வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/11/19

நூல் அறிமுகம்

    டோபனிஷது கி.மு 400-200ல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. பல செய்யுட்கள் நேராகவும் மேற்கோள்களாகவும் கீதையில் காணப்படுவதால், இந்நூல் மகாபாரதக் காலத்தினின்றும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. சிறுவன் நசிகேதன் எமனைச் சந்தித்து வரம் பெறும் விவரங்கள் நூலின் முதல் மூன்று பகுதிகளிலும், தன்னறிவு பெறும் வழிமுறைகள் கடை மூன்று பகுதிகளிலும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

கடோபனிஷதக் கதைச் சுருக்கத்தையும் பகுதிச் சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். பகுதிச் சுருக்கத்தைத் தொடர்ந்து, பகுதியின் சிறப்பை (என் கணிப்பில்) எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அனுபவிக்க வேண்டிய கருத்தாழங்கள் இவை.

கதைச்சுருக்கம்: பேரின்பம் அடையப் பேராசை கொண்ட மன்னன், ஆத்திரத்தின் விளைவால், தன் ஒரே மகனை வேள்வியில் மரணதேவனுக்குத் தானமாகக் கொடுக்கிறான். மனித இளவரசனோ மரணதேவனிடமே மெய்யறிவு பெற்றுச் சிறப்போடுத் திரும்புகிறான். இச்சம்பவங்களின் பின்னணியில் இடம்பெறும், அறிவுச்சுடரான இளைய நிலாவுக்கும் ஆசிரியனான மரணதேவனுக்கும் இடையிலான உரையாடலே கடோபனிஷது.

பகுதி 1: விண்ணுலகப் பேரின்பங்களை அடைய விரும்பிய மன்னன் வாசஸ்ரவசு, விஸ்வஜித் எனும் பெரிய வேள்வியைச் செய்கிறான். யாகத்தில் தன் சொத்துக்களைத் தானமும் தியாகமும் செய்து வருகையில், தன் ஒன்பது வயது மகன் நசிகேதனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுமையில்லாத நிலையில் மகனையே தியாகம் செய்வதாக வாக்களித்து விடுகிறான். தன் அவசரத்தையும் ஆத்திரத்தையும் எண்ணி வருந்துகிறான். தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நசிகேதன் எமனுலகம் போகிறான். எமனிடம் வரம் பெற வாய்ப்பு கிடைக்கிறது. உலகச் சொத்துக்களையும் இன்பங்களையும் வரமாகத் தருவதாகச் சொன்ன எமனிடம், தனக்கு மரணத்தைப் பற்றிய அறிவைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று பிடிவாதமாகச் சொல்கிறான். நசிகேதனின் மனப்பக்குவத்தையும் தீர்மானத்தையும் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு மரண அறிவையே வரமாகப் போதிக்கத் தொடங்குகிறான்.

பகுதியின் சிறப்பு: மெய்யறிவு பெற மாணவனுக்குத் தகுதி இருக்கிறதா என்று ஆசிரியர் சோதிக்கும் கட்டங்களின் வழியாக உடல், உயிர், உலகம், செல்வம், ஆசை இவற்றைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் வற்றாத அறிவுக்கேணி.

பகுதி 2: "நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?" என்ற நுட்பமானக் கேள்வியுடன் நசிகேத போதனையைத் தொடங்கும் எமன், இருநிலை-எதிர்நிலைத் தன்மையதாய் இயற்கையிலேயே தோன்றும் இருள் ஒளி, இன்பம் துன்பம், அறிவு அறியாமை போன்றவற்றின் ஒருமைத் தன்மையினை விவரிக்கிறான். அறிஞர்-அறிவிலி இருதரப்பினரையும் அடையாளம் காட்டுகிறான்.

பகுதியின் சிறப்பு: காரண-காரியத் தொடர்பும் தொடர்பின்மையும் மிகச் சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'இறப்பும் இல்லை இறப்பவனும் இல்லை' எனும் ஆழ்ந்த வேதாந்தம் கீதையில் அப்படியே வருகிறது. விளைவிலிருந்துச் செயலை வேறாகக் காணும் பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது. எதிர்நிலைகள் போல் தோன்றும் இருளும் ஒளியும் ஒன்றிலிருந்தே தொடங்குவதால் அவற்றை ஒன்றெனக் கருதிச் செயல்படும் மனப்பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது.

"நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?" என்ற எமனின் கேள்வியே உலகின் மிகப் பிரபல வேதாந்தக் கேள்வியாகும். கடோபனிஷதச் சமகாலச் சாக்ரேட்ஸ், பின்னாள் அரிஸ்டாடில் போன்ற வேதாந்திகளும், மதவாதிகளும், தம் எண்ணங்களை வலியுறுத்தப் பயன்படுத்தியக் கேள்வி. இந்நாள் முரண்பாடுகளின் அடிப்படைகளை அறிந்துச் செயல்பட, நாம் பயன்படுத்தக்கூடிய சாதனமுமாகும் இந்தக் கேள்வி.

ஆசிரியர்-மாணவர், அறிஞர்-அறிவிலி பற்றியக் கருத்துக்கள் சிறப்பானவை. சிந்தனையைத் தூண்டுவன.

பகுதி 3: மனித உள்ளத்தின் விழிப்பையும் எழுச்சியையும் உள்ளுக்குள் திருப்பும் தேவை மற்றும் முறைகளைப் போதிக்கிறான் எமன். நசிகேதன் இவற்றை அறிந்து கொண்டு நன்றி சொல்கிறான்.

பகுதியின் சிறப்பு: விழிப்பு என்பது உள்ளுக்குள் ஏற்பட வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக்காட்டியிருக்கும் விதங்களை எத்தனை முறை ரசித்தாலும் திகட்டாது.

பகுதி 4: "உண்மையறிவு என்பதென்ன?" என்று கேட்ட நசிகேதனுக்கு, எமன் உள்ளுணர்வையும் உள்விழிப்பையும் உள்ளெழுச்சியையும் பற்றிப் போதிக்கிறான். உலகறிவுக்கும் உண்மையறிவுக்குமான வேறுபாட்டை அறிகிறான் நசிகேதன்.

பகுதியின் சிறப்பு: மனதை ஒருநிலைப்படுத்தி உள்ளுக்குள் எரியும் தீயை உணர வேண்டிய அவசியம் மீண்டும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பகுதி 5: மரணத்துக்குப் பிறகு உயிருக்கு (ஆத்மா) என்ன ஆகிறது என்பதை மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: 'ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குச் செல்லும் இடைவிடாதப் பயணத்தில், பிறப்பும் வாழ்வும் வழி நிறுத்தங்கள்' என்ற நுட்பமானக் கருத்து விவரிக்கப்பட்டிருக்கிறது. மரணமும் பிறவியும் எதிர்நிலைகள் அல்ல என்ற அறிவு திடீரென்றுத் தாக்கித் திக்குமுக்காட வைக்கிறது.

பகுதி 6: மரணபய வெற்றியின் ரகசியத்தையும் அதையறிய வேண்டிய அவசரத்தையும் மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: நம் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தலைகீழாக மாற்றக்கூடிய வகையில் சில விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இருளின் முடிவில் ஒளியைப் பார்த்துப் பழகிய நம் கண்களை, ஒளியின் முடிவில் இருளிருப்பதைக் காணவைக்கிறது.

அமைதிக்கான அறிவையும் மரணதேவனின் அருளையும் பெற்ற நசிகேதன், தன் தந்தையிடமே திரும்பி வருகிறான். நீண்ட நாட்கள் நல்லரசனாகவும் நல்ல மனிதனாகவும் வாழ்கிறான்.

இனி, நசிகேத வெண்பா.

22 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பகுதி 5 தாங்க இன்னும் விளங்கலை. நானும் ஒருவகையில் அதுக்குண்டான விடையைத் தேடிக்கிட்டே இருக்கேன்.

பதிவு அருமை.

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

மிக அருமையான பதிவுங்க. இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டும். படித்துவிட்டு வருகிறேன். நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

இருளின் முடிவில் ஒளியைப் பார்த்துப் பழகிய நமக்கு ஒளியின் முடிவில் இருளிருப்பதைக் காணவைக்கிறது"//

இந்த வரிகள் கவர்கின்றன.

புரியாதோ, புரிந்து கொள்ள முடியாதோ என்ற பயத்துடனே தொடர்ந்து வருகிறேன்...

அப்பாதுரை சொன்னது…

வருக துளசி கோபால், நித்திலம் - சிப்பிக்குள் முத்து, ஸ்ரீராம், ...

அப்பாதுரை சொன்னது…

பகுதி 5 சிக்கல் தான் துளசி.
உயிரின் பயணம் பற்றி என்னதான் படிச்சாலும் மேகமூடிய அறிவுதான் கிடைக்கும்னு தோணுது. 'பானைக்குள் இருக்கும் வெளி யாருக்குச் சொந்தம்?'னு கேக்குது கடோ. வெளியைச் சுத்திப் பானை செஞ்சது குயவன். பானைக்குச் சொந்தக்காரன் நான். பானை எனக்குச் சொந்தமா? பானைக்குள் இருக்குற வெளி எனக்குச் சொந்தமா? வெளி என்னென்னிக்கும் அங்கயே இருந்துட்டு தான் இருக்குது - இந்தப் பானையை உடைச்சு அதே வெளியில் இன்னொரு பெரிய சிறிய பானை செஞ்சா அப்ப இன்னொரு பானையிலும் அதே வெளி தானே இருக்குது? பானை எங்கிட்ட இருக்குற வரைக்கும் தான் அந்த வெளி எனக்குச் சொந்தம் (வாடகை?). எங்கிட்டே இருக்கும் வரை பானையின் 'வெளியில்' காற்று அடைக்கலாம்; வெளிச்சம் அடைக்கலாம்; கல் அடைக்கலாம்; கழுனீர் அடைக்கலாம். பானையை சுத்தமாகவோ அசுத்தமாகவோ வைப்பது என் கையில்; பானைக்குள்ளிருக்கும் வெளிக்கு சுத்தமோ அசுத்தமோ இல்லை - பானை உடைந்ததும் உள்ளிருந்ததும் போய்விடுகிறது - வெளி அப்படியே இருக்கிறது, இன்னொரு பானைக்குக் காத்திருக்கிறது.

பாருங்க, அங்கே இங்கே சுத்தி ஒரே இடத்துல நிக்க வைக்குது பகுதி 5.

(எதுக்கு இப்பவே சொல்லிட்டேன்னா, ஒரு வேளை பகுதி 5 வரைக்கும் எழுத முடியலைனு வைங்க :)

அப்பாதுரை சொன்னது…

அதே ஐயம் ஸ்ரீராம் எனக்கும். புரிவது போலும் புரியாதது போலும் நிறைய கருத்துக்கள். மேலே சொன்ன பானை சமாசாரம் உங்களுக்குப் புரியுதா? என்னைக் கேட்டா பயணத்தில் தான் இன்பம். புரிந்து கொள்ளும் முயற்சியில் தான் சுவை, என்ன சொல்றீங்க? திரைக்குப் பின்னாலிருக்கும் முகத்தின் அழகைக் கற்பனை செய்வதில் இருக்கும் இன்பம் நிலைக்கும் - திரை விலகும் வரை, இல்லையா?

என்னைவிட பட்டறிவும் பகுத்தறிவும் அதிகமிருப்பவர்கள் பின்னூட்டம் இட்டு தெளிவைக் கொண்டு வருவார்கள் என்றும் ஒரு நம்பிக்கை. கடோ ஒரு க்ரூப் டிஸ்கசன் டாபிக். மோகன்ஜி பின்பாட்டு பாடுறதா சொன்னதும் குஷி. முன்பாட்டே பாடினா நல்லது தான். :)

பத்மநாபன் சொன்னது…

நசிகேதமும், கடோவும் ...பெருங்கொண்ட கருத்துக்களையும் இவ்வளவு எளிமையாக சொல்லுகிறேதே...ஆச்சரித்து தொடர்கிறேன்..

வெளியோடு பானை வைத்து சொன்ன விளக்கம்..அற்புதம்..

அப்பாதுரை சொன்னது…

பத்மநாபன்.. இன்னும் ஆழமாப் போகும் யோசிக்க யோசிக்க. உதாரணமா, பானையை உபயோக்கிறமா அதுக்குள்ள இருக்குற வெளியையா? பானையைக் குயவினதும் கப்னு வெளியும் உள்ளாற கேப்சர் ஆயிருச்சே? பானை போகுமிடமெல்லாம் வெளியும் போகுதில்லையா? ஒரு இடத்துல செஞ்ச பானை இன்னொரு இடத்துல உடைஞ்ச பிறகு பானைக்குள் இருந்த வெளியும் இடம் மாறிடுச்சா? ரொம்ப யோசிக்க வைக்குதுங்க கடோ.

ஸ்ரீராம். சொன்னது…

//" மேலே சொன்ன பானை சமாசாரம் உங்களுக்குப் புரியுதா?"//

திரும்பவும் புரியற மாதிரியும், புரிஞ்ச உடனே போய்ட்டா மாதிரியும் பிரமைதாங்க...பானையைச் செய்தது மண்ணில்தான்..அந்தப் பானையை உடைத்தால் வரும் மண்ணை வெளியில் இருக்கும் மண்ணோடு ஒப்புமை செய்து அந்த மண்ணும் இந்த மண்ணும் ஒன்றேதான் என்றும் உள்ளே அடைபட்ட தண்ணீர், வெளியே இருக்கும் கடல் நீர், உள்ளே இருக்கும் வரை, வெளியே கொட்டிய பிறகு என்றும் எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது. சரியாகச் சொல்ல முடியவில்லை பார்த்தீங்களா...என் சக்தி அவ்வளவுதான்! புரியாத வரைதான் ஆர்வம். புரிந்து விட்டால் சுவாரஸ்யம் போச்... மரணத்தின் மர்மம் தெரிந்து விட்டால் கடவுள் மதிப்பிழந்து போவார்..இல்லீங்களா?

பத்மநாபன் சொன்னது…

பானையை சரியா பிடிச்சிட்டிங்க...

பானை பிடித்த( கேப்சர்) வெளியை பத்தி சொன்னிங்க.. நான் வெளிபிடித்த பானையை பத்தி யோசிக்கிறன்

பானைக்கு வெளிகொடுத்த வேலையை பார்ப்போம்...என்ன வேலை? பருப்பொருளை கொள்ளுமளவுக்கு தாங்கிக்கொள்தல்...பானையா தாங்குது.. மண்ணுக்குள்ளே இருக்கிற வெளி தானே அதை செய்யுது..

கடோ,மண்ணுப்பானைய வச்சே இவ்வளவு யோசிக்க வைக்குதே, மனப்பானையான நம்ம உடம்புக்கு வர்றப்ப எவ்வளவு யோசிக்க வைக்குமோ?

அப்பாதுரை சொன்னது…

மிகச்சரி, ஸ்ரீராம். புரிந்துவிட்டால் சுவாரசியம் போச்சு - பல நேரங்களில். சில சமயம் புரிந்த மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நினைத்து நினைத்து, புதிய புரிதல்களைப் பெறும் மகிழ்ச்சி.

மதுரையிலிருந்தும் சென்னையிலிருந்து ஒரே நேரத்தில் எதிரெதிர் திசைகளில் கிளம்பும் ரயில்கள் எங்கே சந்திக்கின்றன என்ற புதிரில் - வேகம் மர்மமில்லை. வெறும் கணக்கென்று எடுத்துக்கொண்டால் வேகத்தை வைத்து விடை சொல்லி அடுத்த வகுப்புக்குப் போய்விடலாம். ஆனால் அந்தப் புதிரில் புதைந்திருக்கும் மர்மங்களை ஒரு முறை என் பள்ளி ஆசிரியர் இந்திரமோகன் விளக்கினார்; பள்ளியிலிருந்து விலக்கக் கூடிய தவறு ஒன்று செய்துவிட்டு அவர் முன் நின்றபோது என் தவறுக்கு அப்பால் பார்த்து என்னைத் திசை திருப்ப நினைத்தவர், அன்றைக்கு என் அறிவுக்கெட்டக் கூடிய எனக்குப் பிடித்த பாடத்திலிருந்து ஒரு வாழ்க்கை நெறி சொன்னார். அன்றைக்குப் புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது. இன்றைய புரிதலில் நெற்றி வியர்க்கிறது. மரண அறிவும் அப்படித் தான் என்று நினைக்கிறேன்.

ஒரு கேள்வி கேட்கலாமா? மரணத்தின் மர்மம் தொட்டே கடவுளை மதிக்கிறீர்களா/மதிக்கிறோமா? கடவுளை மதிப்பதற்கு இன்னும் ஆழ்ந்த காரணம் தேவையோ?

அப்பாதுரை சொன்னது…

நல்ல கேள்வி, பத்மநாபன். பானையைப் பிடித்திருப்பது வெளியா, வெளியைப் பிடித்திருப்பது பானையா?

மனப்பானை - அருமை. உரையில் பயன்படுத்திக்கொள்ளலாமா?

பத்மநாபன் சொன்னது…

பானை...வெளி காம்பினேஷனை எடுத்து கொடுத்ததற்கு உங்களுக்கு பொன்பானையே பரிசு தரலாம்..

மனப்பானை-- பொன்பானைக்கு மேலானாதா ? இல்லை மண் பானைக்கும் கீழானதா ? விடை இத்தொடரில் வரும் என நம்புகிறேன்...

மரணம் 100 ல் என்று உறுதியானால் 99ல் கடவுளிடம் நீட்டிப்பிற்க்காக மட்டும் வருவான்... அந்த ரகசியம் கடவுள் இருப்பை மட்டும் உறுதி செய்யவில்லை ..மனிதம் மனிதநேயம் ஏன் மனித இருப்பையே உறுதி செய்கிறது...

நிச்சயம் ஆழ்ந்த காரணம் இருக்கிறது..நசிகேதத்தில் அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
கடவுள் பிடிபடுகிறாரோ இல்லையோ காரணம் நிச்சயம் பிடிபடவேண்டும்.

அப்பாதுரை சொன்னது…

உங்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது பத்மநாபன்.

ஒன்றிரண்டு இடங்களில் 'எல்லாம் படைத்தவன்' என்ற குறியீட்டைத் தவிர, கடோவில் கடவுளை அதிகம் காணவில்லை. (நான் தேடவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்).
சடங்குகள் அதிகம் வருகின்றன - மதம் காரணமாக இருக்கலாம். மரணத்தை அறியக் கடவுளும் சடங்குகளும் தேவையில்லை என்பதைத் தான் நான் கடோவில் தெரிந்து கொண்டேன். காற்றடைத்த பையை உடைத்துவிடுகிறேன் - மரணத்தில் எந்த ரகசியமும் இல்லை, வாழ்வதில் தான் ரகசியம் என்கிறது கடோ. தன்னையறிந்தால் கடவுளையறியலாம் என்கிறது. மாற்றிச் சொல்ல வேண்டும் - கடவுளை அறியும் முயற்சியினும் தன்னையறியும் முயற்சி மேன்மை என்கிறது.

'பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா?' - கண்ணதாசன் வரிகளில் கடோவின் சாரம்.

சிவகுமாரன் சொன்னது…

நசிகேதம் இனிமேல்தான் எழுதப் போகிறீர்களா? ஆவலாய் உள்ளேன்.

பானை என்றதும் ஒரு சந்தேகம். பானை பிடித்தவன் பாக்கியசாலி என்று படம் வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த படத் தலைப்பிற்கு என்ன பொருள் ? உங்கள் பானை தத்துவத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறதா? திசை மாற்றி விட்டேனா ?

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன்..
சரியா கேட்டீங்க.. எனக்கும் தெரியாது. அந்தப் பெயரில் ஒரு பழ்ழ்ழைய படம் இருப்பது தவிர.

(அடிக்கடி வாங்க - எழுதப்போற இலக்கணக் குறையெல்லாம் கொஞ்சம் தட்டி சுட்டி காட்டுங்க...நன்றி)

R. Gopi சொன்னது…

பானை எனக்கு ஞாபகப் படுத்துவது ததிபாண்டன் கதைதான். பானையே சொர்க்கம் போகும் அந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அப்பாதுரை சொன்னது…

சுவையான பாகவதக்கதை Gopi Ramamoorthy. சிறுவயது குரோம்பேட்டை நாட்களில் 'மோஸ்கி மாமா' நிறையப் புராணக் கதைகள் சொல்வார் - அவரைப் பற்றி ஒரு பதிவெழுத வேண்டும் என்று இந்த வருடம் பெப்ரவரியில் சென்னை சென்ற பொழுது நினைத்தேன் - அடுத்த பெப்ரவரிக்குள்ளாவது எழுத வேண்டும். மோஸ்கி மாமா போன்ற விவகாரமான விஷயங்களுக்காகவே இன்னொரு வலைப்பூ இருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

Gopi, ததிபாண்டன் போலவே இன்னொரு கதையும் உண்டு. பெயர் மறந்து விட்டது. 'என்னோடு வா, சொர்க்கம் போகலாம்' என்று கண்ணன் சொன்னதும், தன் கைகளின் பிடிக்குள் என்னென்ன அடங்கமுடியுமோ - புழு தாவரம் உள்பட - அத்தனையும் அணைத்துக் கொண்டவரின் கதை நினைவுக்கு வருகிறது. தன்னால் மற்றவர்/வைக்கும் கிடைக்கட்டுமே பேறு என்று நினைத்தவர்களும் நம் நாட்டில் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் குழையத்தான் செய்கிறது.

Geetha Sambasivam சொன்னது…

பகுதி 5: மரணத்துக்குப் பிறகு உயிருக்கு (ஆத்மா) என்ன ஆகிறது என்பதை மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: 'ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குச் செல்லும் இடைவிடாதப் பயணத்தில், பிறப்பும் வாழ்வும் வழி நிறுத்தங்கள்' என்ற நுட்பமானக் கருத்து விவரிக்கப்பட்டிருக்கிறது. மரணமும் பிறவியும் எதிர்நிலைகள் அல்ல என்ற அறிவு திடீரென்றுத் தாக்கித் திக்குமுக்காட வைக்கிறது.//

மறுபடியும் படிக்கணும். ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குச் செல்லும் இடைவிடாப் பயணம்; புரிகிறது. அதற்கு நம் பிறப்பும் வாழ்வும் வழி நிறுத்தங்கள்; புரிகிறது. ஆனால் மரணமும், பிறவியும் எதிர்நிலைகள் அல்ல! இங்கே தான் குழப்பம். புரிந்து கொள்ள முயல்கிறேன். :(

Geetha Sambasivam சொன்னது…

மண் பானை, மனப்பானை, ததிபாண்டனின் பானை எல்லா உரையாடல்களும் சிறப்பாக இருந்தன.

கடவுளை அறியும் முயற்சியினும் தன்னையறியும் முயற்சி மேன்மை என்கிறது. //

தன்னைத் தானே அறிதல் தானே பிரம்மத்தை அறிதல், அதோடு ஐக்கியமாதல் என்றெல்லாம் சொல்லப் படுகிறது? அஹம் பிரம்மாஸ்மி என்பது இதைத் தானா?

காண்பது அனைத்திலும் தன்னைக் காண்பது!

அப்பாதுரை சொன்னது…

//ஆனால் மரணமும், பிறவியும் எதிர்நிலைகள் அல்ல! இங்கே தான் குழப்பம். புரிந்து கொள்ள முயல்கிறேன். :(

உங்களுக்குத் தெரியாததா? 'ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம், ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும்' - உங்க கிட்டே கத்துக்கிட்டது தான்.

படிக்கவும் பின்னூட்டம் எழுதவும் நேரம் எடுத்துக் கொண்டதற்கு நன்றி கீதா சாம்பசிவம்.