வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/03/29

நிலையாக நின்றான் நசிகேதன்


37
மண்ணிலே தேடும் தனமெல்லாம் மூடிய
கண்ணிலே ஓடும் கனவாகும் - நண்ணி
ஒளிக்குள்ளே போந்தார் இருளோம்பார் ஆம்போல்
வெளிக்குள்ளே போந்தார் வளி.

    லகில் செல்வங்களைச் சேர்ப்பது, உறக்கத்தில் காணும் கனவு போன்றது. ஒளியான இடத்தை விரும்பியவர்கள் இருளைச் சிறப்பாகக் கருதுவதில்லை; அது போல, எல்லாம் அடங்கிய வெளிக்குள் விரும்பிப் புகுந்தவர்கள், காற்றைச் சிறப்பாகக் கருதுவதில்லை (என்றான் நசிகேதன்).

நண்ணி: விரும்பி
வெளி: அண்டம்
வளி: காற்று
வெளியும் வளியும் முறையே ஐம்புலன் கடந்த நிலையையும் மூச்சையும் குறிப்பன.



    subtext என்று ஒரு உரையாடல் உத்தி. சொல்லும் பொருளும் பிரிந்திருப்பது போல் ஒரு மாயையை உண்டாக்கும், குறிப்பால் உணர்த்தும், நுட்பம். அறிவில் சிறந்தவர்களிடையே வீண் கோபங்கள் குறுக்கிட்டுப் பேச்சு வார்த்தையைத் திசை திருப்பாதிருக்கக் கடைபிடிக்கப்படும் உத்தி. நேரிடையாகச் சொல்வதனால் உண்டாகக் கூடிய தாக்கத்தைத் தணிப்பது. காதலருக்கு இயல்பாக வருவது :). அவசியம் பழக வேண்டிய நுட்பம்.

    வெளிக்குள் வளி அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்வது சிரமமென்றாலும் முடியும். ஒளிக்குள் இருள் அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்வது இன்னும் கடினம். ஒளியும் இருளும் ஒரே வட்டத்தின் பகுதிகள் (வட்டவில்?). இருள்-ஒளி போன்றதே பிறப்பும் இறப்பும். இருளும் ஒளியும் எதற்குள் அடங்கியிருக்கின்றன? பிறப்பும் இறப்பும் எதற்குள் அடக்கம்? சற்றே ஆழமான நுட்பங்கள். இங்கே அறிமுகம் செய்து கொண்டு, பின்னொரு பகுதியில் பழகுவோம். எதிர் நிலைகளை அறிந்து சாராது இயங்க வேண்டும் என்பது கடோவின் பிற பகுதிகளின் சாரம்.

    'அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன்' என்று ஆசை காட்டிய எமன், தொனியை மாற்றி, 'பிடிவாதம் விடு' என்றதைக் கவனித்தான் நசிகேதன். எமனின் பிடிப்பு தளர்வதைப் புரிந்து கொண்டான். எமனின் எரிச்சலைத் தணிக்க வேண்டும், அதே நேரம், தான் இன்னும் உறுதியாக இருப்பதையும் உணர்த்த வேண்டும். 'நீங்கள் என்ன சொன்னாலும் சரி, என் நிலை மாறாது' என்று சொல்வது ஒரு வழி. "நான் கேட்டது மரண அறிவு; எத்தனை முறை சொல்வது? நான் கேட்டதைக் கொடுக்க முடியுமா முடியாதா? முடியாவிட்டால் சொல், அதை விட்டு பிடிவாதம் கிளிப்பிள்ளை என்று தனித் தாக்குதல் தேவையில்லை" என்று நசிகேதன் பதில் சொல்லியிருக்கலாம். 'என் நிலை மாறாதிருக்க காரணங்கள் உண்டு' என்று சொல்வது இன்னொரு வழி. காரணங்களை எடுத்துச் சொல்லிக் காரியத்தைப் புரிய வைக்க முனைந்தது, எமன் மேல் நசிகேதன் வைத்திருந்த மதிப்பை உணர்த்தும் செயல். தான் மெய்யறிவை விரும்புவது எதனால் என்பதை எடுத்துக் காட்டினான். நசிகேதனுக்கே அறிவு தரவேண்டியவனென்றால் எமனிடம் இல்லாத அறிவா? அதனால் 'கொடுப்பாயா மாட்டாயா?' என்று சிறுபிள்ளை போல் கேட்காமல், 'ஐயா, கொடுக்காமல் போனால் அது உங்கள் விருப்பம்; ஆனால் சிறகை விரும்பும் எனக்கு நடைவண்டியில் விருப்பம் இல்லை' என்று எமனே புரிந்து கொள்ளும் விதத்தில் குறிப்பாகவும் தெளிவாகவும் மென்மையாகவும் வலியுறுத்தியும் சொன்னான். படியாத வயதல்ல, அறிவைப் பெறும் முதிர்ச்சி தன்னிடம் உள்ளது என்பதையும் குறிப்பால் விளக்கினான்.

    "ஐயா, உறக்கத்திலே நல்ல கனவொன்றைக் காண்கிறோம். உறங்கும் நேரம் அது கனவென்று தோன்றுவதேயில்லை. உலக வாழ்வில் அடையும் இன்பங்களும் செல்வங்களும் அத்தகையதே. விழித்ததும் கனவுகள் கலைந்து விடுகின்றன. எத்தனை இனிய கனவானாலும் அதனால் எந்தப் பயனுமில்லை. அதே போல் சேர்த்த செல்வங்களும் அடைந்த இன்பங்களும் ஒரு நாள் பயனற்றுப் போகின்றன. மூச்சடக்கி மூட்டும் தீ என்று சொன்னீர்களே? மூச்சைக் கட்டி தன்னறிவு பெற வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்? நீங்கள் ஆசை காட்டும் பொன்னும் பொருளும் மூசசைப் பெருக்க ஏதுவாகுமே? இந்த ஆசைகள் என்னைக் கட்டிப் போடுமே? நான் ஆசைகளைக் கட்டிப் போட அல்லவா விரும்புகிறேன்?" என்றான். 'செல்வங்கள் வேண்டாம்' என்று சொல்லவில்லை நசிகேதன். 'சிறந்த செல்வம் ஒன்று உண்டு - மெய்யறிவு - அது வேண்டும்' என்றான்.

    செல்வங்களைச் சேர்ப்பதால் யாரும் நெறி தவறவில்லை; செல்வங்களைப் புறக்கணிப்பதால் நெறி பேணவும் இல்லை. நிலையில்லாத செல்வங்களை தேடி, நிலையான உண்மையான செல்வமான மெய்யறிவைப் பெறவில்லையென்றால் பிற செல்வங்களினால் எந்தப் பயனும் இல்லை என்பதே நசிகேதன் சொன்ன கருத்து. கனவு இதமாக இருக்கின்றதே என்று தொடர்வதில் பயனுண்டா? மெய்யறிவு பெறுவதே உண்மையான விழிப்பு என்பது நசிகேதனுக்குப் புரிந்தது. தான் விரும்புவது உண்மையான விழிப்பு என்பதைக் குறிப்பாகச் சொன்னான்.

    "ஐயா, ஒளியை விரும்பி ஏற்றவர்கள் இருளுக்குத் திரும்ப எண்ணுவதில்லை. மெய்யறிவு ஒளி போன்றது. பிற செல்வங்கள் இருளுக்கு ஒப்பானவை" என்றான். தனக்குத் தேவை ஒளி என்பதை மென்மையாக வலியுறுத்தினான். இதில் என்ன subtext? 'வேண்டாம் என்பதில் ஆணவமோ, வேண்டும் என்பதில் பிடிவாதமோ இல்லை' என்பதே அவன் சொன்ன குறிப்பு. தேவையைக் கேட்பது பிடிவாதமா?

    எல்லாம் அடங்கிய நிலை இருக்கையில், ஒரு பகுதியை விரும்பி என்ன பயன்? ஐம்பொறிகளும் அடங்கிய வெளி அண்டம். ஐம்புலனும் அடங்கிய வெளி ஆன்மா. வளி என்பது இங்கே வாழ்வதற்கு இன்றியமையாத மூச்சுக்காற்றை குறிக்கிறது. "ஆன்மாவை அறிய முற்படும் எனக்கு வாழ்வின் சாதாரண இனிமைகள் பொருட்டல்ல" என்றான் நசிகேதன். தான் விரும்புவது, ஆன்மாவைப் பற்றிய அறிவே என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினான்.

2011/03/25

பிடிவாதம் விடு என்றான் எமன்


36
சொன்னதே சொல்லுங் கிளிப்பிள்ளை போல்பேசி
என்னநான் ஈந்தும்நீ ஏற்கவில்லை - இன்னும்
படியா வயதில் பொருந்தாது கேட்டுப்
பிடியாதே வீண்பிடிவா தம்.

    த்தனை செல்வங்களும் சலுகைகளும் தந்தாலும், சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை போல் மரண அறிவு பற்றியே கேட்கிறாய். முதிராத உன் வயதுக்கு பொருத்தமற்ற வரங்களைக் கேட்கும் வீண் பிடிவாதத்தை விடு (என்றான் எமன்).




    பேரம்* பற்றிய நுட்பங்களில் x,y நடத்தைகளைத் தொட்டோம். சிக்கலை விடுவிக்கும் முயற்சியில், கொடுக்கல் வாங்கலினாலும் பேச்சு வார்த்தையாலும் ஏற்படும் வெப்பநிலை தணிந்து, உடன்பாடு உண்டாக இரு நடத்தைகளும் தேவை. சில நேரம் கசப்பான வெற்றியைத் தந்தாலும், ஒரே நடத்தையைக் கடைபிடிப்பது உடன்பாட்டைத் தருவதில்லை. ஒரே நடத்தையை இறுதி வரை கடைபிடிப்பதால் உடனிருப்போரின் வெறுப்புக்கு ஆளாகலாம். ஒரு நடத்தையில் தொடங்கி எதிர் நடத்தைக்கு ஒரேயடியாகத் தாவினாலோ உடனிருப்போரின் நம்பிக்கையை இழக்க நேரிடும். எந்த நடத்தையிலும் பிடிப்பில்லாமல் கணத்துக்குக் கணம் மாறினாலோ அனைவரின் நம்பிக்கையை இழப்பதுடன் தானும் குழம்பி இலக்கை விட்டு விலகி வெகு தூரம் போக நேரிடும்.

    தான் விரும்பியதை அடைந்தாலும், அது பிறரின் வெற்றி போன்ற உணர்வை ஏற்படுத்துவதே உடன்பாட்டின் இலக்கணம். பெரும் பேரம் செய்யும் கூட்டங்களில் ஒவ்வொருவரும் (தரப்பும்) தங்களின் 'அடலொற்கத்தருணம்' அறிந்து, லாப-நஷ்ட கொடுக்கல்-வாங்கல் எல்லைகளை முன்பே ஓரளவுக்குத் தீர்மானித்து, தங்களின் batna வலுவை தக்கவைக்க முயற்சிப்பதைக் கவனிக்கலாம்.

    தினசரி வாழ்வில் இந்த அறிவு பயன்படுமா?

    'சொல்வதைக் கேள், இல்லையேல் கோபம் வரும்' என்ற வீட்டு வழக்கத்தை அறிவோம். ஆட்டத்தை விட்டு ஆளைக் குறிவைக்கும் இயல்பை விளையாட்டில் பார்க்கிறோம். இடுகை பற்றிய கருத்தை விட்டு, எழுதியவர் திமிர் பிடித்தவர் என்ற பாணியில் வரும் பின்னூட்டங்களைத் தினமும் படிக்கிறோம் :). இவை எல்லாமே தினசரி வாழ்வின் x நடத்தைகள். இலக்கை மறைப்பவை.

    'விட்டுக்கொடுக்கும்' பாங்கான y நடத்தையை முழுதுமாகக் கடைபிடித்தால் ஏமாற்றமே வரும். தன்னம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் y நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள். எந்தச் சூழலிலும் தனக்கான கருத்தை, இடத்தை, நிலையை வகுத்துக் கொள்ளாதவர்கள் வெற்றியடைவதில்லை. வாழ்விலும் முன்னேறுவதில்லை. முயலுக்கு மூன்று கால் என்ற பாணியில் ஒரே நிலையில் நிற்க வேண்டுமென்பதில்லை - ஒரு நிலை கூட இல்லாமல் 'எல்லாம் விதி', 'எழுதியிருப்பது போல் நடக்கும்', 'நீங்க என்ன சொல்றீங்களோ அதையே என்னோட கொள்கையா வச்சுக்குங்க', 'எல்லாம் உங்கள் இஷ்டம், நீங்க பாத்து செஞ்சா சரி', 'நம்பிக்கையோட செஞ்சா நிச்சயம் நடக்கும்' போன்ற நிலைகளை விரும்பி ஏற்கும் y நடத்தையாளர்கள் தங்களுக்கென்று ஒரு இடமுமில்லாமல் திரிகிறார்கள். எதையோ எதிர்பார்த்து, எதையோ செய்து, முடிவில் எதிலுமே நிறைவில்லாமல் தன்னையே குறை சொல்லி, விழுந்த குழியை ஆழப்படுத்தும் கண்மூடிகள். பரிதாபத்துக்குரியவர்கள்.

    'எடுத்துக்கொள்ளும்' பாங்கான x நடத்தையை முழுதுமாகக் கடைபிடிப்போர், தொடக்கத்திலிருந்து வெறுப்புணர்ச்சியைப் பரப்புகிறார்கள். தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், ஆதாரமான அறிவையோ பொதுநல உணர்வையோ மறைத்துவிடும் அபாயம் உண்டு என்பதை x நடத்தையாளர்கள் அறிவதில்லை. 'என்னை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை', 'எனக்குத் தெரியாததா?', 'எல்லாம் என் சொற்படித் தான் நடக்க வேணடும்', 'நான் பார்க்காததா?', 'எதிலும் நான்' போன்ற நிலைகளைப் பழகும் x காரர்கள் பல நேரம் எல்லாவற்றையும் இழந்து அவமானமடைகிறார்கள். பிறகு, 'என்னை மதிக்கவில்லையே!' என்று வெறுத்து ஒதுங்குகிறார்கள். சில x காரர்கள், ஒரேயடியாக y நடத்தைக்குத் தாவி தங்கள் மதிப்பை இழக்கிறார்கள் - இந்த மாற்றம் x காரர்களை பாதிப்பது போல் y காரர்களை பாதிப்பதில்லை (y காரர்கள் ஒரேயடியாக x நடத்தைக்கு மாறும் சாத்தியம் மிகக்குறைவு - துணிச்சலற்றவர்கள்). x,y,x என்று கணமொரு கட்சி மாறி, உடனிருப்பவர்களையும் தன்னையும் அழித்துக் கொள்ளும் அபாயம் x நடத்தையாளர்களிடம் உண்டு. இவர்களும் பரிதாபத்துக்குரியவர்கள்.

    xம் தேவை, yம் தேவை. அவற்றை வெளிப்படுத்தும் முறையில் நிதானமும், அறிவு கலந்தத் தன்னம்பிக்கையும், பொது அக்கறையும் இருந்தால் இலக்கை அடைய முடியும். மகாத்மா காந்தி, அன்னை தெரசா, சாதனையாளர் அனுராதா கொய்ராலா போன்றவர்கள் y நடத்தையர் போல் தோன்றினாலும், உண்மையில் அறிவார்ந்த x நடத்தையை ஆதாரமாக வெளிப்படுத்தியவர்கள். இலக்கிலிருந்து விலகாமல் தான் நினைத்ததை சாதித்தாலும், அது பிறருடைய வெற்றி என்கிற பிரமையை உண்டாக்க இவர்களால் முடிந்தது.

    அடுத்த முறை வீட்டிலோ வெளியிலோ, பெரும் சச்சரவு அடக்க அல்லது பொது உடன்பாடு ஏற்படுத்த வேண்டிய நிலையில், பிறர் வெளிப்படுத்தும் நிலை கண்டு அதற்கொப்ப நடக்கலாம். வாழ்வே பேரம்.

    ள்ளி அள்ளிக் கொடுத்தும் அசையவில்லை நசிகேதன். எமன் வழங்கியவை நிலைக்காதவை என்பதை அறிவோடு நயமாக எடுத்துச்சொல்லி, எமனையும் அலட்சியப்படுத்தாமல், தன் வரத்தின் பயனே நிலையானது என்ற உறுதியோடு நின்றான்.

    தான் வழங்கியதை நசிகேதன் ஏற்கவில்லையென்பது தெரிந்தும், இனி வழங்க எதுவுமில்லை என்று தெரிந்தும், எமன் எரிச்சலடைந்தான். ஆட்டத்தை விட்டு ஆளைத் தாக்கத் தொடங்கினான். நசிகேதனின் கருத்தை ஒதுக்கி, 'சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை, படியாத வயது, பிடிவாதக்காரன்' என்று நசிகேதனைத் தாக்கிப் பின்னூட்டம் வழங்கினான். yலிருந்து xக்குத் தாவினான்.

    உடன்பாடு ஏற்படுமா? நசிகேதன், எமன் சொற்படி நடப்பானா?



* 'பேரம்: உடன்பாடு காண்பதற்கான பேச்சு, ஒப்பந்தப்பேச்சு, சலுகை பற்றிய பேச்சு' என்கிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி; 'பேச்சை' வலியுறுத்தினாலும் பேரம், negotiationக்கு பொருந்தும் தமிழ்ச்சொல். உதவிக்கு மிக நன்றி, Nanum enn Kadavulum.
  அடலொற்கத்தருணம்: அடல், ஒற்கம், தருணம் - பலம், பலஹீனம், சந்தர்ப்பம் | strength, weakness, opportunity - அடலொற்கத்தருணமறிதல் அரச, அமைச்ச, அவை, படைத்தலைவரின் இலக்கணம்.
  batna என்பது பேர மேலாண்மைத் தந்திரம்.

2011/03/22

செல்வங்கள் அழிவன என்றான் நசிகேதன்


35
இசையும் இளமையும் வாரிசும் வாழ்வும்
நசையாகும் நாளிவை நில்லா - வசையாம்
பனிமொழியர் பாடலும் என்வரமே என்றும்
தனிநிற்கும் தன்மைய தாம்.

    புகழ், இளமை, சந்ததி, சிறப்பான வாழ்க்கை இவையெல்லாமே ஆசையின் வடிவங்கள்; நிலைக்காதவை. குளிர்மொழிப் பெண்களின் இனிய பாடல்களும் ஒரு நாள் வசைமொழி போல் தோன்றும். நான் கேட்ட வரம் மட்டுமே தனிப்பட்டு நின்று பயன் தரும் தன்மையது (என்றான் நசிகேதன்).

நசை: அளவற்ற ஆசை


    சொர்க்கம் செல்லும் வழியையும், பொன்னையும் மண்ணையும் பெண்ணையும் இளமையையும் பெற்றுக்கொண்டுத் திரும்பியிருந்தால் நசிகேதனைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருப்போமா?

    ஞானிகள் அறிவை வளர்ப்பது அனைவரும் பயனுறவே.

    எமன் எப்படியெல்லாம் ஆசை காட்டினான்! 'எல்லாம் தருகிறேன், இன்னொரு நுட்பமான அறிவையும் வரமாகத் தருகிறேன், மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே' என்றான்.

    ஒன்றைச் செய்யாதே என்றால் நம் மனம் அடங்குகிறதா? அதைத்தானே செய்யத் தோன்றுகிறது? 'என்னய்யா இவன்? மரணத்தைப் பற்றிக் கேட்டால் மனம் போனபடி அள்ளி விடுகிறானே? அப்படி என்ன தான் இருக்கிறது இதில் மர்மம்?' என்று சாதாரணருக்கும் தோன்றுமே? சிறுபிள்ளைக்கே உரித்தான பிடிவாதக் குணம் இருந்தாலும், நசிகேதன் அறிவுள்ள பிள்ளை வேறு. அவனுக்கும் அதே எண்ணமே ஓடியிருக்கும்.

    முதல் இரண்டு வரங்களில் பூமிக்குத் திரும்பிப் போகும் வாய்ப்பையும், சொர்க்கம் செல்லும் அறிவையும் பெற்றான். எமனுலகிலிருந்து திரும்பி வந்தான் என்ற செய்தியே போதுமே? போதாவிடில், சொர்க்கம் செல்லும் வழி தெரிந்தவன் என்றால் உலகத்தவர் அவனை உயர்த்திவிட மாட்டார்களா? அதற்கு மேல் அவனுக்கு என்ன புகழ் தேவைப்படப் போகிறது? மேலும் அவன் அரசன் மகன். அவனுக்குக் கிடைக்காத பொன், மண், கால்நடை சொத்து, அழகிய மகளிர் பணிவிடை, மற்றும் அரசுப் பதவியா?

    நசிகேதன் விரும்பியா நமனுலகம் வந்தான்? இன்னொருவர் கொண்ட ஆசையினாலும் செய்த தவறினாலும் அல்லவா அங்கே சென்றான்? திரும்பிய பின், தானும் இது போல் நடந்து கொண்டால்? தானும் மற்றவர்களும் அவ்வாறு நடவாதிருந்தால் உலகில் மனித வாழ்க்கை பயனுள்ளதாக மாறுமே? தன் தந்தைக்கும் தனக்கும் சேர்த்த பேறுகள் போதாமல், மனித வாழ்க்கைக்கு மகத்துவம் சேர்க்க வாய்ப்பு கிடைக்கும் போலிருக்கிறதே? அறியாமையைப் போக்க இதை விட சிறப்பான வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்தான். அதனால் தன்னுடைய வரம் 'தனித்து நிற்கும் தன்மையது' என்றான். காலத்தால் அழியாததல்லவா கல்வி?

    எமன் வழங்கிய செல்வங்களையும் வளங்களையும் மறுத்து, வேறு வரம் வேண்டாமென்ற தன் நிலையில் உறுதியாக நின்றான் நசிகேதன்.

2011/03/18

குமிழி வாழ்வு என்றான் நசிகேதன்


34
தாள்பட்டும் காழ்பட்டும் தேயுமுயிர் காசினியில்
நாள்பட்ட வாழ்வும் குறுவாழ்வே - கேளீர்
எதற்கினிமேல் ஏந்திழையும் பூணியும் பொன்னும்?
முதற்கனியை முந்துமோ மூன்று?

    லகில் பல்லாண்டு வாழ முடிந்தாலும், அது உமது வருகையாலோ அல்லது எமது உள்ளத்தில் தோன்றும் பகை வெறுப்பு உணர்ச்சிகளாலோ குறுகிவிடுகிறது. இந்நிலையில், அழகிய பெண்களும் பூணியும் பொன்னும் சேர்த்து என்ன பயன்? முதற்கனியை விட மூன்றாங்கனி இனிப்பதில்லை (என்றான் நசிகேதன்).

தாள்பட்டு: காலடிபட்டு (எமனுடைய வருகையால்)
காழ்பட்டு: காழ்ப்பினால், பகையினால், வெறுப்பினால்
காசினியில்: உலகில்
ஏந்திழை: ஒளிவீசும் ஆடை அணிகலன் அணிந்த அழகிய பெண், தேவமகளிர் என்ற பொருளில் வருகிறது
life is short என்பதற்குத் தமிழுரு தந்துதவிய மோகன்ஜி, Nanum enn Kadavalum, சிவகுமாரனுக்கு நன்றி



    டெமாக்ரிடஸ் என்பவர் சிறந்த கிரேக்க அறிஞர்களில் ஒருவர். மக்களாட்சி, கணிதம், அணுத்துவம் பற்றிய, இன்றைக்கும் பிரமிப்பூட்டும், கருத்துக்களுக்கு இவர் புகழ் பெற்றிருந்தாலும், மனித நேயம் பற்றிய சிந்தனைகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 'மகிழ்ச்சியைத் தேடிப்பெறுவதே பிறவியின் நோக்கம்' என்றவர். ஏறக்குறைய கடோபனிஷதக் காலத்தவரான இவருடைய பிரபலமான வேதாந்தக் கேள்வி: "உணர்வுகளால் நிறைவதை பொன் பொருள் நிறைக்குமா?".

    தமிழில் இன்னும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்: 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து'. தேடுவதை எங்கே தொடங்குவது என்பது நம் எல்லாருக்கும் சுலபமாகத் தெரிகிறது, புரிகிறது. தேடுவதை எங்கே எப்போது நிறுத்துவது என்பதில் தான் சிக்கல். நிறைவடைந்தாலும் தேடுகிறோம்; நிறைவடையாவிட்டாலும் தேடுகிறோம். வாழ்வில் தேடல் அடக்கமா அல்லது தேடலில் வாழ்வு அடங்குமா?

    டெமாக்ரிடஸ் சொன்ன 'மகிழ்ச்சியும் நிம்மதியும் ஒன்று' என்ற பார்வையில், 'மகிழ்ச்சியுடன் இருக்கிறோமா?' என்ற கேள்வியை நாம் தினமும் கேட்க வேண்டும். 'இன்றைய பொழுதை எனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியானதாக்க என்னால் என்ன செய்ய முடியும்?' என்று சிந்திக்கவாவது வேண்டும். நான்கு நாட்கள் சிந்தித்தால் ஐந்தாவது நாள் ஏதாவது செய்யத் தோன்றும் என்று நம்புகிறேன். சிலர் 'மகிழ்ச்சி வேண்டும், நிம்மதி வேண்டும்' என்று சிந்திப்பதோடு சரி, செயலில் இறங்க வாய்ப்பு கிடைத்தாலும் இறங்குவதில்லை. பாதை தெரிந்த பின்னும் பயந்து ஒடுங்கும் கூட்டம். நொபெல் பரிசு பெற்ற பெர்னார்ட் ஷா சொன்ன கருத்து:"பத்து பேரில் ஒருவர் சிந்தித்துச் செயல்படுகிறார். ஒருவர் சிந்தித்துச் செயல்படுவதாக நினைக்கிறார். மற்ற எட்டு பேரும் சிந்தனை என்றால் என்னவென்று தெரியாமலே வாழ்ந்து மடிகிறார்கள்". அந்த எண்மரில் நான் சேர்ந்து விடக்கூடாதே என்று சில வருடங்களாகவே(!) அஞ்சி வருகிறேன். கடோவைப் படித்த போதும், இந்தப் பாடலை எழுதும் பொழுதும் என் வாழ்வின் தேடல்கள் பற்றித் தானாகவே சிந்தனை கிளைவிட, அதிர்ச்சியில் கிடந்தேன்.

    எளிமை பழக வேண்டும். எப்படி என்று தெரியவில்லை.

    இளைய தலைமுறையிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது. சமீபத்தில் என் மகள் விரும்பிய ஒன்றை வாங்கிக் கொள்ள அனுமதியும் பணமும் கொடுத்தேன். நன்றியுடன் இரண்டையும் திருப்பிவிட்டாள். 'but, i thought you liked it?' என்றேன். 'i do, but having it will clutter my life' என்றாள். அவளுடைய நிறைவுச் சிந்தனை நிலைக்க வேண்டுமென்று விரும்பிய எனக்குப் பொட்டில் அறைந்தாற் போலிருந்தது. when did my clutter commence? என் வாழ்வின் எந்த மைல்கல்லில் excess மற்றும் relevant என்பதற்கு பொருள் மறந்து போனேன் என்று நினைக்கத் தொடங்கினேன். நிறைவுக்கும் நிம்மதிக்கும் வேறுபாடு தெரியாமல் போன அந்தக் கணத்தை அடையாளம் காண முயன்று தோற்றேன். சமூகத்தின் மீது பழி சுமத்தினாலும், தெளியத் தொடங்கியிருக்கிறேன் (என்று நினைக்கிறேன்:).

    ஒரு அழகிய வெள்ளித்தட்டிலே கண்ணைக் கவரும் பலாச்சுளைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நறுமணத்தோடு இயற்கையிலேயே தேனூறி மின்னும் விதை நீக்கியப் பலாச்சுளைகள், உண்ணத் தயாரான நிலையில் உள்ளன. தொட்டு எடுக்கத் தூண்டினாலும், அந்தச் சிரமம் நீங்க, பலாச்சுளையை எடுத்து நம் வாய் பிளந்து ஊட்டிவிட அருகிலேயே காத்திருக்கும் சேவகர். பலாச்சுளை ஒன்றை எடுத்து மெல்லிய விரலால் நம் முகம் தொட்டு வாய் பிளந்து ஊட்டி விடுகிறார். கண்ணைக் கவரும் அந்தச் சுளையின் மணம் நம் உணர்வை ஆக்கிரமிக்க, உதடுகளில் பட்டும் படாமலும் தொட்ட சுளையின் மென்மை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. தேனைவிட இனிக்கும் சுளை நாவில் பட்டதும் மெள்ள அசைந்து பற்களிலும் நாவினிடையிலும் விளையாட்டாகச் சிக்கிக் கலந்து உள்ளிறங்க, அந்த முதல் பலாச்சுளையின் சுவை உடல் எங்கும் பரவி நம்மைச் சொக்க வைக்கிறது. இதுவல்லவோ சொர்க்கம் என்று கிறங்கி இன்னொரு சுளைக்காக வாய் திறக்கிறோம். அடுத்து ஒன்று. அதற்குப் பின் ஒன்று. இந்த இனிமை நிலையானதென்று எண்ணும் பொழுது எங்கிருந்தோ இடிக்கிறது. இனியொரு சுளையைக் காணவும் முடியாமல் எதிர்க்கிறது. மனம் பலாச்சுளை பக்கம் போகவே மறுக்கிறது. சேவகரையும் ஒதுக்கி ஒதுங்குகிறோம். எத்தனை சுவைக்க முடியும்? எப்பொழுது திகட்டும்? எப்பொழுது எதிர்த்து வரும்? இந்த விவரங்கள் தொடக்கத்தில் தெரியாது; ஆனால் திகட்டும், எதிர்த்து வரும் என்பது மட்டும் அனுபவத்தால் திண்ணமாகத் தெரியும். எத்தகைய இனிமையும் காலத்தால் குன்றியோ அல்லது அற்றோ போகும் தன்மையது.

    சிகேதன் எமனிடம் சொன்னதும் அது தான். "ஐயா, பொன் பொருள் பெண் இவையெல்லாவற்றையும் நான் எத்தனை நாள் அனுபவிக்க முடியும்? முதல் கனியில் பெற்ற சுவை மூன்றாவதில் குன்றுமே? அமுதும் நஞ்சாக மாறுமே? மாறாதிருந்தாலும், உங்கள் காலடி பட்டக் கணத்திலேயே இந்த இனிமையான அனுபவம் முடிந்து விடுமே? நஞ்சாக மாறாவிட்டாலும், நீங்கள் வருகை தராவிட்டாலும், பிறருடைய கோப தாபங்களை என்னால் கட்டுப் படுத்த முடியாது போனால் நீங்கள் வழங்கியிருக்கும் இனிமையை அனுபவிக்க இயலாதே? குமிழி எப்போது வெடிக்கும் என்று தெரியாது. வாழ்வும் குமிழி போன்றதே. உலகத்தில் அளவற்ற நாள் வாழ வழியிருந்தாலும், அது நிலைக்காத குறுகிய காலமே" என்றான்.

    பொம்மைகளோடும் நட்போடும் சுமுகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தவன், தன் தந்தையின் அவசரக் கோபத்தினால் எமனுலகம் வர நேர்ந்ததே? 'சிந்தையில் நாடிய சித்திரை வாழ' எமன் வரம் தந்தாலும், பூவுலகம் திரும்பியபின் தன் தந்தை அல்லது இன்னொருவரின் செய்கையாலோ, தன்னுடைய அறியாமையாலோ, தானே மீண்டும் எமனுக்குத் தானமாகக் கூடுமே? எமன் காலடி வைக்காவிட்டால் கூட உலகத்தாரின் காழ்ப்புணர்ச்சி காலமுடிவைக் கொண்டு வரும் என்பதைத் தனக்கு நேர்ந்த அனுபவத்தால் உணர்ந்தவன் நசிகேதன். நிலையற்ற வாழ்வைத் தேடல்களினாலும் சேர்க்கைகளினாலும் நிலைக்கச் செய்யும் முயற்சியில் முடங்கியிருக்கும் முட்டாள்தனத்தை, போலித்தனத்தை, நன்றாக உணர்ந்தவன் என்பதை எமனுக்குத் தெளிவு படுத்தினான்.

2011/03/15

தொடர்ந்து ஆசை காட்டினான் எமன்


33
பொன்னும் இசையும் புலமும் இளமையும்
மின்னும் மகளிரு முன்வசமாம் - இன்னும்நீ
ஏனவரும் ஆளாத தாளலாம் ஆன்மாவுக்
கானதைக் கேளா திரு.

    ழகு, புகழ், அறிவு, இளமை, இவற்றுடன் மின்னல் போல் ஒளிவிடும் தேவமகளிரையும் உன் வசமாக்குவேன்; மேலும், சாதாரணர்களுக்குக் கிடைக்கப் பெறாத மாட்சிகளும் உன் சொந்தமாகும்; உயிருக்கு என்ன ஆகிறது என்பதை மட்டும் கேட்காதே (என்றான் எமன்).

பொன்: அழகு
இசை: புகழ்
புலம்: அறிவு



    முழுதும் கலை என்று சொல்லும் அளவுக்கு ஒரு மேலாண்மைப் பரிமாணம் உண்டென்றால், அது 'உடன்பாட்டுத் தந்திரம்' என்பேன். நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுவது சுலபம்; அடுத்தவருக்குத் தேவையானதைக் கொடுப்பதும் சுலபம். கூட்டு முறையில், குடும்பம் தொழில் சமூகம் என்ற கூட்டு நிலவரத்தில், ஒருவருக்குத் தேவையானதை இன்னொருவர் பேரம் பேசி, கொடுத்து வாங்கி, அனைவருக்கும் நிறைவான விதத்தில் உடன்படிக்கை ஏற்படுத்துவது மிக மிகக் கடினம். இன்னும் மூன்று மிக போடலாம். (பொருள் தெரிந்து, சொல் தேடும் சங்கடம் மறுபடி. 'negotiation' என்பதற்குத் தமிழ்ச்சொல் தெரியவில்லை. யாரங்கே? தமிழ் எளிமையான வளமான மொழி என்றவரைப் பிடித்து வாருங்கள்).

    ஒரு கேள்வி: மக்களிடம் செல்வாக்கு மிகுந்த புராண சிவன், ராமன், க்ருஷ்ணன், முருகன் இவர்களில் யார் சிறந்த negotiator? process of eliminationல் இருவரை நீக்கி விடலாம்: உடன்பாடு வடக்கு என்றால் முருகன் தெற்கு - அசல் தமிழன்; அத்தனை சக்தியும் செல்வாக்கும் வைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் போன வெண்ணைச்சாமி, நெய் எடுக்கத் தெரியாமல் குருட்சேத்திரத்துக்கு நேர்வழி அமைத்தார் - அவரையும் நீக்கலாம். மற்ற இருவரில் ஒருவர் skilled negotiator என்று சொல்லும் அளவுக்கு அருகே வருகிறார். என் கருத்து இருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நால்வரில் யார் சிறந்த negotiator?

    மேலாண்மைப் பார்வையில், உடன்பாடு ஏற்படுத்தும் தந்திரங்கள் பல உள்ளன. 'x,y நடத்தையறிதல்' என்று ஒரு அடிப்படைத் தந்திரம். தக்க வைப்பது அல்லது எடுத்துக் கொள்வதை x நடத்தையும், விட்டுக் கொடுப்பதை y நடத்தையும் குறிப்பன. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் y நடத்தையை வெளிப்படுத்துவது சமரசக் கொள்கையை முன்வைத்தாலும், 'ஏமாந்த சோணகிரி'யாகும் அபாயத்தை உண்டாக்கும்; லாபமில்லாமல் விட்டுக் கொடுத்தால், தேவையான நேரத்தில் எதுவுமே இல்லாமல் போய்விடலாம். அதே நேரம், தொடக்கத்தில் x நடத்தையை வெளிப்படுத்துவது உடனடி முறிவை ஏற்படுத்தலாம். (இதையே கொஞ்சம் புரட்டிப் போட்டால், வீட்டிலும் அமைதியேற்படுத்தும் வழிகளை அறியலாம்).

    மூன்றாம் வரம் முழுதும் 'உடன்படிக்கைத் தந்திர'ப் படிப்பினை எனலாம். எமன் இங்கே வெளிப்படுத்துவது x நடத்தையா, y நடத்தையா?

    மன் தொடர்ந்து ஆசை காட்டக் காரணமென்ன? நசிகேதன் அடிப்படையில் மனிதப் பிறவியைச் சேர்ந்தவன். மனிதப் பிறவியின் குணச்சித்திரத்துக்கேற்றபடி அவனை நடக்குமாறு தூண்டினான் எமன். இதுவரை அளித்தவற்றுக்கு மேலாக, அழகும் புகழும் அறிவும் தருவேன் என்றான். அனுபவிக்க இளமையைத் தருவேன் என்றான். அழகும் அறிவும் புகழும் இளமையும் பெற்ற ஆடவருக்கு வேறேதும் தேவை உண்டா? ஒளிரும் பெண்களை, தேவமகளிரை உடன் அனுப்புவேன் என்றான். சாதாரண மனிதர்களால் பெறமுடியாதது இன்னும் எதுவுமிருந்தால் அதையும் ஆளலாம் என்றான்.

    எமனுடைய ஆசை மொழியின் உட்பொருள்: "மனிதருக்கு மரணம் ஒரு இயற்கையான, அவசியமான நிகழ்ச்சி. அதை அறிவதால் வாழ்வை அனுபவிக்க இயலாமல் போய்விடலாம். மனிதனான நீ, மனிதனைப் போலவே வாழ்வதற்கான வரங்களைக் கேள். மரணத்தைப் பற்றிக் கேட்காதே".

    எமன் வழங்கிய கொடைகளையும் சலுகைகளையும் நசிகேதன் ஏற்பானா?

2011/03/11

மேலும் தருவதாகச் சொன்னான் எமன்


32
நுண்ணிய வேறோர் வரங்கேட்டால் நெஞ்சில்நீ
எண்ணிய தெல்லாம் தருவேனே - பண்ணிய
பாவங்கள் போய்ப்பேர் தருவேன் தயைசெய்துச்
சாவதன் தன்மை தவிர்.

    யவுசெய்து மரணத்தின் உண்மையை அறிய முயலாதே. அதை விடுத்து வேறொரு உண்மையறிய வரம் கேட்டால் உன் மனதில் எண்ணியதையெல்லாம் நிறைவேற்றுவேன்; பாவங்களைப் போக்கிச் சொர்க்கத்தைத் தருவேன் (என்றான் எமன்).

பேர்: சொர்க்கம்


    றுப்புகளைக் கையாளும் முறைகளை மேலாண்மைக் கல்வியில் பாடமாக வைத்திருக்கிறார்கள். மறுப்பவர்கள் உண்மையில் மறுக்கிறார்களா அல்லது எதிர்பார்ப்பை மறைமுகமாகக் கூட்டுகிறார்களா என்பதை அறிவது ஒரு கலை. தீர்மானமான மறுப்பை எப்படி அறிவது? தொனி, சைகைகள், உடல் இறுக்கம், பார்வையின் தீர்க்கம் என்று பலவகைக் குறிகளைக் கவனிக்கச் சொல்கிறார்கள்.

    காதலி, தாய் இவர்களின் மறுப்புகளை விளையாட்டாக இப்படிச் சொல்வதுண்டு: 'முடியாது' எனில் 'பார்க்கலாம்' என்று பொருள்; 'பார்க்கலாம்' எனில் 'சம்மதம்' என்று பொருள்.

    விற்பனைத்துறையில் இந்த விடாப்பிடிப் போக்கு சாதாரணம் ('no' means 'maybe'; 'maybe' means 'yes'). நம்மூர் கடைகளில் கூட கவனிக்கலாம். மணிக்கணக்கில் ஒன்றன் சிறப்பை எடுத்துச் சொன்னக் கடைக்காரர், நாம் "அது வேணாம்பா" என்றால், "அப்ப இதை வாங்கிக்க சார். அதை விட இது சூபரு" என்பார். "ஆளை விடய்யா!" என்று நாம் எரிச்சலோடு ஒதுங்கும் வரை நச்சரிப்பு தொடரும்.

    மன் ஒரு தேர்ந்த வியாபாரி. மறுப்புகளை அவ்வளவு சுலபமாக ஏற்பானா? 'காணிபூணி தருகிறேன், நீண்ட ஆயுள் கேள்' என்று ஆசை காட்டியும் நசிகேதன் சலனப்படாததைக் கவனித்து, 'அதை விட இது சூபர்' பாணியில் தொடர்ந்தான்.

    'இந்தப் பிள்ளை பொன்னுக்கும் மண்ணுக்கும் மயங்கவில்லை. சொர்க்கம் செல்லும் வழியை வரமாகக் கேட்டானே? சொர்க்கத்துக்குப் போவதே வாழ்வின் இலக்கு என்று எண்ணுகிறானோ? அதைச் சுலபமாக்கி விட்டால்?' என்று எண்ணிய எமன், உடனே உத்தரவாதம் கொடுத்தான். "நசிகேதா! பொன்னும் மண்ணும் அரசும் ஆயுளும் தந்தேன் அல்லவா? அவற்றைக் கொண்டு உலக வாழ்வை அனுபவி. அவற்றைவிடச் சிறப்பான சொர்க்க வாழ்வையும் தருகிறேன்" என்றான்.

    'செய்த பாவங்கள் எல்லாம் தீரும்' என்று வரமளித்தானே, ஏன்? நசிகேதன் சிறுபிள்ளை, என்ன பாவம் செய்திருக்கக் கூடும்? அல்லது செய்யக்கூடும்? பொன், மண், செல்வம், நீண்ட ஆயுள், இவற்றுக்கு மேலாக மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதாகச் சொன்னான். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் மனிதன் தீய வழியில் செல்லக்கூடும். நசிகேதன் மனிதப் பிறவிக்குத் திரும்பியதும், பெற்ற சலுகைகளைக் கொண்டு வாழ்வைச் சுவைக்கும் சபலம் வந்தால், 'பாவ புண்ணிய சொர்க்க நரகம்' பற்றிக் குழம்பாமல் இருக்க எமன், "பாவங்களைப் போக்கிப் பேர் தருவேன்" என்றான். அத்தனை சலுகைகளையும் முன்வைத்தான்.

    'ஒருவேளை, இந்தப் பிள்ளை அறிவாளியென்பதால் அறிவைப் பிடித்துக் கொண்டு அலைகிறதோ?' என்று இன்னும் சந்தேகப்பட்ட எமன், 'சொர்க்கத்துக்கு மேல் இன்னொன்றையும் சொல்லி வைப்போம்' என்று எண்ணி, "ஐயா, உனக்கு நுண்மையான அறிவுதானே வேண்டும்? மரணத்தைப் போலவே நுட்பமான தத்துவம் இன்னொன்றைக் கேள், சொல்கிறேன்" என்றான்.

    தானங்களை அள்ளி வழங்கிய எமன், "தயவுசெய்து மரண உண்மையை மட்டும் கேட்காதே" என்றபடி நசிகேதனைப் பார்த்தான்.

2011/03/04

நீண்ட ஆயுள் கேள் என்றான் எமன்


31
பிரிதோர் வரங்கேட்டால் பூணிகாணிப் பேரும்
அரிதோர் அரசுந் தருவேன் - உரிமையுடன்
சிந்தையில் நாடிய சித்திரையும் நூறாண்டுச்
சந்ததியும் சீருறக் கேள்.

    மாற்று வரம் கேட்டால் உனக்கு நிலம், கால்நடை, பொருட்செல்வம் மற்றும் கிடைப்பதற்கு அரிதான அரச பதவியும் தருவேன்; உன் மனம் நிறையும் வண்ணம் நீண்ட ஆயுளையும், உன் சந்ததிகள் நூறாண்டுகள் சீரும் சிறப்புமாக வாழவும், உரிமையோடு வரம் கேள் (என்றான் எமன்).

பூணி: கால்நடை
காணி: நிலம்
பேர்: செல்வம்
சித்திரை: தமிழ் வருட முதல் மாதம். 'சிந்தையில் நாடிய சித்திரை' என்பதற்கு எத்தனை புத்தாண்டுகள் வாழ விருப்பமோ என்று பொருள்



    ரண்டாவது மாணவனுக்கு லாட்டரிச்சீட்டிலும் விளையாட்டிலும் கவனம் திரும்பக் காரணம் என்ன? முதல் மாணவனுக்கும் சலன வாய்ப்புகள் இருந்தனவே? அவன் ஏன் கல்வியறிவுக்கான இலக்கிலிருந்து விலகவில்லை? தவறு-சரி என்ற தீர்வுப் பார்வையை ஒதுக்கிப் பார்த்தால், மனித இயல்பு எனும் நோக்கில், இரண்டு மாணவர்களின் தேர்வுகளுக்கும் விளக்கமே தேவையில்லை. தேடுவது மனித இயல்பு என்றாலும், தேடியது கிடைதத நிறைவும் நிம்மதியும் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. 'என்ன தேடுகிறோம்?' என்பதே பலருக்குச் சாகும் வரை தெரிவதில்லை. பெரும்பாலானோருக்குப் பாதையே பயணமென்ற எண்ணம்; பயணமே சேருமிடம் என்ற மயக்கம். வழிகளும் செயல்களும் புரியாமலே, இலக்கு என்ற எண்ணத்தை மட்டும் விரும்புவதால் வரும் வினை எனலாம். விசுவாமித்திரன் மேனகை காலத்திலிருந்து, அதற்கும் முன்னால் (?) சிவன்-பார்வதி-மன்மதன்-சிவராத்திரி காலத்திலிருந்து, இந்த இலக்கு-விலக்கு போக்கிற்கான உதாரணங்களைப் பார்க்கலாம்.

    wandering mind, wavering mind, restless mind எனும் மூன்று நிலைகளுக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. 'அலைபாயும்' என்று, தமிழில் எல்லாவற்றையும் பொதுவான குடையில் கொண்டு வர விரும்பவில்லை, அதனால் ஆங்கில வழக்கையே பயன்படுத்தியிருக்கிறேன்; என் தமிழறிவில் குறை, மன்னிக்கவும். wandering mind கொண்டவர்கள் நிம்மதியும் சந்தோஷமும் பெறுவதில்லை என்று உளவியல் மற்றும் உடல்நல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. wavering mind கொண்டவர்கள் தத்துவக் கடல்களில் முத்துக் குளிக்கிறார்கள், அல்லது சோர்ந்து போகிறார்கள். restless mind தனிக்கதை. restless mindக்கு edge உண்டு. restless mind கொண்டவர்களுக்கு ஒரு தீவிரம் உண்டு. அந்தத் தீவிரத்தை, இலக்கை நோக்கிச் செலுத்த முனையும் பொழுது ஏற்படும் இடையூறுகள், சலனங்கள் பல நேரம் அவர்களைத் தடம் மாறச் செய்கின்றன. சிலர் மட்டுமே அந்தத் தீவிரத்தைத் தக்க வைத்துக் கொண்டு தடம் புரளாமல், சாதனை மைல்கல்களைத் தாண்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஐன்ஸ்டைன், காந்தி, தெரசா, கேட்ஸ், சமீப CNN புகழ் நாராயணன் க்ருஷ்ணன்.. என்று பலர் இப்படி மனப்பாலம் கட்டிச் சாதனைக் கடல்களைத் தாண்டியிருக்கிறார்கள். பல venture capital, private equity நிறுவனங்கள், தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களில் தலைமைக்குழுவின் 'restlessness quotient' அறிவதை விரும்புவார்கள் (குறிப்பாக founder, CEO போன்றவர்களின் RQ). மிலிடெரி அமைப்புகளின் தலைமையிலும் RQவை அளவிடுவதாகப் படித்திருக்கிறேன்.
    • wandering mind உள்ளவர்கள் இலக்கையே அறியாதவர்கள்; எடுப்பார் கைப்பிள்ளையின் மோசமான உதாரணம். இன்னது இலக்கு என்று கணத்துக்குக் கணம் நிலைமாறி அலைபாய்ந்து சோகத்திலேயே சோர்விலேயே வாழ்க்கையைக் கழிக்கும் அபாயத்தில் இருப்பவர்கள்
    • wavering mind உள்ளவர்கள் எளிமையானவர்கள். சராசரி மனிதம். இலக்கு தெரிந்தாலும் சுலபமாக மறந்தோ விலகியோ போகக் கூடியவர்கள். நம்மில் பெரும்பாலோர் இந்த வகையினர் என்கிறார்கள்
    • restless mind உள்ளவர்கள் இலக்கை மனதில் நிறுத்திச் சாதிக்கத் துடிப்பவர்கள். restless stateஐப் புடமிடலாம்; restless mind உள்ளவர்கள் தங்கச் சுரங்கம்.

    எத்தகைய மனநிலை பெற வேண்டும்? மூவகை மனநிலைகளும் ஒன்றுக்கொன்று சுலபமாக பின்னக்கூடியவை என்றாலும், எனக்கென்னவோ wavering கொஞ்சம் restless கொஞ்சம் கலந்தால் சுவையான வாழ்க்கை அமையும் என்று படுகிறது.

    நசிகேதன் கொண்டது எத்தகைய மனநிலை என்று எமன் சோதித்தானோ?

    ண்மையில், தன் பெருமை அழியும் நிலைக்குத் தானே காரணமாகிவிட்டதை உணர்ந்தான் எமன். தீவிரமாகச் சிந்தித்து, நசிகேதனிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினான். நயம், கொடை, அச்சம், ஒறுப்பு எனும் நான்கு முறைகளையும் கையாண்டு நசிகேதனின் மனதை மாற்றத் தீர்மானித்து, முதலில் நயத்தோடு தொடங்கினான்; பலனில்லாமல் போகவே, கொடைக்கு மாறினான்.

    பூமியிலிருந்து வந்த பிள்ளை மனித இனத்தைச் சார்ந்தவன் தானே? மனிதருக்கு இருக்கும் ஒரு பெரிய குறை, ஆசை அல்லவா? ஆசையின் காரணமாக விளையும் சபலம் தான் மனிதனின் மிகக்கொடிய பலவீனம். மன உறுதிச் சங்கிலியை உடைத்தெறியும் உளியல்லவா சபலம்? உளியைத் தாக்கும் சம்மட்டியல்லவா ஆசை? எமன் உளியையும் சம்மட்டியையும் எடுத்து, நசிகேதனின் மன உறுதியை உடைத்தெறிய முயற்சி செய்தான்.

    தேர்தல் நேர வேட்பாளர் போல் எமன் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினான். பொன்னைத் தருவேன் என்றான். மண்ணைத் தருவேன் என்றான். மாநிலத்து அரசனாக்குவேன் என்றான். கால்நடைச் சொத்துக்களைப் பெருக்குவேன் என்றான். இவற்றையெல்லாம் அனுபவிக்க பெரிய குடுமபம் வேண்டாமா? அதனால் சந்ததிகளை நூறாண்டு வாழ வைப்பேன் என்றான். நூறாண்டுகள் வாழ்ந்தால் போதுமா, வசதிகளை அனுபவிக்க வேண்டாமா? அதனால் அவர்கள் சிறப்பாக வாழ வழி செய்வேன் என்றான். இவற்றால் நசிகேதனுக்கு என்ன பயன்? அவனும் அனுபவிக்க வேண்டாமா? நசிகேதனை நூறாண்டு வாழ வைப்பதாகச் சொல்லவில்லை; ஒரு படி மேலே சென்றான். சித்திரை, தமிழாண்டின் முதல் திங்கள். நசிகேதனிடம், "ஐயா, நீ எத்தனை சித்திரைகள் வாழ நினைக்கிறாயோ, அத்தனை புத்தாண்டுகள் வாழ்வாயாக" என்றான். "காலத்தை நில் என்று சொல்லும் மாயத்தைக் கற்றுத் தருகிறேன்" என்றான்.

    எல்லாம் எதற்காக? ஒரே ஒரு ஓட்டுக்காக. பலவீனக் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டினான். வாரி வழங்கிய வள்ளல் போட்டது, ஒரே ஒரு நிபந்தனை தான்: 'மன உறுதிச் சங்கிலியை மட்டும் உடைத்துக் கொடுத்து விடு' என்பதே! "பிரிதொரு வரம் கேள், பொன்னும் பொருளும் பல்லாண்டு வாழ்வும் தருகிறேன்" என்றான். நசிகேதன் கேட்டுக் கொண்டிருந்தான்.

2011/03/01

வரம் மாற்ற மறுத்தான் நசிகேதன்


30
நொய்வதல்லா உண்மை உயிர்ப்பயணம் நாளறியார்
எய்தவல்லா ஏற்றமென்றீர் மெய்விரதா - மெய்யறிவில்
முன்வரம் நீர்தானே? மூவாசான் நீர்தானே?
என்வரம் மாற்றுவ தேன்?

    வாய்மையை விரதமாகக் கொண்டவரே! எளிதில் விளங்கா நுட்பமென்றும், காலத்தை வென்றவர்களும் பெற முடியாத அறிவென்றும் உயிரின் பயணம் பற்றிச் சொன்னீர்கள். உண்மையான அறிவு இல்லையென்றால் நான் முன்பு பெற்ற வரங்கள், நீர் போல் மறையக் கூடியவை அல்லவா? நீங்கள் தானே மெய்யறிவை மூவகையிலும் பெறச்செய்யும் ஆசான்? நான் கேட்ட வரத்தை மாற்றலாகுமா? (என்றான் நசிகேதன்).

நொய்வது: எளிதாவது
நாளறியார்: காலம் ஒரு பொருட்டல்லாதவர், தேவர்
மெய்விரதன்: எமன்
மெய்யறிவில்: மெய்+அறிவு+இல் எனப்பிரித்தால் 'உண்மையான அறிவற்ற' என்றும், மெய்+அறிவில் எனப்பிரித்தால் 'உண்மையான அறிவுடைய' என்றும் பொருள்
முன்வரம்: முன்பு பெற்ற வரம்
மூவாசான்: அறிவு பெறக்கூடிய மூன்று வகையினையும் காட்டும் ஆசிரியன்
நீர்தானே: 'தண்ணீர் தானே' என்றும், 'நீங்கள் தானே' என்றும் பொருள் கொள்ளலாம்



    றிவை மூவகையில் பெறலாம். தெரிந்து, புரிந்து, அறிந்து கொள்வது அறிவு. தெரியாத ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது, தெரிய வைப்பதாகும். தெரிந்ததைப் பிழை திருத்திச் சீர்படுத்துவது, புரிய வைப்பதாகும். புரிந்ததைக் கொண்டுச் சுயமேம்பாட்டைத் தேட வைப்பதும், பலநேரம் தெரியாமலே புரிய வைப்பதும், அறிய வைப்பதாகும். பார்த்தால் தெரியும்; பழகினால் புரியும்; உணர்ந்தால் அறியும். எல்லா மாணவர்களும் மூவகையிலும் அறிவைப் பெற இயலாமல் போகலாம். மூவகையிலும் அறிவைப் பெறத்தக்க மாணவனை நல்லாசிரியன் அடையாளம் கண்டு மெருகேற்ற வேண்டும்; தவறினால் நல்லாசிரியக் கடமையிலிருந்து தவறியதாகும். தவறிய நல்லாசிரியர்களுக்கு மன நிறைவு கிடைப்பதில்லை.

    ஏழும் மூன்றும் பத்து என்பது தெரிதல். மூன்று ரூபாய்ப் பொருள் வாங்க கடைக்காரரிடம் கொடுத்த பத்து ரூபாயில், மிச்ச சில்லறையென்று அவர் ஐந்து ரூபாயைக் கொடுக்கும் போது, "ஏழு ரூபாய் அல்லவா பாக்கி தர வேண்டும்?" என்று சொல்ல வைப்பது புரிதல். 'சம்பளம் பத்து ரூபாய், சேமித்தது மூன்று போக ஏழு ரூபாய் மட்டுமே செலவழிக்க வேண்டும்' என்று கட்டுப்பாட்டுக்கான வழி காட்டுவது அறிதல். அறிவு மட்டுமே மனநிம்மதியைக் கொடுக்கும். அறிவால் மட்டுமே எதையும் கட்ட முடியும். பத்து ரூபாய் செலவுக்கே இப்படியென்றால், வாழ்க்கையின் கணக்கைச் சரிகட்டி நிம்மதியைச் சேர்க்க அறிவு வேண்டாமா? (இந்த அறிவு எனக்கில்லை என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்).

    வாழ்வில் நிம்மதியைக் கொடுக்க வல்ல எந்த நெறிக்கும் மேற்சொன்ன மூவகை அறிதலைப் பொருத்திப் பார்க்கலாம். செயல்களின் விளைவுகளைத் தெரியாமலே, புரியாமலே, அறிந்து கொள்ளும் பாங்கு மனிதருக்கு மட்டுமே உண்டு. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

    ஒரு கதை.

    இரண்டு ஆசிரியர்கள். நான்காம் வகுப்பில் கணிதம் சொல்லித் தருகிறார்கள். சதவிகிதம் பற்றிய பாடம். 'சதவிகிதம் என்றால் என்ன?' என்று முதலில் சொல்லிக் கொடுக்கிறார்கள். 'நூறு என்ற மொத்தத்தின் அடிப்படையில், நூறு வரையிலான எண்களை வைத்து, மொத்தத்தின் பகுதிகளை அளக்க சதவிகிதம் ஒரு முறை' என்று தெரியச் சொல்லிக் கொடுக்கிறார்கள். "அப்படியென்றால்?" என்கிறாள் ஒரு மாணவி. "அப்படியென்றால், அப்படித்தான்" என்று ஒரு ஆசிரியர் சொல்கிறார். இன்னொரு ஆசிரியர், "நூறு என்பது முழுமையான பகுதி. இதோ உன் கையில் நான் கொடுக்கும் தித்திப்பான லட்டைப் போல். இந்த முழுப் பகுதியில் நூறு சிறு பகுதிகள் இருக்கின்றன, இந்த லட்டில் இருக்கும் நூறு பூந்திப் பந்துகள் போல். இந்த லட்டைப் பத்தாகப் பிரித்தால் பத்து பூந்திகள் கொண்ட சிறு பந்துகளாகப் பிரிக்கலாம். அல்லது, இந்த லட்டை இரண்டாக உடைத்து ஒரு பாதியை உன்னிடம் கொடுத்தால், என்னிடம் எத்தனை பூந்திகள் உள்ளன என்று நீ கண்டுபிடிக்கலாம். அல்லது லட்டின் பூந்திகளை வகுப்பில் இருப்பவருக்கெல்லாம் பிரித்துக் கொடுத்தால் முழு லட்டின் பகுதி ஒவ்வொருவரிடமும் இருப்பதை அளந்து பார்க்கலாம். முழு அளவு நூறை விட அதிகமாகாது என்றும் தெரிந்து கொள்ளலாம்" என்று, உதாரணங்களுடன் பிழை திருத்திப் புரியச் சொல்லிக் கொடுக்கிறார். "இதைப் புரிந்து கொள்வதால் என்ன பயன்?" என்கிறாள் அந்த மாணவி. "நீ ஐந்தாம் வகுப்பு போவதற்கு இதை அறிய வேண்டும்" என்று முதல் ஆசிரியர் பதில் சொல்கிறார். இரண்டாவது ஆசிரியர் புன்னகைக்கிறார்.

    முப்பது வருடங்கள் ஓடுகின்றன.

    ஆசிரியர் தின விழாவில் இந்திரா நூயி பேசுகிறார்: "இன்றைக்கு நான் உலகத்தின் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவியாக இருப்பதற்கு ஒரு காரணம், நான்காம் வகுப்பில் எனக்கு அறிவு வழங்கிய ஆசிரியனல்லவா? அந்த ஆசிரியன் அறிய வைத்ததால் தானே இன்றைக்கு என் நிறுவனத்தின் வளத்தையும், செயல்திறனையும், வளர்ச்சியையும், தேவையையும் ஒரு முழு அளவின் அடிப்படையில் திட்டமிட்டு அளந்து செயலாற்ற முடிகிறது?"

    இரண்டு ஆசிரியர்களுமே தங்கள் தொழிலைச் செய்தார்கள். ஒருவர் மட்டுமே கடமையைச் செய்தார். வளர்ந்து மேம்பட்ட அந்த மாணவி, தன் மேன்மைக்கு ஒரு காரணமாக ஆசிரியனை நன்றியுடன் நினைக்குமளவுக்கு, ஒரு ஆசிரியர் மட்டுமே அறியும் அறிவை அவளுக்கு வழங்கினார். அதுவே நல்லாசிரியரின் இலக்கணம். அந்த மாணவியும் நல்லாசிரியரை நாடியது இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அதுவே நல்ல மாணவரின் இலக்கணம்.

    சாதாரணக் கணிதத்துக்கே இப்படி என்றால், மரணத்தின் தன்மையறிய, நுட்பமறிய, மூவாசான் தானே தேவை? மரணமடைந்தவர்கள் போகுமிடமாகச் சொல்லப்படும் எமனுலகின் அதிபதியிடம் பெறாமல், இந்த அறிவை எவரிடம் பெறுவது? அதனால், "மூவாசான் நீங்கள் தானே?" என்றான். நசிகேதனின் மன உறுதியை எடுத்துக் காட்டும் ஒரு பாடல் இது. அறியாமையைப் போக்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட மாணவன் அல்லவா? 'வேறு வரம் கேள்' என்ற எமனின் கோரிக்கையை ஏற்க மறுத்தான்.

    அறிவுள்ள பிள்ளையல்லவா, முன் கேட்ட வரங்களை ஒரு முறை நினைத்துப் பார்த்தான்: 'முதல் வரத்தால் தந்தை மனம் சீர்பட்டு என் மேல் அன்பு காட்டும்படி செய்தேன். அது நிலையானதா? தந்தை உயிருள்ள வரை நிலைக்கும். பிறகு, அந்த வரத்தால் பயனில்லை. இரண்டாவது வரத்தால் சொர்க்கத்துக்குச் செல்லும் வழியைத் தெரிந்து கொண்டேன். அது நிலையானதா? மனதை ஒரு நிலைப்படுத்தி உள்ளிருக்கும் தீயை வளர்த்து நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தாலும், இறந்த பிறகு என்ன ஆகுமென்று யாருக்குத் தெரியும்? உயிர்ப்பயணம் பற்றித் தெரியாதே? உடனே சொர்க்கம் செல்வோமா? சொர்க்கமே சென்றாலும், அது நிலையானதா? நற்பயனுக்கான நேரம் முடிந்ததும், மறுபடியும் விதை பயிராகி விதையான கதை தானே? பயனுள்ள வரமென்று நினைத்து இரண்டாவது வரத்தைக் கேட்டேன், அதுவும் நிலையில்லை என்பது புரிந்து விட்டது'.

    நசிகேதன், தான் கேட்ட வரங்களிலிருந்தே தன் அறிவை வளர்த்தான். எமனிடம், "ஐயா, நீங்கள் முன்பளித்த வரங்களின் பலன்கள் நீரைப் போன்றது. இன்று பெருகி ஓடும், நாளை வற்றி விடும். நிலையில்லாதவை" என்றான். "மேலும் மரணத்தைப் பற்றிய உண்மை மிக நுட்பமானது, புரிந்து கொள்ள நாளாகும், என்றைக்கும் இளமையைப் பெற்றிருக்கும் தேவர்களுக்குக் கூடப் புரியாதது என்றெல்லாம் சொல்லிவிட்டு, வேறு வரம் கேள் என்று சொல்கிறீர்களே?" என்றான். "என்னய்யா கிண்டலா? இப்படி ஆசை காட்டி மோசம் செய்யலாமா?" என்று கேட்கவில்லை; பண்புடையவன். "நிலையற்ற பலனுடைய வரங்களை விட, என் காலத்துக்குப் பின்னும் என்றைக்கும் நிலைக்கும் அறிவையே பெற விரும்புகிறேன். அறிவை வழங்க உங்களை விடச் சிறந்தவரை அறியேன். வேறு வரம் வேண்டாம்" என்று தன் மன உறுதியை வெளிப்படுத்தினான் நசிகேதன். வெள்ளத்தால் போகாத, வெந்தணலால் வேகாத, கொடுத்தாலும் குறையாத அறிவை, கல்வியை, பெற விரும்பிய நசிகேதன் வேறு வரம் தேவையில்லை என்பதைப் பணிவாகச் சொன்னான்.

    புகழ்ச்சிக்கு யார் மயங்குவதில்லை? எமன் விதிவிலக்கா? 'மூவாசான் நீர்தானே' என்றது எமனைப் புகழ்வதற்கு எனினும், 'மெய்விரதா' என்றழைத்தான் நசிகேதன். அறத்தை விரதமாக, நெறியாகக் கொண்டதாகக் கருதப்படும் எமன், அரிச்சந்திரன், தருமன், பீஷ்மன் நால்வரையும் 'மெய்விரதன்' என்று அழைப்பார்கள். இவர்களில் அரிச்சந்திரனும் தருமனும் பீஷ்மனும் கணமாவது அறத்தை, நல்லொழுக்கத்தை, கைவிட்டவர்கள் (விவரங்களை ராமாயண மகாபாரதப் புராணங்களில் காணலாம்). எமன் மட்டுமே அறத்தைக் கணங்கூடக் கைவிடாதவன். அந்த விரதம், வாழ்க்கை நெறி நிலைக்கவேண்டி 'எம்பெருமை ஈனாதருள்' என்று பழிக்கஞ்சி வேண்டினான்.

    'அறத்தை விரதமாகக் கொண்டவரே, என்ன புரட்டப் பார்க்கிறீர்?' என்று மறைமுகமாகச் சொன்னான் நசிகேதன். எமன் தன்னிடம் வகையாகச் சிக்கினான் என்பது நசிகேதனுக்குப் புரிந்திருந்தது.