வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/06/28

ஆன்மா மானிடத்தினும் பெரிது


56
சாதிகள் சோறு இனமதம் தின்பண்டம்
வாதிடும் நாமதன் வாய்க்கவளம் - வேதி
கனிகள் குடிநீர் முகுலப் பசிக்கு
மனிதம் முழுதும் விருந்து.

   னிதம் முழுவதையும் விழுங்க வல்லது ஆன்மா. சாதிகள் அதற்குச் சோறு போல; இலையிலிட்டப் பண்டங்களாகும் இன மதங்கள்; ஞானிகள் கனிரசமும் குடிநீரும் போல; ஆன்மாவைப் பற்றி விவாதம் செய்யும் நீயும் நானும், விருந்தின் ஒரு கவளம் போலாவோம் (என்றான் எமன்).


வேதி: ஞானி
கனிகள்: பழங்கள், பழரசம் (கனி+கள்), பழமும் மதுவும் (கனி, கள்) எனப் பலவகையில் பொருள் கொள்ளலாம்


['..the soul is divine, immortal, intelligible, uniform, indissoluble, self-consistent and invariable..' - socrates ]

    பெரிய நேர்கோடை எப்படி அடையாளம் காண்பது? கீழ்க்காணும் கோடு சிறியதா பெரியதா?


    இது euclid காலத்து தந்திரக் கேள்வி. 'பெரிய' என்று எதுவுமில்லை. அதாவது, அதனருகே, 'சிறிய' என ஒன்று தோன்றும் வரை. நேர்கோடை, 'பெரிய' நேர்கோடு என அடையாளம் காண வேண்டுமானால், அதனருகே 'சிறிய' நேர்கோடு ஒன்று எழுத வேண்டும். எழுதியதும், அதுவரை புலப்படாத 'பெரிய' தன்மை, திடீரென்று கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படுகிறது.



    'பெரிய' நேர்கோடை அறிய முடிந்தது, 'சிறிய' நேர்கோடை நாம் அறிந்ததாலா? சற்றுச் சிந்தித்தால், சிறிய நேர்கோடை 'சிறியது' என்று அறியவில்லை என்பதும் புரியும். சிறிய நேர்கோடை, நேர்கோடு என்றே அறிகிறோம். ஆயின், அதை அறிந்த அந்தக் கணத்தில், பெரிய கோடு புலப்படுகிறது.

    சரியா? பாதி சரி :)

    கோடுகள் வெறும் கோடுகளே. பெரிய கோடு தெரிவதில்லை - புரிவதாகும். அறிவதாகும். பேதம் புலனுக்குத் தெரியவும், மனதுக்குப் புரியவும் காரணமாக இருந்தது அறிவு.

    இதே உத்தியினால் பெரியதைச் சிறியதாக்கவும் முடியும். தொடர்ந்து பெரிதும் சிறிதுமாக எழுதினால், in theory, அணுவை விடச் சிறிதாகவும் அண்டத்தை விடப் பெரிதாகவும் எழுதிக்கொண்டே போகலாம். to infinity and beyond.

    திடீரென்று ஒரு ஞானவீச்சு நம்மைத் தாக்குகிறது.

    எனில், பெரியது, சிறியது என்று எதுவுமே இல்லையோ? எல்லாம் ஒன்று தானோ?

    நம்மை விடப் 'பெரிய' ஒன்றை நமக்குள்ளே அடக்குவதும் அப்படித்தானோ? நமக்குள்ளே அடங்கியிருக்கும் சிறிய ஒன்றை அறிந்ததும், பெரியது தன்னால் விளங்குமோ? கண்ணுக்குப் புலப்படாததை மனம் புரிந்து கொள்ளுமோ? அறிவு அறிந்து கொள்ளுமோ?

    சாதாரண வடிவியல், இப்படிக் கண்ணைக் கட்டித் திறக்கிறதே?

    புதுப்பார்வையில், திடீரென்று ஏனோ எல்லாமே நம்மை விடப் பெரியதாகவும், அதேநேரம் நமக்குள்ளே அடங்குவதாகவும் தோன்றுகிறது.

['..காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது..' - கண்ணதாசன் ]

    "ஆன்மாவை எப்படி அடையாளம் காண்பது?" என்றான் நசிகேதன்.

    "ஆன்மாவை அடையாளம் காண முடியாது" என்றான் எமன்.

    நசிகேதனுக்குக் குழம்பியது. "ஐயா, இத்தனை நேரம் ஆன்மாவை அறிய வேண்டும், ஆன்மா அப்படிப்பட்டது, ஆன்மா இப்படிப்பட்டது, என்று பலவாறாகச் சொல்லி ஆர்வத்தையும் அறிவையும் தூண்டிவிட்டு இப்போது ஆன்மாவை அடையாளம் காண முடியாது என்கிறீர்களே? புரியவில்லையே?" என்றான்.

    "ஆனால், அறிய முடியும்" என்றான் எமன், புன்னகையுடன்.

    "காண முடியாது, அறிய முடியும் என்கிறீர்கள். அதனால், அறிந்தவுடன் காணலாம் என்கிறீர்கள்" என்றான் நசிகேதன் துடிப்புடன்.

    "மிகச்சரி" என்ற எமன், மகிழ்ந்தான். "நசிகேதா, ஆன்மா உருவமற்றது, பிறப்போ இறப்போ அற்றது, அழிவற்றது என்ற நிலையில்... அதனைச் சுலபமாக, நேராக, அடையாளம் காண முடியாது அல்லவா? கேள், ஆன்மாவின் இன்னொரு தன்மையையும் விளக்குகிறேன். ஆன்மா, மனிதத்தினும் பெரியது. நம் அத்தனை உயிரினும் பரந்தது.

    ஆன்மாவின் பசிக்கு அத்தனையும் விருந்து.

    எத்தனை சாதிகள், மதங்கள், இனங்கள், குலங்கள் என்று மனிதம் பிரிந்தாலும் அத்தனையும் ஆன்மாவின் விருந்து இலையில் அரிசிச் சோற்றின் பருக்கைகள் போன்றவை. உலகின் அத்தனை பேதங்களும் ஆன்மாவின் இலையில் பல்வகைத் தின்பண்டங்கள், கறிகள், கூட்டுகள், வறுவல்கள் போன்றவை. மெத்தப் படித்தவர், செல்வந்தர், ஞானி, உயர்ந்தவர், அரசர் என்று வெவ்வேறு சமூகத் தட்டுக்களைத் தேடியவர்கள் எல்லாம் ஆன்மாவின் இலையில் பழத்துண்டு, பழச்சாறு, குடிநீர் போலாவர். எல்லாம் விருந்தின் அம்சங்களே.

    அவ்வளவு ஏன்? ஆன்மாவைப் பற்றி இதோ நீயும் நானும் பேசியும் விவாதித்தும் வருகிறோம். நாம் இருவரும் ஆன்மாவின் விருந்தில் ஒரு வாய்க் கவளத்தினும் சிறியவர்கள். விருந்தோ முடிவில்லாத விருந்தாகும்" என்றான் எமன்.

    "புரிகிறது" என்றான் நசிகேதன். "ஆன்மாவின் வீச்சு அனைத்தையும் அடக்கி அதற்கு மேலும் பரவுகிறது. அதை அடையாளம் காணவும் அறியவும் முடியுமா என்ற அச்சம் எனக்குள் தோன்றுகிறது ஐயா".

    "ஆன்மா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. அதே நேரம், அதன் அம்சம் நமக்குள் அடங்கியிருக்கிறது. ஆன்மா எனும் பெருங்கடல் உன்னுள் ஒரு சிறு குமிழியில் அடங்கியுள்ளது. அம்சத்தை முயன்று அறிந்தால், அதன் பயனாக நீ முழுமையான ஆன்மாவையும் அறியலாம்" என்றான் எமன்.

    "ஆன்மாவை எப்படி அறிவது என்ற கேள்வி எனக்குள் பெரும் கடலலையாய் எழுகிறது. அறியத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் சிறு அலையாய்ப் பின் தொடர்கிறதே?" என்றான் நசிகேதன்.

30 கருத்துகள்:

meenakshi சொன்னது…

இரு கோடுகளை வைத்து அருமையான விளக்கம். பாலச்சந்தரின் 'இருகோடுகள்' படத்தின் துவக்க காட்சியில் இது ஒரு புதிராக வரும். வரைந்த ஒரு கோட்டை அழிக்காமல் அதை எப்படி சிறிதாக்க முடியும்? விடை, பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை வரைந்தால் இது சிறிதாகி விடும்.
// புதுப்பார்வையில், திடீரென்று ஏனோ எல்லாமே நம்மை விடப் பெரியதாகவும், அதேநேரம் நமக்குள்ளே அடங்குவதாகவும் தோன்றுகிறது.// Beautiful!

ஆன்மா உருவமில்லாதது எனும்போது அதை எப்படி காண முடியும்? அதை அறிந்தவுடன் காணலாம் என்றால், எப்படி? நம் ஆத்மசக்தியை நாம் அறிந்த பின், நம்மை நாமே காண்பதுதான் ஆன்மாவை நாம் கண்டதாக அர்த்தமா?

//"ஆன்மாவை எப்படி அறிவது என்ற கேள்வி எனக்குள் பெரும் கடலலையாய் எழுகிறது. அறியத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் சிறு அலையாய்ப் பின் தொடர்கிறதே?"// அற்புதமான கேள்வி! எமன் இதற்கு என்ன சொல்கிறார் என்பதை அறிய மிகுந்த ஆவலாக இருக்கிறது.

பத்மநாபன் சொன்னது…

ஆன்மாவுக்கு மனிதம் விருந்தா ?

உணவு விருந்தின் மேலே பெரு விருப்பு எற்பட வைத்துள்ளீர்கள்..

அதனால் தான் பெரு விருந்து படைத்து ஆன்ம குளிர்வை உணர்த்துகிறார்களா...

ஆன்மா மனிதனை ஆட்டுவிக்கிறதா அல்லது மனிதத்தை அனுபவிக்கிறதா ?

அற்புதமான வண்டியாக மனிதனும் அதை செவ்வனே ஓட்டுபவனாக ஆன்மாவும் ஒருங்கிணந்து செயல் படுகிறதா...

ஆன்மா வை அறியும் வரை அது வேறாக நிற்பதுவும் அறிந்தபின் வேராகவும் மாறுவதுமாக உணர்கிறோமா ?

ராமசுப்ரமணியன் சொன்னது…

இந்த செய்யுளை தமிழில் எப்படி எழுதப் போறீங்கனு இன்டரஸ்டிங்கா எதிர் பார்த்தேன். சாமர்த்தியமா எழுதியிருக்கீங்க என்ரு சொல்லணும். பாராட்டுக்கள்.

(இது தானே கடைசி? அதிகமா ஸ்கிப் பண்றீங்களோ?)

ராமசுப்ரமணியன் சொன்னது…

abstract விஷயத்தை கோடுகளை வைத்து விளக்கம் தந்திருப்பதையும் பாராட்டுகிறேன். ரொம்ப சிம்பிளான விளக்கம். கண்ணுக்குப் புலப்படாததை மனம் புரிந்து கொள்ளுமா என்று கேட்கிறீர்கள். 'பெரிய' ஒன்று ஆன்மா மட்டும் தானா என்று நான் கேட்கிறேன். அங்கே போக மாட்டென் என்கிறீகளோ :)

meenakshi மேடம். இருகோடுகள் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம். நல்ல கமென்ட். (எப்படி இருக்கீங்க, சௌக்கியமா?)

ராமசுப்ரமணியன் சொன்னது…

கண்ணதாசன் மேற்கோள்கள் எல்லாமே பொருத்தம். காற்றுக்கென்ன வேலி ரொம்பவுமே பொருத்தம். புது ஏங்கிளில் சிந்திக்க வைத்தது. நல்லா பிடிச்சீங்க சார். தவறா எண்ணவேண்டாம், சில பதிவுகளில் முதலில் அதைத்தான் செக் பண்ணுறது:))

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே ! கடலும், வானும்,மலையும் ,மண்ணும், மானும், புலியும், மீனும் ,மலரும் கடவுள் படைத்தது. மனிதனோ ,அந்தக்கடவுளையே படைத்தவன். "எதனைக் கண்டான் -மதம் தனைப்படைத்தான்-கண்ணதாசன்---அற்புதமான வரிகள்.---காஸ்யபன்

meenakshi சொன்னது…

Thanks Mr. Ramasubramanian. I am fine. Hope you are as well.

சிவகுமாரன் சொன்னது…

வெண்பாவை ரசித்தேன். ஆன்மாவின் பசி பற்றிய விளக்கமும் இரு கோடுகள் தத்துவமும் -- என் சிற்றறிவுக்கு ஏதோ புரிந்தாற்போல தெரிகிறது. தொடர்கிறேன்

பத்மநாபன் சொன்னது…

கடவுளையே படைத்தவன் என்பது நமது கழகங்களின் கற்பிதம்... அறிந்தான்..அறிய முயற்சிக்கிறான் ..அறிவான்....

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, பத்மநாபன், ராமசுப்ரமணியன், kashyapan, சிவகுமாரன், ...

அப்பாதுரை சொன்னது…

வரிசையை கொஞ்சம் மாற்றியிருக்கிறேன் ராமசுப்ரமணியன்; இன்னும் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இந்த வரிசை பொருந்தி வருவதாக நினைக்கிறேன். இல்லாவிட்டால் சொல்லுங்கள்.

அப்பாதுரை சொன்னது…

சாதி சமூகப் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை என்று தொடக்கத்திலேயே சொல்லியுள்ளேன் ராமசுப்ரமணியன் - இந்தப் பாடலின் கருத்து கெடவில்லை என நினைக்கிறேன், சரியா?

அப்பாதுரை சொன்னது…

வண்டி-ஓட்டுனர் உவமை வெகு அழகு பத்மநாபன். தனனறிவு பரந்த ஆன்மாவுக்கு வழிகாட்டி என்கிறது இன்னொரு பாடல். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள் :)

அப்பாதுரை சொன்னது…

வேறாக நிற்பதும் வேராக அறிவதும் - ஆகா! ஆகா! (அசத்துறீங்க பத்மநாபன், அப்படியே எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே ஹார்லிக்ஸ் போல?)

அப்பாதுரை சொன்னது…

மனதை உலுக்கும் கண்ணதாசன் வரிகள் காஸ்யபன், சரியாகச் சொன்னீர்கள்.

அப்பாதுரை சொன்னது…

அழகான கேள்வி கேட்டு அதற்கு ஏற்ற அருமையான பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் meenakshi :)

காணாததை 'அறிவதால்' காண்கிறோம். 'பெரிய' கோடு கண்ணில் படுவது எப்படி என்று இன்னொரு முறை யோசித்துப் பாருங்கள். சிறிய கோடு பெரிய கோடு என்று எதுவுமே இல்லை; எனினும் 'பெரிய' என்று அறிகிறோம், உணர்கிறோம் - அதனால் காண்கிறோம். புலனறிவின் reverse. கண்ணுக்குப் புலப்பட்டது அறிவுக்குப் புலப்பட்டால் சாதாரணம்; அறிவுக்குப் புலப்பட்டது கண்ணுக்குப் புலப்பட்டால் அசாதாரணம். ஆன்மா அசாதாரணம். அறிவுக்குப் புலப்படுவது உண்மையில் கண்ணுக்குப் புலப்படுவதில்லை - எனினும் புலப்படுகிறது இல்லையா? கண்ணை ஏமாற்றலாம், அறிவை ஏமாற்ற முடியாது. இங்கே 'பெரியது' இருப்பதாக கண்ணை நம்பவைப்பது அறிவு. கண்ணைப் பொறுத்தவரை அது காண்பதாகவே நினைக்கிறது, சரியா? (காரணம், கண்ணைக் கட்டுவதும் அறிவே :)

காணாததை 'அறிவதால்' காண்பது எல்லோருக்கும் வரும் கலையல்ல. அதே நேரம்,'அறிந்தும்' கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது நம் எல்லாருக்கும் ஏற்படும் அனுபவம் தான். கண்ணுக்குத் தெரிந்தால் ஒரு comfort; அறிவுக்கு மட்டும் தெரிந்தாலும் அதை புலன் உணரும் வண்ணம் செயல்படுத்துவதில் நம் எல்லாருக்குமே ஒரு தயக்கம் உண்டு. அதனால் தான் சில நேரம் உருப்படாமல் போகிறோம். வாழ்வு, சமூகம், அரசியல், வழிபாடு என்று பலவகைகளிலும் 'கண்மூடி' நடக்கிறோம். நம்முடைய அறிவுக்குத் தெரிந்தாலும் கண்களுக்குத் தெரியவில்லையே - அதனால் கண்மூடி நடக்கிறோம் எனலாமோ?

பத்மநாபன் சொன்னது…

புலனும் அறிவும் படித்த பிறகு உடனே இந்த சினிமா பாட்டு ஞாபகம் வந்தது '''கண்ணோடு பார்ப்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை ''' சினிமாவில் காதல் பயணம் ....இங்கு அறிவு பயணம் .....

meenakshi சொன்னது…

//கண்ணுக்குப் புலப்பட்டது அறிவுக்குப் புலப்பட்டால் சாதாரணம்; அறிவுக்குப் புலப்பட்டது கண்ணுக்குப் புலப்பட்டால் அசாதாரணம்.//
//காணாததை 'அறிவதால்' காண்பது எல்லோருக்கும் வரும் கலையல்ல.//
தெளிவான அருமையான விளக்கம் அப்பாதுரை. இதற்காகவே உங்களிடம் மேலும், மேலும் கேள்விகளை கேட்க தோன்றுகிறது. :) உங்கள் அறிவுக்கு தலை வணங்குகிறேன். மேலும் உங்கள் பொறுமைக்கும்தான். :)

உங்கள் விளக்கத்தை படித்தபோது நினைவுக்கு வந்த பாடல் வரிகள் 'கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும். அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்' என்பதுதான்.

அப்பாதுரை சொன்னது…

சுவையான திரைப்பாடல் வரிகள் பத்மநாபன், meenakshi, ...
பின்னூட்டம் எழுதும் போது எனக்குத் தோன்றிய வரிகளை அடுத்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

ஆன்மா பற்றின விளக்காங்களும், கேள்விகளும் சிந்திக்கத் தூண்டுவன...
வெண்பா மிளிர்கிறது..

சினிமா பாட்டோடு நிறுத்திக் கொள்கிறேன்..

நீங்கள் குறிப்பிடப்போகும் பாட்டு இதுவா?

கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்.உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்.. முடிவெல்லாதது.....
அறிவை நீ நம்பு. உள்ளம் தெளிவாகும்..அடையாளம் காட்டும்.. பொய்யே சொல்லாதது....

அப்பாதுரை சொன்னது…

நான் பத்மநாபன் கட்சி :)

(வருக மோகன்ஜி, ...
சினிமாப் பாட்டோடு நிறுத்திக் கொள்கிறீர்களா? நியாயமா?)

பத்மநாபன் சொன்னது…

மோகன்ஜிஜி... அது மினாக்‌ஷி மேடம் சொல்லிய பாட்டு..

அப்பாதுரையின் ரசனை வித்தியாசமாக இருக்கும் சொன்னவுடன் அட இந்த பாட்டா என சொல்ல வைக்கும்...

ஸ்ரீ...வர்றக்குள்ள நான் மூன்று கண்கள் பாட்டு சொல்லிவிடுகிறேன்.... ( இது மூன்றாம் சுழியாக பாவித்து)

கண்கள் இரண்டும் உன்னைக் கண்டு பேசுமோ.....சோகக் காதல்...

காத்திருந்த கண்களே... சுகக் காதல்...

கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால்... உணர்வுக் காதல்

அப்பாதுரை சொன்னது…

"கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால்" கேட்டதே இல்லையே பத்மநாபன்?

பத்மநாபன் சொன்னது…

நடுக்காலத்து பாட்டை எல்லாம் சரமாறிய ஞாபகம் வச்சு ரசிக்கும் நீங்கள், இந்த கால பாட்டு விஷயத்துல அப்டேட்டட் இல்லையேன்னு எனக்கு சங்கடம் ...

ஒரு சுய விளம்பரம்... கொஞ்ச நாள் முன்னாடி என்னோட பதிவு ஒன்றில் தெரிவு செய்த பாடல்.http://aanandhavaasippu.blogspot.com/2010_05_25_archive.html. கேட்டுவிட்டு திட்டோ பாராட்டோ அங்கேயே சொல்லிருங்க....மூணாவது பாட்டா தெரிவு செய்திருப்பேன்....

அப்பாதுரை சொன்னது…

இந்தக்கால பாட்டு கேட்க வாய்ப்பே இல்லை பத்மநாபன். வாய்ப்பைத் தேடவும் இல்லை :) உங்க பதிவுல போய்க் கேட்டுப் பார்க்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

kannukkulle unnai paaaru?

ஸ்ரீராம். சொன்னது…

எண்ணங்கள் அல்லது மனம் அல்லது நெஞ்சு கண்கள் பார்ப்பதை அப்படியே உள் வாங்கிக் கொண்டால் காட்சியோடு ஒன்றி விடும்...!

"கண்கள் எங்கே...நெஞ்சமும் அங்கே....கண்ட போதே சென்றன அங்கே..."

ஸ்ரீராம். சொன்னது…

கண்கள் என்ற வார்த்தையை மட்டும் கணக்கில் கொண்டாள் நிறைய பாடல்கள் சொல்லலாம். இங்கு சொல்லப் பட்டிருக்கும் கருத்தோடு கொஞ்சமாவது ஒத்துப் போகணுமே...இது ஓகேயா...
"கண் போன போக்கிலே கால் போகலாமா...கால் போன போக்கிலே மனம் போகலாமா..."

meenakshi சொன்னது…

காதல் பயணத்தில் இந்த கருத்துக்கு இது போன்ற பாடல்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
'காணாத கோலம் நீ காணும் நேரம், வாய் பேச தோன்றுமா'
'காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா'
'கண்களினால் காண்பதெலாம் மனதினிலே பார்த்துவிட்டேன்'
'காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ'
'பயணம் தொடர்ந்தால் காட்சி கிடைக்கும், காட்சி கிடைத்தால் கவலை தீரும்'
இன்னமும் கூட இது போல நிறைய இருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

கருத்துக்கு ஏற்ற பாடல் என்பதெல்லாம் சட்டென்று தோன்றும் போது வருவதில்லையே ஸ்ரீராம்? நீங்கள் சொன்ன பிறகு யோசித்தேன். எனக்குத் தோன்றிய வரிகள் அடுத்த பதிவுக்கு பொருத்தமாக இருப்பதை :) ஒரு வேளை என் கண்கள் இந்தப் பதிவிலும் அறிவு அடுத்தப் பதிவிலும் இருந்ததோ என்னவோ?! கண் போன போக்கிலே.. சரி தான்.