வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/10/28

எழுந்திரு! விழித்திரு!


71
எழுந்திரு என்றும் விழித்திரு வாளின்
வெழுமுனை யன்னதுன் வாழ்வு - கழுந்தராய்
ஊழ்வினை என்று உழலாதே உத்தமர்போல்
வாழ்வினை நன்றென வாழ்.

   ழுந்திரு! என்றைக்கும் விழிப்புடன் இரு! பளபளக்கும் வாளின் முனையைப் போன்றது உம் மனித வாழ்வு. அறிவு மழுங்கியவர்களைப் போல விதியை நம்பி வீணாகாதே. நன்னெறிகளைப் பேணும் மேன்மையானவர்களைப் போல் சிறப்பாக வாழ்வாயாக! (என்றான் எமன்).


வெழு: பளபளக்கும், சீரான
கழுந்தராய்: அறிவு மழுங்கியவர் போல், சிந்திக்க இயலாதவர் போல்
ஊழ்வினை: விதியின் செயல், பிறவிச் செயல்களின் பலன், தலையெழுத்து


    துயிலெழ மணியடிக்கிறார்கள். துயிலவும் மணியடிக்கிறார்கள். பிறந்தால் மணி. இறந்தாலும் மணி. ஓட மணி. நிற்க மணி. சாப்பிட மணி. உயிரோடும் பசியோடும் உலவும் நம்முடைய சாப்பாட்டுக்கு மணியடிக்கிறார்கள் என்றால், சிலைகளுக்கும் மணியடித்து பழத்திலிருந்து பண்டம் பானம் வரை பாசாங்கு விருந்தோம்பலுக்கும் மணியடிக்கிறார்கள். ஏதேதோ காரணங்களுக்காக, பல நேரம் காரணமே இல்லாமலும், மணியடிக்கிறார்கள். மணியடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அடிக்கும் மணிக்கு ஒரு கோவில் கட்டி, அதற்கும் மணி அடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

எதற்காக?

வேடிக்கைப் பார்வையை ஒதுக்கிவிட்டுச் சிந்தித்தால், மணியோசை போல ஒன்று நம் இயக்கத்துக்குச் சில நேரம் தேவையாக இருக்கிறது. ஒரு துவக்கம் அல்லது நிறுத்தத்திற்கான அடையாளமாகப் பயன்படுகிறது. நம் கவனங்களை ஒருமுகப்படுத்த இந்த அடையாளம் தேவைப்படுகிறது. விழிப்பை ஏற்படுத்த இது ஒரு புறவிசை. உணர்வை ஒருமுகப்படுத்த ஒரு புறவிசை.

அது இல்லாமல் விழிப்பு வருமா? எழுச்சி வருமா? ஒருமுகம் வருமா?

அலாரம் வைத்துத் தூங்குகிறோம். அலாரம் இல்லாமலே விழிப்பு வரும் என்றாலும் ஒரு வேளை தூங்கிவிடுவோமோ என்று அஞ்சுகிறோம். தாமதமாக விழித்துவிட்டு அலாரத்தின் மீது பழியும் போடுகிறோம். அல்லது எழ நேர்ந்த ஆத்திரத்தில் அலாரத்தின் மண்டையிலேயே ஒன்று போட்டு ஒடுக்கித் தொடர்ந்து கண்மூடுகிறோம்.

முரணென்றாலும் இது பெரும்பாலும் மனித இயல்பே. புறவிசையில்லாது நாம் இயங்குவது கடினம். ஏதோ ஒரு அடையாளம் அல்லது அழைப்பு தேவைப்படுகிறது. நம்முடைய தினசரி வாழ்வின் சிக்கல்களின் இடையில் நம்மை ஒரு நிலையில் செலுத்த இத்தகைய அடையாளங்கள் அவசியம் தான். எனினும், அந்த அடையாளம் நம்மை அழைக்கும் பொழுது, அதற்கேற்ப கவனத்தைத் திருப்பி முனைப்போடு செயல்படுகிறோமா?

புலன் தொட்ட வெளிப்பாடுகளுக்கே இப்படியென்றால், அக விழிப்புக்கு அடையாளம் வேண்டாமா? வேண்டும். அகவிழிப்புக்கான மணியோசை இருக்கிறதா? இருக்கிறது.

அதன் பெயர் தன்னறிவு.

    [இந்தப் பாடல், கடோவின் சிறந்த பாடல்களுள் ஒன்று. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் விதம் விதமான சிந்தனைகளைத் தூண்டும் பாடல். அடிப்படை விழிப்புணர்வை மிக அருமையாகத் தேவைப்படுத்திச் சொல்கிறது. உபரி விவரம்: வடமொழிப் பாடலின் முதல் வரிகளை விவேகானந்தர் தன்னுடைய இயக்கத்தின் அழைப்பாக அமைத்துக் கொண்டார். வடமொழிப் பாடலை மாற்றாமல், சற்றே மேம்படுத்திச் சொல்ல முயன்றிருக்கிறேன்.]

    "நசிகேதா! நீ விரும்பியவாறே உனக்கு மெய்யறிவைப் பற்றிய விளக்கத்தையும் அதைப் பெறும் வழிமுறைகளையும் சொன்னேன். இனி நீ பெற வேண்டிய அறிவு என்னிடம் எதுவும் இல்லை. நான் சொன்னது அனைத்தையும் புரிந்து கொண்டாயா?" என்று கேட்டான் எமன்.

"ஆம், ஐயா! பிறப்பிறப்பு உயிர்ப்பயணம் மற்றும் சொர்க்க நரக அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன், நன்றி. கண்மூடித்தனங்களைப் பற்றிப் புரிந்து கொண்டேன், நன்றி. முனைப்புடன் தன்னறிவைப் பெற வேண்டிய அவசியத்தையும் அறிந்து கொண்டேன், நன்றி" என்றான் நசிகேதன்.

"நன்று நசிகேதா! இனி உனக்குச் சொல்ல வேண்டியவை சொற்பமே! பெற்ற அறிவைப் பேணுவதும் பயன்படுத்துவதுமே நல்ல மாணவனுக்கு அழகு. பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவரையும் மேம்படுத்துவதே நல்ல மாணவன் தன் ஆசிரியனுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும். தான் பெற்றை அறிவை, தனக்குப் பிறகும் தொடர்ந்து பரவச் செய்வதே நல்ல மாணவன் தான் பெற்ற அறிவுக்குச் செய்யும் மேம்பாடாகும்" என்றான் எமன். "நசிகேதா! என் அருமை மாணவனே! அகத் துயிலினின்று எழுந்திரு! என்றைக்கும் விழிப்போடு செயல்படு! கண்மூடச் செய்யும் காவிகளைக் கண்டறிந்து ஒதுக்கு. கண்மூடுவதால் கிடைக்கும் எந்தப் பலனையும் ஏற்காதே! விழிப்போடு இரு!".

"நல்லது ஐயா"

"நீ இளவரசன் தானே? வாள் அறிவாய் அல்லவா?"

"அறிவேன். வாளின் பளபளப்பும் சீரான அமைப்பும் கூர்முனையும் என்னை மிகவும் கவர்ந்தவை"

"நசிகேதா! அரசனுக்கு வாளைப் பிடிக்கத் தெரிய வேண்டும். அரசன் வாளினால் போரிட வேண்டியதில்லை. யாரையும் வெட்டித் துண்டு போட வேண்டியதில்லை. ஆனால் அரசனிடம் வாளிருபப்து தெரிந்தால் எல்லாருமே அடங்கி அமைதியாக நடக்கிறார்கள் அல்லவா?"

"ஆமாம்"

"மனிதர்கள் எல்லாருமே அரசர்கள் தான். அவர்களிடம் தன்னறிவு என்ற வாளிருக்கிறது. அதைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. பயன்படுத்தாவிட்டாலும், தன்னறிவு இருப்பது தெரிந்தாலே தீக்குணங்கள் தலைபணிந்து விலகும்"

"புரிகிறது ஐயா"

"இன்னொரு விதத்திலும் சொல்கிறேன் கேள். வாளின் கூர்முனையைப் போன்றது மனிதரின் வாழ்வு. உம்மக்கள் என்று அடிக்கடிச் சொல்கிறாயே, அவர்களின் தினசரி வாழ்க்கை கத்தி முனையில் நடப்பது போன்றதாகும். எதையும் அதிகமாக நுகரத்துணியும் பொழுது அதுவே ஆபத்தாகி விடுகிறது. கத்தி முனையில் அழுந்தி நடப்பதற்கு ஒப்பாகிவிடுகிறது. நன்னெறிகளை மறவாமல் பற்றறுத்து வாழ்வது, கத்தி முனையில் நடந்து முடிப்பதற்கு ஒப்பாகிறது. தன்னறிவு எனும் விசை, கத்திமுனையை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. மனிதகுலம் அதை மறவாமல் வாழவேண்டும்"

"உண்மை எமனாரே!"

"நசிகேதா, மேலும் கேள். இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று தம்மைப் போல் அறிவற்றவரையோ, எல்லாம் அறிந்தவர் போல் போலிப் பகட்டுடன் திரிவோரையோ, முன்வினை பாவம் புண்ணியம் பரிகாரம் என்று பலவாறு சொல்லி ஏய்ப்பவரையோ, பேரான்மாவெனும் மகத்தான மனிதசக்தியைப் போன்றோ அல்லது அதைவிட மேலான சக்தி உண்டென்றோ சொல்லி அதையறியச் சடங்குகளை உண்டாக்கித் திரியும் சதிகாரரையோ... நம்பாதே! அவ்வாறு நம்புவது, அறிவு மழுங்கிய கண்மூடிகளின் செயலாகும். உறங்குவோரை விழிக்கச் செய்யலாம்; கண்மூடிகளை விழிக்கச் செய்வது இயலாது. உழல்வது அவர்களின் வாடிக்கை. அவர்களைப் போல் உழலாமல், நீ விழிப்போடு வாழ வேண்டும். கண்மூடிகளை நான் கவனித்துக் கொள்கிறேன், இறுதியில் என்னிடம் தானே வரப்போகிறார்கள்?"

"நான் என்ன செய்ய வேண்டும், நமனாரே?"

"வாழ்வை நேரான முறையில் சிறப்பாக வாழ்ந்து முடி. எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்தவனாக இரு. வாழும் நாளிலே சிறப்பெய்த, தன்னறிவைத் தேடிப் பெறு. உம்மக்களையும் உய்யச் செய்"

"அப்படியே செய்வேன், ஆசானே" என்றான் நசிகேதன். "எனக்கு விடை கொடுங்கள்".

"பொறு" என்ற எமன், புன்னகைத்தான்.

2011/10/21

சொர்க்க வேள்வி


70
பேரான்மா பேரின்ப மாகும் பிறப்பிறப்பின்
தீராதத் தீர்வாம் பெருஞ்சக்தி - சீராகத்
தன்னை அறிவதே வேள்வி தவறுமுயிர்
என்னை அறியும் அடுத்து.

   ன்னையறிந்த ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா, பெரும் சக்தியாகும். அதுவே சொர்க்கமாகும். தீராதப் பிறப்பு இறப்புச் சுழலின் தீர்வும் அதுவே. முறையாகத் தன்னறிவைப் பெறுவதே அச்சொர்க்கத்துக்கான வேள்வியாகும். அவ்வேள்வியைப் புரியாமல், தன்னறிவைப் பெற்று நடக்கத் தவறும் உயிர்கள் என்னை அறிந்து கொள்கின்றன (என்றான் எமன்).



    காணாத காட்சி, பாடாத பாட்டு, பேசாத மொழி எனும் தொடர்களைக் கேட்டிருக்கிறோம். கண்டால்தானே காட்சி? பின், காணாத காட்சி என்பானேன்? பேசாத மொழியினால் யாதொரு பலனுமுண்டா? இப்படி எதிர்மறையாகச் சொல்வதேன்? ஏதாவது சூனியப் பொருளுண்டா?

பிரமாத சூனியமோ சூட்சுமமோ எதுவும் இல்லை. காட்சியை காணவும் முடியும். உணரவும் முடியும். மொழியைக் கேட்கவும் முடியும். உணரவும் முடியும்.

உதாரணமாக, கனவென்பது கண்ட காட்சியா? காணாத காட்சியா? கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் மனம் எங்கிருந்தோ எப்படியோ இணைப்புகளைத் தேடிக் கனவுகளில் வடிக்கிறதே? பிறவிக்குருடர்கள் கனவு காண முடியுமா? முடியும். அவர்கள் கனவில் காட்சி வருமா? வரும். ஒலிக்கனவுகளையும் உணர முடியும். குருடர்கள் விழித்திருக்கும் போதும் (!) உணரத்தானே செய்கிறார்கள்?

அஜாதசத்ரு-பாலாகி உரையாடல் நினைவிருக்கலாம். உறங்கும் மனிதன் காணும் 'காணாத காட்சி'யை மையமாக வைத்து அஜாதசத்ரு ஆன்மாவை விளக்கும் கதை. கதையில் கனவு காணும் பாமரனின் பிறவிகளை எடுத்துச் சொல்லி ஆன்மாவைப் பற்றிய அறிவை ஞானிக்கு வழங்குகிறான் அரசன்.

பேசாத மொழியைப் புரிந்து கொள்ளமுடியாதா? இன்னொருவர் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியுமென்றால், அங்கே உணர்வுக்கே இடமில்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்பது இதைத்தான். வார்த்தைகளில் வடித்தாலும் சிலர் மற்றவர் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில்லை என்பது வேறு விவாதம்.

இன்னொரு கண்ணோட்டமும் உண்டு.

கண்ட காட்சி மாறுவதில்லை (காட்சி மாறினாலும் கண்டது மாறுவதில்லை). காணாத காட்சி என்பது உணர்வை உள்ளிடுவதால் காணும் பொழுதே மாறும் இயல்பினது. ஒன்றைப் புரிந்துகொள்ள முனைந்து இன்னொன்றைப் புரிந்து கொள்வதில்லையா? அது போல. காணாத காட்சி, பேசாத மொழி இவை இன்னதென்று விவரிக்க இயலாத தன்மையன என்றும் கொள்ளலாம். ஒரு படிமத்துள் அடங்காதவை எனலாம்.

சொல்ல வந்தது இது தான்.

ஒன்று புறத்தெளிவுப் பாதை. இன்னொன்று அகத்தெளிவுப் பாதை. காணாத காட்சியைக் காணவும் பேசாத மொழியைப் புரிந்து கொள்ளவும் பக்குவம் வேண்டும். அதுவே அகத்தெளிவைத் தரும் பக்குவம். அறிவு முதிர்ச்சி, அகத்தெளிவில் வெளிப்படும். குணமும் பண்பும் அகத்தெளிவில் வெளிப்படுவன. காணாத காட்சிகளைக் காணும் திறனும் பேசாத மொழிகளைப் புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவர்களால் சுலபமாக அகத்தெளிவை நோக்கிப் பயணம் செய்ய முடிகிறது. எனினும், இது எல்லோரும் பெறக்கூடிய இயல்பே. முயற்சியும் பயிற்சியும் செய்தால் போதும். ஒருவேளை அங்கேதான் சிக்கலோ?

தீராதத் தீர்வும் அத்தகையதே. பிறப்பு இறப்பில் தீர்கிறது. இறப்பு பிறப்பில் தீர்கிறது. புரிந்தவர்கள் ஒன்றிலொன்றைப் பார்க்கிறார்கள். காணாத காட்சி. பேசாத மொழி.

    "நசிகேதா! சொர்க்கம், நரகம் இரண்டும் உண்மையே. உயிரானது சொர்க்கம் நரகம் இரண்டையும் அனுபவிக்க முடியும். உடலைச் சேர்ந்து இருக்கும் பொழுதும், உடலைப் பிரிந்த நிலையிலும் - இரண்டு நிலைகளிலுமே உயிரானது சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்றை அனுபவிக்க முடியும்" என்றான் எமன்.

"அதெப்படி?"

"சொர்க்கம், நரகம் என்றால் என்ன அறிவாயா?"

"அவை உயிர் சேரும் இடங்கள்"

"அப்படியா? உன்னிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். மனிதர்கள் நரக வேதனை என்கிறார்களே? அது என்ன?"

"கொடுமையான அனுபவங்கள், துன்பங்கள், வலிகளை நரக வேதனை என்று சொல்வது உண்டு"

"வேறு ஏதேனும் உண்டா?"

நசிகேதன் யோசித்தான். "அன்பு இல்லாத குடும்பங்களில் சிக்கியவர்கள், தங்கள் வாழ்வை தினசரி நரகம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்" என்றான்.

"அருமையாகக் கவனித்திருக்கிறாய். இதிலிருந்து என்ன விளங்குகிறது? நரகம் என்பது ஒரு அனுபவம். அது போல சொர்க்கம் என்பதும் ஒரு அனுபவம். எதிர்பார்த்த அளவுக்கு மேலான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடையும் பொழுது மனிதர்கள் அதை சொர்க்கானுபவம் என்று சொல்வதில்லையா?"

"ஆமாம்.. சில நேரம் சுவையான சாப்பாட்டை வயிறு நிரம்ப உண்டபின் சிலர் அப்படி சொல்லிக் கேட்டிருக்கிறேன்"

எமன் சிரித்தான். "வயிற்றை நிரப்பும் சாதாரணச் செய்கையைச் சொர்க்கம் என்றால், சொர்க்கத்தை எப்படி வகைப்படுத்துவது?"

நசிகேதனும் சேர்ந்து சிரித்தான். "எம்மக்கள் சிலர், 'சோறு கண்ட இடமே சொர்க்கம்' என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சாப்பாட்டைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் பொருட்டில்லை. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஏதோ ஒரு சடங்கையும் சாப்பாட்டையும் இணைத்து, வாழ்வில் பெரும்பாலான நாட்களை விதவிதமாக உண்டே கழிக்கிறார்கள்"

எமன் இன்னும் பலமாகச் சிரித்தான்.

நசிகேதன் மெள்ளப் பணிந்து, "உங்கள் கேள்வியின் மகத்துவம் புரிந்தது குருவே" என்றான்.

எமன் நசிகேதனைக் கனிவுடன் நோக்க, நசிகேதன் தொடர்ந்தான். "சொர்க்கம் நரகம் இரண்டுமே உண்மை தான். ஆனால் அவை இடங்களல்ல. இடமென்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முடியாதவை. ஆனால், அவற்றை அனுபவங்கள் என்றக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது தெள்ளத் தெளிவாகிறது. சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள்"

"பிரமாதம், நசிகேதா!" என்று எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்தான். "உண்மை! சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள். உயிரானது, உடலுடன் சேர்ந்த நேரங்களில் அனுபவிப்பதைப் போலவே உடலைப் பிரிந்த நேரத்திலும் சொர்க்க நரகத்தை அனுபவிக்கிறது. ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா என்பது மிகப்பெரும் சக்தி என்பதை அறிந்தாய். ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளும் பேரான்மாவுடன் இணைவதே. தன்னையறிந்த ஆன்மாவினால் பேரான்மாவுடன் இணைந்து மேலும் வளரமுடிகிறது. சிற்றலை பேரலையாவது போல. அதுவே ஏழாவது பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானை உருவாக முடியாதல்லவா? அதுவே பிறப்பற்ற நிலை. பேரான்மாவுடன் இணைந்த நிலையில் அதுவே சொர்க்கமாகிறது. ஒடுங்கிய சிற்றலை நீரில் வீழ்வது போல், தன்னறிவு பெறாத ஆன்மாக்கள் தடுமாறிச் சரிகின்றன. பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன. பேரான்மாவுடன் கலக்காத நிலையில் அதுவே நரகமாகிறது"

"சொர்க்கத்தை அடைவதற்கான வேள்வி என்றீர்களே, அது?"

"வேள்வியும் உண்மையே, நசிகேதா. வேள்வித் தீ பற்றி நான் சொன்னது நினைவிருக்கிறதா?"

"நன்றாக நினைவிருக்கிறது. அடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள் முடக்கவொரு மூச்சில் வரும் தீ என்றீர்கள். அதாவது அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கற்களை அடுக்கி, அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி என்று நீங்கள் சொன்னீர்கள். இப்போது நன்றாகப் புரிந்தது. அன்பு, அறம், அடக்கம், கருணை எனும் நான்கு குணங்களைக் கடைபிடித்துத் தன்னறிவைப் பெற்ற உயிரானது, உடலைச் சார்ந்த நிலையிலும் இனிய அனுபவமான சொர்க்கத்தைப் பெற முடியும். அதாவது உயிருடன் இருக்கும் பொழுதே வாழ்வைச் சொர்க்கமாக்க முடியும். உடலைப் பிரிந்த நிலையில், தன்னறிவின் சக்தியால் உந்தப்பட்டுப் பேரான்மாவுடன் கலக்க முடிகிறது. அந்நிலையிலும் சொர்க்க அனுபவத்தைப் பெற முடிகிறது"

"உன் நினைவுத்திறனை மெச்சுகிறேன்"

"தன்னறிவைப் பெறாத உயிர்களின் கதி?"

"அதற்குத்தானே நானிருக்கிறேன்? உடலோடு சேர்ந்த நிலையில் தங்கள் வாழ்வையும் பிறர் வாழ்வையும் பலர் நரகமாக்குகிறார்கள். உடலைப் பிரிந்த நிலையில் அத்தகைய உயிர்கள் பேரான்மாவுடன் சேரமுடியாது ஒடுங்கும் பொழுது, என்னை அறிந்து கொள்கின்றன. தன்னறிவு பெறாத உயிர்கள், பிறவிச்சுழலில் உடனடியாகச் சிக்கி மீண்டும் தன்னறிவு பெறும் முயற்சியில் இறங்க வேண்டும்"

"சொர்க்கம் செல்வதற்கான சடங்குகள்?"

"நசிகேதா. சொர்க்கம் நரகம் இரண்டுமே அனுபவங்கள் என்று அறிந்தபின் சடங்குகள் தேவையா என்பதை நீயே சிந்தித்து அறியலாமே?"

"நன்றாகத் தெரிந்து கொண்டேன். சடங்குகளால் ஆவதொன்றில்லை. எனினும் எம்மக்கள் சடங்குகளையும், சடங்குகளைத் தூண்டுவோரையும் நம்பி மோசமாவதைத் தடுக்க முடியாதா?"

"முடியும். தன்னறிவுக் கொள்கையைப் பரப்பி உணரச்செய்ய வேண்டும்" என்ற எமன் சற்றே சினந்தான். "சடங்குகளைத் தூண்டுவோருக்கு நிச்சயமாக நரகவேதனை காத்திருக்கிறது. அவர்களுக்காகவே என் வாசல் திறந்திருக்கிறது" என்றான்.

நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, மரணம் உயிர்ப்பயணம் சொர்க்கம் நரகம் என்று பலவற்றையும் விளக்கி, எனக்கு இந்த அறிவையளித்த உமக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? எதுவாகிலும் சொல்லுங்கள் ஆசானே! செய்து முடிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"தான் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்குவதே, நல்ல மாணவன் தன் ஆசிரியருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்" என்றான் எமன்.

2011/10/15

உயிரின் நிலையான இருப்பிடம்


69
வெய்யோன் வருகையும் வெண்சுடர் வாட்டமும்
மெய்யோ மருக்கமும் சிந்தனையோ - செய்யக்
கடல்நீர் மழையானால் கார்க்குமோ மாலில்
அடல்சேர் அளவறிந்தார் ஆர்?

   சூரியன் உதிப்பதும் சந்திரன் தேய்வதும் உண்மையா? காற்று கற்பனையா? கடல்நீர் மழையாக மாறினால் கரிக்குமா? வலையில் எவ்வகை மீன் விழும் என்பதை அறிந்தவர் உண்டா?


வெய்யோன்: சூரியன்
வெண்சுடர்: சந்திரன்
மருக்கம்: காற்று
செய்ய: பண்புச்சொல் (செய்யக் கடல்நீர்: மிகவும் கரிக்கும் கடல்நீர்)
கார்க்குமோ: கரிக்குமோ
மாலில்: வலையில்
அடல்: மீன், கடல்மீன் வகை


    ட்டவாதத்துக்கும் வாட்டவாதத்துக்கும் ஒரு கால் வேறுபாடு :).

வட்டவாதம் வாட்டவாதம் என்பது புலனாகும் போது ஓடுகிறோம், ஒதுங்குகிறோம், ஒடுக்குகிறோம்.

உண்டா இல்லையா என்பது வட்டவாதம். அது புரியாதோர், வட்டவாதத் தீர்வைக் காணாது வாட்டமடைகிறார்கள். உண்டா இல்லையா என்பது, புறச்சிந்தனையை, புறத்தெளிவை நோக்கியப் பயணம். புறத்தெளிவின் மிகப்பெரியச் சிக்கல், அதன் நிலைமாற்றம். புறத்தெளிவினால் பயன் அதிகமில்லை. அகத்தெளிவு சற்றே நிலையானது (புறத்தெளிவைக் காட்டிலும்). அகத்தெளிவின் அடிப்படையில் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் வளர்ப்பதால் குழப்பங்களையும், சிக்கல்களையும், ஏமாற்றங்களையும் குறைத்துக் கொள்ளமுடியும். குறிப்பாக, விழிப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், ஏற்படுத்தவும் முடியும்.

'உண்டா இல்லையா' என்பது புறத்தெளிவைச் சார்ந்தச் சிந்தனையெனில், 'தேவையா இல்லையா' என்பது அகத்தெளிவைச் சார்ந்தச் சிந்தனை.

கடவுள், சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் பற்றிய 'உண்டா இல்லையா' வகைச் சித்தாந்த வேதாந்தச் சிந்தனைகள் ஒருபுறம் இருக்கட்டும். 'தேவையா இல்லையா' என்ற அகத்தெளிவுக் கேள்வி, மனித வாழ்க்கையை இன்றைக்கு.. இப்போது.. நடைமுறையில் எளிமைப்படுத்தக் கூடியச் சாதனம். என் தலைமுறை இதைச் சரியான முறையில் பயன்படுத்த மறந்ததும் மறுத்ததும் வேதனை. வரும் தலைமுறைகள் புறத்தெளிவுக்கும் அகத்தெளிவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து நடப்பார்கள் என்ற நம்பிக்கையின் வித்து, இன்றைய இளைய தலைமுறையின் சிந்தனைகளில் தெரிகிறது. அகத்தெளிவு வளர வளர, இக்கேள்விகள் மதம் கடவுள் சொர்க்க நரகங்களுக்குத் தாவும் என்று நினைக்கிறேன். பல கண்மூடித்தனங்கள் ஒழியும் என்று நம்புகிறேன்.

அண்டம் தோன்றி 13 பிலியன் வருடங்களாகின்றன என்கிறார்கள். விடுங்கள், நம் solar system தோன்றி எட்டு பிலியன் வருடங்களாகின்றன. விடுங்கள், நம் பூமி தோன்றி நாலரை பிலியன் வருடங்களாகின்றன. விடுங்கள், மனித இனம் பரவத் தொடங்கி ஒரு இலட்சம் வருடங்களே ஆகின்றன. விடுங்கள், மனித இனம் பசிக்கு அப்பால் சிந்திக்கத் தொடங்கி எண்பதாயிரம் வருடங்களே ஆகின்றன. 'missing link' என்று தேடப்படும் இடைப்பட்ட இருபதாயிரம் வருடங்களைச் சாக்காக வைத்துக் கொண்டு 'அப்பாற்பட்ட சக்தி' என்று கிளப்பிவிட்டுக் குழப்பியடிக்கும் எண்ணற்றக் காவி அங்கிகளின் கருத்தை மேற்பொருத்திப் பார்த்தால், அவரவர் கண்ணோட்டத்திற்கேற்ப, ஏறக்குறைய நாலரை பிலியனலிருந்து பனிரெண்டு பிலியன் தொள்ளாயிர மிலியன் சில்லறை வருடங்கள் வரை 'எல்லாம் வல்லப் பெருஞ்சக்திகள்' தனியே கும்மியடித்துக் கொண்டிருந்திருக்கிறன என்ற கணிப்பு, அதிர வைக்கிறது. குறைந்த பட்சம் வியக்க வைக்கிறது. குறைவிலும் குறைந்த பட்சம் சந்தேகிக்க வைக்கிறது.

மனிதசக்தி மகத்தானது. உணர வல்லது. உருவாக்க வல்லது. உபயோகிக்க வல்லது. வேறு பெருஞ்சக்திகள் தேவையில்லை. மனிதநேயம் வளர, மனித இனம் உயர, மனிதசக்தி போதும்.

'அப்பாற்பட்ட' அதிசயங்கள் சிலவற்றை இதுவரை கோடிட்டிருக்கிறேன். இங்கே இன்னொன்று. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடக்கிறது. contact lensக்குள் கணிணியும் இணையமும் புகுத்தியிருக்கிறார்கள். இவற்றைக் கண்களில் அணிந்து கொள்ளும் பொழுது, மூளையுடன் நேரடியாக அதிவேகத் தொடர்பு ஏற்படுகிறது. ஒரு பொருளையோ நபரையோ பார்க்கும் பொழுது உடனடியாக அந்தப் பொருளைப் பற்றிய அல்லது நபரைப் பற்றிய அத்தனை விவரங்களும் கண்களுக்கு முன்னே விரிவடைந்து தெளிவாகிறது. காணாத காட்சி காணமுடிகிறது. இன்னும் நூறு வருடங்களுக்குள் இது பரவலாக மூக்குக்கண்ணாடி போல் கிடைக்கும்.

கண்பார்வை அளித்த உண்மையான சக்தி வாய்ந்த மூக்குக்கண்ணாடி தோன்றி முன்னூறு வருடங்களே ஆகின்றன. அதற்குள் அதன் பயன் முழுமையடைந்து மெள்ள மறைந்து வருகிறது. கண்திறக்கும் அசல் சக்தியான மூக்குக்கண்ணாடிக்கு முன்னூறு வருடங்களில் சமாதி கட்டிவிட்டோம். கண்மூடித்தனப் போலிச் சக்திகளை முன்னூறு வருடங்களுக்கு மேல் தொடர்வது பாவிப்பது வருந்த வைக்கிறது. வியக்க வைக்கிறது. சந்தேகிக்க வைக்கிறது.

உருப்படாத அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுவதால் நொபெல் பரிசைப் பற்றிய சந்தேகம் எழுந்தாலும், அவ்வப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுவதால் சற்றே மரியாதைக்குட்பட்டு நிற்கிறது. சமீபத்தில் அண்டவிரிவுக்கான ஆராய்ச்சிக்கு நொபெல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அண்டவிரிவில் அப்படியென்ன அதிசயம்? அண்டவிரிவும் அதைப்போன்ற ஆய்வுகளும் அகத்தெளிவுச் சாதனங்கள்.

பிள்ளைகள் physics படிக்கவேண்டும். இல்லை... எல்லோரும் physics படிக்கவேண்டும். மொழிவன்மையைப் போல இயற்பியல் வன்மை அவசியமாக்கப்பட வேண்டும். சில நியதிகள் அதிகமாக மாறுவதில்லை. அகத்தெளிவுச் சாதனங்களைப் போல. மாற்றமே நிலையானது என்ற சித்தாந்தம் பரவிய உலக வாழ்க்கையில், நிலையாமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி (!) வாழ்வதற்கு அகத்தெளிவுச் சாதனங்கள் தேவை. மனிதசக்தியின் மகத்துவத்தை இளமையிலேயே புரிந்து கொள்ள வித்திட வேண்டும். இளமைக்கான இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், இயற்பியல் கருத்தாகப் படிக்க ஆசை :)

    "நசிகேதா, நீ பல கேள்விகள் கேட்டாய். இனி என் முறை" என்றான் எமன்.

"கேளுங்கள்"

"சூரிய சந்திரனை அறிவாய் அல்லவா?"

"அறிவேன். சூரிய ஒளி பூமியில் வளர்ச்சியை உண்டாக்கக் காரணமாகிறது. எம்மக்கள் பலர் சூரியனைக் கடவுளென்று வணங்குகிறார்கள். சந்திர ஒளி இரவில் குளுமையைத் தந்து எம்மக்களை மகிழச் செய்கிறது. சூரியன் தினம் கிழக்கில் உதயமாகி மேற்கே மறைகிறது. சந்திரன் தினம் வளர்ந்து தேய்கிறது, தேய்ந்து வளர்கிறது"

எமன் சிரித்தான். "நசிகேதா.. நன்றாகப் பார். சூரியன் தோன்றவுமில்லை, மறையவுமில்லை. சந்திரன் வளரவும் இல்லை, தேயவும் இல்லை. நன்றாகச் சிந்தித்துப் பார். பூமியைப் போலவே சந்திரனும் ஒரு கோள். சூரியனோ மாபெரும் ஒளிப்பிழம்பு. சந்திரன் தேய்வதில்லை. சூரியன் மறைவதும் இல்லை. இருப்பினும் பூமியின் நடைமுறை வாழ்க்கைக்கு, இவற்றின் தோற்றமும் மறைவும் அவசியமாகின்றன. சூரியன் தோன்றாவிட்டால், சக்தி குன்றி ஆக்க சாதனமற்றுப் போகிறது. மறையாவிட்டால், சக்தி மேம்பட்டு அதுவே அழிவுச் சாதனமாகிறது. சூரியன் சந்திரன் பூமி இவற்றின் இயக்கங்களில் இப்படிப்பட்டத் தோற்றமும் மறைவும் அவசியக் கற்பனைகள். புரிகிறதா?"

நசிகேதன் தலையசைத்தான். எமன் தொடர்ந்தான். "சூரிய சந்திர தோற்றமும் மறைவும் கற்பனை என்றேன். அவற்றின் தோற்றதையும் மறைவையும் கண்ணால் காண முடிந்தாலும் கற்பனைதான், ஏற்கிறாயா?"

"ஆம். புரிகிறது. கண்ணெதிரே தோன்றி மறைந்தாலும், அவை மக்கள் மனதில் ஏற்படுத்திக்கொண்ட கற்பனையே"

"அடுத்தக் கேள்வி. கண்ணுக்குத் தெரிவதில்லை. தோன்றுவதில்லை. மறைவதில்லை. இருப்பினும் காற்று வீசுகிறது என்கிறோம். காற்றும் கற்பனையோ?"

"இல்லை. காற்றின் சக்தியைப் புரிந்து கொள்ள அசைவுகள் உதவுகின்றன. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் காற்றெனும் சக்தி புலனாகிறது"

"விந்தை. கண்ணுக்குப் புலனாவது கற்பனை, கண்ணுக்குப் புலனாகாதது உண்மை என்கிறாய். விந்தையிலும் விந்தை. சரி, கடலலை பற்றி முன்பு விவாதித்தோம். கடல்நீரை அருந்தப் பிடிக்குமா?"

"கரிக்கும் எமனாரே. அருந்துவதற்கு ஏற்றதல்ல"

"ஆழ்கடலில் எடுத்தால் கரிக்காதோ ஒருவேளை?"

"இல்லை. கரிப்பு, கடல்நீரின் தன்மை. கரையருகிலோ அல்லது நடுக்கடலிலோ சென்று குடித்தாலும் கரிக்கும்"

"மழைநீர்?"

"குடிப்பதற்கேற்றது"

"கடல்நீரும் மழையாக மாறி விழுகிறதே? அப்பொழுது கரிக்குமா?"

நசிகேதன் விழித்தான். ஆசிரியர் ஏன் இப்படிப்பட்டக் கேள்விகளைக் கேட்கிறார்? நானல்லவா கேள்வி கேட்கவேண்டும்? தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது புரிந்து, சிந்திக்கத் தொடங்கினான். எமனுக்குத் தன் மாணவன் சிந்திக்கத் தொடங்குவதும் தெரிந்தது. "நசிகேதா, இன்னுமொரு கேள்வி" என்றான்

"கேளுங்கள் குருவே"

"மீனவன் வலை வீசுகிறான். வலையில் எத்தகைய மீன் விழும் என்பதை அறிவானா? சிறிய மீன், பெரிய மீன், கறுப்பு மீன், சிவப்பு மீன், ஒரு மீன், பல மீன்.. என்று வகையோ வண்ணமோ அளவோ அறிய முடியுமா? வலை வீசும் முன்போ வீசும் போதோ அறிந்தவர் யாராவது உண்டா?"

நசிகேதன் மீண்டும் விழித்தான். "நீங்கள்தானே ஆசிரியர்? என்னிடம் கேட்டால்?" என்றான். பதில் தெரியாத ஆதங்கம் அவன் மறுகேள்வியில் தொனித்தது.

எமன் மீண்டும் பலமாகச் சிரித்தான். அறிவுள்ளவன் என்றாலும் தன் மாணவன் வயதால் மிகவும் சிறியவன் என்பதை உணர்ந்த ஆசிரியன் அல்லவா? நசிகேதனை அன்புடன் தட்டிக் கொடுத்தான். "நசிகேதா.. உனக்கு விடை தெரியாவிட்டால் தவறில்லை. மனிதன் தன்னைச் சுற்றி இருப்பதையும் நடப்பதையும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கேள்விகளை கேட்டேன். உலகில் மனிதரைச் சுற்றி இருப்பது எல்லாமே மனிதருக்காக ஏற்பட்டவை, மனித அறிவு வளர உருவானவை, மனிதநேயம் வளரத் தோன்றியவை, படிப்பினைகளும் பாடங்களும் நிறைந்தவை என்பதை உணர வேண்டும். உலகம் பிறந்ததும் ஓடும் நதிகளும் காற்றின் ஒலிகளும் கடலின் அலைகளும் மனிதருக்கான பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கேட்கும் நாளில், கேட்டுச் செயல்படும் நாளில், மனிதம் சிறப்படையும்..

..பேரான்மா என்பது, சூரியனைப் போல அபரிமித ஒளிப்பிழம்பு, சக்திக்கூட்டு. சந்திரனைப் போல அமைதியின் சாரம், குளுமையின் உறைவிடம். பேரான்மா தனித்திருந்தால் ஒரு பயனும் இல்லை. பூமியின் கண்களுக்குச் சூரியனும் சந்திரனும் தோன்றி மறைவது போலவே, மனிதத்தின் கண்களுக்கு பேரான்மா தோன்றி மறைகிறது. பேரான்மா உயிர்ப்பயணம் மேற்கொள்கிறது. பூமியின் வளர்ச்சிக்கு சூரிய சந்திர தோற்றமும் மறைவும் அவசியம் என்றாயே, அது போலப் பேரான்மா, ஆன்மாவாகி வந்து போனால்தான் மனிதம் வளர முடியும்..

..அசையாத காற்று மூச்சாகி உயிரை வளர்த்தாலும், அசையும் காற்றை மட்டுமே மனிதனால் உணர முடிகிறது. பேரான்மாவின் சக்தியும் அப்படியே. மனித மேம்பாட்டில் மட்டுமே பேரான்மாவின் சக்தியை உணர முடியும். பேரான்மாவெனும் காற்றை அசைத்து உணர தன்னறிவு உதவுகிறது..

..கடல்நீர் கார்க்கும் என்றாலும், அது மழைநீராக மாறும் பொழுது மழைநீரின் இயல்பைப் பெறுகிறது. ஆன்மாவும் அப்படியே. பிறவிக்கேற்ப, வளர்ச்சிக்கேற்ப, தனித்தன்மையைத் தேடிக்கொள்கிறது. சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ, மறைக்கவோ செய்கிறது. எனினும், நீர் எனும் அடிப்படைத் தன்மை மாறுவதில்லை. பேரான்மாவின் அடிப்படைச் சக்தி மாறுவதில்லை. நீரின் சக்தி வெளிப்படுவது நிலத்தில் தானே? ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்துவது மனிதம்..

..பிறப்பும் இறப்பும் விபத்துக்கள் என்றேன். வலை வீசும் மீனவன் 'இத்தகைய மீனைப் பிடிப்பேன்' என்ற திட்டத்துடன் செயல்படுவதில்லை. இத்தகைய மீன் வலையில் விழும் என்று எவராலும் அறிந்து சொல்லமுடியாது. அதுபோலவே, ஆன்மாவும் பிறவி வலையில் விழுகிறது. நழுவுகிறது. எப்படி எப்பொழுது விழும், நழுவும் என்று கணிக்கவியலாது, கணிப்பதால் பலனுமில்லை..

..இவை எல்லாம் இயற்கையாக நிகழ்பவை. தன் இயல்பை நிகழ்வுக்கேற்ப வெளிப்படுத்துகின்றன. மீண்டும் இயல்பையே சேருகின்றன. ஆன்மாவும் அப்படியே. பிறப்பும் இறப்பும் அப்படியே. பேரான்மா எனும் மனிதக் கூட்டுச்சக்தி, மனிதநேயம் தோன்றி வளர்ந்து செழிக்க அவ்வப்போது தன் இயல்பை மாற்றிக் கொண்டு வெளிப்படுகிறது. பின், மாறாத நிலையை மீண்டும் அடைகிறது" என்றான்.

நசிகேதன் எமனை வணங்கினான். "மிக்க நன்றி. பேரான்மா ஆன்மா தன்னறிவின் இணைப்பையும், பிறப்பிறப்பின் இயல்பையும் அறிந்து கொண்டேன். உயிர் உடலை விட்டு விலகினாலும் நம்மைச் சுற்றியே பெருஞ்சக்தியாய் நிலவுகிறது என்பதையும் புரிந்து கொண்டேன். அதுவே உயிரின் நிலையான இருப்பிடம் என்பதையும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி" என்றான். "இருப்பினும்..."

"என்ன நசிகேதா?"

"இருப்பினும்.. சில கேள்விகள் இன்னும் சுற்றி வருகின்றன. சொர்க்கம் நரகம் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள். அவை உண்மையா? அவற்றுக்கான வேள்விகள் பற்றிச் சொன்னீர்கள். அவை தேவையா? எம்மக்கள் ஏழாவது பானையாக என்ன செய்ய வேண்டும்? பாவ புண்ணிய சொர்க்க நரகங்களுக்கு அஞ்சியும் ஆசைப்பட்டும் எண்ணற்றச் சடங்குகளைச் செய்கிறார்களே? அவற்றால் பலனுண்டா? இல்லையெனில எப்படி அறிவுறுத்துவது? எம்மக்கள் விழிக்க வழியுண்டா?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/10/07

பேரான்மாவே பெருஞ்சக்தி


68
சிற்றலை பேரலையிற் சேரும் சிதறினால்
ஒற்றியே நீராய் ஒடுங்கும் - அற்றறியும்
ஆன்மா அருஞ்சக்தி ஆகுமே மற்றவையால்
மேன்மையும் மங்கும் முசிந்து.

   சிறு அலைகள் சேரச்சேர பேரலை எழுகிறது. சேர இயலாத சிற்றலைகள், ஒடுங்கி மீண்டும் நீரோடு கலக்கின்றன. பற்றொழித்து நல்வழியை அறிந்த ஆன்மா, பேரான்மாவோடு இணைந்து அரிய, நுட்பமானச் சக்தியாகிறது. (அவ்வாறு அறிய இயலாத) மற்ற ஆன்மாக்களால், மேன்மையான பேரான்மா வலுவிழந்து குன்றும்.


ஒற்றி: அடங்கி, விழுந்து
அற்றறியும்: அற்று+அறியும், துறந்தறியும்
அருஞ்சக்தி: அரிய, மேலான சக்தி. உருவமற்ற சக்தி என்றும் பொருள் கொள்ளலாம் (அரு=உருவமற்ற)
முசிந்து: இளைத்து


    ழு வயதில் கேட்டக் கதையொன்று. தங்களுக்குள் ஒற்றுமையில்லாத ஐந்து சகோதரர்களை அழைத்தத் தந்தை, அவர்களிடம் ஆளுக்கொரு குச்சியைக் கொடுத்து உடைக்கச் சொன்னாராம். எளிதில் உடைத்துக் கொடுத்தனராம் சகோதரர்கள். பிறகு, இணைத்துக் கட்டிய ஐந்து குச்சிகளைக் கொடுத்து உடைக்கச் சொன்னாராம் தந்தை. எத்தனை முயன்றும் சகோதரர்களால் குச்சிக்கட்டை உடைக்க முடியாமல் போனதாம். படிப்பினையறிந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்தனராம்.

சகோதர ஒற்றுமையா, இணைந்த குச்சிகளின் வலிமையா? கதையில் எது படிப்பினை? அதுவரை இல்லாத வலிமை, குச்சிகள் சேர்ந்ததும் தோன்றியதே? தனிக் குச்சிகளுக்கு அஞ்சாத சகோதரர்கள், இணைந்த குச்சியின் சக்திக்குப் பணிந்தார்களே? ஒன்றான சகோதரர்கள் ஐவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து முயன்றாலும் குச்சிக்கட்டை உடைத்திருக்க முடியுமா? ஏழு வயதில் புரிந்த கதை. எழுபது வயதிலும் புரியாதப் படிப்பினை.

    கூட்டுப் பிரார்த்தனை - ஒரே குறிக்கோள் தொட்ட பல இணைந்த மனங்களின் பிரார்த்தனை - நூற்றாண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. பலனளித்திருக்கிறது. மாய மந்திர தந்திரங்களை ஒதுக்கி, மனித மனங்களின் நல்லெண்ணக்கூட்டு என்றக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சற்றே பிரமிக்க வைக்கிறது. கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்துமே எதிர்பார்த்தப் பலனைத் தருவதில்லை. எனினும், சில நம்பமுடியாதச் சிக்கல்களைக் கூட்டுப் பிரார்த்தனைகள் தீர்த்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஹிட்லர் மரணத்திலிருந்து... கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக நிறைய உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. என் குடும்பத்தில் ஒருவர், தன் உடல் ஆரோக்கியத்துக்குக் கூட்டுப் பிரார்த்தனையே காரணம் என்கிறார். பதினேழு வயது வரை கால்களை அசைக்கவும் முடியாத ஊனமாயிருந்த இவர், இன்றைக்குத் தினம் மூன்று மைல் நடக்கிறாராம். இவருக்கு வயது எழுபத்து மூன்று. பிழைக்க மாட்டார் என்று கைவிடப்பட்ட அமிதாப் பச்சனுக்கு இந்தியா முழுதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கழுத்து நரம்புகளில் குண்டு பாய்ந்துக் குற்றுயிராகக் கிடந்த எம்ஜிஆர் பிழைக்க வேண்டி, அவருடைய மருத்துவரே (என் தந்தைக்கு உறவு) தினம் ஐம்பது பேரை அழைத்து வந்து ஒரு வாரம் கூட்டுப் பிரார்த்தனை செய்ததாகச் சொல்வார்கள் (கடவுள் வழிபாடு எதுவும் இல்லாத பிரார்த்தனை - கறுப்புச் சட்டைக்காரர்). என் காரைக்கால் நாட்களில் ஒவ்வொரு வியாழன் மாலையும் அரபிந்தோ ஆசிரமக்காரர்கள் 'பொதுப் பிரார்த்தனை' செய்ததைப் பார்த்திருக்கிறேன். கிண்டல் செய்திருக்கிறேன். வரலாற்றில் நிறைய அசல் ரிஷ்யச்ருங்கர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். காந்தியின் கூட்டுப் பிரார்த்தனைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் மகான் அல்ல.

இங்கே பிரார்த்தனை என்பது அர்ச்சனை, பக்தி என்ற எதையும் குறிக்கவில்லை. பலரும் ஒரே மனதோடு ஒரு நற்செயலை எண்ணி விரும்பும் மனிதநேயமே கூட்டுப் பிரார்த்தனை. ஒரு மனம் இன்னொரு மனதோடு இணையும் சக்தியே கூட்டுப் பிரார்த்தனை. இதைச் செய்யக் கும்பாபிஷேகங்கள் தேவையில்லை. காவிகளைத் தொடர வேண்டியதில்லை. மூட்டை முடிச்சுகளைச் சுமக்க வேண்டியதில்லை. முப்பது நாள் விரதமிருக்க வேண்டியதில்லை. தினம் ஐந்து வேளை தொழ வேண்டியதில்லை.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உலக மக்கள் அனைவரும் ஐந்து நிமிடங்கள், வேண்டாம்... ஐந்து நொடிகள், ஒரு நற்செயலை மனமுருக எண்ணினால் ஏதாவது பெருஞ்சிக்கல் தீர வாய்ப்புண்டா? உலக மக்கள் வேண்டாம்... ஒரு தெரு... ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்தால் ஒரு சிறு சிக்கலின் ஒரு சிறு பகுதி தீர வாய்ப்புண்டா? பரிசோதனைக்கெல்லாம் ஏது நேரம்? பத்து காசு கோவில் உண்டியலில் போட்டு அரோகரா என்றால், சொந்த நிம்மதிக்கு வழியானது.

மனித மனமே சக்தி. மனித மனங்களின் கூட்டே பெருஞ்சக்தி. அதற்கு நான்கு கைகள் இல்லை. சக்கரங்கள், ஆயுதங்கள் இல்லை. இரத்தம் சொட்டும் நாக்கில்லை. ஆகாயத்தைக் கீறி இறங்கவில்லை. புனிதகர்ப்பம் எதுவுமில்லை.

மனிதசக்தியே அருஞ்சக்தி. கண்ணுக்குப் புலப்படாத சக்தி என்பதற்குக் காரணம் இருக்கிறது. கண்ணுக்குப் புலப்படும் சக்தியைக் கோவிலில் காணலாம். கண்ணுக்குப் புலப்படாத சக்தியை உணர வேண்டும். மனதைக்கட்டி அகத்தில் காண வேண்டும். அதைவிட்டுக் கண்ணுக்குப் புலப்படும் போலிச் சக்திகளை மனதில் நிறுத்தி, அருவம் என்று அலத்துகிறோம். தயங்குவதேயில்லை. நாளைப் பொழுது நமக்கென வாழ்வதில் தயக்கம் உண்டு. அதை நடத்த ஒருவனைக் கோவிலில் தேடத் தயக்கமே இல்லை.

கடவுள் என்றதும் மனதில் தோன்றுவது உருவமா அருவமா? மனிதம் என்றதும் மனதில் தோன்றுவது? இரண்டில் எது அருவம்? எது நுட்பம்? எது பெருஞ்சக்தி? இரண்டில் எது குச்சிக்கட்டு?

    என் நண்பர் ஒருவர், தனக்கு அலுவலகத்தில் ஏதும் நடக்கவேண்டுமென்றாலோ, வியாபாரம் பெருக வேண்டுமென்றாலோ கோவிலுக்குச் சென்று பத்து சுற்று சுற்றிவருவார். பத்து டாலரோ நூறு டாலரோ தயங்காமல் உண்டியலில் போடுவார். (கடவுளுக்கு வருமான வரி உண்டா தெரியவில்லை). இன்னொரு நண்பரின் பதினாறு வயது மகனிடம் "தேர்வில் முதல் மதிப்பெண் பெற என்ன செய்கிறாய்?" என்று கேட்ட பொழுது "பிள்ளையார் சுழி போடுகிறேன். அதனால் எனக்கு எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை தெரிகிறது" என்றார். இன்னொரு குடும்ப நண்பர் ஒருவர், மற்ற மாமிகளுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று சௌந்தர்யலஹரி படிக்கிறார். "ஒரு பாடலின் ஒரு வரிக்காவது பொருள் தெரியுமா?" என்று ஒருமுறை கேட்டேன். "மனமுருகிச் சொன்னால் பொருளறியத் தேவையில்லை" என்றார். ஆ! வியக்க வைக்கும் நம்பிக்கைகள்.

என் ஆசிரிய நண்பர் அரசன் தினமும் காலையில் பிரார்த்தனை செய்வார். "என்ன பிரார்த்தனை செய்யுறீங்க? உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே?" என்றேன் ஒருமுறை. "நீ நல்லா இருக்கணும்னு பிரார்த்த்னை செஞ்சேன்" என்றார். என் குழப்பத்தைப் புரிந்துகொண்டு, "நீ என்றால் நீ இல்லை ஐயா. அடுத்தவன் நல்லா வாழணும் நெனச்சா அதைவிட வேறே என்னா பிரார்த்தனை வேண்டிக் கிடக்குது?" என்றார்.

எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவதன் தயக்கம், நாம் வாழ யார் பாடுவாரில் தொடக்கம். நம் சுய அல்லது குடும்ப நலனுக்காகக் காவியிடமும் கோவிலிலும் வேண்டுவதை நிறுத்த முடியுமா? ஒன்று ஆசை. மற்றது பற்று. இரண்டையும் விட்டுப் பொதுமனித சக்தியின் ஆணிவேரை உணர முடியுமா?

மனிதசக்தியை நம்புவது எளிதல்ல.

    "நசிகேதா, கடலலையைப் பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டான் எமன்.

"பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தப் பொழுது போக்கு" என்றான் நசிகேதன்.

"அப்படியா?"

"ஆம். எங்கிருந்தோ ஆர்ப்பரித்து வரும் பேரலைகள் அருகில் வந்து அடங்கி, இதமாக வருடுவது பிடிக்கும். ஆர்ப்பாட்டத்தோடு இரைந்து பாறைகளை உடைத்தெறிவதும் பிடிக்கும். கடலலையின் சக்தியை எண்ணி வியந்திருக்கிறேன்"

"பேரலை எங்கிருந்து வருகிறது?"

"திடீரென்று உருவாகிறது. சிறு அலைகள் சேர்ந்து பேரலையாக மாறுகின்றன"

"எல்லா சிற்றலைகளும் பேரலைகளாகுமா?"

"இல்லை. எத்தனையோ அலைகள் பேரலையுடன் சேராமல் அடங்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன்"

"நன்று நசிகேதா. பேரலை என்று தனியாக ஏதுமில்லை. பேரலை என்பதே சிற்றலைகளின் கூட்டாகும். வலுவான சிற்றலைகளை சேரச்சேர, பேரலை உருவாகிறது. வலுவான சிற்றலைகளின் சக்தி பேரலையை உருவாக்குகிறது. வலுவடைந்த பேரலை, மற்ற சிற்றலைகளை ஈர்த்து இன்னும் பெரிதாகிறது. பேரலையை வலியச் சேரும் வலுவான சிற்றலைகளினால், பேரலை இன்னும் பெரிதாகிப் பாறைகளையும் உடைத்தெறியும் சக்தியைப் பெருகிறது. பேரலையைச் சேராதச் சிற்றலைகள், நீராகவே ஒடுங்கி விடுகின்றன. வலுவற்றச் சிற்றலைகளும் பேரலையைச் சேருகின்றன. வலுவற்றச் சிற்றலைகள், பேரலையின் வலுவைக் குறைக்கின்றன. பேரலையும் அடங்கிவிடுகிறது" என்றான் எமன்.

நசிகேதன் அமைதியாக இருந்ந்ததைக் கவனித்த எமன், "என்ன சிந்திக்கிறாய்?" என்றான்.

"நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நான் முன்னர் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு விடை கிடைத்ததாக எண்ணுகிறேன்" என்றான் நசிகேதன்.

"என்ன கேள்விகள்?"

"உயிர்ப்பயணத்தை விவரிக்கையில், 'உயிரின் இலக்கு பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை' என்றீர்கள் அல்லவா?"

"ஆம்"

"பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி என்றீர்கள். 'இச்சக்தியுடன் கலப்பதே சொர்க்கமா? பேரின்பமா? பிறவா நிலையா?' என நான் கேட்டேன்"

"ஆம். எந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது?"

"விடை கிடைத்தது என்று எண்ணும் பொழுதே ஐயமும் எழுகிறது"

எமன் சிரித்தான். "நசிகேதா. உன்னுடன் வாதம் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான்.

"சிற்றலையின் நோக்கம் பேரலையுடன் சேர்வதே என்பது புரிகிறது. சிற்றலையின் சக்தி, பேரலையுடன் இணையச் செய்வதோடு, பேரலையின் வலிமையைக் கூட்டும் என்பதும் புரிகிறது. வளர்ந்த பேரலை பிற சிற்றலைகளை ஆதரித்துத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் என்பது புரிகிறது. சிற்றலையின் சக்தி பேரலையினால் புலனாகிறது, சிற்றலையின்றிப் பேரலையை அறியவே முடியாது என்பதும் தெளிவானது."

"அற்புதம்! மேலும் சொல்"

"அது போல, ஆன்மாவின் நோக்கமும் பேரான்மாவுடன் இணைவதாகும் என அறிந்தேன். ஆன்மா எப்படி பேரான்மாவை வலுவாக்குகிறது?"

"உண்மை. ஆன்மாவின் இலக்கு, பேரான்மாவுடன் இணைவதே. பற்றறுத்து, நல்லொழுக்கத்துடன் தன்னையறிந்த ஆன்மா, சக்தி வாய்ந்தது. சக்தி வாய்ந்த ஆன்மா பேரான்மாவை எளிதாகச் சேர்கிறது. வலுவான சிற்றலை பேரலையுடன் இணைவது போலவே. அவ்வாறு சக்தி வாய்ந்த ஆன்மாக்களின் கூட்டணியில் உருவாகும் பேரான்மா, பெருஞ்சக்தி பெறுகிறது. தன்னையறியாத ஆன்மாக்கள் பேரான்மாவுடன் இணைய முயன்று தோற்கின்றன. இணைந்தாலும் பேரான்மாவின் வலிமையைக் குறைத்து விடுகின்றன"

"ஒடுங்கிய சிற்றலைகள் தான் மீண்டும் பிறக்கின்றனவா?"

"ஆம்"

"பேரான்மாவுடன் இணைந்த உயிருக்குப் பிறப்பில்லையா?"

சுற்றுமுற்றும் பார்த்த எமன், "உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்" என்றான்.

"சொல்லுங்கள்" என்றான் நசிகேகன் ஆவலுடன்.

"பிறப்பும் இறப்பும் விபத்துக்கள்"

"புரியவில்லையே?"

"இன்னொரு கற்பனைப் பயணம் செய்வோமா?" என்றான் எமன்.

"நான் தயார்" என்றான் நசிகேதன்.

"உன்னைக் குயவனாக எண்ணிக்கொள். நீ ஆறு பானைகள் செய்ய வேண்டும்"

"சரி"

"பொறு. முதல் பானையை, இதோ தரையில் அமர்ந்து இங்கே செய்" என்றான்.

நசிகேதன் தரையில் அமர்ந்து கற்பனைப் பானை ஒன்றைச் செய்து முடித்தான்.

எமன், "அடுத்த பானையை அதோ பத்தடி தள்ளி சற்று உயரத்தில் நின்றபடி செய்" என்றான்.

நசிகேதன் பத்தடி நடந்து, இரண்டு படிகள் ஏறி சற்று உயரத்தில் இரண்டாவது பானையைச் செய்தான்.

தொடர்ந்து எமன் நசிகேதனை அலைக்கழித்து உயரத்தில் ஏற்றி மற்ற நான்கு பானைகளைச் செய்யச் சொன்னான். எமன் சொற்படி நசிகேதன் ஆறாவது பானையை நூறடி உயரத்தில் செய்து முடித்தான். "ஐயா, ஆறு பானைகளும் தயார்" என்றான்.

"ஏழாவது பானை ஒன்றைச் செய்ய வேண்டும்" என்றான் எமன்.

"சரி, எங்கே சொல்லுங்கள்" என்றான் நசிகேதன்.

எமன் அவனை தொலைவில் அழைத்துச் சென்றான். அங்கே காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. "இங்கே செய்" என்றான்.

நசிகேதன் எத்தனை முயன்றும் பானை சேரவில்லை. "ஐயா, இங்கே காற்று வலுவாக இருக்கிறது. பானை செய்ய முடியவில்லை" என்றான்.

"நன்று நசிகேதா. இனி சில கேள்விகள் கேட்கப் போகிறேன்" என்ற எமன், நசிகேதனை முதல் பானையருகே அழைத்து வந்தான். இதோ.. கீழே தரையில் இருக்கும் இந்தப் பானையில் என்ன இருக்கிறது?"

"காற்று"

"அதோ நூறடி உயரத்தில் இருக்கும் அந்தப் பானைக்குள்?"

"அதுவும் காற்றுதான் எமனாரே"

"அது எப்படி நசிகேதா? கீழே ஒரு காற்று மேலே ஒரு காற்று என்றாகுமா? இரண்டும் ஒரே காற்று தான் எனில் ஒன்று மேலும் ஒன்று கீழும் இருப்பானேன்? நீ கட்டிய பானைக்குள் புகுவானேன்? நீ கட்டியப் பானைக்குள் புகுந்தது எந்தக் காற்று? நீ கட்டிய பானைக்குள் இருப்பது காற்று எனும் பொழுது, காற்று அதிகமாக இருக்கிறது, பானை செய்ய முடியவில்லை என்கிறாயே?"

நசிகேதன் விழித்தான்.

எமன் தொடர்ந்து, "இதோ உன் அனுமதியுடன் இந்தப்பானையை உடைக்கப் போகிறேன்" என்றபடி நசிகேதன் குயைந்த இரண்டு பானைகளை வெவ்வேறு உயரங்களிலிருந்து உடைத்தான். "நசிகேதா, இந்தப் பானைகளுக்குள் இருந்த காற்று எங்கே சென்றது? மேலேயே கீழேயா?"

நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, புரிந்தது. காற்று என்பது பொதுவானப் பரவல். அவ்வப்போது பானைகளுக்குள் சிக்கிய காற்று போலவே, ஆன்மாக்களும் பிறவியில் சிக்குகின்றன"

"ஏழாவது பானையில் என்ன கோளாறு?"

"காற்று பலமாக வீசியதால் பானை நிலைக்கவில்லை"

"கற்பனைப் பானைக்கே இந்தக் கதியா?"

நசிகேதன் மீண்டும் எமனை வணங்கினான். "ஐயா, புரிந்தது. அடங்காத காற்றும் சில இடங்களில் அடங்கி நிற்கிறது. அந்த நேரம் அவ்விடத்தில் பானைக்குள் அடைபடுகிறது"

"நசிகேதா. அடங்குவதும் அடங்காததும் காற்றின் தன்மை. இப்பொழுது என்ன சொல்கிறாய்?"

"ஐயா. அதே போல், பேரான்மாவில் இணைந்த ஆன்மாக்களும் பிறக்க நேரிடும் என்று சொல்கிறீர்கள்"

"நன்று நசிகேதா. இதோ என் காலடி பட்டு உடையும் இந்தப் பானை போன்றது இறப்பு. அதோ உன் கைகளால் அற்புதமாகச் செய்யப்பட்டப் பானை போன்றது பிறப்பு. இரண்டிலும் தங்கிய காற்றின் தன்மையில் வேறுபாடில்லை. பலமான காற்றில் சிக்கியிருக்குவரை பானைக்குள் அடைபடுவதில்லை"

"அப்படியென்றால் பிறவா நிலை என்று ஏதுமில்லையா?"

"என்னருமை மாணவனே நசிகேதா, இறவா நிலை என்று ஏதும் உண்டா?"

நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, எதுவுமே நிலையில்லை என்று அறிந்துகொண்டேன், நன்றி" என்றான்.

"அது மட்டுமல்ல நசிகேதா. இறப்பும் பிறப்பும் விபத்துக்கள். பானை உடைந்ததும் காற்று தன் இயல்பான நிலையில் கலந்தது போலவே, உடலை விட்டுப் பிரிந்த உயிரானது தன் இயல்பான நிலையில் கலக்கிறது. பானை உடைந்து போனதே என்று வருந்துவதில் பயனே இல்லை. உள்ளிருந்த காற்று தன் இயல்பு நிலைக்குச் சென்றதை எண்ணி அமைதியடைவதே முறை. இயல்பான நிலையிலிருந்த காற்றைப் பானைக்குள் புகச் செய்தோமே என்று பிறப்பை எண்ணி வருந்துகிறோமா?"

"உண்மையே. பிறவியைக் கொண்டாடுகிறோம். பானைக்குள் புகுந்த காற்று வெளிப்படக் காத்திருப்பது போலவே உயிரும் தன் இயல்பு நிலையில் சேரக் காத்திருக்கிறது என்பதை அறியாமல், பிறப்பைக் கொண்டாடுகிறோம். இறப்பை எண்ணி வருந்துகிறோம்"

"கூட்டுக்குள் சிக்கிய உயிர், பேரான்மா எனும் பெரும் சக்தியின் அம்சம். அதை உணர்ந்தால் கூட்டின் மேன்மையை உணர முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கை நெறிகளை அறிய முடியும். வாழ்க்கை நெறிகளை அறிந்து கொண்டால் பற்றறுத்து, பேராசையொழித்து, தீக்குணம் தவிர்த்து நல்வழியில் வாழ முடியும். கூடு கலைந்த பின் சக்தியும் தொலையும் என்பதை உணர்ந்தால், கூட்டையும் உடன் வந்த சக்தியையும் தனக்கும் பிறருக்கும் பலனளிக்கும் விதத்தில் பாதுகாக்க முடியும்..

..நல்வழியில் நடந்த ஆன்மா பேரான்மாவுடன் கலக்கையில், இரண்டுமே வலுவாகிறது. பலமான காற்றில் கலந்திருக்கும் வரையில் அங்கே பானைக்கு இடமே இல்லை. மனித ஆன்மாவின் மகத்துவம் தன்னறிவில் அடங்கியிருக்கிறது. பேரான்மாவின் சக்தியே பிறவியைக் கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ முடியும். மகத்துவம் குன்றிய ஆன்மாக்களால் பிறவிகள் நேரும். இது விபத்து என்றாலும், இந்த விபத்தில் பேரான்மாவும் அவ்வப்போது சிக்கும். அடங்கிய பேரலை போலவே"

"பேரான்மாவுக்கும் பிறவி உண்டா?" என்றான் நசிகேதன், சற்று வருத்தத்துடன்.

"மகான்களின் பிறவி ரகசியம் என்று வை. அவர்கள் பிறக்காவிட்டால் சாதாரண மனிதம் என்னாவது? பேரலையின் சக்தி, சிற்றலைகளை ஈர்ப்பது போலவே அவர்களும் சாதாரண மனிதர்களின் அறிவுக்கண்களைத் திறக்கிறார்கள்"

"புரிகிறது"

"அதனால்தான், பிறப்பைக் கொண்டாடுவது போலவே இறப்பையும் கொண்டாட வேண்டும் என்றேன். அன்றேல், இரண்டையும் பொதுவாக எண்ணி கலக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இருபுறங்கள். இரண்டுமே பானைக்காற்றின் இயல்பு நிலை. காற்றுக்காகக் காத்திருக்கும் பானைகளும், பானைகளுக்காகக் காத்திருக்கும் காற்றும் மட்டுமே நிரந்தரம். குயைந்தப் பானையோ கட்டிய காற்றோ அல்ல"

"ஐயா... நீங்கள் சொல்வது புரிகிறது. வாழ்நாளில் மேம்பட்டு வாழ்ந்தால் பலமானக் காற்றாகலாம். பேரான்மாவாக உலாவலாம். அற்பமாக வாழ்ந்தால் என்ன முயன்றும் பலனில்லை. சிதறிய அலை போலவே சுலபமாகப் பிறவியெடுக்க நேரிடுகிறது"

"ஆம்"

"அப்படியெனில்.. அப்படியெனில்... சொர்க்கம் என்று எதுவும் இல்லையா? என் தந்தையார் புரிந்த வேள்விகளும் சடங்குகளும் வீணா? எத்தனை தானங்கள் செய்தார்! எத்தனை யாகங்கள் செய்தார்! எத்தனை கோவில்கள் கட்டினார்! என் தந்தையாருக்குச் சொர்க்கம் தருவதாகச் சொன்னீர்களே? சொர்க்கம் செல்லும் வேள்விக்கான வழி முறைகளை முன்பு சொன்னீர்களே? வேள்விக்கு என் பெயரை வேறு வழங்கினீர்களே? எம்முலக மக்களெல்லாம் சொர்க்கத்துக்கான வழியென்று நம்பிப் புரியும் சடங்குகள் வீண் என்றால், அதை அவர்களுக்கு எப்படி அறிவிப்பது? அவர்களைத் தூண்டிவிட்டுக் கண்மூடித்தனங்களை ஆதரிப்போரை எப்படித் தடுப்பது? ஏழாவது பானையாகும் வழியை எம்மக்கள் அறிவதெப்படி?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.