்றி. தேர்வீரனின் குறிக்கோள் போரில் வெற்றி பெறுவதாகும். தேரோட்டியின் நோக்கம் தேர்வீரனின் வெற்றிக்கு வழி செய்வதாக இருக்க வேண்டும். கடிவாளத்தின் நோக்கம் குதிரைகளைக் கட்டுவதாக இருக்க வேண்டும். குதிரைகளின் கடமை கடிவாளத்துக்கும் தேரோட்டியின் இழுப்புக்கும் கட்டுப்பட்டு செயலாற்றுவதாகும். இவை அனைத்திலும் கட்டுப்பாடு என்ற ஒழுக்கம் பரவியிருக்க வேண்டும்" என்றான்.

"மிக நன்றாகப் புரிந்து கொண்டாய் என் மாணவனே!" என்றான் எமன். "கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையென்றால் கண்மூடித்தனம் அகல வேண்டும். தேரோட்டி விழிப்புடன் இருந்தால் மட்டுமே குதிரைகளைக் கட்ட முடியும். தேரோட்டியின் சிந்தனையிலும் செயலிலும் தெளிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குதிரைகளை நேர்வழியிலோ தேவைக்கேற்றபடியோ செலுத்த இயலாது போகும். தேர்வீரரின் விழிப்புணர்வும் தேரோட்டியைப் போன்றதே. போரில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வெற்றிக்கு தடையாக இருக்கும் எதையும் முறித்தோ ஒதுக்கியோ, தொடர்ந்து வெற்றியை நாட வேண்டும். தேரோட்டியால் தேர்வீரரும் தேர்வீரரால் தேரோட்டியும் பயனடைவது இவ்வாறே" என்றான்.

"மிக்க நன்றி ஐயா!" என்றான் நசிகேதன். "மானிடரும் தன்னறிவால் ஐம்புலன்களைக் கட்டியாள வேண்டும். தன்னறிவு, ஆன்மாவை பிறவிப் போரில் வெற்றி பெறச் செய்யும். இல்லையெனில் ஆன்மா இன்னொரு உடலில் கலந்து பிறவிப் போரைத் தொடரும். புலன்களின் நோக்கம், தன்னறிவு வளரவும் செழிக்கவும் நேர்வழியில் செல்ல உதவுவதும் ஆகும். அன்றிப் புலன்களினால் யாதொரு பலனும் இல்லை. புலன்கள் அழிவன. அடங்காத புலன்களினால் தன்னறிவும் ஒடுங்கும். அழியாத ஆன்மா இன்னொரு புலன்கட்டைத் தேடி ஓடும்" என்றான்.

"நன்று. அடங்கியமையும் புலன்களினால் தன்னறிவு செழித்து, ஆன்மாவை பிறவாமை எனும் வெற்றி பெறச் செய்யும்" என்றான் எமன். "தேரோட்டியின் கதியும் குதிரைகளின் கதியும் புரிந்ததா நசிகேதா?".

"புரிந்தது ஆசிரியரே! ஆனால் வேறு கேள்விகள் தோன்றுகின்றன" என்றான்.

"கேள்"

"தன்னறிவு ஆன்மாவின் தேரோட்டி என்பதை அறிந்து கொண்டேன். ஆன்மா என்பது எங்கும் பரவியிருப்பது என்றீர்கள். புலனடக்கித் தன்னறிவு வளர்த்தால் ஆன்மா பிறவிப் போரில் வென்று பிறவாமைப் பேறு பெறும் என்றீர்கள். வெற்றி பெற்ற ஆன்மாவுக்கு என்ன ஆகும்? தன்னறிவு வளராத நிலையில் ஆன்மாவுக்கு பிறவாமை எனும் வெற்றி பெற வழியே இல்லையா? அத்தகைய ஆன்மாக்களும் பரந்த ஆன்மாவின் பகுதி தானே?"

எமன் பதில் சொல்ல முனைகையில் நசிகேதன் தடுத்தான். "மன்னிக்க வேண்டும் ஆசானே.. என் கேள்விகள் முடியவில்லை. மனிதன் இறக்கும் பொழுது உடல் எனும் கூடு, அதாவது ஐம்புலன்கள் அல்லது உணர்வுகளால் இயங்கக்கூடிய எலும்பும் சதையும் சேர்ந்த கூடு, அழிகிறது. மூச்சு நின்றாலும் உயிர்ப்பயணம் ஆன்மா என்ற வடிவில் தொடர்கிறது. இறந்த மனிதனின் உயிர் அல்லது ஆன்மா, அம்மனிதனின் தன்னறிவுச் செறிவால் பிறவாமை பெறும் என்று எவ்வாறு அறியும்? அல்லது அம்மனிதனின் தன்னறிவுக் குறையால் மீண்டும் இன்னொரு உடலை அல்லது கூட்டைத் தேட வேண்டும் என்பதை எவ்வாறு அறியும்? பிறவாத ஆன்மாக்களுக்கு என்று ஒரு இடமும், பிறக்கும் ஆன்மாக்களுக்கு என்று தனி இடமும் இருக்கிறதா? தேர் உருவகம் ஓரளவுக்குத் தெளிவூட்டினாலும் இந்தக் கேள்விகள் தொடர்ந்து வாட்டுகின்றனவே?" என்றான்.

"முடிந்ததா?" என்ற எமன் வியந்தான். நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/09/06

உடலே தேர், தன்னறிவே தேரோட்டி


64
ஆன்றமையா ஐம்புலனும் தேர்ப்புரவி தேராகும்
ஊன்கட்டு உள்ளம் கடிவாளம் - ஆன்மாவே
உன்னிக்கும் தேர்வீரர் உய்யுயிர் தேருருளை
தன்னறிவே தேர்க்கொற்ற னாம்.

   சையினால் கட்டப்பட்ட உடலே தேராகும். உயிரானது தேரின் சக்கரங்கள். அடங்காத ஐம்புலன்களும் தேரில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகள். ஆன்மாவோ அனைத்தையும் கவனித்தபடி தேரில் பயணம் செய்யும் வீரர். தன்னறிவானது, தேரையும் குதிரைகளையும் இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியாகும்.


ஆன்றமையா: அடங்காத, அமைதியடையாத
தேர்ப்புரவி: தேரில் பூட்ட்ப்பட்டிருக்கும் குதிரைகள்
ஊன்கட்டு: தசைக் கட்டு, உடல்
தேர்வீரர்: தேர்ப் பயணி
உய்யுயிர்: வாழும் உயிர், ஒருபொருட்பன்மொழி
தேருருளை: தேர் சக்கரம்
தேர்க்கொற்றன்: தேரோட்டி



    டோவின் மூன்றாவது பகுதி சற்றே எளிதானது. எந்த வகையிலெனில், பிற பகுதிகளைப் போல நீண்ட வாதங்களோ, சிந்தனைக்குகந்த சித்தாந்தங்களோ அதிகம் இல்லை. மனிதப் பிறவியின் முக்கிய நோக்கம் விழிப்புணர்ச்சி மட்டுமே என்ற எளியக் கருத்தை மையமாகக் கொண்டப் பகுதி.

விழிப்புணர்ச்சி என்றால் என்ன? கண்ணைத் திறந்து பார்ப்பது விழிப்புணர்ச்சி என்ற சாதாரணப் பொருளும் இதில் அடக்கம். 'கண்மூடித்தனமாக என் வாழ்வைக் கழிக்க மாட்டேன்' என்ற கொள்கைப் பிடிப்பும் இதில் அடக்கம். 'மரணம் என்பது புதிதல்ல', 'பிறப்பும் இறப்பும் இருமையல்ல ஒருமையே' போன்ற, சற்றே திடுக்கிட வைக்கும் விழிப்புணர்ச்சியும் இதில் அடக்கம்.

விழிப்புணர்ச்சி இங்கே பரந்த வீச்சில் பேசப்படுகிறது. விவேகானந்தரின் பிரபல "விழிமின்! எழுமின்!" கொள்கைக்குரல், கடோவின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

'மரணம் என்பதே வாழ்வோரை விழிக்க வைக்கும் நிகழ்வாகும்' என்ற பொருளில் பார்த்தால், கடோவின் மூன்றாம் பகுதி இறந்தவர் வீட்டில் படிக்கப்படும் சடங்கைப் புரிந்து கொள்ளலாம். 'மரணத்தைத் தொட்ட விழிப்புணர்ச்சியைச் சொல்கிறது' என்ற அசாதாரணக் காரணத்தினாலேயே கடோ அதிகமாகப் பொதுவில் படிக்கப்படுவதில்லை என்று தோன்றுகிறது.

பாடலைப் படித்ததும் கீதையும் கண்ணனும் விஜயனும் நினைவுக்கு வந்தால் வியப்பில்லை. கடோவின் மூன்றாம் பகுதியிலிருந்து கீதையில் நிறையவே எடுத்தாளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தப் பாடலில் உடல், உள்ளம், ஆன்மா, புலன் இவற்றுக்கெல்லாம் போருக்குத் தயாராக இருக்கும் தேர் உருவகமாகிறது. சற்று சுவாரசியமான உருவகம். ஏன் அப்படி? போரில் எது நிச்சயம்? வெற்றியா, தோல்வியா?

இரண்டும் அல்ல. போரில் மரணம் நிச்சயம். மரணம் மட்டுமே நிச்சயம், வெற்றியும் தோல்வியும் சாத்தியம்.

மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அத்தனை வீரருக்கும் அந்த நிலையில் எழுச்சியூட்டும் பேச்சு புரியுமா, தத்துவ சித்தாந்த வேதாந்தப் பேச்சு புரியுமா - சிந்திக்கவேண்டிய விஷயம். மரணபயம், எழுச்சிக்குரலை அழுத்திவிடும் தன்மையது. உயிரின் பயணம் பற்றிய வேதாந்தப் பேச்சு, மரண பயத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. தவிர்க்க முடியாததை ஏற்கப் பழகு என்கிற எளிமையான சித்தாந்தம்.

இந்தக் காரணத்தினால் தான் கீதை குருட்சேத்திரப் போரின் பின்னணியில் உரைக்கப்பட்டது. அத்தனை பேரையும் கொல்வேன் என்று சூளுரைத்த நேரத்தில் அர்ஜுனனுக்கு எந்த அவதியும் ஏற்படவில்லை. கொல்வதாகச் சொன்னவர்களைப் போர்க்களத்தில் பார்த்தக் கணமே தளர்ந்து போகிறான். காரணம், மரணபயம். பிற உயிர் பிரிவதும் மரணபயமே. கீதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணி - தேர், தேர்வீரன், தேரோட்டி, குதிரைகள் இவை எல்லாமே உருவகங்கள் என்று கருதும் அறிஞர்கள் உண்டு. கீதோபதேச வரைபடங்களில் கூட ஐந்து குதிரைகள் பூட்டிய தேர் இருப்பதைக் கவனிக்கலாம்.

உயிர்ப்பயணத்தை விவரிக்க கடோ ஆசிரியர்கள் மட்டுமல்ல, வியாசர் மட்டுமல்ல - மேற்கத்திய ஞானிகளும் தேர் உருவகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடோவின் ஏறக்குறைய சமகால இலக்கியமாகக் கருதப்படும் phaedrusல் இந்த உருவகம் காணப்படுகிறது. (எழுதியவர் plato).

phaedrusல் சொல்லப்பட்டிருக்கும் சுவையான கதை (அல்லது புதிர்) பின்வருமாறு:

ஆன்மா என்பது, சிறகுகள் கொண்ட இரண்டு குதிரைகள் பூட்டிய தேராகும். ஒன்று வெள்ளைக் குதிரை, மற்றது கறுப்புக் குதிரை. ஆன்மாவின் இலக்கு அல்லது சவால்? குதிரைகளை இழக்காமல் சொர்க்கத்தில் வந்திறங்க வேண்டும். இதில் என்ன சிக்கல்? சொர்க்கத்தை அடையுமுன் குதிரையின் சிறகுகள் அறுந்துவிட்டால் தரையிலிறங்கிவிடும். குதிரையின் சிறகுகள் அறுந்து போவானேன்? இரண்டு குதிரைகளும் இணைந்து செயல்படாவிட்டால் ஒரு குதிரையின் சிறகுகள் அறுந்து போகும். குதிரைகள் இணைந்து செயல்படாதிருக்கக் காரணம்? ஆ.. அங்கே தான் சூட்சுமம்.

இந்த வெள்ளைக் குதிரை இருக்கிறதே, அதற்கு நன்மை, விழிப்புணர்ச்சி, விவேகம், இலக்கு எல்லாம் பிடிக்கும். கறுப்புக் குதிரைக்கோ இன்பம், கண்மூடித்தனம், சோம்பல், வெகுளி என்றால் கொள்ளை ஆசை. இரண்டு குதிரைகளையும் இணைந்து செயல்பட வைக்க வேண்டியது ஆன்மாவின் பொறுப்பு. உயரே போனபின் சிறகறுந்து கீழே விழுந்தால் மீண்டும் சிறகு முளைக்க பத்தாயிரம் வருடங்களாகும். அது வரை ஆன்மா தரையிலே உழல வேண்டும்.

ஆன்மாவின் சொர்க்கப் பயணம் வெற்றிகரமாக முடியுமா? வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ள phaedrus தேடிப் படிக்கலாம். அல்லது கடோபனிஷது படிக்கலாம்.

    சிகேதன் எமனை வணங்கி, "ஐயா, ஆன்மத் தேடல் தொடரும் என்றீர்களே? உடலைப் பிரிந்த உயிர்ப் பயணத்தை விவரிப்பதாகச் சொன்னீர்களே? தயவு செய்து எனக்கு அந்த நுட்பத்தைத் தெரிவியுங்கள்" என்றான்.

எமன், "நசிகேதா, உயிர் உடலைப் பிரிந்தது என்று எப்படி அறிவது?" எனக் கேட்டான்.

"ஐயா, உடலில் எந்த இயக்கமும் இல்லாது போனால், மூச்சு விடவோ, தொடவோ, பேசவோ, உணரவோ, அறியவோ... எந்த வித இயக்கமும் இல்லாது போனால் உயிர் பிரிந்தது என்று அறியலாம்" என்றான்.

எமன், "நசிகேதா! நீ அரசகுமாரன். அடிக்கடி போர் புரிந்து வீரத்தை வளர்க்கவும் காட்டவும் துடிக்கும் அரச பரம்பரையில் வந்தவன். உனக்குத் தெரிந்த விதத்திலேயே சொல்கிறேன். உன் தந்தையின் தேர்ப்படையில் தேர் பார்த்திருக்கிறாய் அல்லவா?" என்றான்.

"பார்த்திருக்கிறேன்"

"தேரிலே போரிட்டு வெற்றி பெற எது தேவை, சொல் பார்க்கலாம்?"

"அப்படியென்றால்?"

"போரில் தேர் வெற்றிகரமாக இயங்க எது காரணமாகிறது?"

"தேர் இழுக்கும் குதிரைகள்.."

எமன் அமைதியாக இருந்தான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "குதிரைகளைக் கட்டும் கடிவாளம்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

இன்னும் சிந்தித்த நசிகேதன், "விழிப்போடு இருந்து தன்னையும் தன்னைச் சுற்றியும் பாதுகாக்கும் தேர்வீரன்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

மேலும் சிந்தித்த நசிகேதன், "தேரையும், தேர்வீரரையும், குதிரைகளையும் ஒரு இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியே காரணம்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "ஐயா, நான் சொல்வது தவறா?" என்று கேட்டான்.

"இல்லை நசிகேதா, நீ சொன்ன எதுவும் தவறில்லை" என்ற எமன், நசிகேதனைத் தட்டிக் கொடுத்தான். "இன்னொரு முக்கிய பாகம், அது தான் தேர் இயங்கக் காரணமாகிறது. தேரின் சக்கரங்கள். சக்கரங்கள் உடைந்து போனால், தேர் நகராது. எவ்வளவு முயன்றாலும் தேர் நகராது" என்றான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "இன்னொரு தேரில் ஏறிப் போர்ப் பயணத்தைத் தொடர முடியுமே?" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

மேலும் சிந்தித்த நசிகேதன், "ஐயா, புரியத் தொடங்கியது. சக்கரங்கள் உடைந்தால் தேர் நகராது. உயிர் நின்றதும் உடல் இயங்காது. அது வரை உடலை இயக்கியப் புலன்களினால் பயனில்லை. உள்ளிருக்கும் ஆன்மா இன்னொரு உடலைப் பற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறது"

எமன் மகிழ்ந்து, "என்னருமை மாணவனே, நசிகேதா! உன் பிடிப்பை மெச்சினேன்" என்றான்.

நசிகேதன் தயங்கி, " ஐயா, அப்படியென்றால் தேரோட்டியின் கதி? குதிரைகளின் கதி?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.