வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/04/05

நூற்பயன், நன்றி


நசிகேத நூலிது நன்னெறிக் கேணி
பசித்தவர்க்கு அன்னமழை போன்றாம் - உசிப்பொருளை
தப்பா துரைத்தேன் இருதாய்க்கும் ஏனோர்க்கும்
அப்பா துரையின் அகம்.

   சிகேதன் கதையை விளக்கும் இந்நூல், நெறிகளுக்கான ஊற்று. பசித்தோர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. மெய்யறிவின் நுண்மையைப் பிறழாது சொல்லியிருக்கிறேன். என்னைப் பெற்ற இரண்டு தாய்களுக்கும், (தொடர்ந்து படித்த) அனைவருக்கும் (இந்த) அப்பாதுரையின் ஆன்மாவில் பங்குண்டு.


உசிப்பொருள்: நுட்பம், மெய்யறிவு
அகம்: ஆன்மா, மனம், உயிர்



    சிகேத வெண்பா மனித நேயத்தையும் நெறிகளையும் விளக்கும் வற்றாத நீரூற்று போன்றது. பசித்துக் கிடப்போர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. நசிகேதன்-எமனுடனான உரையாடலைப் பல முறை படித்துப் பயனடையலாம். அவையோர் முன் நசிகேதன் உரைத்தது எமனிடம் அவன் பெற்ற அறிவின் சாரம். மரணம் பற்றிய அறியாமையையும் அவை தொட்டக் கண்மூடித்தனங்களையும் ஒழிக்க நசிகேத வெண்பா ஒரு அறிவுக்கருவி. மெய்யறிவுக்கானத் திறவுகோல்.

கடோபனிஷது நூலில் நான் கற்ற மெய்யறிவின் நுண்மையினை, நசிகேத வெண்பா எனும் இத்தமிழ் நூலின் வழியாகப் பிழையில்லாது எடுத்துச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்கும் தமிழுக்கும், தளராமல் என்னுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும், நன்றி.

தொடர்ந்த வாசிப்புக்கும் ஆதரவுக்கும், சுவையாகச் சிந்திக்க வைத்த அறிவார்ந்த பின்னூட்டக் கலந்துரையாடலுக்கும், கடன் பட்டிருக்கிறேன். வற்றாத நன்றிப் புனலை உங்கள் முன்வைத்து அவையடங்கி விடைபெறுகிறேன்.

தாயையும் தமிழையும் போலவே, என் ஆசான்களுக்கும், உங்களுக்கும் என் உயிரில் இடமுண்டு. ஆன்மாவில் பங்குண்டு.

தமிழ் வாழும் நல்லுலகெங்கும் அமைதி நிலவட்டும்.


//நசிகேத வெண்பா நிறைவுற்றது//


2012/04/04

நூல்முகம், காணிக்கை


அந்தியமும் இந்தியமும் புந்தியவர் சிந்தனைகள்
செந்தமிழின் சந்ததிக்குஞ் சொந்தமென - உந்துவழி
முந்துநூல் மந்திரத்தைத் தந்துரைக்க வந்ததிது
இந்திரா மைந்தன் மொழி.

   ரணம், மனிதம், ஆன்மா பற்றிய அறிஞர்களின் ஆழ்ந்த, மனித உய்வுக்கானத் தத்துவச் சிந்தனைகளைக் கொண்டத் தொன்மையான வேதநூலின் (கடோபனிஷது) கருத்துக்களைத் தமிழ் மக்களுக்குத் தந்திட வந்தது இந்திரா மைந்தனின் நூல் (நசிகேத வெண்பா).


அந்தியம்: மரணம்
இந்தியம்: ஆன்மா
புந்தியவர்: அறிவுள்ளவர்
உந்துவழி: உயர்வுக்கான வழி
முந்துநூல்: பழைய நூல், வேதம் (கடோபனிஷது)



    றியாமை, பொதுவாகவே கண்மூடித்தனத்தை வளர்க்கிறது. மரணம் பிறவி பற்றிய அறியாமையோ ஆசையாலும் அச்சத்தாலும் தூண்டப்பட்டு, மதம் சடங்கு போன்றத் தீவிரக் கண்மூடித்தனங்களை வளர்க்கிறது.

மரணம் பிறவி பற்றிய அறியாமையை கண்மூடித்தனங்களால் வளர்த்த அறிவற்ற சாரார், புறச்சக்திகளையும் சடங்குகளையும் போதித்தனர்.

இத்தகைய அறியாமைகளை ஒடுக்க அறிவொளி தேவை. அறிவொளியை அடுத்தவரிடத்திலோ ஆகாயத்திலோ ஆழ்கடலிலோ தேடிப் பயனில்லை. இவற்றை விட விரிந்த ஆழ்ந்த பரந்த அகத்திலே தேட வேண்டும். அகத்தின் ஒளியே அவந்தேடி ஓட்டும், அதனால் வெளியே சிவந்தேடல் வீண்.

பிறப்பிறப்பு தொட்ட அறியாமையை ஒடுக்க எண்ணிய அறிவுள்ளவர்கள் தங்கள் தெளிந்த சிந்தனைகளால் மனிதம், தன்னையறிய வலியுறுத்தினார்கள். தன்னறிவுப் பாதையிலே புறச் சக்திகளுக்கு அவசியமில்லை என்று எடுத்துச் சொன்னார்கள்.

ஆன்மீகம் என்றால் 'தன்னைப் பற்றியத் தெளிவு' என்று பொருள். தன்னைப் பற்றி அறியவும் தெளியவும் புறச் சக்திகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, இடையூறும் கூட என்பதைச் சுவையான எடுத்துக்காட்டுடன் (நசிகேதன் கதை) விளக்கினார்கள்.

கடோபனிஷது எனும் தொன்மையான வடமொழி நூலில் அடங்கியுள்ள மனித உய்வுக்கான இச்சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்காக எடுத்துரைக்க வந்த இந்திரா மகனின் இந்நூல், நசிகேத வெண்பா.

தமிழுக்கும் தமிழருக்கும், தமிழ் போற்றும் அனைவருக்கும், காணிக்கை.



2012/04/03

தன்னறிவில் முன்னவன்


89
சின்னமகன் சன்னமறச் சொன்னதமிழ் உன்னியவர்
தன்னறிவில் முன்னனெனப் பன்னுகையில் - மன்னவனோ
இன்னுமிவன் என்னிளவல் அன்றெனவே மன்னவனாய்த்
துன்னுவனே தென்னவனைத் தேர்ந்து.

   யதில் இளையவனான நசிகேதன் தெளிவாக விளக்கிய உண்மைகளை உள்ளத்தில் ஏற்றி ஆராய்ந்து அறிந்த மக்கள், அவனை அறிவிலே மூத்தவன் என்றுப் பாராட்டினர். (இதைக் கவனித்த) மன்னன் வாசனோ, 'இவன் இனியும் என் மகனல்ல, இந்த நாட்டுக்கு மன்னனாக வேண்டியவன்' என்றுத் தீர்மானித்து, தன் தேர்வை எப்படி நிறைவேற்றுவதெனத் தீவிரமாக யோசித்தபடி அழகும் குணமும் நிறைந்த நசிகேதனை நெருங்கினான்.


சின்னமகன்: இளையவன், இளவரசன்
சன்னமற: மறைக்காமல், தெளிவாக
சொன்னதமிழ்: உரைத்த உண்மை
உன்னியவர்: நன்கு சிந்தித்தவர், உணர்ந்தவர்
முன்னன்: முதல்வன், மூத்தவன்
பன்னுகையில்: புகழும் போது (பன்னுதல்: புகழ்ந்து பேசுதல், போற்றுதல்)
துன்னுவனே: நெருங்குவான், அண்டுவான் (துன்னுதல்: தீவிர யோசனையுடன் நெருங்குதல்)
தென்னவன்: அழகன், இளையவன், நெறியுள்ளவன் (நசிகேதன்)



    ன் மனதில் தோன்றியச் சிறிய எண்ணம் மெள்ள விரிந்து வலுவடைவதை உணர்ந்த மன்னன் வாசன், தன் அரியணையிலிருந்து எழுந்தான். அவையை நோட்டமிட்டான். ஆங்காங்கே மக்கள் சிறு கூட்டங்களாகச் சேர்ந்து நசிகேதன் சொன்னக் கருத்துக்களைக் கலந்துரையாடினர். சிலர் ஆவேசமாக வாதாடினர். சிலர் அமைதியாக உரையாடினர். சிலரது முகங்களில் மிகுந்த அமைதியும் பொலிவும் கண்டான். சிலரது முகங்களில் தீவிரத் தேடல்களின் சின்னங்களைக் கண்டான்.

சிலர் அவனருகே வந்து, "மன்னா! உங்கள் மகன் பெரிய ஞானி. அவனைச் சிறுவன் என்று எண்ண முடியவில்லை. வயதில் எங்களை விட இளையவனே தவிர, அறிவில் எம் எல்லோரையும் விட மூத்தவனய்யா உம் புதல்வன். சிறந்த தலைவன். சொர்க்கத்தை மண்ணுக்குக் கொண்டு வந்த செம்மல்!" என்று பலவாறுப் புகழ்ந்தனர்.

நசிகேதனைப் பார்த்தான்.

அவையினர் இன்னும் நசிகேதனைப் புகழ்ந்தபடி இருந்தனர். அவனைச் சுற்றி ஒரு கூட்டம். சிலர் அவனை வணங்கினர். சிலர் அவனிடம் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் ஐயங்கள் கேட்டனர். சிலர் புகழ்ந்து பாடினர்.

அவையோர் எண்ணங்களையும் பேச்சையும் புரிந்து கொண்ட மன்னன் வாசன், 'இவனை மகனாகப் பெற நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லை இல்லை. இவனை மகனாகப் பெற்றதால் நான் செய்த பாவங்கள் தொலைந்தன. என் கண்களைத் திறக்க வந்தவன். என்னால் என் மக்களின் உடலை வளர்க்க உதவி செய்ய முடியும். இவனால் அவர்கள் தங்கள் வாழ்வின் பொருளையறிய முடியுமே? இவனல்லவோ அரசாளத் தகுதியானவன்?' என்று எண்ணினான்.

மன்னன் வாசன் மெள்ளக் கூட்டத்தின் முடிவில் நுழைந்து நசிகேதனை நோக்கி முன்னேறினான். "இந்தச் சிறுவன் இவ்வுலகின் தலவன். இவனை இனியும் என் பிள்ளையாக, இளவரசனாக எண்ணுவது பொருந்தாது. இவனுடைய தலைமை எனக்கும், என் மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் தேவைப்படுகிறது. இவன் சிறந்த மன்னனாவான்" என்று நினைத்தபடி நசிகேதனருகே சென்றான் வாசன்.

நசிகேதனின் அண்மையில் வந்ததும் வாசன் சற்றுத் தயங்கினான். "பற்றறுத்தல் பற்றிப் பேசியவன் பதவியை விரும்பி ஏற்பானா? மறுத்து விட்டால்? இந்த மக்களின் அறிவுக்கண்களைத் திறந்தது போதும் என்று இருந்து விட்டால்? அனைவர் முன்னிலையில் என் விருப்பத்தை நிராகரித்து விட்டால் எனக்கு அவமானமாயிற்றே?" என்று நினைத்தான்.

அடுத்தக் கணங்களில் தானே முனைப்பானான். "இருக்காது. மக்களின் நலனில் அக்கறை உள்ளவன். நசிகேதனால் என் நாட்டு மக்களுக்கு மட்டுமா உய்வு? இவனுடைய அறிவும் அமைதிப் போக்கும் உலகுக்கே நல்லதாயிற்றே? அரசபதவியில் இவனால் மேலும் சாதிக்க முடியும். நிச்சயம் பதவியை ஏற்றுக் கொள்வான். அப்படியே ஏற்காவிடினும் அவமானம் இல்லை. ஏற்றாலோ அனைவரையும் போல் மகிழ்வேன்" என்று அமைதியானான்.

மன்னன் வாசனுக்குத் தான் புரிய வேண்டியது புரிந்தது. நிறைந்த மனதுடன் நசிகேதனை நெருங்கினான்.

நான்காம் பகுதி முற்றும்

2012/04/01

மரண ரகசியம்


88
புலனைந்தும் பூட்டிப் புறமாறும் போக்கப்
பலனேழும் எட்டுமென்ற புத்தன் - புலப்பகையில்
தன்னறிவும் ஒன்றிநிற்கும் உன்மனியின் உத்தமத்தை
நன்றுரைத்தே நின்றான் நயந்து.

   ந்து புலன்களையும் கட்டி ஆறு புறங்களையும் மறந்த யோகத்தில் ஏழு பலன்களையும் அடையலாம் என்ற ஞானி (நசிகேதன்), ஐம்புலன்கள் அடங்கிய நிலையில் அறிவையும் அடக்கும் (சமாதியெனும்) பெரும் யோக நிலையின் சிறப்பை மிகுந்த விருப்பத்தோடு தெளிவாக (அவையறிய) விளக்கினான்.


புலனைந்து: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து உணர்ச்சிக் கருவிகள்
புறமாறு: மேல், கீழ், இடம், வலம், முன், பின் எனும் நம்மைச் சுற்றிய ஆறு புறங்கள்
பலனேழு: ஒழுக்கம், மலமொழிப்பு, உடல்நலம், மனநலம், பற்றறுப்பு, பக்குவம், மெய்யறிவு எனும் ஏழு பலன்கள்
புத்தன்: பேரறிவு பெற்றவன் (நசிகேதனைக் குறிக்கும்)
புலப்பகை: ஐம்புலன்களை அடக்கிய நிலை
உன்மனி: அனைத்தையும் அடக்கிய யோக நிலை



    கிழவி மறைந்தத் திசையைக் கவனித்த நசிகேதனுக்கு அவள் யார் என்று புரிந்தது. அவையோருக்குச் சொல்ல வேண்டிய இன்னொரு முக்கியமான பாடம் என்னவென்று புரிந்தது. "இன்னும் நான் சொல்ல வேண்டிய நுண்மை ஒன்று உள்ளது. மனிதகுலம் அறிய வேண்டிய நுட்பம். நம் எல்லோராலும் அறியக் கூடிய நுட்பம். இறப்பைப் பற்றிய உங்கள் கேள்விகளையும் கவலைகளையும் குழப்பங்களையும் போக்கடிக்கும் நுண்மையிதை விளக்குகிறேன்" என்று உற்சாகத்தோடு தொடங்கினான். "முதலில் ஒரு கேள்வி.." என்ற நசிகேதனை ஆவலோடு கவனித்தது அவை.

"என் அருமைத் தந்தையே! அரச குருக்களே! ஞானிகளே! அன்பார்ந்த மக்களே! இதுவரையில் நாம் படித்தப் பாடங்களில் உங்கள் மனதில் நிற்பது என்னவென்று சொல்வீர்களா?" என்றான்.

நசிகேதன் முடிக்கும் முன்னரே, "இருப்பதையெல்லாம் இல்லையென்றாய் எல்லாம் தெரிந்தவன் போல, வேறென்ன?" என்றார் ஒரு மதகுரு.

"சும்மா இருமய்யா. இதுவரை நீர் தான் அப்படிச் சொல்லியிருக்கிறீர் என்பது எமக்கு விளங்கி விட்டது!" என்று அவரை அடக்கினர் ஒரு சிலர்.

சிறிது தயக்கத்துக்குப் பின், "இளவலே! சொர்க்கத்தையும் பிறவாமையும் வேள்விகள் தரா. நம் மனதின் ஒழுக்கமே மேன்மையறியும் வேள்வி. முக்திக்கான வேள்வி. மனிதம் பற்றிய அறிவே மேன்மை என்றீர்கள்" என்றார் ஒரு ஞானி.

அவர் அமர்ந்த திக்கை நோக்கி வணங்கினான் நசிகேதன்.

"அய்யா! சொர்க்கம் நரகம் என்று தனியாக எதுவுமில்லை. இங்கேயே இருப்பது தான் சொர்க்கமும் நரகமும் என்றீர்கள்!" என்றார் இன்னொருவர்.

தயக்கம் விலகி, அவையினர் பலர் தங்கள் கருத்தைச் சொல்லத் தொடங்கினர்.

"பிறப்பும் இறப்பும் தோன்றி மறையும் சூரியனைப் போன்ற சுழற்சி. ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்கான பயணமே பிறவி"

"நம்முடைய உடலும் மனமும் இயல்பில் புறத்தையே நாடுகிறது. அவற்றை அடக்கி ஒடுக்குவதே சொர்க்கத்தின் திறவுகோல்"

"உறங்கும் நிலையில் புலன்களை மறந்திருப்பது போலவே உறங்காத நிலையிலும் புலன்களைக் கட்டப் பயிற்சி செய்ய வேண்டும்"

"ஓட்டைப் பையான இந்த உடல் அழியும் முன்பே மனதைச் சுத்தமாக்கி மேன்மை பெற வேண்டும்"

"இருமைகளின் ஒருமையை அறிந்தால் அமைதி காண முடியும்"

"ஆன்மாவை அறிவதால் அனைத்து ஒளிகளையும் அறியச் செய்யும் பேரொளியை அறியலாம்"

"நன்று!" என்று அவர்களை வணங்கினான் நசிகேதன்.

"இன்னும் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பீர்களா? அல்லது முக்கியமான பாடமென்று சொல்ல வந்ததைச் சொல்லப் போகிறீர்களா?" என்றார் ஒரு அரசகுரு.

நசிகேதன் புன்னகைத்தான். "அன்பர்களே! இதுவரை நான் உரைத்தவற்றை மிக ஆவலோடும் பொறுமையோடும் கேட்டுப் புரிந்து கொண்டு என் ஆசானுக்குப் பெருமை சேர்த்தீர்கள். உங்களுக்கு என் நன்றி!" என்று வணங்கினான். தொடர்ந்தான். "ஐந்து, ஆறு, ஏழு என்பதை நினைவில் வையுங்கள். ஐந்து புலன்கள், ஆறு புறங்கள், ஏழு பலன்கள்.

"மெய், வாய், கண், மூக்கு, செவியெனும் புலன்களைப் பற்றியும் அவற்றின் இயல்புகளையும் அறிந்தோம். பிறப்பிற் திறக்கும் புறத்தே தறிக்கும் உறுப்பு என்றோம். இறக்கும் வரையிலும் புறத்தையே இயல்பாக நாடுகின்றன. அதனால் அவை புலனுகர்ச்சிக்கானக் கருவிகளாகவே இயங்குகின்றன.

நம்மைச் சுற்றி ஆறு புறங்கள் உள்ளன. நமக்கு மேல், கீழ், இடம், வலம், முன், பின் எனும் இந்த ஆறு புறங்களின் ஊடுறுவல்கள் புலனுகர்ச்சியாகப் பரவுகின்றன. நம்மைச் சுற்றிய நிகழ்வுகளின் நாயகர்கள் நாமே. இயக்குனர்கள் நாமே. இயங்குவோரும் நாமே. அதனால் உண்டாகும் பலன்களை நுகர்வோரும் நாமே. மகிழ்வோரும் நாமே. மனமுடைந்து வருந்துவோரும் நாமே. இது மாயச் சுழற்சி. இந்த நுகர்ச்சிகளின் விளவாக ஆசை, பாசம், பந்தம், பொறாமை, பகை எனப் பலவாறு சிக்கித் தவிக்கிறோம்.

இவ்வாறு ஐந்தும் ஆறும் நம்மைப் பெரும் துயரப்பாதையில் கொண்டு சென்றன. செல்வன. செல்லக்கூடியன. இவற்றை அறிந்து அடக்க வேண்டும். அடங்க வேண்டும். ஐந்து புலன்களையும் கட்டி ஆறு புறங்களையும் மறக்க மூச்சடக்கிப் பழக வேண்டும் என்றேன். தொடர்ந்தப் புலனடக்கப் பயிற்சியின் விளைவாக ஐந்தையும் ஆறையும் ஒன்றாக்கிக் கட்டி, ஓரத்தில் போட முடியும். புலன் கட்டிய புறம் மறந்த அகத்தை அறிய வேண்டும்.

தொடர்ந்தப் பயிற்சியினால் நாம் ஏழு வகைப் பலன்களைப் பெற முடியும். நாம் நம் புலன்களைக் கட்டுவதானால் ஒழுங்குறுகிறோம். புலனுகர்ச்சித் தேடல்களின் நன்மை தீமைகளை அறியத் தொடங்குகிறோம். அந்த அறிவின் பயனாக, ஆசை கோபம் பொறாமை போன்ற தீக்குணங்கள் தாமாகவே வெளியேறுகின்றன. புலன்களைக் கட்டியதால் உடல்நலமும், மலங்கள் வெளியேறிதால் மனநலமும், கூடுகிறது. இவற்றின் தொடர்ந்த பாதிப்பினால் தீக்குணங்கள் மட்டுமல்லாது அவை உருவாகத் தூண்டுதலாக அமையும் பந்தம் பாசம் சுயநலம் போன்ற பற்றுகள் மறையத் தொடங்குகின்றன. இருமைகளில் ஒருமையைக் காணும் பக்குவம் வளர்கிறது. பக்குவம் வளர்ந்து மனதில் பெரும் அமைதி உண்டாகிறது. தொடர்ந்த அமைதியின் பலனாக, தன்னறிவு எனும் மெய்யறிவைப் பெற முடிகிறது.

சுழத்தி எனும் உறக்க நிலை பற்றி முன்னர் சொன்னேன். புலன் புறம் அடங்கிய நிலைக்கு எடுத்துக்காட்டான உறக்க நிலை. அந்நிலையில் புலன்கள் இயங்குவதில்லை. புறங்கள் அன்னியமானவை. பெரும் அமைதியான நிலையில் உடல் அடங்கி மனம் அடங்கி நிற்கிறது.

மெய்யறிவைப் பெறுவதும் அது போன்ற செயலே. உறங்காத நிலையிலும் புலன்களைக் கட்டி, புறங்களை மறந்து, ஆழ்ந்த அமைதியிலே மெய்யறிவைத் தேடி ஆன்மாவை அறியும் யோக நிலை.

உறக்க நிலையில் அறிவு தொடர்ந்து இயங்குகிறது. யோக நிலையிலே அறிவையும் அடக்கி, புலன் புறம் அறிவு என மூன்றும் அடங்கிய நிலையில் ஆன்மாவுடன் ஒன்றாகி இணைந்த அமைதியான நிலைக்குச் சமாதி என்று பெயர்.."

"ஐயா.. அது இறந்தவர்களுக்கு வழங்கும் பெயர் அல்லவா?" என்றார் ஒருவர்.

"இந்தப் பிள்ளை சொல்வதைக் கேட்டால் நமக்கு என்னவாகும் என்று தெரிந்தால் சரிதான்!" என்றார் ஒருவர்.

"சும்மா இருமய்யா. இளவலே, நீங்கள் தொடருங்கள். சமாதி அடைந்தவர்களை உணர முடியும் அறிய முடியும் என்று சொல்வார்களே? சமாதியில் இருப்பவர்கள் உண்மையில் இறக்கவில்லை என்றுகூடச் சொல்கிறார்களே?"

நசிகேதன் தொடர்ந்தான். "நீங்கள் சொல்வது உண்மையே. இறந்தவர்களைச் சிலநேரம் அப்படி வழங்குகிறோம். சமாதி அடைந்தவர்கள் இறக்கவில்லை என்றும் சொல்கிறோம். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர்கள் பிறப்பதும் பயிரின் சுழற்சி போன்றது என்பதை நாமறிவோம். அதனால் இறந்தார்களா என்ற கேள்வியை ஒதுக்குவோம்.

பிறப்பையும் இறப்பையும் புரிந்து கொள்ள முடியாமல் அதை மாபெரும் சக்தியொன்றின் செய்கை என்று கண்மூடுகிறோம். இறப்புக்கு அஞ்சி வேள்விகள் புரிகிறோம். பிறப்பை வேண்டி வேள்விகள் புரிகிறோம். பிறப்பிலோ இறப்பிலோ அதிசயமில்லை. அச்சமில்லை. மாபெரும் சக்தி ஒன்று உண்டென்றால் அது நம்முள் இருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டே சமாதி எனும் யோக நிலையின் விளக்கம்.

உறக்கம் மரணத்தின் முன்னோட்டம் என்பார்கள். ஏன்? உறங்கும் நிலையில் நம்மைச் சுற்றிய நிகழ்வுகளை அறிய முடியாது. நம் உணர்வுகள் அடங்கி விடுகின்றன. விழித்தெழும் உத்தரவாதம் இல்லை. அந்நிலையில் மூச்சு மட்டுமே உறக்கத்துக்கும் மரணத்துக்குமானப் புற வேறுபாடாக இருக்கிறது. அறிவு மட்டுமே உறக்கத்துக்கும் மரணத்துக்குமான அக வேறுபாடாக இருக்கிறது. அவற்றையும் அடக்க முடிந்தால்?

அதுவே அக மேன்மை. சமாதியெனும் அக மேன்மை. மனிதம் மரண ரகசியத்தை அறியும் மகத்தான தருணம். புலன்களையும் புறங்களையும் கட்டி அறிவையும் அடக்கி அகத்துள் உழலும் ரகசியம். அதில் அச்சமேதும் இல்லை. அமைதியே உண்டு.

மிக உன்னதமான யோக நிலையைப் பழகியவர்களே இதை அறிய முடியும். எல்லாம் அடங்கிய நிலையிலே எல்லாம் தொடங்குகிறது! எல்லாம் அடங்கிய நிலையில் எல்லாம் தொடங்கும் ஒருமையை அறிய முடிவது எத்தனை மகத்தானது!

இந்தச் சக்தியை மனிதம் உணர முடியும். எனினும், நமக்குள் அடங்கியிருக்கும் மாபெரும் சக்தியை அறிய முடியும், நம்முள்ளிருக்கும் அனைத்தையும் அடக்கும் சக்தியை அறிந்து.. விரும்பினால், அதற்குள் அடங்க முடியும் என்பதே சமாதி நிலையின் மெய்ப்பொருள்.

இச்சக்தி மனிதத் தேடலுக்குட்பட்டது என்பதே மகத்துவமான உண்மை. அதுவே மெய்யறிவு. மனிதரைக் காட்டிலும் தெய்வமில்லை எனும் மகத்துவம்" என்றான்.

உரையை முடித்த நசிகேதன், தன் ஆசானை எண்ணி நீண்ட அமைதி காத்தான். அவையோரை வணங்கி நின்றான்.

அமைதியாக இருந்த அவையில் திடீரென்று ஒலிவெள்ளம். நசிகேதனின் கருத்துக்களை விவாதிக்கத் தொடங்கினர். பலர் நசிகேதனை வணங்கினர். பாராட்டினர். "எம்மை உய்ப்பிக்க வந்த உத்தமரே!" என்று அவனை உச்சிமோந்து களித்தனர்.

நசிகேதனின் உரையைக் கேட்டும், அவையினரின் போக்கைக் கண்டும், அகமகிழ்ந்த வாசனின் மனதில் பெரும் அமைதி நிலைவியது. சிறு எண்ணம் உதித்தது.

2012/03/23

ஆன்மா எனும் பேரொளி


87
கதிருங் கணப்பொறியுங் கங்குல் கலையுங்
கதிர்க்குங் கணங்களுங் கங்குல் - கதிநாடிக்
கட்கிலியைக் கண்பெறுங் காலையிற் காரிரியக்
கிட்டுங் ககனக் கனல்.

   திரவனும் மின்னலும் இருளே. நிலவும் ஒளிவீசும் விண்மீன்களும் இருளே. தன்னறிவைத் தேடி, எளிதில் புலப்படாத ஆன்மாவை அகத்தே அறியும் வேளையில் அண்டத்தின் இருளகற்றும் ஒளி பிறக்கும்.


கதிர்: கதிரவன்
கணப்பொறி: மின்னல்
கங்குல்: இருள்
கலை: நிலவு
கதிர்க்கும்: ஒளி வீசும்
கணங்கள்: விண்மீன்கள்
கதி: தன்னறிவு
கட்கிலி: புலப்படாதது
கண்பெறும்: அகத்தே அறியும்
காலை: வேளை
கார்: இருள்
இரிய: விலக
ககனம்: அண்டம்
கனல்: சுடர், ஒளி


    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! ஒளியைப் பற்றி முன்னர் சொன்னதை நினைவில் நிறுத்துங்கள். ஆன்மா ஒளியைப் போன்றது. நம் குணங்களின் அழகையோ அழுக்கையோ அறியச் செய்கிறது. ஒளியிலிருந்து விலகுமுன் அழுக்கையகற்ற வேண்டும் என்றேனல்லவா? மேலும் சொல்கிறேன் கேளுங்கள். ஆன்ம ஒளியின் முன்னே மற்ற ஒளிகள் எல்லாம் இருளாகும்"

"என்ன சொல்கிறீர்கள்?"

"ஆம்! பழம் போல் சிவந்து நீர் போல் வெளுத்து வானில் ஒளி தரும் கதிரவனுக்கு ஒளியைக் கொடுத்தது யார்? குளிர்ச்சியைத் தரும் நிலவின் ஒளி எங்கிருந்து வந்தது? அழகாகத் தோன்றும் அதே நேரம் அச்சத்தையும் தரும் மின்னலைப் பார்க்கிறோம். மின்னல் ஒளியை எங்கிருந்து பெற்றது? இரவிலே கண்ணுக்கும் மண்ணுக்கும் குளிர்ந்த ஒளியைத் தரும் விண்மீன்கள் வானில் வைரங்களாக மின்னுகின்றனவே? அந்த வைர ஒளி எங்கிருந்து வந்தது?" என்று அவையினரைக் கேட்டான் நசிகேதன்.

"இதென்ன, கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கிறது இந்தப் பிள்ளை? சொர்க்கம் பற்றி ஏதாவது சொல்லுமென்று பார்த்தால்..."

"ஐயா மகா ஞானியே... இளவல் ஒரு வேளை சொர்க்கத்தைப் பற்றித்தான் சொல்கிறார் போலிருக்கிறது.. சற்றுச் செவிமடுத்துக் கேட்போம்..."

"சூரியனுக்கு ஒளி எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கும் சொர்க்கத்துக்கும் என்னய்யா தொடர்பு? பாமரர்களை ஞானச்சபையிலே அனுமதித்தால் இப்படித்தான்.."

"என்னதான் சொல்கிறார் இளவரசர் என்று கேட்போமே ஐயா.."

நசிகேதன் அவையோரைப் பார்த்துப் புன்னகைத்தான். "என் கேள்வியை மதித்துச் சிந்தித்ததற்கு நன்றி" என்றான். தொடர்ந்தான். "சொர்க்கத்தில் உள்ளதே இங்கே இருக்கிறது. இங்கிருப்பதே சொர்க்கத்தில் உள்ளது என்றேன் அல்லவா?"

"சொர்க்கத்தில் சூரியன் ஒளி இன்னும் அதிகமோ?"

"சொர்க்கத்திலும் சூரிய ஒளி இல்லை. இங்கேயும் சூரிய ஒளி இல்லை"

"என்ன?"

"ஆம்! சொர்க்கத்தில் சந்திரனுக்கு ஒளியில்லை. இங்கேயும் ஒளியில்லை. சொர்க்கத்தைப் போலவே இங்கும் மின்னல்களும் விண்மீன்களும் மையிருளானவை. அவ்வளவு ஏன்? தீச்சுடருக்குக் கூட சொர்க்கத்திலோ இங்கேயோ ஒளியில்லை"

"சற்றுமுன் தானே ஐயா ஒளி எங்கிருந்து வந்தது என்று கேட்டீர்கள்? இப்போது ஒளியில்லை என்கிறீர்களே? அரச மைந்தன் என்ற காரணத்துக்காக எங்களையும் பாமர மக்களையும் இப்படிக் குழப்புவதைப் பொறுக்க முடியாது..."

"மன்னிக்க வேண்டும் அரச குருவே!" என்றான் நசிகேதன். "நான் யாரையும் குழப்ப எண்ணவில்லை. என் ஆசான் எனக்கு விளக்கியதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனுமதியுங்கள்" என்றான்.

பிறகு அவையோரைப் பார்த்து, "அன்பர்களே! ஆன்மா என்பது ஒளிப்பிழம்பாகக் கூடியது. நம்முள் முடங்கிக் கிடக்கையில் குன்றியிருப்பது. தன்னையறிந்து ஆன்ம ஒளியை வளர்க்க வேண்டும். அந்த ஒளிதான் சூரியனுக்கும் சந்திரனுக்கும் மின்னலுக்கும் விண்மீன்களுக்கும் தீச்சுடருக்கும் ஒளியாகிறது.

நாம் நிதம் காணும் சூரியனும் சந்திரனும் மின்னலும் தீயும் தாரகைகளும் புற ஒளிகள். புற ஒளிகளைப் புரிய வைப்பதும் அறிய வைப்பதும் அறிவாகும். அன்பர்களே! வாழ்வின் குறிக்கோள் மெய்யறிவு எனும் தன்னறிவைப் பெறுவதாகும். வாழ்வின் அத்தனை இயக்கங்களிலும் உண்மை எனும் மெய் இழைந்திருக்கிறது. வாழ்வது, உண்மையை அறியத்தானே தவிர வேறெதற்குமில்லை.

வாழ்வின் அத்தனை இயக்கங்களிலும் பொய்மை எனும் போலியறிவும் இழைந்திருக்கிறது. பொய்மை, கண்மூடித்தனங்களையும் பலனற்ற செயல்களையும் மனித நேய அழிவையும் வளர்க்கிறது. பொய்மையை அறிந்து அகற்ற வேண்டும். உண்மை எனும் மெய்யறிவைப் பெறும் பொழுது பொய்யறிவு தறிகெட்டு ஓடித் தங்க இடமில்லாமல் அழியும்.

ஆனால் நாம் பொய்யறிவை நம்பி உண்மைகளைப் புறக்கணிக்கிறோம். உண்மையான அன்பு, உண்மையான பாசம், உண்மையான நேயம், உண்மையான உடைமை போன்றவற்றை அறிய மறுக்கிறோம். பொய்மை ஆழமாகக் குடியிருக்கும் மனங்களில் உண்மையறிய வாய்ப்பேயில்லாது போய்விடுகிறது. மெய்யறிவுப் பாதையிலே அடியெடுத்தும் வைக்காமல் வாழ்வின் பொருளையறியாமல் வாழ நேரிடுகிறது.

பொய்மையில் உழலத் துணிவு தேவையில்லை. எந்த முயற்சியும் தேவையில்லை. ஆனால் உண்மையறியத் துணிவு வேண்டும். விடாமுயற்சி தேவை. உண்மையை அறிந்தக் கணத்தில் பொறி தட்டுகிறது. உண்மையின் ஒளி மகத்தானது. உண்மையின் பொறி தீயாகப் பரவி வாழ்வின் அத்தனைக் கேடுகளையும் தீக்குணங்களையும் போலிப் பற்றுக்களையும் பொய் நம்பிக்கைகளையும் அழிக்கத் தொடங்குகிறது. மனம் புடமிட்டப் பொன்னாகிறது. அகவொளியை அறியத் தொடங்கிய கணத்தில் புற ஒளிகளின் இருள் புரியத் தொடங்குகிறது.

வாழ்வின் இந்தத் தேவையை உணர்ந்து, மதித்து, அதைத் தேடுவோர் சிலரே. தேடுதலில் பற்று வைத்துத் தீவிரமாக முனைவோர் மிகச் சிலரே. முனைப்பைக் கைவிடாது புலனைக் கட்டித் தன்னறிவைப் பெறுவோர் இன்னும் சிலரே. தன்னறிவைப் பெற்ற நிலையில்.. அந்த அமைதியில்.. ஆன்மாவை, தன் உண்மையான சக்தியை, அறியத் தொடங்குவோர் அரிதானவர்.

இது எளிதன்று. எளிதன்று என்ற காரணத்தினால் முயற்சியைக் கைவிடுவது ஒரு சாபம் போன்றது. வருந்தத்தக்கது. வேதனைக்குரியது.

சற்று சிந்திப்போம். பிறப்பும் இறப்பும் யாதென்று அறிந்தோம். ஆன்மா கருவில் சேர்ந்தக் கணத்தில் உயிர் துடிக்கத் தொடங்குகிறது. ஆன்மா பிரியும் கணத்தில் உயிரடங்குகிறது. உயிரற்ற நிலையில் சூரிய ஒளியை அறிவோமா? சந்திர ஒளியை அறிவோமா? அப்படியெனில், உயிருடன் இருக்கையில் நாம் அறியும் ஒளிகளுக்கு ஒளியைக் கொடுத்தது ஆன்மா தானே?

ஒளிகளுக்கெல்லாம் ஒளியை வழங்கி ஒளிக்கப்பாற்பட்ட ஒளியாக விளங்கும் ஆன்மாவை அறிந்தக் கணத்தில் எந்த ஒளியுமே ஒரு பொருட்டில்லை. உயிர் பிரியும் அந்தக் கணத்தில் ஆன்மா ஒளிப்பிழம்பாக விளங்கும் வகையில் வாழ்வோம். இதுவே மெய்யறிவு. இதுவே சொர்க்கம். நாமே அந்த ஒளி. தன்னறிவே அந்த ஒளியின் சுடர். நாமே சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளியை வழங்கும் சக்தி. மனித சக்தியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பிழம்பாக வாழ்வோம். இருள் படியாமல் வாழ்வோம்" என்றான்.

அவையோர் தங்களுக்குள் பேசத்தொடங்கி அடங்கினர். நசிகேதன் சொன்ன பொருளில் ஆழங்களைத் தேடினர். முன்பு தோன்றிய கிழவி மீண்டும் கூட்டத்திலிருந்து முன்னேறி வந்தாள். நசிகேதனின் அருகே வந்து புன்னகைத்தாள். "ஐயா.. நீ பெற்ற அறிவை அனைவருடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் ஒரே ஒரு கேள்வி என் மனதில் தோன்றியது..." என்றாள்.

நசிகேதன் கிழவியை வணங்கினான். "சொல்லுங்கள்.. உங்கள் மனதில் தோன்றியதைக் கேளுங்கள்" என்றான்.

"ஐயா. மெய்யறிவு பற்றிச் சொன்னீர்கள். ஒளியைப் பற்றிச் சொன்னீர்கள். தன்னறிவு ஆன்மா என்றெல்லாம் சொன்னீர்கள். நானோ வயதானவள். இன்றைக்கோ நாளைக்கோ என் உயிர் பிரியும் நிலையில் இருக்கிறேன். எனக்குத் தன்னையறியவும் ஆன்மாவை அடையாளம் காணவும் ஆசை... உயிர் பிரியும் அந்தக் கணத்தைப் பற்றி ஏதாவது அறிய முடியுமா ஐயா?" என்றாள்.

நசிகேதன் சிந்தித்தான். கிழவி கேட்டக் கேள்வியின் நோக்கம் என்ன? உயிர் பிரியும் தருணத்தை அறிய முடியுமா என்று கேட்கிறாரா? உயிர்ப்பறவை எப்போது பறக்கும் என்று யாராலும் சொல்ல இயலாதே? பிறகு இந்தக் கேள்வியை என் முன் வைப்பானேன்? நசிகேதன் கிழவியை மீண்டும் வணங்கினான். "ஆன்மாவை அறியக்கூடிய அந்தக் கணத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்பது புரிகிறது. மகான்கள் அனைத்தையும் அடக்கி ஆன்மாவை அறியும் சமாதி எனும் நிலையை அடைந்திருக்கிறார்கள். புலனை அடக்கி மூச்சைக் கட்டி.. எல்லாம் அடங்கிய நிலையான சமாதி எனும் நிலை பற்றிச் சொல்கிறேன்" என்றான்.

"நன்றி ஐயா" என்ற கிழவி, நசிகேதன் பார்வை தொடரும் பொழுதே கூட்டத்தில் கரைந்து மறைந்தாள்.


          கடோவின் மிகச் சிறந்த, நுண்மையான பாடல் இது. வடமொழிப் பாடலை இதுவரை நூறு முறையாவது படித்திருப்பேன் என்றால் மிகையாகாது. சூட்சுமம் புரிந்து கொண்டே இருக்கிறது :)

பாடலின் சாரம் தமிழில் சரியாக வெளிவரவில்லையெனில் அதற்கு நானே பொறுப்பு. மொழி தெரிந்தால் இன்னும் உன்னலாம் எனினும் கருத்தின் அற்புதம் மொழிக்கப்பாற்பட்டது என்பதால், வடமொழிப் பாடலின் நேர் தமிழ் வடிவத்தைத் தருகிறேன்:

அங்கே சூரியனும் பிரகாசிப்பதில்லை; சந்திரனும் தாரகைகளும் பிரகாசிப்பதில்லை; மின்னல்களும் ஏன் தீயும் பிரகாசிப்பதில்லை. அவன் பிரகாசிக்கும் பொழுது எல்லாம் பிரகாசிக்கின்றன; அவனுடைய ஒளியால் இவை எல்லாமே பிரகாசிக்கின்றன.

வடமொழிப் பாடலில் 'அவன்' என்று குறிப்பிடப்படுவது ஆன்மா. சூட்சுமக் குறிப்பு.

ஒன்றிரண்டு கருத்துக்களை மட்டும் தெரிவித்து மற்றதை உங்கள் சிந்தனைச் சுகத்துக்கே விடுகிறேன்.

கடோவுக்குப் பிறகு எழுதப்பட்டதான கீதையில் "என்னிலிருந்தே எல்லா ஒளியும் உண்டாகின்றது" என்று கண்ணன் சொல்வதாக வருகிறது. ஒளி உணரப்படுவதா, அறியப்படுவதா? ஒளி என்பது அறியப்படுவதாகும். சூரிய சந்திரனின் ஒளி இப்படிப்பட்டது என்று அறியமுடிகிறது. கண்கள் சூரியனைப் பார்த்ததும் நம் அறிவு நமக்கு அது ஒளி தருகிறது என்று அறிய வைப்பதால், சூரியன் ஒளி தருகிறது என்கிறோம். எனவே, இங்கே சூரியனின் 'ஒளி'த்தன்மைக்குக் காரணமாயிருப்பது சூரியனா, நம் அறிவா? குருடன் ஒளியை அறிவது எப்படி? ஆன்மா எனும் ஒளியை அகக் குருடர்களாகிய நம்மால் அறிய முடியுமா?

2012/03/16

ஆன்மா சேருமிடம்


86
அருவி லரியுங் கருவிற் சரியு
முருவி லிரியு மிருந்து - சுருளும்
நுருவி னொருமை புரிந்தா ரிருப்பார்
திருவிற் துரியந் தெரிந்து.

   (உடலைப் பிரிந்த ஆன்மா) அணுவாக அண்டத்தில் திரிகிறது; சில நேரம் அறுந்து இன்னொரு கருவில் விழுந்து உடலில் தங்குகிறது; தங்கினாலும் உடலிலிருந்து வெளியேறுகிறது. பூ காயாகிக் காய் கனியாகி வெடித்து விதை பரவி முளைத்து மீண்டும் பூப்பது போன்ற பிறப்பிறப்பின் சுழற்சி, உண்மையில் ஒருமையே என்று புரிந்தவர்கள் அமைதியும் தன்னறிவும் பெற்று வாழ்வார்கள்


அருவில்: அணுவில், அணுவாக
அரியும்: உலவும், பிரியும், தனிப்படும்
கருவில்: கருப்பையில்
சரியும்: விழும், தங்கும்
உருவில்: உடலில்
இருந்து: தங்கி
இரியும்: பிரியும், பறக்கும், வெளியேறும்
சுருளும்: சுற்றும், சுழலும்
நுருவின்: காய் பழுத்து வெடித்துப் பிஞ்சாவதை, பயிரறுத்துத் தளிர் தோன்றுவதை (நுரு)
ஒருமை: ஒன்றிலடங்குவது
திருவில்: அமைதி நிலையில்
துரியம்: தன்னறிவு தோன்றும் யோகநிலை, மேன்மை, கடவுள்



    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! 'இறந்த பின் நிகழ்வதென்ன? உயிர் எங்கே போகிறது? ஆன்மாவுக்கு என்ன ஆகிறது' என்று பல கேள்விகள் கேட்டீர்கள். என் ஆசானிடமிருந்து நான் அறிந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்.

இறந்தக் கணத்தில் உயிரெனும் மூச்சுக்காற்று அடங்குகிறது. ஆன்மா உடலிலிருந்துப் பிரிகிறது. உடலிலிருந்துப் பிரிந்த ஆன்மா அண்டத்தில் அணுவாகிறது. சிற்றலை பேரலை எனும் உதாரணங்களை முன்பு சொன்னேனல்லவா? வலிமையான சிற்றலை பேரலையோடு சேர்ந்து இன்னும் வலிமையானப் பேரலையாவது போல ஆன்மா பேரான்மாவின் தேடலில் ஈடுபட்டுச் சேர்கிறது. சில நேரம் பேரலை அடங்குவது போலவே, அணுவிலிருந்து பிரிந்த ஆன்மா மீண்டும் இன்னொரு கருவில் விழுகிறது. கருவில் சேர்ந்த ஆன்மா மீண்டும் பிறவியின் பாதையில் பயணம் செய்கிறது. ஆன்மா அங்கேனும் தொடர்ந்து தங்கியிருக்கிறதா என்றால் இல்லை. தங்குவதில்லை. மீண்டும் உடலிலிருந்து வெளியேறி அண்டத்தில் கலக்கிறது. இந்த சுழற்சி இயல்பானது. பிறப்பும் இறப்பும் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஒன்றே. எது தொடக்கம் எது முடிவு என்று அறியவியலாத சுழற்சி.

பயிரறுந்து மீண்டும் தளிராவதை நுருவென்கிறோம். பிறப்பிறப்பும் நுருவே. இந்த உண்மையை உணருவீர். முற்றிலும் உணர்ந்தால் பிறப்பு இறப்பு எனும் பேதங்களைத் துறப்போம். இறப்பினால் துக்கமுமில்லை, பிறப்பினால் மகிழ்ச்சியுமில்லை.

ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்திற்கானப் பயணத்தில் இளப்பாறத் தங்கும் நிழல் போன்றது பிறப்பு. ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்திற்கானப் பயணமெனில், எந்த மரணத்துக்காக அஞ்சுவது? அழுவது? ஆர்ப்பரிப்பது? ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்கான பயணமெனில், எந்த மரணத்தைத் தொடர்ந்து சொர்க்கம் வரும்? நரகம் வரும்? எந்த சொர்க்கத்துக்காக வேள்விகள் செய்வது? எந்த நரகத்தைத் தவிர்க்க வேள்விகள் செய்வது?

இந்த உண்மையை ஆழ்ந்து அறிந்தோமானால் மரணத்துக்கு அஞ்ச மாட்டோம். அஞ்சிக் கண்மூட மாட்டோம். பாவ புண்ணிய சொர்க்க நரக நாடகங்களில் பங்குபெற மாட்டோம். இளைப்பாறக் கிடைத்த நிழலின் பெருமையை உணர்ந்து நடக்கப் பழகுவோம். நம்முள் புதைந்திருக்கும் மெய்யறிவானத் தன்னறிவைத் தேடத் தொடங்குவோம்.

ஒளி வீசுகிறது. வீசுகிற ஒளியில் வந்து விழுகிற பொருட்களைப் பற்றி ஒளிக்குத் தெரியாது. ஒளியில் விழும் தருணத்தில் பொருளின் தன்மை புலப்படுகிறது. அழகை மேலும் அழகாக்குகிறது. அல்லது அழுக்கை இன்னும் அழுக்காக்கிக் காட்டுகிறது. ஒளியைக் கடந்ததும் பொருள் புலப்படுவதில்லை. அழகையோ அழுக்கையோ அறிய முடிந்த அந்தக்கணத்தில் ஒளியையும் சேர்த்தே அறிந்தோம். ஆன்மா ஒளியைப் போன்றது. நம் குணங்களின் அழகையோ அழுக்கையோ அறியச் செய்கிறது. ஒளியிலிருந்து விலகுமுன் அழுக்கையகற்றுவோம்" என்றான்.

சற்று இளைப்பாறினான். பிறகு அவையோரை நோக்கி, "உங்களுக்கு அச்சம் தருவது தீயா, நீரா?" என்று கேட்டான்.

"இதில் என்ன சந்தேகம்? தீயே அச்சமூட்டுவதாகும்" என்றனர் அவையினர்.

நசிகேதன், "உண்மை. தீ அச்சமூட்டுவதாகும். அண்டத்தில் தீயின் அணுக்கள் பரவியிருக்கின்றன. அண்டத்தில் நீரின் அணுக்களும் பரவியிருக்கின்றன. தீ வெளிப்படையாக எரிந்து கொண்டேயிருப்பதில்லை. ஒரு கணத்தின் உரசலில் தீயை அறிய முடிகிறது. தீயை அறிய முடிவதால் மட்டுமே தீயின் தன்மையை உணர முடிகிறது. நீர் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிந்தே இருப்பது. இரண்டின் தன்மைகளையும் நன்கு அறிவோம். எனினும், கண்ணுக்குத் தெரிந்த நீருக்கு நாம் அஞ்சுவதில்லை; கண்ணுக்குப் புலப்படாதத் தீயைக் கண்டு அஞ்சுகிறோம். கண்ணுக்குப் புலப்படாத தீ, கண்ணுக்குப் புலப்படும் நீரில் அடங்கி ஒடுங்கும் என்பது தெரிந்திருந்தும் நம் மனம் கண்ணுக்குப் புலப்படாததை எண்ணிச் சஞ்சலபடுகிறது. இந்த உண்மையை உணர்ந்தக் கணமே அச்சம் அழிந்துவிடும். அறிவு தெளிந்துவிடும்.

பிறப்பு இறப்பு, மகிழ்ச்சி துக்கம், செல்வம் வறுமை, ஒளி இருள், தீ நீர் என்று உலகில் எத்தனையோ வகை இருமைகளைக் காணலாம். அவை ஒருமையின் வெளிப்பாடுகளே என்று உணர்ந்தக் கணத்தில் உள்ளத்தில் பெரும் அமைதிக்கான வழி உண்டாகிறது. அந்த அமைதியைத் தொடர்ந்து வளர்த்தால் தன்னறிவு எனும் மேன்மையை அடையலாம்" என்றான்.

அவையில் அமைதி. நசிகேதனின் கருத்துக்கள் அவையோர் மனதில் பதியத் தொடங்கின.

2012/03/09

உடலெனும் மாயப் பை


85
பதினொரு பொத்த லதிசய மித்தன்
பதியறும் பத்து முதிரும் - விதியறி
மூச்சறு முன்னரே பேச்சிலும் வீச்சிலும்
ஆச்சிய மாச்சறு ஆறு.

   தினொரு துளைகளைக் கொண்ட அதிசயமாம் இவ்வுடலின் அரசனான ஆன்மா (மூச்சு நிற்கும் பொழுது) விலகும். அப்பொழுது ஐம்புலன்களும் ஐந்துணர்வுகளும் அழியும். இந்த உண்மையை அறிவீர். (அறிந்து) மூச்சு நிற்கும் முன்னரே உங்கள் சொல்லிலும் செயலிலும் கேவலத்தையும் குற்றத்தையும் அகற்றி அடங்குவீர் (என்றான் நசிகேதன்).


பதினொரு பொத்தல் அதிசயம்: உடல்1
பத்தும்: ஐந்து புலன்கள், ஐந்து உணர்வுகள்2
இத்தன்: இதன்
பதி: ஆளுனன், அரசன் (ஆன்மா, உயிர்)
அற: அற்றுப் போக, விலக, விடுபட
விதி: உண்மை
ஆச்சியம்: கேலிக்குரியது, கேவலமானது
மாச்சு: குற்றம்
ஆறு: அடங்கு
1 மனித உடலின் பதினொரு துளைகளாவன: உச்சந்தலை அல்லது கபாலம் ஒன்று, கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, மூக்குத்துளை இரண்டு, வாய் ஒன்று, தொப்புள் ஒன்று, குய்யம் ஒன்று, குதம் ஒன்று (கபாலம் துளையல்ல என்பாரும் உண்டு)
2 ஐம்புலன்களாவன: மெய், வாய், கண், மூக்கு, செவி | ஐந்துணர்வுகளாவன: தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் (புலனுகர்ச்சியால் உருவாகும் ஆசை, பாசம், மகிழ்ச்சி, வருத்தம், கோபம் எனும் ஐந்து வேர் உணர்வுகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்)


    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! நாமே உருவாக்கி நாமே சிக்கித் தவிக்கும் கண்மூடித்தனங்கள் பற்றியும், நிலையாமை மற்றும் மனித இயல்புகள் பற்றியும், நான் கற்றதை சில கதைகள் வழியே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இனி நாமே குழி வெட்டி, அதில் நாமே விழுந்து, நாமே நம்மை மூடிக் கொள்வதைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.."

"ஆகா! சொல்லுங்கள் இளவலே!"

"இந்த உடல் ஒரு பை போன்றது. ஓட்டைப் பை" என்றான்.

"நம் உடல் ஓட்டைப் பையா? என்ன சொல்கிறீர்கள்?"

"ஆம். நம் உச்சந்தலையில் ஒரு ஓட்டை. மூச்சடங்கி ஆன்மா வெளியேறும் தருணத்தில் பிளக்கும் ஓட்டை. கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித்துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று என முகத்திலே ஏழு ஓட்டைகள். பிறவியை அடையாளம் காட்டும் தொப்புள் ஒரு ஓட்டை. நீர்வாயில், மலவாயில் என்று இடுப்பின் கீழே இரண்டு ஓட்டைகள்".

அவையோர் சிரித்தனர். நசிகேதன் தொடர்ந்தான்.

"அன்புடையீர். பையில் ஓட்டை விழுந்தால் என்னவாகும்?"

"பையிலிருப்பது கீழே கொட்டும்"

"கொட்டாதிருந்தால்?"

"கொட்டாதிருக்க அது என்ன மாயப் பையோ?"

"ஆகா! மாயப் பை! நன்றி, அவையோர்களே! நம் உடல் ஒரு மாயப் பை போன்றது. ஓட்டைப் பையில் எதையும் கொட்டாது பிடித்து வைக்க முடியுமா? அப்படி முடிந்தால் அது அதிசயப் பை அல்லவா? நம் உடல் அத்தகைய அதிசயப் பை.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களால் நாம் பெறும் உணர்வுகளைப் பற்றி முன்னர் சொன்னேன். ஐம்புலன்களால் நாம் பெறும் பற்றுகளையும் பந்தங்களைப் பற்றியும் சொன்னேன். புலனுகர்ச்சியால் விளையக்கூடிய நன்மைகளையும் தீமைகளையும் அறிந்தோம். புலனுகர்ச்சியின் போது நன்னெறிகளைப் பற்றினால் அகத்திலும் மேன்மை கூடுகிறது; நன்னென்றிகளை மறந்து தீய வழிகளில் சென்றால் ஆசை, கோபம், பொறாமை, களவு, பிணி போன்றவற்றைச் சுமக்க நேரிடுகிறது.

ஓட்டைப் பையின் குணம் என்ன? பையிலிருப்பது கீழே கொட்டும் அல்லவா? ஆனால் இந்த உடல் எனும் ஓட்டைப் பையைப் பாருங்கள். எத்தனை தீக்குணங்கள் ஏற்றித் தாங்குகிறது! எதுவும் வெளியே கொட்டுவதில்லையே? இது அதிசயப் பை அல்லவா?

அதே போல் நற்குணங்களைப் பேணினால் நிம்மதியும் நிறைவும் ஏறும். பையிலிருந்து கொட்டாது. ஆனால் நாம் இந்த மாயப்பையில் தீக்குணங்களையே திணித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டு, நன்னெறி, நிம்மதி, நிறைவினைத் திணிப்போமானால் தன்னறிவைப் பெற்று ஆன்மாவை அறிய முடியும்.

மாயப் பை என்பதை மறவாதீர்கள். ஓட்டைப் பையில்.. மாயப் பையில்.. நன்மை, தீமை இவற்றில் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். எதைச் சேர்க்கப் போகிறீர்கள்?

அதிசயமான இந்தப் பொத்தல் மாயப்பை உடலை ஆளும் ஆன்மாவும், ஆன்மாவுக்கு அடங்கும் அல்லது ஆன்மாவை அடக்கும் புலன்களும் உணர்வுகளும்... எல்லாமே சற்றும் எதிர்பாராத நேரத்தில் மறைந்துவிடுவன. ஆன்மா விடுபட்டதும்.. மூச்சு நின்றதும் புலன்களும் உணர்வுகளும் காய்ந்த இலைகள் போல் உதிர்ந்து விழுகின்றன. அழிகின்றன. அந்தக் கணத்திலிருந்து நிலைத்திருப்பது மறைந்த விதமல்ல; வாழ்ந்த விதம்.

மாயப் பையின் மாயம் தொலைந்துவிடும். ஆனால் பையுள் சேர்த்தவை மறையாது. எனவே மாயப்பை நிலைக்கும் பொழுதே தீநெறிகளைக் களைவோம்.

நம் எண்ணங்களும் சொற்களும் செயல்களும் நமக்கும் நம் சந்ததிக்கும் இந்த உலகுக்கும் பெருமை சேர்க்கலாம். அல்லது சிறுமை சேர்க்கலாம். பெருமை சேர்க்கும் சொல்லையும் செயலையும் நமதாக்குவோம். புலனில் தொடங்கி மனதில் இறங்கி ஆன்மாவை அழுக்கடையச் செய்யும் மாசு படிந்த எண்ணங்களையும் செயல்களையும் தவிர்ப்போம். புலன்களை அடக்குவோம். அதனால் ஏற்படும் நிறைவில் அடங்குவோம். அமைதி பெறுவோம்" என்றான்.

2012/03/02

அங்கும் இங்கும் சொர்க்கம் உண்டு


84
ஆங்காலந் தூங்குவார் சாங்கால மேங்குவார்
தீங்கொழியா தீங்குழல்வார் காங்கியர் - ஊங்கென்ப
தீங்குள தாங்குள தாங்குள தீங்குளப்
பாங்குளந் தாங்குயர்ந் தோங்கு.

   வாழும் நாளில் பேராசையும் பிற தீங்கும் ஒழிப்பதில் முனைப்பாக இராமல் சாகும் நாளில் (சொர்க்க நரகங்களுக்கு) அஞ்சியிருப்போர் இங்கேயே உழல்வார்கள். (அவ்வாறில்லாது) அங்குள்ள மேன்மையான சொர்க்கமே இங்குமுள்ளது என்ற உண்மையை உள்ளத்தில் தக்கவைப்பீர்! (வைத்து) உயர்ந்து மேன்மையடைவீர்! (என்றான் நசிகேதன்).


ஆங்காலம்: வாழ்நாள் (ஆகும் காலம்)
சாங்காலம்: இறுதிநாள் (சாகும் காலம்)
காங்கியர்: பேராசை பிடித்தவர்கள், தீவிர புலனுகர்ச்சியாளர், சுயநலக்காரர்
ஊங்கு: பெரும் மேன்மை (சொர்க்கம்)
பாங்கு: நிலை, உண்மை, தன்மை
தாங்கு: ஏற்றுக்கொள்
ஓங்கு: உயர்வு பெறு



    சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் யாகம் யோகம் பற்றித் தான் சொன்ன கருத்துக்கள் அவையோரின் மனதிலே பதியத் தொடங்கியதை உணர்ந்த நசிகேதன், இன்னும் சொல்ல வேண்டியச் சில கருத்துக்களைச் சொல்ல இதுவே தருணமென உணர்ந்தான். கண்மூடித்தனம் பற்றிய உண்மைகளை உடைத்தெறியும் கருவிகளை அவையோருக்கு வழங்கியதைத் தொடர்ந்து, விழித்திருக்கும் அவசியத்தையும் வழிகளையும் சொல்ல முனைந்தான்.

"அன்புடையீர்.. என் உரையைத் தொடர்ந்து பொறுமையாகக் கேட்டதற்கு நன்றி" என்றான். அவையினரைப் பார்த்தான். "மாறுதலுக்காகச் சில கதைகள் சொல்ல விரும்புகிறேன். என் ஆசான் எனக்கு நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார். உங்களுக்குக் கதை கேட்கப் பிடிக்குமா?" என்றான்.

அவையினர் பலமாகத் தலையசைத்து, "சொல்லுங்கள், இளவலே" என்றனர்.

"அப்படியே ஆகட்டும்" என்ற நசிகேதன், கதை சொல்லத் தொடங்கினான்.

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். தலைமுறை தலைமுறையாகச் செல்வத்திலே கொழித்தது அவனுடைய அரசாங்கம். அவனது அரண்மனை அண்டை நாட்டை விடப் பெரியது. அப்படிப்பட்ட அரசன், ஒரு நாள் அவையிலே அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான். இரண்டு காவலர்கள் முதியவர் போலிருந்த ஒருவரைப் பிடித்து வந்தார்கள். "மன்னா.. இவர் உங்களைக் காண வேண்டும் என்றார்" என்றனர்.

"என்ன?" என்றான் மன்னன்.

"ஐயா.. நான் வெளியூர். உலகம் சுற்றும் வாலிபன். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருக்கும் பெரிய சத்திரத்திலே தங்குவது வழக்கம். இந்தச் சத்திரத்திலே இடம் கிடைக்குமா என்றேன். என்னைப் பிடித்து உங்கள் முன் கொண்டு வந்தார்கள். நீங்கள் தான் இந்தச் சத்திரத்தின் சொந்தக்காரரா?" என்றார் நபர்.

இதைக் கேட்ட அமைச்சர்களுக்கு பெருங்கோபம் வந்தது. "யாரடா நீ? எம் மன்னரின் இந்த அரண்மனையைச் சத்திரம் என்கிறாய்? உன்னை இப்போதே சிறையிலடைக்கிறேன்" என்றார்கள்.

நபர் விடாமல், "ஐயா.. சத்திரத்துக்குச் சொந்தக்காரரே சும்மா இருக்கிறார். நீங்கள் யார் என்னை சிறையிலடைக்க? நான் ஒரு தவறும் செய்யவில்லையே? சத்திரத்தில் இடம் கேட்டால் சிறையில் அடைப்பீர்களாமே? நல்ல கதை! இடமிருந்தால் காட்டுமய்யா.. பிடித்திருந்தால் தங்குவேன்.. சத்திர வாடகை எவ்வளவு சொல்லுமய்யா.. கேட்ட வாடகைக்கு மேல் இரண்டு பொன் தருகிறேன்" என்றார்.

இதைக் கேட்ட அமைச்சர்களுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. வாளுடன் நபர் மேல் பாய்ந்தனர். நபரை முற்றுகையிட்டு, "இவனை இங்கேயே வெட்டிக் கொல்ல அனுமதி கொடுங்கள் மன்னா!" என்றனர்.

மன்னன் நபரை வணங்கினான். நிதானமாக, "ஐயா.. சத்திரத்தில் நிறைய இடமிருக்கிறது. உங்களுக்கு இலவசம். எந்த அறை பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான். இளைய அமைச்சரிடம், "அமைச்சரே.. இவருக்கு இந்தச் சத்திரத்தின் அறைகளைச் சுற்றிக் காட்டுங்கள். எந்த அறை பிடித்திருக்கிறதோ அதைக் கொடுங்கள்" என்றான். இளைய அமைச்சர் புரியாமல் நபரை அரண்மனையுள் அழைத்துப் போனார்.

மூத்த அமைச்சரும் பிறரும் வாளை உறையிலிட்டு மன்னனிடம் வந்தனர். "மன்னரே! என்ன இது! அந்த வழிப்போக்கன் ஏதோ சொன்னான் என்பதற்காக நீங்களும் அதை ஏற்று நடக்கிறீர்களே..?" என்றனர்.

மன்னன் சிரித்தான். "அமைச்சரே.. இந்த அரண்மனையில் இப்போது யார் இருக்கிறார்கள்? யாருக்குச் சொந்தம்?"

"உங்களுக்கு"

"இதற்கு முன் யார் இருந்தார்கள்? யாருக்குச் சொந்தம்?"

"உங்கள் தந்தை. மறைந்த மாமன்னருக்கு"

"அவருக்கு முன்?"

"ஐயா.. உங்கள் பாட்டனார். பேரரசர் அல்லவா? அவருக்குச் சொந்தம்"

"அவருக்கு முன்?"

அமைச்சர்களுக்கு மன்னனின் கேள்வி புரிந்தது. தலைகுனிந்து மன்னரை வணங்கினர்.

மன்னன் அமைதியாக, "இது சத்திரம் என்று அவர் சொன்னதில் என்ன தவறு? நான் உயிருடன் இருக்கும் வரையில் இங்கே தங்கியிருக்க எனக்கு வாய்ப்பும் உரிமையும் கிடைத்ததே தவிர இது எனக்குச் சொந்தமல்ல" என்றான்.

"மன்னா! அறியாமல் செய்த பிழையை மன்னியுங்கள். இப்பொழுதே அந்த வழிப்போக்கரிடம் மன்னிப்புக் கேட்கிறோம்" என்றனர்.

நசிகேதன் அவையோரைப் பார்த்தான். அவையிலே அமைதி. அனைவரும் கதையின் உட்பொருளை உணர்ந்து அமைதியாக இருந்தனர்.

"கதையிலே அரசன் சொன்னது போல அவனுக்கு அந்த அரண்மனையெனும் சத்திரத்தில் வசிக்க உரிமை உண்டு. சத்திரத்தை மேம்படுத்தக் கடமை உண்டு. சொந்தம் கொண்டாட உரிமை இல்லை. அன்புடையீர்! இந்த உலகம் ஒரு சத்திரம். நாம் இங்கே வழிப்போக்கர்கள். நாமும் நமக்குப் பின் வருவோரும் மேன்மையடையும் வகையில் இந்த சத்திரத்தைப் பேண வேண்டும். நம் நெறிகள் சத்திரத்தையும் அதில் தங்க வரும் வழிப்போக்கர்களையும் மேன்மையடையச் செய்ய வேண்டும். இந்த உடல் ஒரு சத்திரம். அதில் தங்கியிருக்கும் ஆன்மா ஒரு வழிப்போக்கன். விருந்தினன். ஆன்மாவுக்குக் கேடு வராத வகையில் உடலெனும் சத்திரத்தைப் பேண வேண்டும். புலனடக்க வேண்டும். சத்திரத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

என்னுடையது என்ற எண்ணம் தீங்கை விளைவிக்கும். ஏமாற்றத்தைக் கொடுக்கும். அதன் விளைவால் மேலும் தீங்கைச் சேர்க்கும். நீங்களே உழைத்துச் சேர்த்தாலும் அந்தச் சொத்தோ பொருளோ நபரோ உடைமையோ உங்களுடன் இருக்கப் போவது சில காலமே. தாயோ சேயோ பொன்னோ பொருளோ.. 'எதுவும் எனதில்லை. என் சொந்தமில்லை' என்ற அறிவே புலனடக்கப் பயிற்சியின் முதல் படி. இதை அறியாதவர்கள், எத்தனை முயன்றும் புலனுகர்ச்சியின் பிடியிலிருந்து விடுபட இயலாது. எதுவுமே நமக்குச் சொந்தமில்லை என்ற உணர்வுடன் செயல்பட்டால் புலனுகர்ச்சியின் தீவிரத்தைப் படிப்படியாகக் குறைத்து அடக்க முடியும். மேலும், கிடைத்ததை அனுபவித்து நிறைவோடு வாழவும் முடியும்" என்றான் நசிகேதன். "இன்னொரு கதை சொல்ல அனுமதியுங்கள்" என்றுத் தொடர்ந்தான்.

ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் திடீரென்று ஒரு குடில் தோன்றியது. 'யார் கட்டியது' 'யார் வசிக்கிறார்கள்' என்று தெரியாமல் ஊர் மக்கள் குழம்பினர். மெள்ள ஊரெல்லாம் பேசத் தொடங்கினார்கள். "மாயக்குடில் ஐயா!" என்றார் ஒருவர். "என்ன நான் சொல்வது?" என்றார் அருகிலிருந்தவரிடம். "உள்ளே ஒரு மிகப்பெரிய ஞானி இருக்கிறார். அவரைச் சந்தித்தால் எல்லா வித பாவங்களும் ஒழிந்து, புண்ணியங்களை மூட்டை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வரலாம்" என்றார் இன்னொருவர். "யாராவது உள்ளே சென்று பார்த்தார்களா, இல்லை நீங்களாகவே ஏதாவது சொல்கிறீர்களா?" என்று கேட்டார் மற்றவர்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், "நாங்கள் இப்போதே சென்று பார்த்து வருகிறோம். விரும்பினால் உடன் வாருங்கள்" என்றனர். ஊரே அவர்களைத் தொடர்ந்து சென்றது.

குடிலுக்குள் சென்ற முதல் இளைஞர் வெகு நேரமாகியும் வரவில்லை. "பொறுங்கள். நான் உள்ளே போய் பார்க்கிறேன்" என்ற இரண்டாவது இளைஞர் சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.

"என்னய்யா? முதலில் போனவரைப் பார்த்தீரா?"

"எங்கேயும் காணோம்" என்றார் திரும்பி வந்த இளைஞர்.

"பின் வாயிற்கதவு திறந்திருந்ததா? அடைத்திருந்ததா? கவனித்தீரா?"

"பின் வாயிலில் கதவு எதுவும் இல்லை. சுவற்றிலே சிறிதாக ஒரு பிளவு. அவ்வளவுதான்"

ஊரார் வியக்கத் தொடங்கினர். "அதுவழியாக வெளியேறியிருப்பார்"

"ஒருவேளை பேய் பிசாசு அடித்திருக்குமோ?"

"மாயக்குடில் என்றேனே, கேட்டீர்களா?"

"உள்ளே ஞானி இருக்கிறார் என்றல்லவா சொன்னீர்கள்..? இப்போது ஆளை அடித்துப் போடும் மாயம் அல்லவா இருப்பதாகத் தெரிகிறது?"

இப்படி ஊரார் பலவாறு பேசத்தொடங்க, ஒருவர் இளைஞரை அணுகிக் கேட்டார். "ஐயா.. அப்படி என்ன இருந்தது உள்ளே? என்ன பார்த்தீர்? விவரமாகச் சொல்லும்"

இளைஞர் தலையைச் சொறிந்தார். "ஒன்றுமில்லை உள்ளே. சுவரெங்கும் கண்ணாடி. அவ்வளவு தான். எங்கே பார்த்தாலும் கண்ணாடி" என்றார்.

"இது என்னய்யா கதை?" என்றார் ஞானி. "இதை ஒரு பாடமாக வேறு சொல்ல வந்துவிட்டாயே?"

"இங்கே என்ன நடந்தது? குடிலில் என்ன மாயம்? ஒருவருக்கு அகக்கண் திறந்தது; மற்றவருக்குப் புறக்கண் மூடவேயில்லை. அதுவே மாயம்" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "தன்னை அடையாளம் காணக்கூடிய எந்த வாய்ப்பையும் அறிவுள்ள மனிதன் தவற விடுவதில்லை. தன்னை அடையாளம் காண்பது, தான் அணிந்திருக்கும் உடையிலோ, நகையிலோ, பிற சொத்துக்களினாலோ அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதே தன்னை அறியும், தன்னை வெளிப்படுத்தும், அடையாளம். தன்னை அறிவிக்கும் அடையாளம். வெளித்தோற்றத்தை வைத்து நம்மைப் பிறர் அறியலாம். உள்தோற்றத்தை வைத்து நம்மை அறிய, நம்மால் மட்டுமே முடியும். நாம் நம் உள்தோற்றத்தை அறிந்து நடந்தால், பிறரும் நம் உள்தோற்றத்தைக் காண முடியும். தன்னையறிந்தவர்கள் பிறருக்கும் உய்வைக் கொடுக்கிறார்கள்" என்றான் நசிகேதன். "ஆனால், இது எளிதல்ல. தன்னையறியும் வாய்ப்பு நம் முகத்தில் இடித்தாலும் நம்மில் பலருக்கு அது புலனாகாமல் போகும். வெளிப்பார்வையை மறைக்கும் தடைகளைப் போலவே, உள்பார்வையை மறைக்கும் தடைகளும் உண்டு. தான் என்ற உணர்வு, ஆறு வகை தீக்குணங்கள், தம்மை விட உயர்ந்தவரில்லை என்ற ஆணவம், தம்மினும் மெலியாரிடம் கருணையின்மை.. இவையெல்லாமே அகப்பார்வையை மறைக்கும் தடைகள். தடைகளை உடைத்து அகப்பார்வையை வளர்க்க வேண்டும்" என்ற நசிகேதன் தொடர்ந்து, "இன்னொரு கதை சொல்லவா?" என்றான். "சொல்லுங்கள்!" என்று அவையோர் உவகையோடு வேண்டினர்.

ஏழை இளஞன் ஒருவன் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தான். அங்கே ஒரு முதியவர், பொன் பொருள் துணி பயிர் உணவு என்று ஒரு ஓடத்தில் ஏற்ற முடியாத அளவுக்கு ஏற்றிக் கொண்டிருந்தார். இளைஞனைப் பார்த்தவர், "மகனே!.. இங்கே வா. எனக்கு ஒரு கை தா. இந்த உடைமைகளை ஓடத்தில் ஏற்ற வேண்டும்" என்றார்.

இளைஞன் அவனருகே சென்றான். "ஐயா! இந்த உடையை நான் எடுத்துக் கொள்ளவா? குளிருக்கு அடக்கமாக இருக்கும்" என்றான்.

முதியவர் மறுத்தார். "அடடா.. அது மறுகரைக்குப் போனதும் உதவும். அதற்காகச் சேர்க்கிறேன்" என்றார்.

இளைஞன், "ஐயா! ஓடம் தாங்காத அளவுக்கு இத்தனை உணவுகளை எடுத்துப் போக வேண்டுமா?" என்றான்.

முதியவர் சிரித்தார். "மகனே.. இதை மறுகரையில்.. அதற்காகச் சேர்க்கிறேன்.. அங்கே வாழ்வதற்காக எடுத்துச் செல்கிறேன்" என்றார்.

இளைஞன், "இத்தனை பொற்காசுகள் எதற்கு? இத்தனை நகைகள் மணிகள் எதற்கு?" என்றான்.

முதியவர் முறைத்தார். "மகனே.. இவையாவும் மறுகரையில் இன்பமாக இருக்கத் தேவையானவை.. அதற்காகச் சேர்க்கிறேன் என்பது இன்னுமா உனக்குப் புரியவில்லை?" என்றார்.

இளைஞன் சிரித்தான். "ஐயா! நீர் மறுகரையில் நின்றுகொண்டிருக்கிறீர் என்பது இன்னுமா உமக்குப் புரியவில்லை?" என்றபடி அங்கிருந்து அகன்றான்.

"மூத்தவரை ஏளனம் செய்யும் இந்தக் கதையைச் சொல்லும் உனக்கு எத்தனைத் திமிர்?" என்றார் ஒரு மூத்த ஞானி.

"அறிவுக்கு வயது வேறுபாடு இல்லை. எனினும் வயது வளர வளர ஆசைகளும் காரணமற்றப் பிடிப்புகளும் அதிகமாகின்றன. அதனால் இயல்பாகப் பெறக்கூடியத் தன்னறிவு ஒடுங்கி விடுகிறது. இளையோருக்கு வாழ்க்கை நெறி அறிவுரைகள் வழங்க முன் வரும் மூத்தோர், தாம் அந்தப் பாதையில் செல்ல மறுப்பதை நம் வீட்டிலும்.. சுற்றத்திலும்.. இதோ இந்த அரசவையிலும் பார்க்கிறோம். எனவே, அன்பர்களே! வயதை வளர்ப்பதோடு நில்லாமல் அறிவையும் வளர்ப்போம். அறிவு வளர்ந்தால் மட்டுமே வயதுக்கும் மதிப்பு என்பதை நினைவில் வைப்போம்.

அறியாத இடத்தைச் சொர்க்கம் என்று போற்றி, அறிந்த இடத்தை நரகமாக்குவது அறிவற்றவர் இயல்பு. நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பைச் செவ்வனே பயன்படுத்தி, நம் வாழ்க்கை நெறிகளில் தீமைகளைக் களைந்து நன்னெறிகளை வளர்த்தால், நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் பிறருக்கும் இந்த வாழ்வை.. இந்த உலகை.. சொர்க்கமாக்கலாம். இதை அறியாதவர்கள் வாழும் நாளிலே தீக்குணங்களை அறுக்க மறக்கிறார்கள். இந்த உலகை.. வாழ்வை.. தமக்கும் பிறருக்கும் பெரும் நரகமாக்குகிறார்கள். சாகும் நாளுக்கானச் சுமையைச் சேர்க்கிறார்கள். அல்லது சாகும் நாளிலே தீக்குணங்களின் விளைவுகளைப் போக்க, போலிச் சடங்குகளிலே இறங்குகிறார்கள். இவர்கள் அறிவற்றவர்கள்.

தீக்குணங்களே இல்லாதவரும் பல நேரம் அறிவற்றவராவர். எப்படி? நற்குணங்களை தாமும் பிறரும் உய்யும் வகையில் பயன்படுத்தாமல், சாகும் காலத்தில் பயன்படும் என்றப் பொய்யான நம்பிக்கையில் மூழ்கி, வளர்த்த நற்குணங்களின் விளைவுகளை இழக்கிறார்கள்..."

"அதிருக்கட்டும் மகனே!" என்று குறுக்கிட்டார் ஒரு பாமரக் கிழவி.

நசிகேதனின் அருகே வந்தார். நசிகேதனின் முகத்தைக் கைகளால் தொட்டுச் சுற்றிக் காற்றிலே முறித்தார். "கண்ணேறு!" என்றார். நசிகேதன் சிரித்து, "உங்கள் அன்புக்கு நன்றியம்மா!" என்றான். கிழவி தொடர்ந்தார். "ஐயா.. சொர்க்கம் அங்கே இல்லை என்று சொல்கிறாய். நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? இன்ன நேரத்தில் இன்ன சொல்லி இன்ன செய்தால் பாவங்கள் விலகும், புண்ணியங்கள் சேரும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்களே? தீ வளர்த்து மந்திரங்கள் சொல்லி உடல் வருத்தித் தரையில் புரண்டால் சொர்க்கம் கிடைக்கும் என்றார்களே? நேற்றுப் பிறந்த நீ.. இப்படி முரணாகப் பேசலாமா ஐயா? தவறில்லையா? எல்லாம் காரணத்தோடு தானே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்?"

அவையிலிருந்த காவிகளும் தாடிகளும் சிரித்தார்கள். "சரியாகச் சொன்னாய் கிழவி! இதற்கென்ன சொல்கிறாய் நசிகேதா? நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?"

கிழவியும் கண்கள் மின்னப் புன்னகைத்தார். அவையில் கலந்தார். கிழவியை இதற்கு முன் எங்கோ கண்டதாகத் தோன்றியது நசிகேதனுக்கு. "எனக்குத் தெரியாது" என்றான் நசிகேதன். "எனக்குத் தெரிந்ததெல்லாம் இன்னொரு கதை. விரும்பினால் சொல்கிறேன்"

"சொல்லுங்கள்!" என்றது அவையின் ஒரு கூட்டம். நசிகேதன் தொடர்ந்தான்.

"ஒரு ஊரில் ஒரு மடம் இருந்தது. மடத்திலே ஒரு துறவி இருந்தார். மிகப் பெரும் ஞானி என்று புகழ்பெற்றவர். தினம் தவத்திலும் யோகத்திலும் திளைத்துப் புலன்களைக் கட்டியவர் என்று பெயரெடுத்ததால் அவரைக் காண அரசரும் மக்களும் படித்தவரும் பாமரரும் வந்த வண்ணம் இருந்தனர். அவரிடம் சீடராகச் சேர்ந்து மேன்மையடைய எண்ணி வந்தவர் ஏராளம். எண்ணற்றோர் சீடராக விரும்பியதால், ஞானி பத்து சீடர்களை ஒரு மாத காலமே ஏற்பார். அடுத்த மாதம் புதிதாகப் பத்து சீடர்கள்.

தினமும் காலையில் துறவி யோகத்தில் ஆழ்வது வழக்கம். அவர் என்ன செய்தாரோ அதையே சீடர்களும் பின்பற்றி யோகப் பயிற்சி செய்தார்கள். பகல் வரை இந்த யோகம். அதற்குப் பிறகு தன்னைக் காண வந்தவருடன் உரையாடுவார். சீடர்கள் சமைத்து வைத்த உணவை அருந்துவார். சிறிது உறங்குவார். மீண்டும் மாலையில் யோகம், தவம். இப்படிக் கழிந்து வந்தது அவருடைய வாழ்க்கை. சீடர்களுக்கு எந்தவித ஞானமும் வழங்கவில்லை. எனினும், என்றைக்காவது அவருடைய ஞான ஒளி தங்கள் மேல் பட்டு வீசும் என்ற நம்பிக்கையில் அவருக்குப் பணிவிடை செய்து வந்தனர் சீடர்கள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் அவரைக் காண வந்தப் பாமரர்களில் ஒருவர் துறவிக்கு ஒரு கோழியை வழங்கி, "ஐயா, பரம ஞானி! உங்கள் அருளால் என்னுடைய வியாபாரம் செழிக்கிறது. இந்தக் கோழியை நீங்கள் இந்தப் பாமரனின் நன்றியாக ஏற்கவேண்டும்" என்று சொல்லி கோழியை அங்கேயே விட்டுப் போனார். ஞானியும் சீடர்களும் கோழியை மறந்தார்கள்.

காலையில் பூஜை வகைகளை முடித்த ஞானி, யோகத்தில் மூழ்கினார். சீடர்களும் சற்று ஒதுங்கி நின்று குருவைப் பின்பற்றி யோகத்தில் மூழ்கினர். கோழிக்குப் பசி. பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடியது. ஒரு புழுவும் கண்ணில் படவில்லை. அங்குமிங்கும் சுற்றிய கோழி, ஞானி தவமிருக்கும் இடத்திற்கு வந்தது. அங்கே ஞானியெதிரே தரையில் அரிசியும் நெல்லும் சோறும் கிடந்ததைப் பார்த்தது. "ஆகா! பசி தீர்ந்தது" என்று எண்ணிய கோழி, வேகமாகக் கத்தியபடி உள்ளே வந்து தானியங்களைக் கொத்தித் தின்னத் தொடங்கியது. அதற்கு ஒரே மகிழ்ச்சி. பக் பக் பக் என்று ஓசை எழுப்பி, ஒரு தானியம் விடாமல் கொத்தத் தொடங்கியது. கோழியின் ஓசைகளால் யோகம் தடைபட, ஞானி கண் விழித்தார். சீடர்களிடம் கோழியை விரட்டியடிக்கச் சொன்னார். சீடர்களும் அவ்வாறே செய்தனர்.

சில கணங்களில் கோழி திரும்பியது. பக் பக் பக் என்றது. ஞானிக்குப் பொறுக்கவில்லை. ஏசினார். "இந்தச் சனியனை ஓரமாகக் கட்டிப் போடுங்கள்" என்றார். சீடர்களும் அவ்வாறே செய்தனர். அதற்குப் பிறகு, தினமும் ஞானி தவம் தொடங்குமுன் சீடர்கள் கோழியைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். வெளியிலிருந்து சில நேரம் ஞானியைக் காணவந்தோரும் இதைக் கவனித்தனர். பழைய சீடர்கள், புதிதாகச் சேர்ந்த சீடர்களுக்கு கோழியைப் பிடித்துக் கட்டும் ஒழுங்கினை மறவாமல் போதித்தனர்.

சில மாதங்களில் துறவி நோய்வாய்ப் பட்டார். இருந்த சீடர்களிலே மூத்தவர் ஒருவரைத் தன் மடத்துக்கு வாரிசாக நியமித்துவிட்டு இறந்து போனார். புதிய ஞானியும் பூஜைகளையும் தவங்களையும் செய்து வந்தார். கோழியை மறக்காமல் கட்டி வந்த சீடர்கள், ஒரு நாள் கோழியைத் தேடிக் கொண்டு போனார்கள். பார்த்தால்.. கோழி இறந்து கிடந்தது. குரு பூஜையைத் தொடங்குமுன் கோழியைக் கட்ட வேண்டுமே? என்ன செய்வது? ஊரிலிருந்து இன்னொரு கோழியைப் பிடித்து வந்த சீடன், "இதைக் கட்டுவோம்" என்றான்.

"எங்கே பிடித்தாய் புதுக் கோழியை?" என்றார் ஞானி.

"மகாப்பிரபு! ஞானமூர்த்தி!! எல்லாம் உங்கள் அருள்! ஊரிலே பிடித்தேன் ஐயா! கோழி இறந்துவிட்டதைச் சொல்லி தவம் செய்யக் கோழி வேண்டும் என்றேன். நீங்கள் தவம் செய்யும் பொழுது கோழி கட்டுவதை ஏற்கனவே பார்த்திருக்கும் ஊர் மக்கள், தாங்களாகவே ஆளுக்கு ஒரு கோழி கொடுக்க முன் வந்தார்கள். நான் அவசரமாக முதலில் கிடைத்தக் கோழியைப் பிடித்து வந்தேன்" என்றான்.

"எல்லாம் என் குருவின் மகிமை!" என்ற ஞானி, பழைய குருவை மனதில் எண்ணி, அமைதியானப் புன்னகையுடன் கோழியைக் கட்டுமாறு பணித்தார். குருவின் கருணையே வடிவானப் புன்னகையில் மெய் சிலிர்த்தச் சீடர்கள், கோழியைக் கட்டினார்கள். தவம் தொடர்ந்தது.

கோழியைக் கட்டித் தியானம் செய்யும் வழக்கம் அந்த ஊரிலும் மெள்ளப் பரவியது.

கதை சொல்லி முடித்த நசிகேதன் அவையோரைப் புன்னகையுடன் பார்த்தான்.

"இது கதையா புதிரா?" என்றார் ஒருவர்.

"எதையோ கேட்டால் கதை சொல்கிறது பிள்ளை. இதையும் கேட்க வந்தோம் பார்!" என்றார் அரசவை ஞானி.

"ஐயா.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது" என்றான் ஒரு இளைஞன்.

"ஒரு கோழியின் தொந்தரவைப் பொறுக்க முடியாதவர் துறவியே அல்ல. அவர் புலனடக்கவில்லை" என்றார் அவையில் ஒரு பெண்மணி.

"சீடர்களுக்கும் அறிவில்லை, குருவுக்கும் அறிவில்லை. கோழியை ஏன் கட்ட வேண்டும் என்று ஒருவர் கூட சிந்திக்கவில்லை. கண்மூடிகள்!" என்றான் இளைஞன்.

"கண்மூடித்தனம் தொடர்வதால், அதற்கு இல்லாத காரணம் ஒன்றும் உண்டாகி விடுகிறது. இல்லாத காரணத்தை ஏற்றுக் கண்மூடித்தனமும் தொடர்கிறது. மிகக் கொடிய சுழற்சி!" என்றார் பெண்மணி.

நசிகேதன் சிரித்து, "நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே. புலனடக்கம் என்பது அகப்பார்வையில் வருவது. இவர்கள் புறப்பார்வையிலேயே உழன்றதால் இவர்களால் புலனடக்க முடியவில்லை. முடியாது. மாறாக, கோழிகட்டுதல் போன்ற ஒரு அடையாளம் தேடிக் கண்மூடித்தனமாக நடந்தார்கள். பிறருக்கு வழிகாட்ட வேண்டியவரான ஞானியே கண்மூடியாக இருந்ததால், அவரைக் குருவாக ஏற்ற சீடர்களும் ஊர் மக்களும் கோழிகட்டிக் கண்மூடினார்கள்" என்றான்.

அவையோர் ஆமோதித்தனர்.

"நம் முன்னோர்கள் முட்டாள்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க எனக்குத் தகுதியோ வயதோ இல்லை. நம் முன்னோர்கள் முட்டாள்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. தீர்மானித்துப் பயனும் இல்லை. நாம் முட்டாள்களா இல்லையா என்று தீர்மானிப்போம். நம் சந்ததி நம்மை முட்டாள்கள் என்று தீர்மானிக்கும் விதத்தில் நம் சொல்லும் செயலும் அமையுமா என்பதே கேள்வி.

சடங்குகளின் வேர்களை ஆராய வேண்டியதில்லை. சடங்குகளால் மேன்மை வருவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாலே நாம் மேன்மைப் பாதையிலே அடியெடுத்து வைத்தவர்களாகிறோம். அறிவாலும் நெறியாலும் கிடைக்காத மேன்மை சடங்கினாலே கிடைக்காது.

அங்குள்ளதாக நீங்கள் எண்ணும் சொர்க்கம், இங்கு உள்ளது. இங்குள்ளதே அங்கும் உள்ளது. இதை உணர்வீர். வேறு சொர்க்கம் நரகம் இல்லை. சொர்க்கத்தையும் நரகத்தையும் நாமே உருவாக்குகிறோம். இங்கே உருவாக்குகிறோம். அல்லது அங்கே உருவாக்குகிறோம். இதை அறிந்து நடப்பவர்களுக்கு சொர்க்கம் நரகம் பற்றிய அச்சமே வருவதில்லை. வாழும் நாளிலே மேன்மையைப் பற்றிய இவர்கள், சாகும் நாளில் அஞ்சுவதில்லை, ஏங்குவதில்லை. இதை அறியாது நடப்பவர்கள் சாவைக் கண்டு அஞ்சி ஒடுங்குகிறார்கள். ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குப் பயணம் செய்கிறார்கள்.

ஆதலின் அன்புடையீர்! சொர்க்க நரகங்கள் பற்றிய இந்த உண்மையை உளத்தில் ஏற்றித் தக்க வைப்போம்! உண்மையறிவைப் பெற முயல்வோம்! உண்மையறிவைப் பெற்று மேன்மையடைவோம்!" என்றான் நசிகேதன்.

அவையினர் நசிகேதனை வாழ்த்தினர். நசிகேதனின் பார்வை கிழவியைத் தேடியது.

நசிகேதன் சொன்னக் கதைகளையும் பாடங்களையும் கேட்டு அவையோர் மகிழ்ந்ததைக் கண்ட மன்னன் வாசன் மனதிலும் ஒரு எண்ணம் வேர்விட்டது. தனக்கும் தன் நாட்டு மக்களுக்கும் நசிகேதனை விடச் சிறந்த ஆசான், குரு, தலைவன் வேறு எவரும் இல்லை என்ற எண்ணம்.

2012/02/24

புலனடக்கப் பயிற்சி


83
பறியின் பொறியுட் புறத்துந் திறக்குங்
கிறியை அறிய உறங்கு - செறிக்கப்
பொறியை உறியும் நெறியிற் சிறந்து
வறிதைத் துறந்து விளங்கு.

   டலின் ஐம்புலன்கள் அகத்தேயும் பார்க்க வல்லவை என்பதை உறங்கும் பொழுது அறிவீர். (இந்த உண்மையின் உட்பொருளை உணர்ந்து) மூச்சை இழுத்துப் புலன்களைக் கட்டும் யோகத்தில் தேர்ந்து, அறியாமையை ஒழித்து வாழ்வீர் (என்றான் நசிகேதன்).


பறி: உடல்
பொறி: உறுப்பு, புலன்
கிறி: மாயம், தந்திரம்
செறிக்க: அடக்க, அழிக்க (பொறியைச் செறிக்க)
உறியும்: உள்ளிழுக்கும் (இழுத்துக் கட்டும்)
வறிது: அறியாமை



    வையோரின் கேள்விகளைக் கவனமாகக் கேட்ட நசிகேதன் தொடர்ந்தான். "நான் அறிந்ததை உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள். நம் உடலின் ஐந்து பொறிகளும் புற நுகர்ச்சியில் இயல்பாகவே ஈர்க்கப் படுகின்றன என்றேன். அதே புலன்கள் அக நுகர்ச்சியிலும் இயல்பாகவே செயல்பட வல்லவை. நாமறியாமலே நாள்தோறும் அக நுகர்ச்சியிலும் செயல்படுகின்றன. நம் உடலின் இயக்கத்துக்குத் தேவையான அளவில் அவை இயல்பாகவே அடங்கி நடக்கின்றன"

"எங்களுக்குத் தெரியாமல் எங்கள் கண்ணும் மூக்கும் செவியும் வாயும் வேறு எதையோ நுகருமா, என்ன சொல்கிறீர்கள் இளஞ்சுடரே?" என்றார் அவையில் ஒருவர். "விளங்கவில்லையே?"

"உண்மை" என்ற நசிகேதன் புன்னகைத்தான். "நாம் எல்லோருமே உறங்கும் வழக்கம் உள்ளவர்கள். உறக்கம் நமக்கு இயற்கையாகவே வருகிறது. உறங்காதவர் உலகத்தில் இல்லை எனலாம். உறக்கம் உடலின் இயக்கத்துக்குத் தேவைப்படுகிறது அல்லவா?"

"ஆம்.. எனில்.."

"கேளுங்கள். உறங்கும் பொழுது நம் புலன்களின் நிலை என்ன? கண்களால் வெளிக்காட்சியைக் காண முடியாது. செவிகள் வெளி ஓசைகளைக் கேட்பதைத் தாமாகவே நிறுத்திக் கொள்கின்றன. புற நுகர்ச்சியில் ஈடுபடும் நாசி மூச்சை உள்ளிழுத்து விடுவதில் மட்டுமே குறிப்பாக இருக்கிறது. உரையாடல்களை மறந்த வாய் பேசாதடங்குகிறது. உடலின் உணர்வுகள் அடங்கி விடுகின்றன.

இதோ இந்த அறையிலே எண்ணற்ற வண்ணச் சித்திரங்கள் உள்ளன. ஆயிரம் வித மலர்களின் அலங்காரம் கண்ணையும் மனதையும் பறிக்கிறது. மலர்களின் மணம் நம்மை மயக்குகிறது. மேலும் அரச விருந்தின் நறுமணம் நம்மைச் சுற்றி வருகிறது. பலவித உரையாடல்களில் திளைக்கிறோம். இதே அறையில் இந்தச் சூழலிலே சிறிது உறங்கினாலும் இவையெல்லாம் உடனே மறைந்து விடும் மாயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இதே அறையில் இந்தக் கணத்தில் உறங்கும் ஒருவருக்கு இந்த நிறங்களும் மணங்களும் ஒலிகளும் எண்ணங்களும் தெரிவதில்லை. புரிவதில்லை. என்ன காரணம்? அவருடைய ஐம்பொறிகளும் அடங்கி அக நுகர்ச்சியில் ஈடுபடுவதால்.."

"புற நுகர்ச்சியை மறந்து ஒடுங்குவது புரிகிறது.. எனினும், புலன்கள் அக நுகர்ச்சியில் ஈடுபடுகின்றன என்பது சரியா?" என்றார் ஒரு அறிஞர்.

"..இங்கே உறங்கும் மனிதருக்குக் கனவு வருகிறது. கனவில் அவர் ஒரு அரசவைக் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார். இதே போன்ற அறை. இந்த அறை போலவே கனவறையில் வண்ண ஓவியங்களும், மலர்களும், அழகிய சிற்பங்களும் இருப்பதைப் பார்க்கிறார். ஓவியத்தில் இருக்கும் காட்சிகளைப் புரிந்து வியக்கிறார். மலர்களைத் தொட்டு நுகர்கிறார். மலரின் மென்மையை அவர் தொட்டு உணர்கிறார். மலரின் மணத்தை நுகர்ந்துத் திளைக்கிறார். எதிர்பாராமல் திடீரென்று வேகமாக ஓடிவரும் சில சிறுபிள்ளைகளுக்கு வழி விட்டு ஒதுங்குகிறார். ஒதுங்கும் பொழுது அருகிலிருந்தவர் மீது மோதி விழுகிறார். மோதிய வேகத்தில் தோளில் அடிபட்டு வலிக்கிறது. புலம்புகிறார். அதைக் கவனித்த சிறுபிள்ளை ஒன்று அவரை எழுப்பி மன்னிப்புக் கோருகிறது. அவர் மனமிறங்கிப் பிள்ளையைப் பார்த்து முறுவலித்து, அண்மையில் இருக்கும் இனிப்புத் தட்டிலிருந்து ஒரு பண்டத்தைப் பிள்ளைக்குக் கொடுத்துத் தானும் எடுத்து மெல்கிறார். நாவின் இனிமையில் வலியை மறக்கிறார்... இது சாத்தியமென்று நம்புகிறீர்களா?"

"ஆமாம்.. கனவில் எனக்கும் இது போல் தோன்றும்.. நேரில் நடப்பது போலவே உணர்வேன்.." என்றார் ஒருவர். அவையில் பலர் ஆமோதித்தனர். "பிள்ளை சொல்வது சரிதான்.. இத்தனை நாள் தெரியாமல் இருந்தேனே!" என்றார் ஒரு பாமரர். பலர் தங்கள் கனவில் நிகழ்ந்தவற்றை விவரிக்கத் தொடங்கினர்.

"அன்பர்களே, மேலும் சொல்கிறேன் கேளுங்கள். நம்முள் ஒருவர் இதே அறையில் இப்பொழுது உறங்கிக் கனவு கண்டு விழித்தால், எது கனவறை எது நனவறை என்ற குழப்பம் அவருக்கு உண்டாவதில்லை. காரணம், அவரது பொறிகள் புறவிழிப்பினால் சடுதியில் புற நுகர்ச்சியில் இறங்கிவிடுகின்றன."

"கனவுக்கும் புலனடக்கத்துக்கும் தன்னறிவுத் தேடலுக்கும் தொடர்பு உண்டா?" என்றார் ஒரு அறிஞர்.

நசிகேதன் அறிஞரை ஒரு முறை உற்றுப் பார்த்தான். இதென்ன.. என் ஆசான் போலவே தோன்றுகிறாரே? நான் கற்றதை முறையாக முழுதும் பகிர்ந்து கொள்கிறேனா என்று சோதிப்பது போலத் தோன்றுகிறதே? கேள்விகளால் என்னை வழி நடத்திச் செல்வது போல் தோன்றுகிறதே? 'எழுந்திரு! என்றும் விழித்திரு!' என்றாரே? 'கழுந்தராய் ஊழ்வினை என்று உழலாதே, உத்தமர்போல் வாழ்வினை நன்றென வாழ்' என்றாரே? அந்த அறிவை இவர்களுக்குப் புகட்டவே இந்தக் கேள்வி கேட்கப்படுகிறதா?

நசிகேதன் பலவாறு சிந்தித்தான். அறிஞரை நோக்கி வணங்கினான். "சொல்கிறேன்" என்றான். "புற நுகர்ச்சிகளைப் புரியவும் புரியவும் வைக்க இன்றியமையாதவை இரண்டு. முதலாவது மூச்சு. மூச்சு உள்ளவரை புற நுகர்ச்சிகளைப் புரிய முடியும். இரண்டாவது அறிவு. அறிவு உள்ளவரை நுகர்ச்சிகளின் பலனைப் புரிந்து கொள்ள முடியும்.

அக நுகர்ச்சிக்கும் இவையே காரணமாகின்றன. உறங்கும் நேரத்திலும் விழிக்கும் நேரத்திலும் இயங்குவதைப் போலவே, மூச்சும் அறிவும் அக நுகர்ச்சியிலும் இயங்க வல்லவை. உறங்கும் நேரத்து அக நுகர்ச்சி, நமக்கு ஒரு உதாரணம். ஒரு பயிற்சி. புலன்கள் அடங்க வல்லவை என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. உறக்கம் ஒருவித அக நுகர்ச்சி என்றாலும், அறியாமையை அகற்றும் உண்மையான அக நுகர்ச்சி அல்ல. உறங்கும் வேளையில் மூச்சும் அறிவும் நமக்கு பிறிதொரு நுகர்ச்சிக்கு வழி வகுப்பதைப் போலவே, விழிக்கும் வேளையிலும் அக நுகர்ச்சிக்கு வழிவகுக்க வல்லவை. இந்தத் திறனை நாம் இயல்பாகவே பெற்றிருந்தும், புற நுகர்ச்சியின் பலனால் துறந்து விடுகிறோம். புற நுகர்ச்சிகளே உண்மை என்று நம்பிப் பெரும் அறியாமையை வளர்த்து, இயல்பாக நமக்குக் கிடைத்த அறிவை ஒடுக்குகிறோம். ஒடுங்கிய அறிவு நாளடைவில் நலிந்து விடுகிறது.

என் இனிய நண்பர்களே! விழியுங்கள்! கண்களை நன்றாகத் திறந்து உங்கள் அகத்துள் பாருங்கள். புலநுகர்ச்சியின் மாயக்கட்டிலிருந்து விடுபட்டு எழுந்திருங்கள்! 'அகத்தின் ஒளியே அவம் ஓட்டும், அதை விடுத்து வெளியே சிவம் தேடல் வீண்' என்றார் என் ஆசான். தீவினைகளைத் தூண்டும் குணங்களை விரட்டியடிக்கும் ஒளியானது நம்முள்ளேயே இருக்கையில் அதை வெளியே தேடுவதினால் ஒரு பயனுமில்லை என்று பொருள். அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன். அக நுகர்ச்சியைப் பழகுங்கள்"

"ஐயா.. தேர்ந்த அரசவை அமைச்சர் போலப் பேசுகிறீரே? புலனை எப்படிக் கட்டுவது.. என்ன வழி.. என்று சொல்லாமல் அக நுகர்ச்சி அக நுகர்ச்சி என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீரே? அதற்கான வழி உமக்குத் தெரியுமா தெரியாதா? உமது ஆசான் அதை விளக்கினாரா?" என்றுப் பொறுமையிழந்துக் கேட்டார் ஒருவர்.

"அக நுகர்ச்சிக்கான அடிப்படைக் கருவிகள் நம் அனைவரிலும் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்ற உண்மையை நன்றாகத் தெரிந்து, புரிந்து, அறிந்து கொள்ள வேண்டும். உறக்கம் ஒரு எடுத்துக்காட்டு. அதைச் சொல்லவே சற்று நிதானித்தேன். மன்னிக்கவும்" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "உறக்கத்துக்குத் தயாராவது போலவே புலன்கட்டுக்குத் தயாராக வேண்டும். கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்துக் கட்டிப் பழக வேண்டும். இந்த யோகமே தன்னறிவுத் தேடலுக்கான முதல் கட்டப் பயிற்சி. மூச்சையடக்கி புலனறிவைப் பெறவேண்டும். உறக்கத்தில் புலன்கள் கட்டுப்படுவதைப் போலவே நாளடைவில் இந்த யோகத்தினால் விழிப்பிலும் கட்டுப்படும். இது எளிதல்ல. தெளிவானக் குறிக்கோளுடன் ஆழ்ந்த, தேர்ந்த பயிற்சியினால் மட்டுமே அடைய முடியும்.

புலன்களைக் கட்டாது விட்டால் அவை, தறிகெட்டு ஓடும் புரவிகள் தேரை அழிப்பது போலவே நம்மை அழித்துவிடும். நம் புலன்கள் தேர்ப்புரவிகள். நம் உடல் தேராகும். நமது உள்ளமே கடிவாளம். நமது உயிர், தேரின் சக்கரங்கள். தன்னறிவு தேரோட்டி. நாமே, நமது ஆன்மாவே, தேரில் பயணம் செய்யும் வீரர். புரவிகளும் தேரும் வீரருக்கு அவசியம் என்பதை உணர்ந்து, தேரோட்டி தேரை ஒரு கட்டுக்குள் பாதையறிந்து செலுத்துவது போலவே தன்னறிவு நம்மைச் செம்மையானப் பாதையிலே செல்லப் பணிக்கிறது".

"தினமும் புலனடக்கிப் பயிற்சி செய்தால் தன்னறிவு பெற முடியுமா?"

"தன்னறிவுத் தேடலின் முதல் கட்டம், புலனடக்கப் பயிற்சி. அப்பயிற்சி உள்ளிருக்கும் ஒளியை வளர்க்கிறது. பெரும் அமைதியெனும் ஒளி வளர வளர, தீக்குணங்கள் ஒழிகின்றன. தன்னறிவு வளரத் தொடங்குகிறது. தீக்குணங்கள் ஒழிய ஒழிய, தன்னறிவு வளர வளர, பாவ புண்ணிய சொர்க்க நரகம் தொட்ட அறியாமைகள் இருக்க இடமில்லாமல் ஓடுகின்றன. நம் இயல்பை உணரத் தொடங்கிய நேரத்திலேயே பிறப்பு இறப்பு தொட்ட அச்சங்கள் விலகுகின்றன. ஆன்மாவை அறியத் தொடங்குகிறோம். ஆதலால் அன்பர்களே! எழுமின்! விழிமின்! அகவொளியை வளர்த்து அவங்களை அழிமின்! புலனடக்கும் பயிற்சியில் சிறந்து அறியாமைகள ஒழித்து வளமோடு வாழுங்கள்!".

அவையில் அமைதி. நசிகேதன் உரைத்தது உறைக்கத் தொடங்கியது. சிறிது நேரம் பொறுத்து மெல்லிய ஆரவாரம். "இறந்த பிறகு சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ போவதாகச் சொல்கிறார்களே? அந்த உண்மைகளை அறிந்தீரா? எனில் சொல்லுங்கள்" என்றார்கள் சிலர்.

2012/02/17

சொர்க்கத்தின் திறவுகோல்


82
பிறப்பிற் திறக்கும் புறத்தே தறிக்கும்
உறக்கம் வரைக்கும் உறுப்பு - புறத்தே
கறங்குங் கரண மிறுக்குந் துறவே
துறக்கந் திறக்குந் துறப்பு.

   பிறந்தக் கணத்தில் இயங்கத் தொடங்கும் புலன்கள், இறக்கும் வரையிலும் புறத்தையே இயல்பாக நாடுகின்றன. அத்தகையப் புறச் சுழற்சியினின்று மனதை விடுவிக்கும் ஒழுக்க நெறியே சொர்க்கம் எனும் பேரின்பத்தின் திறவுகோல் (என்றான் நசிகேதன்).


தறிக்கும்: நிலையின்றித் தாவும்
உறக்கம்: மரணம்
உறுப்பு: ஐம்பொறிக்கு ஆகி வந்தது
கறங்கும்: சுழலும்
கரணம்: மனம்
இறுக்கும்: நிலைப்படுத்திக் கட்டும்
துறக்கம்: சொர்க்கம்
துறப்பு: திறவுகோல்



    சிகேதன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் எழுந்து, "உள்தூய்மையை வளர்ப்பது எது, வளர்க்க விடாமல் தடுப்பது எது?" என்றார்.

அவையிலிருந்த இன்னொருவர் குறுக்கிட்டு, "அதான் அழகாகச் சொன்னாரே ஐயா. உள்தூய்மையை வளர விடாமல் தடுப்பவை நம் புலன்கள் என்று, கவனிக்கவில்லையா?" என்றார். பிறகு நசிகேதனிடம், "இளஞ்சுடரே! அப்படியெனில் உள்தூய்மையை வளர்ப்பது எது?" என்றார்.

நசிகேதன் புன்னகையுடன், "புலன்கள் தான்!" என்றான்.

அதைக் கேட்டதும். "ஆ! என்ன இது! சில காவிகளைப் போலவே கணத்துக்கு ஒன்று சொல்லிக் குழப்புகிறீரே ஐயா?" என்றார் மற்றொருவர்.

நசிகேதன் அமைதியாக, "விளக்கிச் சொல்ல முயல்கிறேன்" என்றபடி அவையைச் சுற்றி இன்னொரு நோட்டமிட்டான். பிறகு குரலைச் சற்றே உயர்த்திப் பேசத் தொடங்கினான். "அன்பு உள்ளங்களே! உள்தூய்மையே முக்திக்கான நெறி என்றேன். முக்தியடையும் வழியென்றேன். உள்தூய்மை அடையவிடாமல் தடுப்பவை நம்முடைய புலன்கள் என்றேன். உள்தூய்மையை அடைய வழி செய்வதும் புலன்களே!

பிறந்த கணத்திலே மனிதரின் உடல் உறுப்புக்கள் இயங்கத் தொடங்குகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலங்களின் வழியாக மனமானது இயங்கத் தொடங்குகிறது. இயங்கத் தொடங்கிய அந்தக் கணத்திலேயே உள்தூய்மை மாசடையத் தொடங்குகிறது. மனிதன் வளர வளர உள்தூய்மை கெட்டழிந்து போகிறது.

பிறந்த கணத்திலிருந்து நம்முடைய செவியானது வெளிப்புற ஓசைகளையும் ஒலிகளையும் கேட்டு ஒரு புறம் தாவுகிறது. நாசியோ வெளிப்புற மணங்களால் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து தேடுகிறது. கண்களோ புறக்காட்சிகளின் அற்புதத்திலோ அதிர்ச்சியிலோ சிக்கி வேறொரு திக்கிலே தொடர்கிறது. வாயானது இனிய உணவு வகைகளாலும் இன்மொழி வன்மொழிகளாலும் ஈர்க்கப்பட்டு இன்னொரு புறம் தறிகெட்டு ஓடுகிறது. மெய்யான உடலோ தொடல்களில் கிறங்கி இன்ப துன்பமென்று மற்றொரு திக்கிலே சுழல்கிறது. பிறந்த கணத்திலிருந்து வெளிப்புற இன்ப துன்ப உணர்ச்சிகளிலே சிக்கியப் புலன்கள், நாம் இறக்கும் வரையில் அதே நிலையில் தொடர்கின்றன.

இது இயல்பு. நம் புலன்கள் அமைக்கப்பட்டிருப்பது வெளியுலக, உலகாயத கவனத்தோடு செயல்படுவதற்காகவே. அதனால் அவை தமக்கு உணர்வு பிறந்த கணத்திலிருந்து நிலைகெட்டு அலையத் தொடங்குகின்றன".

“விசித்திரமாக இருக்கிறதே! மனிதராகப் பிறந்தவர்கள் உலகத்தை அனுபவிக்காமல் எல்லாவற்றையும் துறந்து ஒடுக்க வேண்டும் என்பது போல் பேசுகிறீரே ஐயா? பிறகு உலக அற்புதங்களினால் என்ன பலன்?”

“அற்புதங்களைத் தேடி அனுபவிக்கவே நம் புலன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றேன். உலகாயத் தேடல்களில் தவறே இல்லை. அதுவே நம் இயல்பு.”

“எனில்?”

“எனில், அத்தகையத் தேடல்களினால் நம்முள் இருக்கும் மனிதம் மேன்மையடைகிறதா, மாசடைகிறதா என்பதே நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி. மாசடைந்த மனம், பாவ புண்ணியங்களில் கவனம் செலுத்தத் தொடங்குகிறது. பாவ புண்ணிய அச்சத்தில் சிக்கித் தவிக்கிறது. மாசகன்ற மனமோ உலகாயத இயல்பிலும் பண்பட்டு நிற்கிறது. பாவ புண்ணிய அச்சங்கள் அதற்கில்லை.

எனது ஆசானான அறவரசன் இதை மிக அருமையாக விளக்கினார். நமது உடலை ஒரு தேர் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அந்தத் தேரில் பூட்டப்பட்டிருக்கும் ஐந்து புரவிகள் நம்முடைய ஐம்புலன்கள். தேரை இழுக்கும் ஐந்து புரவிகளும் தறி கெட்டு ஒவ்வொரு திக்கிலும் ஓடுவது இயற்கையல்லவா?" என்றான்.

"அதெப்படி? தேரோட்டியிருக்கும் பொழுது புரவிகள் ஒரே பாதையில் ஒழுங்காகப் பயணம் செய்யுமே?"

"மிகச்சரி. திக்குத் தெரியாமல் திசைக்கொருவராகத் தேரை இழுத்து நாசமாக்கக்கூடிய அதே புரவிகள், தேரை நேர்த்தியாக நேர்ப்பாதையிலும் கொண்டு செல்ல வல்லவை. அதைப் போலவே நமது ஐம்புலன்களும் நம்மைச் சரியான திசையில் இழுத்துச் செல்ல வல்லவை"

"ஐயா.. நம் உடல் தேர் என்றீர்கள், புரிகிறது. நம் புலன்கள் புரவிகள் என்றீர், புரிகிறது. தேரோட்டி யார்?"

"சொல்கிறேன். என் ஆசான் சொன்னது என் நினைவில் நிற்கிறது. நம் ஆன்மா தேரில் பயணம் செய்யும் வீரரைப் போன்றது. தேரில் பயணம் வீரருக்கு ஒரு இலக்கு இருப்பதைப் போலவே ஆன்மாவுக்கு ஒரு இலக்கு உண்டு. ஆன்மாவின் இலக்கைப் பிறகு விளக்குகிறேன். முதலில் தேரோட்டியை அறிமுகம் செய்து கொள்வோம். தன்னறிவே தேரோட்டி. தன்னறிவே புலன்களைக் கட்டி ஆன்மாவை சரியான பாதையிலே செலுத்த வழிசெய்கிறது. அந்தத் தன்னறிவைப் பெறுவதே நான் முன்பு சொன்ன வேள்வி. அத்தகையத் தன்னறிவை வளர்க்கும் உள்தூய்மையே நான் முன்பு சொன்ன வேள்வித்தீ.

வெளியுலக நுகர்ச்சிகளில் சிக்கியப் புலன்களால் கட்டுண்ட மனம், இயல்பாகவே அந்நுகர்ச்சிகளின் இன்பங்களைத் தக்கவைக்க விரும்புகிறது. அதனால் ஆசை, கோபம், களவு, பொய் எனும் தீக்குணங்களை விதைத்து வளரச் செய்கிறது. இத்தீக்குணங்கள், உள்தூய்மையை அரித்துக் கெடுத்து அழித்து விடுகின்றன. இறக்கும் வரையிலும் இந்த அழிவு தொடர்கிறது.

புறந்தழுவியப் புலன்களைக் கட்டி அகம் தழுவ வைக்கும் ஒழுக்கமே, உள்தூய்மையை வளர்க்கும் நெறியாகும். இந்த நெறியை அறிவதே அரிது. அறிந்து செயல்படுத்துவது இன்னும் அரிது. ஐம்புலன்களின் புறச்சுழற்சியில் சிக்கிய மனம், ஐம்புலன்கள் அடங்கிச் சீரான பாதையிலே இயங்கும் பொழுது தூய்மையடையத் தொடங்குகிறது. நாளடைவில் தூய்மை பெருகத் தொடங்குகிறது. தன்னறிவு பெறும் நிலையடைகிறது. ஐம்புலன்களைக் கட்டி மனதைத் தன்னறிவுப் பாதையிலே அழைத்துச் செல்லும் இத்தகைய ஒழுக்கமே, துறவே, சொர்க்கம் எனும் பேரின்ப நிலையின் திறவுகோலாகும்” என்றான்.

“புலன்களைக் கட்டினால் தன்னறிவைப் பெறலாம் என்கிறாயா?”

“இல்லை. புலன்களைக் கட்டினால் தன்னறிவுப் பாதையிலே செல்லலாம். புலன்களுக்கு அப்பாற்பட்டது தன்னறிவு. தீவிர யோகத்தினால் மட்டுமே தன்னறிவைப் பெற முடியும். புலன்களை கட்டுவதே மிகவும் கடினம். புலன்களைக் கட்டித் தீவிர யோகத்தினால் தன்னறிவைப் பெறுவது இன்னும் கடினம். தன்னறிவு பெற்ற நிலையில், சொர்க்கம் ஒரு பொருட்டேயல்ல. அந்த நிலையே பேரின்பத்தின் திறவுகோலாகும்”

அவையோர் நசிகேதன் பேச்சைக் கவனமாகக் கேட்டனர். “ஐயா, புலன்களைக் கட்டினால் தன்னறிவு பெறலாம் என்றீர்கள். தன்னறிவு சொர்க்கத்தின் திறவுகோல் என்றீர்கள். ஆனால் தன்னறிவைப் பெறத் தீவிர யோகம் செய்ய வேண்டுமா? அது என்ன என்று விளக்கிச் சொல்லுங்கள்” என்றனர்.

2012/02/10

முக்திக்கான வேள்வி


81
சித்தறியுஞ் சத்துவமே உத்தமரே வித்தகரே
முத்தியெனு மத்தமத்துந் தித்தியம் - சித்தமதில்
துத்துநத்து மத்தரிப்புப் பித்தடக்கும் பத்ததியத்
தித்தியத்துள் தத்திடுந் தீ.

   ல்லுள்ளங்களே! அறிஞர்களே! ஆன்மாவை அறியும் நோக்கத்துடனான உள்தூய்மையே முக்தியெனும் நிலையைத் தரும் வேள்வியாகும். பொய்மை, பேராசை, சினம், அறியாமை எனும் இவற்றை உள்ளத்திலிருந்து அகற்றும் ஒழுக்கமே அந்த வேள்வியில் ஒளிவீசும் தீயாகும் (என்றான் நசிகேதன்).


சித்து: ஆன்மா
சத்துவம்: நல்லெண்ணம், உளத்தூய்மை
அத்தம்: அருநெறி
அத்தும்: அடையும் (அத்தம்+அத்தும்: அருநெறி அடையும் | முத்தி யெனும் அத்தமத்தும்)
தித்தியம்: வேள்வி (வேள்விக்கூடம்)
சித்தம்: உள்ளம்
துத்து: பொய்மை
நத்து: பேராசை
மத்தரிப்பு: சினம்
பித்து: அறியாமை
பத்ததி: ஒழுக்கம் (முறைகளை விளக்கும் நூல்)
தத்திடும்: பரவும் (ஒளிவீசும்)



    சிகேதன் தொடர்ந்தான். "பேரின்பம் அல்லது பிறவாமையை வழங்கும் யாகம் பற்றிக் கேட்டீர்களே, சொல்கிறேன். பேரின்பமும் பிறவாமையும் தரும் முக்தி எனும் அரிய நெறி, அரிதான நிலை, அதனை அடைவதற்கு ஒரு வேள்வி உண்டு. ஆன்மாவை அறியும் தன்னறிவைப் பெறுவதே அத்தகைய வேள்வி. தன்னறிவைப் பெற்றவர்கள் பிறப்பையோ இறப்பையோ பற்றிக் கவலைப்படுவதில்லை. பிறவாமை என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இப்பிறவியில் தன்னறிவு பெற்றவர்கள், ஆன்மாவைக் கண்டறிந்தவர்கள், முத்தி அடைந்தவர்களாவர். இதைப் பற்றி மேலும் விவரமாகச் சொல்கிறேன்..."

நசிகேகதனைத் தொடரவிடாமல் அவையில் கேள்விக் கணைகள். 'வேள்வியா? எப்படிச் செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? பெண்களுக்கு அனுமதி உண்டா? இதற்காக வேதங்கள் படித்து ஞானம் பெற வேண்டுமா? விரதங்கள் கடைபிடிக்க வேண்டுமா?' என்று வந்தக் கேள்விகளைப் பொறுமையோடு கேட்டபின் தொடர்ந்தான்.

"இந்த வேள்வியை யார் வேண்டுமானாலும் புரியலாம். இந்த வேள்விக்கான வேதம் மிக எளிதில் புரியக்கூடியதாகும். பெரும் தானங்களும் விரதங்களும் தேவையில்லை. ஆண் பெண் என்ற பேதமில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. ஏழை செல்வந்தர் என்ற பேதமில்லை. படித்தவர் பாமரர் என்ற பேதமும் இல்லை. இன்னார் தான் வேள்வி செய்யவேண்டும் என்ற நியதியில்லை. இந்த வேள்வி வெளியிலே செய்வதல்ல. உள்ளுக்குள் புரியும் வேள்வி. தூய உள்ளத்தை வளர்ப்பதே இந்த வேள்வியாகும். தூய உள்ளத்தில் தொடங்கி தீவிர யோகத்தினால் ஆன்மாவை அறியமுடியும்."

நசிகேதன் சொல்லைக் கேட்டச் சிலர் சிரித்தனர். "சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே? அத்தனை வேதங்களும் முறைகளும் பொய்யாகி விடுமா? உளத்தூய்மை ஆன்ம அறிவாகுமா? இதையெல்லாம் கேட்டு மக்கள் குழம்பப் போகிறார்கள்" என்றனர்.

நசிகேதன் தயங்காமல் தொடர்ந்தான். "வேதங்களும் முறைகளும் பொய்யென்று சொல்லவில்லை. ஆனால் வேதங்களும் முறைகளும் உளத்தூய்மை இல்லாத நிலையில் பலனற்றுப் போய்விடுகின்றன. கண்மூடித்தனத்தை வளர்க்கும் கபடங்களாகின்றன. ஏமாற்றுச் சாதனங்களாகி விடுகின்றன. உளத்தூய்மை இருந்தால், வேதங்களுக்கும் முறைகளுக்கும் தேவையில்லாமல் போகிறது. உளத்தூய்மையை எல்லோரும் பெற முடியும். சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் என்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்காமல், சடங்குகளும் கண்மூடித்தனங்களும் நிறைந்தப் பாதையிலே அழைத்துச் செல்லுமானால் வேதங்களும் நெறிகளும் பொய்யே. தன்னையறியும் பாதையிலே நல்லுணர்வோடு நற்குணங்களோடு பயணம் செய்ய உதவாமல் போனால்.. வேதங்களும் சடங்குகளும் பொய்யே!"

"ஆகா!" என்றனர் சிலர்.

"ஆனால் உளத்தூய்மை பெறுவது எளிதல்ல. புற வேள்வியில் தீ வளர்ப்பது போலவே அக வேள்வியிலும் தீ வளர்க்க வேண்டும். புற வேள்வித் தீயில் தானங்களை வழங்குவது போலவே அக வேள்வித் தீயிலும் புரியவேண்டும்."

"புரியவில்லையே.."

"நம்மை நன்னெறியினின்றுப் பிறழச் செய்யும் ஆசை, பொய்மை, கோபம், அறியாமை போன்றவை நம் மனதிலே குடிகொண்டு அறிவை விரட்டியடிக்கக் கூடியவை. இவற்றை அறிந்து களைய வேண்டும். ஆசை, கோபம், களவு, அறியாமை இவற்றை உணரச்செய்யும் ஒழுக்கமே இந்த வேள்விக்கான வேதம். இந்த ஒழுக்கமே வேள்வித்தீயாக ஒளிவீசி, நாளடைவில் வேள்விப்பயனான தன்னறிவைப் பெற வழி செய்கிறது. அகவேள்வித் தீயில் நாம இடவேண்டியவை நம் தீக்குணங்கள். தூய மனதில் துக்கமில்லை. தூய மனதுக்கு சுகம் துக்கம் நன்மை இன்பம் துன்பம் எல்லாம் ஒன்றே. அந்த நிலையில் புறத்தியாகங்களைப் புரிந்து பொய்யான பலன்களை எதிர்நோக்கும் அவசியமில்லை"

"நல்ல பிள்ளையப்பா! நீதி சொல்லக் கிளம்பிவிட்டான்.." என்றார் ஒரு அறிஞர். "சாத்திரங்கள் சொல்லாதப் புதுக்கதையை சொல்கிறான். இதைக் கேட்க வந்தோமே!" என்று அவையை விட்டுக் கிளம்பினார்.

"ஐயா, பொறுங்கள்" என்றார் இன்னொரு அறிஞர். நசிகேதனிடம், "இளவரசே! நீங்கள் சொல்வது போல் உள்தூய்மையால் தன்னறிவு பெற முடிந்தால் ஏன் அனைவரும் பெறுவதில்லை?" என்றார்.

அவையில் சிலர், "ஆமாம் மகனே.. எங்களுக்கும் அந்த ஐயம்.. பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம் என்று பயந்து கொண்டிருக்கும் எங்களுக்கு உள்தூய்மை பற்றி விவரமாகச் சொல்லுங்கள்.. பேரின்பம் இவ்வளவு எளிதானதென்றால் ஏன் எல்லோரும் சடங்குகளை நம்பிக் கொண்டிருக்கிறோம்?" என்றனர்.

நசிகேதன் தொடர்ந்தான். "சொல்கிறேன். ஆன்மாவை அறியும் நோக்கத்துடன், ஆசை கோபம் களவு அறியாமை இவற்றை அகற்றி உள்தூய்மையை வளர்ப்பதே முக்தி என்னும் அரிய நிலையடையும் வழி. எனினும், உள்தூய்மை என்பது எளிதல்ல. உள்தூய்மை அடைய விடாமல் தடுப்பவை, நம் புலன்களாகும்" என்றான்.

2012/02/03

ஆன்மா எனும் உண்மை


80
அழிந்தும் எழும்பும் அழலான் வழியே
செழிக்கும் சுழியே சித்து - கழியில்
அழுப்புக ஆசான் கொழித்தக் கெழுமை
முழுதும் பொழிந்தான் மொழிந்து.

   விண்ணுலக ஆசான் வழங்கிய குறையற்ற அறிவொளியை அவையிலே பொழிந்த நசிகேதன், உதயமாகி மறையும் ஆதவனைப் போன்று ஆன்மாவும் சுழன்று வளர்வதாகும் என்று சொல்லி முடித்தான்.


அழலான்: ஆதவன் (அழல், அழலன்)
சுழி: விதை, சுழற்சி
சித்து: ஆன்மா
கழியில்: குறையில்லாத (கழி+இல்)*
அழுப்புகம்: விண்ணுலகம்
கொழித்த: பொழிந்த, பெருமளவில் வழங்கிய
கெழுமை: ஒளி, சிறப்பு (அறிவு)
* நசிகேதன் தன் ஆசானைக் குறையற்றவன் என்றதாகவும் பொருள் கொள்ளலாம்



    வையினர் கேட்டக் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்லுவதென்று சிந்தித்தான் நசிகேதன். அவையை நோட்டமிட்டான். அவன் மனதிலும் எண்ண மழை. உணர்வு ஓடை. எழுச்சி நதி.

திகைத்தான். எத்தனை பேர் கூடியிருக்கிறார்கள்! படித்தவர்கள் பாமரர்கள் என்றப் பாகுபாடின்றி அத்தனை பேரும் என்னைக் காண வந்திருக்கிறார்களே! எதற்காக? எத்தனை விதமான கேள்விகள் கேட்கிறார்கள்! கேள்விகளில் அறிவும் அறியாமையும் தொனிக்கிறதே! என் எமனுலகப் பயணக் கதையைக் கேட்க வந்திருக்கிறார்களா? இருக்காது. பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதால் இவர்களுக்கு ஏதாவது பயனேற்படுமா? பயண விவரங்களின் சிலிர்ப்பும் திகைப்பும் சில கணங்களில் மறைந்து விடுமே? இவர்களுடைய கேள்விகளின் வேர் யாது? சொர்க்கம் பற்றித் தெரிந்து கொள்வதா? அதை அடைவதற்கான வழி முறைகளைத் தெரிந்து கொள்வதா? அவ்வுலக நிலையை அறிந்து கொள்வதா?

விழித்தான். அவ்வுலகம் பற்றி அறிந்து கொள்ளும் பக்குவம் இவர்களுக்கு இருக்கிறதா? கண்மூடத் தயங்காத இவர்கள் கண்திறக்கத் தயங்குவார்களா? எத்தகைய வேள்வி புரியவேண்டும் என்று கேட்கிறார்களே? எத்தகைய தானங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே? வேள்வியைப் பற்றி எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்களா? 'புரிந்தவர்க்கும் பொன்னுலகும் பிக்கும், பேதைக்கோ என்னுலகம் என்றும் எதிர்' என்றாரே என் ஆசான்! இவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது!

திடுக்கிட்டான். அடடா! ஆசானிடம் நான் இவர்களைப் போலத்தானே அடாது கேட்டேன்? அவரும் என்னைப் போல் மனதைப் பிசைந்து கொண்டிருப்பார் என்பது இப்போதல்லவா புரிகிறது! ஆசான் என்னைச் சோதித்தது போல் நான் இவர்களைச் சோதிப்பதா? தேவையில்லை. அதனால் பலனில்லை. இவர்களின் தேவை, தேர்ந்த அறிவல்ல. ஞானமல்ல. இவர்களுக்குத் தேவை, குறுக்கு வழி. ஒரு பதில். இன்றையப் பொழுதுக்கான ஒரு வடிகால். சாதனம். வேறு வரங்கேள் என்று ஆசான் என்னை வற்புறுத்தியது இப்போதல்லவா புரிகிறது? பொன்னை அறியும் மாந்தரிடம் சற்றுத் தன்னையும் அறியச் சொல்வதால் பலனுண்டா? மெய்யறிவை வழங்குவதை விட, பொன்னையும் மணியையும் இவர்களுக்கு வழங்கினால் மகிழ்வார்களோ?

கலங்கினான். அந்தோ! அப்படி எண்ணிக் கைவிட முடியவில்லையே?! பிறகு, இந்த அறிவை இவர்கள் பெற முடியாது போகுமே! நான் பெற்ற அறிவின் பலனும் அழிந்து விடுமே! பாமரர்களை விட, படித்தவர்கள் மேல் பரிதாபம் தோன்றுகிறதே! படிப்பும் பட்டறிவும் பல கேள்வி ஞானமும் பெற்றும், தானும் கண்மூடிப் பிறரையும் குழியில் தள்ளுகிறார்களே! இவர்களின் கண்மூடித்தனத்துக்குக் கல்வியே காரணமோ? பாமரர்களோ பயந்திருக்கிறார்களே? இவர்களின் கண்மூடித்தனத்துக்கு பயம் காரணமோ? மெய்யறிவைப் பையிலடைத்து இவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறேன்?

சிலிர்த்தான். தேவர்கள் உண்டா, கடவுளைக் கண்டாயா என்றார்களே! கண்டேன் என்றால் புரிந்து கொள்வார்களா? என் ஆசிரியரை நினைத்தால் மெய் சிலிர்க்கிறதே! 'வெளியே சிவந்தேடல் வீண்' என்றதன் பொருள் இப்பொழுதல்லவா புரிகிறது! ஆசான் என்ன சொன்னார்? 'சுகம் தேடிச் செல்வார் போல் மெய்யறிவில் மூழ்க மனங்கொள்' என்றாரே? அவர் சொல்லின் உண்மைப் பொருள் இப்பொழுதல்லவா விளங்குகிறது! சாதாரணப் பாமரர்கள் தான் மெய்யறிவைச் சுலபமாகப் பெறத் தகுதியானவர்கள். சுகந்தேடும் அவர்களால் தான் மெய்யறிவிலும் மூழ்க முடியும். தத்துவப் பித்து கொண்ட தாடிகளும் காவிகளும் தங்களின் கண்மூடித்தனத்தினாலும் ஆணவத்தினாலும் மெய்யறிவைப் பெறும் தகுதியற்றவர்கள் என்பது இப்போதல்லவா புரிகிறது!

மருண்டான். மெய்யறிவுப் பாதையில் கல்லும் இல்லை முள்ளும் இல்லை. மெய்யறிவுப் பாதை எளிதான பாதை, எனினும் பயணம் கடுமையானது என்பதைப் புரிந்து கொள்வார்களா? யாகங்கள் விரதங்கள் தானங்கள் தியாகங்கள் எல்லாமே தேவை.. ஆனால் அவை இவர்கள் இப்போது புரியும் யாகங்கள் அல்ல, விரதங்கள் அல்ல, தானங்கள் அல்ல, தியாகங்கள் அல்ல என்றால் உணர்ந்து கொள்வார்களா? தேவைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு வெளி வரத் தயங்குகிறார்களே? வெளியே தீ வளர்த்துத் துதி பாடி தானம் செய்து கண்மூடும் இவர்களை உள்ளே தீ வளர்க்கச் சொல்வதெப்படி? வெளியில் பொன்னும் மணியும் பசுவும் சிசுவும் தானம் செய்யும் இவர்கள் செய்ய வேண்டிய தானங்களும் தியாகங்களும் அவர்களுக்குள்ளேயே இருப்பதை எப்படிச் சொல்வது? எனக்கே எமனுலகம் போனபின் தானே இவை புரிந்தது? ஒருவேளை இவர்களும் இறந்தபின் புரிந்து கொள்வார்களோ?

வருந்தினான். அடடா! இந்தப் பேதைகளின் முகங்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறதே! இல்லாததை நம்பிப் பொல்லாததைப் புரிகிறார்களே! இத்தனை எளிமையான உண்மையை இவர்கள் இறந்து அறிய வேண்டியிருக்கிறதே! தான் கற்றத் தத்துவம் 'ஞாலத்து மையகற்றும் ஞாயிறு' என்றதன் உண்மை உறைத்தது. அவனுள் நன்றியுணர்வு பொங்கியது. என் தந்தையின் அறியாமையினால் தானே எனக்கு அறிவு கிடைத்தது! தந்தையைப் பார்த்து மனதால் நன்றி சொன்னான்.

கனிந்தான். மீண்டும் அவையினரைப் பார்த்தான். 'உன்னால் மைவிலகி உய்யட்டும் உலகு' என்ற எமனின் ஆசி நினைவுக்கு வந்தது. ஒரு உயர்ந்த மாணவன் தன் மேலான ஆசிரியருக்குச் செலுத்த வேண்டிய நன்றியைப் புரிந்து கொண்டான். அவந்தேடி ஓட்டும் அகத்தின் ஒளியைப் பற்றி இவர்களுக்குத் தெளிவாகச் சொல்லியே தீரவேண்டும் என்ற வேகம் அவனுள் எழுந்தது. இவர்களுக்குத் தன்னறிவைப் பற்றிச் சொல்லியே தீரவேண்டும். இவர்களில் ஒரு சிலர் புரிந்து கொண்டாலும் பலன் தானே?

மகிழ்ந்தான். அவன் எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன. 'மூன்று வரங்கேள்' என்ற ஆசானின் நினைவு வந்தது. தானும் இதே நிலையில் இருந்ததை எண்ணினான். இவர்கள் ஞானப்பாதையில் போக விரும்புவதினால் தானே கேட்டார்கள்? பதிலுக்கு மெய்யறிவை வழங்க வேண்டியது என் கடமையல்லவா! எத்தகைய வாய்ப்பு இது! நான் பெற்ற ஞானம் இவ்வையமும் பெறுவதில் ஞானத்துக்குத் தானே பெருமை! இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே பெரும் பேறு! இதற்காகவே தன்னை எமன் தயார் செய்திருப்பது புரிந்தது. தன் ஆசானுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துவிட்டுத் தொடங்கினான்.

"என்னைக் காண வந்த நல்ல உள்ளங்களே!" என்றான். "எல்லாம் அறிந்த ஞானிகளே!" என்றான். "உங்கள் அன்புக்கு முதலில் என் வணக்கங்கள்!" என்றான்.

அவையில் அமைதி.

எமனுடன் நடந்த உரையாடலை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று சிந்தித்தான் நசிகேதன். அவையோர் கேள்வியின் பின்னே இருந்த அச்சத்தை, ஆன்மாவின் சுழற்சி பற்றிய ஐயத்தை, அது தொட்ட பாவ புண்ணிய சொர்க்க நரக நம்பிக்கைகளை, அவற்றைப் பெறவும் விடவும் புரிய வேண்டியதாகச் சொல்லப்படும் கண்மூடித்தன சடங்குகள் பற்றிய அறியாமையை.. அனைத்தையும் நீக்க வேண்டிய, விளக்க வேண்டிய, தருணம் வந்ததை உணர்ந்தான். தன் ஆசான் இதற்காகவே தன்னைப் தயார் செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தான். தன் உரையைத் தொடங்கினான்.

"அன்புடையீர்.. இதோ இருக்கும் என் தந்தை அறியாமையினால் என்னை எமனுக்குத் தானம் கொடுத்தார். தனக்குச் சொர்க்கம் கிடைக்குமென்று காவிகள் சொன்னக் கட்டுக்கதையை நம்பி, பெரும் வேள்வி புரிந்து, பெற்ற மகன் என்றும் பாராமல் என்னை எமனுக்குத் தானம் கொடுத்தார்" என்று தொடங்கினான். அரியணையிலிருந்த அரசனை, வாசனை, தன் தந்தையைப் பார்த்தான். நசிகேதனின் பார்வையிலே ஆத்திரம் இல்லை. மாறாக கருணையும் நன்றியும் ஒளிர்ந்தது. "அப்பா!" என்று வணங்கினான். தொடர்ந்தான்.

"அன்புடையீர்.. என் தந்தையின் செயல், அறியாமையின் விளைவு என்றாலும் அவர் அவ்வாறு செய்யாதிருந்தால் எனக்கு இந்த அறிவைப் பெறும் வாய்ப்பு, பெற்று உங்களுடன் பகிரும் நிறைவு.. இரண்டுமே கிடைத்திருக்காது. அவருக்கு என் நன்றி. அறவரசனான எமன் என்னை அன்புடன் ஏற்று ஒப்பற்ற மெய்யறிவை வழங்கினார். என் ஆசான் களங்கமற்றவர். என் ஆசான் மாபெரும் அறிஞர். என் ஆசான் கருணையே உருவானவர். என் ஆசான் உங்கள் அனைவருக்கும் உய்யும் வழியை என்னிடம் சொல்லியனுப்பினார். அதனை முழுதுமாக உங்களிடம் சேர்க்க எனக்கு அவர் தொடர்ந்து அருள் புரியட்டும். எனக்குத் துணை நிற்கட்டும்.

மண்ணிலே விதை விதைக்கிறோம். விதை வளர்ந்துப் பயிராகிறது. பயிர் அழிந்து விதையாகிறது. விதை மீண்டும் அதே மண்ணிலே அதே பயிர் வளரக் காரணமாகிறது. இதைப் புரிந்து கொண்டவர்கள், விதை பயிராவதால் பெருமகிழ்ச்சியோ பயிர் விதையாவதால் பெருந்துயரமோ அடைவதில்லை. பயிர் அழியும் காலத்தில் விதையின் உண்மை, வளர்ச்சியின் தத்துவம், அறிந்து அமைதியாக இருக்கிறோம். பிறப்பும் இறப்பும் அது போலவே. உயிர் பிறப்பது விதை முளைப்பது போல. உயிர் பறப்பது பயிர் அழிவது போல. முளைத்து நல்முறையில் வளர்ந்து செழிப்பது மட்டுமே பயிரின் கடமை. விதையின் உரிமை பயிருக்கு இல்லை. அதுபோல் நல்முறையில் வளர்ந்து, மனித நேயத்தில் செழித்து, தன்னையறிந்து நடப்பதே நமது கடமையாகும்.

மழை நீரை அறிவோம். விழும் இடம் பார்த்தா விழுகிறது? கடலிலோ ஏரி குளங்களிலோ நிலத்திலோ விழுகிறது. விழுந்த நீர் குளத்திலோ நதியிலோ கடலிலோ கலந்து, அத்தன்மைக்கேற்ப உருமாறுகிறது. அறவே கலந்த மழைநீரானது, தான் விழுந்து கலந்த குளம் நதி கடலினின்று விலகி, தன்மைகளை விடுத்து மேலெழுந்து, உருமாறி மீண்டும் மழைநீராகவே அதே இடங்களிலோ, இடம் மாறியோ, விழுகிறது. ஆயின், இந்த சுழற்சி மாறுவதேயில்லை. தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து வேறு விதமாக மாறத் தெரியாத நீரானது எப்படி மழையாக மாறி கடல் நதி நிலம் என்றுச் சுற்றி வருகிறதோ, அதுபோல் ஆன்மாவானது உடலினின்று விலகிக் கலந்து விலகிக் கலந்துச் சுழல்கிறது.

என் ஆசான் இதைப் பற்றிச் சொல்லும் பொழுது, 'பாமரர்கள் மட்டுமல்ல பெரும் ஞானிகளும் தங்களைப் பற்றிய உண்மையை அறியாமல், பிறவாமை எனும் பேற்றினைத் தேடி என்னுலகம், பொன்னுலகம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் வந்து போகிறார்கள்' என்றார். அன்பர்களே! இந்தச் சுழற்சி தவிர்க்க முடியாதது. இயல்பானது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் போன்றவற்றின் நிறங்களை அறிய முடியும். இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல. சுழற்சியின் கவர்ச்சியில் விழுவது எளிது. அதனால் நாம் பேராசைகளையும் பெருந்துயரங்களையும் வளர்த்து உழல்கிறோம்.

இங்கே விருந்துண்டோம். விருந்திலே மா பலா வாழை என முக்கனிகள் பரிமாறப்பட்டன. நம்மால் எத்தனை உண்ண முடிந்தது? முதல் கனியை வாய் ருசித்தது. மனம் மகிழ்ந்தது. எனினும், எத்தனை கனிகள் உண்ண முடிந்தது? மூன்றாவதாகவோ ஐந்தாவதாகவோ பறிமாறப்பட்டவை முதல் கனியின் சுவை போலவே இருந்ததா? இல்லையே? சாதாரணச் சாப்பாட்டின் இனிமையே நிலையில்லாதது என்று உணரும் பொழுது, நமக்கு எத்தகைய அதிர்ச்சி காத்திருக்கிறது புரிகிறதா?

நிலையாமை என்பது நம் ஒவ்வொரு செயலிலும் இயக்கத்திலும் செய்தியாகப் புதைந்திருக்கிறது. நாம் தான் அறிவதில்லை. அறிவது எளிதல்ல. தன்னையறியும் பொழுது நிலையாமை முகத்தில் அடித்தாற்போல் புரிகிறது.

நீரிலே எழும்பித் திரியும் குமிழியில் பல வண்ணங்கள் பட்டுத் தெறித்து, கண்களுக்கும் மனதுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. குமிழி நிலைப்பதில்லை. குமிழி எப்போது வெடிக்கும் என்று தெரியாது. வாழ்வும் குமிழி போன்றதே. உலகத்தில் அளவற்ற நாள் வாழ வழியிருந்தாலும், அது நிலைக்காத குறுகிய காலமே. இசையும் இளமையும் வாரிசும் வாழ்வும் நசையாகும். அதனால், வாழும் காலத்திலே தன்னை உணர்ந்து கண்மூடித்தனங்களை விட்டு அறிவைத் தொடர்ந்து வாழ வேண்டும். அறிவுப் பாதையிலே போவோருக்கு அச்சமில்லை. துயரமில்லை. நல்ல மனிதராக வாழ்ந்த நிறைவு, அச்சத்தையும் துயரத்தையும் அழிக்க வல்லது.

எனது ஆசான் சொன்னதை இங்கே நினைவு கூர்கிறேன். 'மானிடத்துக்கு ஒரு சாபம் உண்டு. தனக்கு அறிவு இருப்பதையே உணராமல் செயல்பட வேண்டிய சாபம். கண்மூடி இருப்பதில் சுகம் காணும் மானிடம், கண் திறந்து செயலாற்றச் சோம்பித் திரியும் இயல்பினது. இந்தச் சாபத்திலிருந்து விடுபட வைப்பதும் அறிவே; ஆனால், அதற்குள் அறிவு அடங்கி விடுகிறது. இன்னொரு அறிவை நம்பித் தன்னறிவை தக்கி வைக்கும் பரிதாபம் மானிடத்துக்கே உரியது' என்றார்.

அஞ்சாதீர்கள். நமக்கு சாபம் எதுவும் இல்லை. நாம் அறிய வேண்டியதை, புரிய வேண்டியதை எடுத்துச் சொல்லவே என் ஆசான் அப்படிச் சொன்னார்.

என் ஆசானை நான் நன்கு அறிவேன். கள்ளமற்றவர். குறையற்றவர். கருணை வடிவானவர். தன்னையறியாமல் மானிடம் தடுமாறுவதைக் கண்டு வருந்தி அல்லாடுபவர். அவர் சொன்னது இது தான்.

நம் அறிவானது, இன்பங்களையே முதலில் அடையாளம் காண வைக்கிறது. நன்மைகளை நாம் கேட்டாலொழிய அடையாளம் காட்டாது. நாம் தொடர்ந்து இன்பங்களையே தேர்ந்தெடுத்தால், நம் அறிவும் அதற்கேற்றபடிப் பதப்பட்டு, நன்மைகளைத் தேடும் இயல்பினை இழந்து விடுகிறது. இன்பங்களையே நாடும் அறிவு, தொடர்ந்து அந்தப் பாதையிலேயே நம்மை அழைத்துச் செல்கிறது. மெய்யறிவுக்கானப் பாதையிலிருந்து விலகி நம்மை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகிறது. இது பொய்யறிவு.

இன்பத்தையே தேடி அலையும் நாம், அதற்கானத் தடைகள் வரும்பொழுது குறுக்கு வழிகளைச் சிந்திக்கிறோம். தவறுகளைச் செய்யத் துணிகிறோம். தான் என்ற எண்ணத்திற்கு அடிமையாகிறோம். பேராசை, பகட்டு, பொறாமை போன்றவற்றில் தன்னை மறந்து, அகக் கண்ணாம் அறிவை நிரந்தரமாக மூடி விடுகிறோம். நம்மைச் சுற்றியிருப்பவரையும் இன்பத்தேடலில் ஈடுபடுத்துகிறோம். குறுக்குவழிகளில் பயணிக்க வைக்கிறோம். நம்மில் பலர், பாதையின் குழப்பத்தை அறியாமலே வாழ்க்கையை முடிக்கின்றனர். அறிந்து கொள்ளும் சிலருக்கோ காலம் கெட்டுப் புரிவதால், மானம் கெட்டு மடிகின்றனர்.

நம்மை அறிய வைக்கும் வழியே நல்வழி. நன்மைகளைத் தரும் நெறிகளாலான வழி. நம் ஒவ்வொரு செயலும் நம்மை - முதலில் நமக்கும், பிறகு நம் சுற்றத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது. அதனால் அன்பர்களே, இன்பமா நன்மையா எது தேவை என்பதை எப்பொழுதும் மனதில் வைத்து செயலில் இறங்குங்கள்.

மானிடம் இருவகைப்படும். ஒன்று அறிவுள்ள இனம். மற்றது அறிவற்ற இனம். நம்மில் வேறு பேதமேயில்லை.

அறியாதவர்கள் என்றால் எழுத்தறிவில்லாதவர்கள், கல்வி கற்காதவர்கள் என்று பொருளல்ல. அறிவற்றவரும், பார்வைக்கு அறிவுள்ளவர் போலவே தோன்றுவர். அறிவில்லாதவர் நன்கு படித்திருக்கலாம்; நெறிகளையும் வேதங்களையும் சாத்திரங்களையும் தந்திரங்களையும் கற்றிருக்கலாம்; வித்தை தெரிந்தவராக இருக்கலாம். எனினும், அறிவற்றவர்களாக நடப்பதாலும், பிறரை அறியாமையில் இழுப்பதாலும், இவர்கள் அறிவில்லாதவர்களே.

அரை எழுத்துக் கல்லாதவர், பாமரனிலும் பாமரன், வேதங்களோ சாத்திரங்களோ இன்னதென்றே தெரியாதவர், மிகச் சாதாரணர், அறிவோடு நடந்தால் அவர் அறிந்தவர் ஆவார்.

மனித மனம் இயல்பிலே இன்பத்தை நாடும் தன்மையது. துன்பத்திலிருந்து விலகி ஓடும் தன்மையது. இன்பத்தைத் தேடிச் சேர்க்கும் பொழுதும், துன்பத்திலிருந்து விலகும் பொழுதும், தூண்டுதல்களுக்குக் கட்டுப்படும் மனிதன் என்னென்ன செயல்களைச் செய்கிறான் என்பதே அறிந்தோனையும் அறியாதவனையும் அடையாளம் காட்டும்.

அறிவற்றோர் நற்குணங்களில் சிறிதும் வளர்ச்சி பெறாதவர்கள்; பகுத்தறிவு மழுங்கியவர்கள்; சந்தனம் கலந்த சாக்கடை போன்று சொல்லும் செயலும் கொண்டவர்கள்; தீய குணங்களில் தேர்ந்தவர்கள்; தன்னிலை உயரவேண்டி, கண்மூடித்தனங்களை விரும்பி ஏற்பதனால், இவர்கள் தங்களுக்குப் பிறவியிலே கிடைத்த நல்லறிவை அழித்துக் கொள்கிறார்கள்.

அறிவுள்ளவர்கள் புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு, வாலறிவு எனும் நான்கு வகை அறிவினையும் பெற்றவர்கள். தங்களுக்குள் இருக்கும் அசாதாரண சக்தியைப் புரிந்து கொண்டு, அதனால் தானும் தன்னைச் சுற்றியிருப்போரும் பயனடையும் விதத்தில் நடப்பவர்கள். அறிவுளோரின் அடையாளம் என்று என் ஆசான் சொன்ன பெரும் ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிறப்பால் பெறும் மூன்று சொத்துக்களில் தன்னறிவு மட்டுமே இறக்கும் பொழுதும் உடன் வருவது என்பதை அறிந்தவரே அறிவுளோர்" என்றான்.

"பிறப்பால் வரும் சொத்துக்களா? பிறக்கும் பொழுது எதுவும் கொண்டு வருவதில்லை, இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்வதும் இல்லை. இதென்ன புதுக்கதை?" என்றார் ஒரு ஞானி.

நசிகேதன் புன்னகைத்தான். "சொல்கிறேன் அறிஞரே! மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் கொண்டு வரும் சொத்துக்கள் மூன்றாகும். முதல் சொத்து உள்ளறிவு. இரண்டாவது, உயிர்த்துடிப்பு. மூன்றாவது, தாய்-தந்தை என்ற உறவு. இவை மூன்றுமே பிறப்பால் உண்டாகும் சொத்துக்கள்.

பிற செல்வங்களும் சொந்தங்களும் இடையில் சேர்ப்பவை அல்லது தொலைப்பவையாகும்.

இம்மூன்று சொத்துக்களில் இரண்டு உண்டானவை, ஒன்று உருவாவது. இந்த மூன்றில் 'உண்டான' இரண்டு, பெற்ற உறவும் உயிர்மூச்சும் ஆகும். அவற்றை மாற்றவோ சீராக்கவோ மனிதரால் முடியாது. 'உருவாகக்' கூடியது உள்ளறிவு மட்டுமே. அதனை மட்டுமே மனிதரால் தேடியறிந்து, தன் விருப்பம் போல் உருவாக்கிச் சீராக்க முடியும். பிறப்பிலிருந்து இறப்பு வரை, அறிவுள்ள மனிதரின் ஒரே குறிக்கோள், தன்னறிவைத் தேடி வளர்த்துத் தனக்கும் பிறருக்கும் பயனுற வாழ்வதாக இருக்க வேண்டும். 'எப்படி வாழ்ந்தோம் என்கிற முத்திரையைப் பதிக்க வல்லது தன்னறிவு' என்பது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.

பிறப்பால் பெற்ற மூன்று உடைமைகளில், இறக்கும் பொழுது உயிர்த்துடிப்பு நின்று விடுகிறது. உயிர் நின்ற கணமே உடன் வந்த பெற்றோர் உறவும் முறிந்து விடுகிறது. அந்நிலையில், இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள். ஆதலின் அன்பர்களே, அறிவுள்ளவராக விளங்குவோம்" என்றான்.

அவையில் பெரும் அமைதி. கூடியிருந்த ஒவ்வொருவரும் தம் நுகர்ச்சிப் பாதைகளை எண்ணினர். இன்பத்தை நாடுகிறோமா, நன்மையும் தேடுகிறோமா என்று சிந்திக்கத் தொடங்கினர். எத்தகையக் கண்மூடித்தனங்களில் வாழ்வைக் கழிக்கிறோம் என்ற கழிவிரக்கத்தில் சிலர் வாடினர். நசிகேதன் தொடர்ந்தான்.

"தன்னறிவு என்பது மிக நுண்மையான அறிவாகும். தன்னறிவைப் பற்றி என் ஆசிரியர், 'தன்னறிவுக்கு உருவமில்லை. பன்னிரண்டு கைகளோ, நான்கு முகங்களோ, மூன்று கண்களோ, எட்டு தோள்களோ, பத்து தலைகளோ இல்லை. எனினும், அதை அடையாளம் காணலாம். தன்னறிவு, ஆறு தீக்குணப் பகையழிக்க வல்லது. எனினும், சூலமோ ஆயுதமோ வில்லோ வாளோ ஏந்தி நிற்பதில்லை. பூமிக்கும் ஆகாயத்தும் அண்டத்துக்கும் அப்பாற்பட்டுப் பரந்திருக்கக் கூடியதாயினும், அணுவுக்குள் அணுவாக அடங்கி எளிதில் புலப்படாத தோற்றமுடையது' என்றார். என் ஆசானின் அறிவை நான் என்னென்று போற்றுவேன்! கேளுங்கள். புறக்கண் இழந்தக் குருடர்களால் எப்படி வெளிக்காட்சிகளைக் கண்டு செயலாற்ற இயலாதோ, அவ்வாறே அகக்கண் குருடர்களால் தனக்குள்ளே கண்டு தன்னறிவைத் தேடிச் செயலாற்ற முடியாது"

"தன்னறிவை எப்படிப் பெறுவது என்று சொல்லுங்கள் இளவலே" என்றார் அவையில் ஒருவர்.

"அகக்கண்ணை மூடியே வைத்திருப்பது மனிதரின் இயல்பான குணம். புலன்கள் நம்மைக் கட்டுகின்றன. புலன்கள் இடையூறு எனும் களையாகி, தன்னறிவு எனும் பயிர் செழித்து வளராமல் தடுக்கின்றன. புலன்களை நாம் கட்டவேண்டுமெனில், அவற்றின் ஆக்கிரமிப்பில் இருந்து முதலில் விடுபட வேண்டும். தித்தியத் தீ என நான் முன் சொன்னது போல், உள்மனதின் தீ வளர்த்து புலனடக்க வேண்டும். தீவிர யோகத்தினால் மட்டுமே உள்ளுக்குள் உறையும் தீயை வளர்க்க முடியும். உள்மனதின் தீ வளர வளர, அதன் வெம்மையில் புலன்களின் ஆதிக்கம் அடங்கி ஒடுங்கும். அதன் ஒளியில் தன்னறிவின் தடம் விளங்கும். இடையூறு செய்யும் புலன்களின் நாராசத்தை அடக்குவது, ஓம் எனும் ஒரு அகவொலியாகும். இதையறிந்துத் தன்னறிவைத் தேடிப் பெறுவோம். தன்னறிவைக் கண்டவர்கள் ஆன்மாவை அடையாளம் காண முடியும்"

"தன்னறிவும் ஆன்மாவும் வேறா?" என்று கேட்டார் ஒருவர்.

"தசையினால் கட்டப்பட்ட நம் உடல், தேர் போன்றது. உயிரானது, தேரின் சக்கரங்கள் போன்றது. எளிதில் அடங்காத நமது ஐம்புலன்கள், தேரில் பூட்டப்பட்டிருக்கும் புரவிகள் போன்றவை. ஆன்மாவோ அனைத்தையும் கவனித்தபடி தேரில் பயணம் செய்யும் வீரர். தேரையும் குதிரைகளையும் இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியே தன்னறிவாகும்"

அரியணையிலிருந்து இறங்கி வந்து அவையோருடன் அமர்ந்தான் வாசன். நசிகேதனை வணங்கி, "ஐயா, தன்னறிவு, ஆன்மா பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள். ஆன்மாவை அறிந்த உயிருக்கு என்ன கதி?" என்றான்.

"தந்தையே! நம்முடைய புலன்களுக்கும் பல நிலைகளுக்கு அப்பால் இருப்பது ஆன்மா. அதற்கும் அப்பால் பல நிலைகள் கடப்பதே உயிர்ப் பயணத்தின் இலக்கு. ஆன்மா சுழன்று கொண்டே இருக்கிறது" என்றான்.

புரியாமல் விழித்த வாசனையும் அவையோரையும் கண்ட நசிகேதன் தெளிவுடன் தொடர்ந்தான். "ஒன்றன் மேல் ஒன்றாக ஆறு குகைகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். முதல் ஐந்து குகைகளில் தடுமாறித் தவறினா மீண்டும் முதல் குகையிலிருந்துத் தொடங்க வேண்டும். ஆறாவது குகையில் தடுமாற வழியில்லை. நமது பயணத்தின் நோக்கம் ஆறாவது குகைக்குச் செல்வதல்ல. ஆறாவது குகையை விட்டு வெளியேறுவதாகும்"

"ஆன்மாவைப் பற்றிக் கேட்டால் இந்தப் பிள்ளை ஏதோ குகையைப் பற்றிச் சொல்கிறதே?!" என்றார் ஒருவர்.

நசிகேதன் தொடர்ந்தான். "ஐம்புலன்களை அறிவோம். புலன்களை அறிய வைப்பது உணர்ச்சிகள். உணர்ச்சிகளே முதல் குகை. உணர்ச்சிகளை விட நுண்மையானவை உணர்வுகள். உணர்வுகளே அடுத்தக் குகை. உணர்வுகளை விட நுண்மையானது குணம். அதுவே மூன்றாவது குகை. குணத்தினும் நுண்மையானது, அப்பாற்பட்டது, மனம். அடுத்தக் குகை. மனதைக் கட்டும் அறிவோ, அதனினும் நுண்மையானது. அறிவே அடுத்தக் குகை.

மனித உயிரானது, பிறப்பிலிருந்து இறப்பு வரை உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் உயிரானது உலகாயதச் சிந்தனை மற்றும் செயல்களில் ஈடுபட்டுச் சுழல்கிறது. அவ்வப்போது தவறி விழுந்து மீண்டும் பயணத்தைத் தொடங்க நேரிடுகிறது.

அறிவுக்கும் அப்பாற்பட்டத் தன்னறிவு, ஆறாவது குகையாகும். அறிவு தன்னுடைய மனதை ஒழுங்கு செய்யும். தன்னறிவோ பிறருடைய மனதையும் ஒழுங்கு செய்யும் தன்மை கொண்டது. தன்னறிவு கண்டவர்கள் வெகு சிலரே. தன்னறிவைக் கண்ட உயிர், பிற குகைகளுக்குத் திரும்புவதில்லை.

மனிதன் இறக்குமுன் ஆறாவது குகைக்கு உயிரைச் செலுத்த வேண்டும். அனைத்து உயிர்களுமே தொடர்ந்து பயணிக்கின்றன என்றாலும், ஆறாவது குகையைக் கடந்த உயிருக்கு மட்டுமே, அடுத்தப் பயணத்தின் தெளிவு உண்டாகிறது. தன்னறிவை அறியாத உயிர்கள், ஆன்மாவை அறியாமலே பயணம் செய்ய நேரிடுகின்றன.

தன்னறிவுக் குகை வரையில், உயிரானது உடலென்னும் கூட்டுக்குள்ளேயே பயணம் செய்கிறது. உடலைப் பிரிந்ததும், உயிர் திடீரென்று பரந்த வெளியில் சிக்கியப் பறவை போலாகிறது. பறந்து பழகாத பறவையும் பறக்க அஞ்சும் பறவையும் கீழே விழும். உயிர்ப்பறவைக்குப் பறக்கும் பழக்கத்தைக் கொடுப்பது தன்னறிவு. தொடர்ந்து பயணிக்கவும், சேரவேண்டிய இலக்கைத் தேடிச் சேரத் தேவையான வலிமையையும் திடத்தையும், தருவது மேம்பட்டத் தன்னறிவு.

தன்னறிவுக்கு அப்பாற்பட்டது ஆன்மா. உடலெனும் கூட்டைவிட்டுப் பிரிந்த உயிர் ஆன்மாவுடன் கலந்துத் தனி ஆன்மாவாகிறது. ஆன்மாவையும் கடந்து நிற்பது, அனைத்து உயிர்களின் ஆன்மா அல்லது பேரான்மா. உயிரின் இலக்கு, பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை" என்றான்.

"பேரான்மாவா? அப்படியென்றால்?"

"பேரான்மா... ஒரு பேரலை போன்றது. பேரலை என்று தனியாக ஏதுமில்லை என்றறிவோம். பேரலை என்பதே சிற்றலைகளின் கூட்டாகும். வலுவானச் சிற்றலைகளை சேரச்சேர, பேரலை உருவாகிறது. வலுவானச் சிற்றலைகளின் சக்தி, பேரலையை உருவாக்குகிறது. வலுவடைந்த பேரலை, மற்றச் சிற்றலைகளை ஈர்த்து இன்னும் பெரிதாகிறது. பேரலையை வலியச் சேரும் வலுவான சிற்றலைகளினால், பேரலை இன்னும் பெரிதாகிப் பாறைகளையும் உடைத்தெறியும் சக்தியைப் பெருகிறது. பேரலையைச் சேராதச் சிற்றலைகள், நீராகவே ஒடுங்கி விடுகின்றன.

வலுவற்றச் சிற்றலைகளும் பேரலையைச் சேருகின்றன. வலுவற்றச் சிற்றலைகள், பேரலையின் வலுவைக் குறைக்கின்றன. பேரலையும் அடங்கிவிடுகிறது. சிற்றலையின் நோக்கம் பேரலையுடன் சேர்வதே. சிற்றலையின் சக்தி, பேரலையினால் புலனாகிறது, எனினும் சிற்றலையின்றிப் பேரலையை அறியவே முடியாது.

ஆன்மாவின் இலக்கு, பேரான்மாவுடன் இணைவதே. பற்றறுத்து, நல்லொழுக்கத்துடன் தன்னையறிந்த ஆன்மா, சக்தி வாய்ந்தது. சக்தி வாய்ந்த ஆன்மா, பேரான்மாவை எளிதாகச் சேர்கிறது. வலுவானச் சிற்றலை பேரலையுடன் இணைவது போலவே. அவ்வாறு சக்தி வாய்ந்த ஆன்மாக்களின் கூட்டணியில் உருவாகும் பேரான்மா, பெருஞ்சக்தி பெறுகிறது.

தன்னையறியாத ஆன்மாக்கள் பேரான்மாவுடன் இணைய முயன்று தோற்கின்றன. இணைந்தாலும் பேரான்மாவின் வலிமையைக் குறைத்து விடுகின்றன" என்றான்.

"பேரான்மாவுடன் இணைந்த உயிருக்குப் பிறப்பில்லையா?"

"இறப்பும் பிறப்பும் விபத்துக்கள். ஒரு பானைக்குள் அடைபட்டக் காற்றுப் போன்றது பிறப்பு. பானையைக் குயந்ததும் காற்று உட்சென்றதா? காற்றைச் சுற்றிப் பானை உருவானதா?

பானை உடைந்ததும் காற்று தன் இயல்பான நிலையில் கலந்தது போலவே, உடலை விட்டுப் பிரிந்த உயிரானது தன் இயல்பான நிலையில் கலக்கிறது. பானை உடைந்து போனதே என்று வருந்துவதில் பயனே இல்லை. உள்ளிருந்த காற்று தன் இயல்பு நிலைக்குச் சென்றதை எண்ணி அமைதியடைவதே முறை.

பானைக்குள் புகுந்த காற்று வெளிப்படக் காத்திருப்பது போலவே உயிரும் தன் இயல்பு நிலையில் சேரக் காத்திருக்கிறது என்பதை அறியாமல், பிறப்பைக் கொண்டாடுகிறோம். இறப்பை எண்ணி வருந்துகிறோம்.

கூட்டுக்குள் சிக்கிய உயிர், பேரான்மா எனும் பெரும் சக்தியின் அம்சம். அதை உணர்ந்தால் கூட்டின் மேன்மையை உணர முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கை நெறிகளை அறிய முடியும். வாழ்க்கை நெறிகளை அறிந்து கொண்டால் பற்றறுத்து, பேராசையொழித்து, தீக்குணம் தவிர்த்து நல்வழியில் வாழ முடியும். கூடு கலைந்த பின் சக்தியும் தொலையும் என்பதை உணர்ந்தால், கூட்டையும் உடன் வந்த சக்தியையும் தனக்கும் பிறருக்கும் பலனளிக்கும் விதத்தில் பாதுகாக்க முடியும்" என்றான்.

"எனில், சொர்க்கம் நரகம் ஏதும் உண்டா? அல்லது அதற்கும் சட்டி, பானை என்று ஏதாவது சொல்லப் போகிறாயா?" என்றார் ஒரு ஞானி.

"சொர்க்கம், நரகம் உண்டு. உண்மை. ஆனால் அவை இடங்களல்ல. சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள். உயிரானது, உடலுடன் சேர்ந்த நேரங்களில் அனுபவிப்பதைப் போலவே, உடலைப் பிரிந்த நேரத்திலும் சொர்க்க நரகத்தை அனுபவிக்கிறது.

ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா என்பது மிகப்பெரும் சக்தி என்பதை அறிந்தோம். பேரான்மாவுடன் இணைவதே ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளாகும். தன்னையறிந்த ஆன்மாவினால் பேரான்மாவுடன் இணைந்து மேலும் வளரமுடிகிறது. சிற்றலை பேரலையாவது போல. காற்றைக் கட்ட முடியாத பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானை உருவாக முடியாதல்லவா? அதுவே பிறப்பற்ற நிலை. பேரான்மாவுடன் இணைந்த நிலையில் அதுவே சொர்க்கமாகிறது.

ஒடுங்கிய சிற்றலை நீரில் வீழ்வது போல், தன்னறிவு பெறாத ஆன்மாக்கள் தடுமாறிச் சரிகின்றன. பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன. பேரான்மாவுடன் கலக்காத நிலையில் அதுவே நரகமாகிறது.

அன்பு, அறம், அடக்கம், கருணை எனும் நான்கு குணங்களைக் கடைபிடித்துத் தன்னறிவைப் பெற்ற உயிரானது, உடலைச் சார்ந்த நிலையிலும் இனிய அனுபவமான சொர்க்கத்தைப் பெற முடியும். அதாவது உயிருடன் இருக்கும் பொழுதே வாழ்வைச் சொர்க்கமாக்க முடியும். உடலைப் பிரிந்த நிலையில், தன்னறிவின் சக்தியால் உந்தப்பட்டுப் பேரான்மாவுடன் கலக்க முடிகிறது. அந்நிலையிலும் சொர்க்க அனுபவத்தைப் பெற முடிகிறது.

உடலோடு சேர்ந்த நிலையில் தங்கள் வாழ்வையும் பிறர் வாழ்வையும் பலர் நரகமாக்குகிறார்கள். நற்குணங்களைப் பேணாது தன்னறிவை மறந்து உடலைப் பிரிந்த நிலையில் அத்தகைய உயிர்கள் பேரான்மாவுடன் சேரமுடியாது ஒடுங்கிவிடுகின்றன. தன்னறிவு பெறாத உயிர்கள், பிறவிச்சுழலில் உடனடியாகச் சிக்கி மீண்டும் தன்னறிவு பெறும் முயற்சியில் இறங்க முற்படுகின்றன"

"அப்படியெனில் ஆன்மாவின் தன்மை தான் என்ன?"

"காலையில் கதிரவன் கிழக்கிலே தோன்றி மாலையில் மேற்கே மறைகிறான் என்கிறோம். சூரியன் ஒளிப்பிழம்பு, அக்கினிக் குழம்பு என்கிறோம். அப்படிப்பட்ட அக்கினிக்குழம்பு தினமும் தோன்றி மறையக்கூடியதா? சிந்திப்போம். உலகத்தையே ஒளிமயமாக்கும் ஒளிப்பிழம்பு தோன்றி மறைவதல்ல. சூரியன் தோன்றுவதும் இல்லை. மறைவதும் இல்லை. இருப்பினும் பூமியின் நடைமுறை வாழ்க்கைக்கு, இவற்றின் தோற்றமும் மறைவும் அவசியமாகின்றன. சூரியன் தோன்றாவிட்டால், சக்தி குன்றி ஆக்க சாதனமற்றுப் போகிறது. மறையாவிட்டால், சக்தி மேம்பட்டு அதுவே அழிவுச் சாதனமாகிறது.

பேரான்மா என்பது, சூரியனைப் போல அபரிமித ஒளிப்பிழம்பு, சக்திக்கூட்டு. பேரான்மா தனித்திருந்தால் ஒரு பயனும் இல்லை. பூமியின் கண்களுக்குச் சூரியன் தோன்றி மறைவது போலவே, மனிதத்தின் கண்களுக்கு பேரான்மா தோன்றி மறைகிறது. பேரான்மா உயிர்ப்பயணம் மேற்கொள்கிறது. பூமியின் வளர்ச்சிக்கு சூரிய தோற்றமும் மறைவும் அவசியம்; அது போலப் பேரான்மா, ஆன்மாவாகி வந்து போனால்தான் மனிதம் வளர முடியும்.

உலகில் நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே நமக்காக ஏற்பட்டவை. நம் அறிவு வளர உருவானவை. மனிதநேயம் வளரத் தோன்றியவை. படிப்பினைகளும் பாடங்களும் நிறைந்தவை. உலகம் பிறந்ததும், ஓடும் நதிகளும் காற்றின் ஒலிகளும் கடலின் அலைகளும் நமக்கானப் பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கேட்கும் நாளில், கேட்டுச் செயல்படும் நாளில், மனிதம் சிறப்படையும். நாம் உய்வோம். அது புரியாமல் தீக்குணங்களிலும், கண்மூடித்தனங்களிலும், அறியாமையிலும் உழன்றால் மேம்பாட்டைக் காணாது உய்யும் வழியினின்று வெகு தூரம் விலகிச் செல்வோம்" என்றான்.

அவையின் அமைதி, பேரொலியை விடச் சக்தி வாய்ந்ததாக இருந்தது. நசிகேதன் சொன்னவை அவையோர் மனதிலே பதியத் தொடங்கியது.

தான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்த நசிகேதன் எழுந்தான். "என் வணக்கத்துக்குரியவர்களே! அன்புக்குரியவர்களே! எனதருமைத் தந்தையே! எழுமின்! அறிவுக்கண் திறந்து எழுந்திருங்கள். விழிமின்! என்றைக்கும் அறியாமையைக் கண்டு விலக விழிப்புடன் இருங்கள்! பளபளக்கும் வாளின் முனையைப் போன்றது நமது வாழ்வு. அறிவு மழுங்கியவர்களைப் போல விதியை நம்பி வீணாகாமல், நன்னெறிகளைப் பேணும் மேன்மையானவர்களைப் போல் சிறப்பாக வாழ்வோமாக!" என்று சொல்லி முடித்தான்.

தன் தந்தையையும் அவையோரையும் விழுந்து வணங்கினான். எழுந்து, "அன்புக்குரியவர்களே! என் ஆசானிடம் நான் பெற்றதை உங்களிடம் சேர்த்து விட்டேன்" என்றான்.

அவையிலே அமைதி மறைந்து பெருத்த ஆரவாரம் எழுந்தது. தங்கள் முன் நின்ற இளையவன் அறிவிலே அவர்கள் அனைவருக்கும் முதியவன் என்று உணர்ந்து நசிகேதனை வாழ்த்தினார்கள்.

வாசன் எழுந்தான். "மகனே நசிகேதா! நீயே எங்களுக்கு ஆசான். எமனிடம் பெற்ற அறிவெனும் ஒளிமழையை எம்மேலும் பொழிந்தாய். நன்றி" என்றான்.

"ஆம் ஐயா!" என்றனர் அவையோர். "அப்படியெனின்ல் முக்தி என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது? இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர்.